எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்
------------------------------------------------------
தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை
விதையாக்கிய பெண்
அதை மீண்டும் பயிராக்கினாள்
தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்
ஆதியிலிருந்து தொடர்ந்து வரும் வேரை
அதன் வாசனையோடு
தன்னுள் கொண்டிருக்கும் அவளிடம்
தலைமுறைகளிடம் தன்னைப் பரிமாற்றிக் கொள்ளும்
வித்தை நிறைய இருந்தது.
அவளே வேராகவும் விதையாவும்
தன்னுடலில் இருந்து விளைந்து கொண்டிருந்தாள்
ஓயாது
அவளில் கிளர்ந்த தானிய வாசனை
தாயின் முகத்தை வரைந்தது
மலர்களின் நிறத்தை அள்ளி
அந்த முகத்தில் பயிரிட்டது
கடலின் மீது அதை ஒரு படகாக்கி
மிதக்கவிட்டது
எல்லா ஒளிக்கதிர்களிலும்
தன்னைப் பரப்பும் வல்லமையுடைய
வாசனை நிரம்பிய அந்தவேர்
இளமை குன்றா நதியில் கரைந்து
இடையறாது பாய்ந்து கொண்டிருக்கிறது
மணம் பரப்பி
தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை
விதையாக்கும் பெண்
அதை மீண்டும் பயிராக்குகிறாள்
தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்
காதல் மிகக் கொண்டு
தாயாகி
இடையறாது விளைகின்றன
வேர்களும் விதைகளும்
அவள் உடலில
-------------------------------
No comments:
Post a Comment