Sunday, September 30, 2012

றஞ்சியின் கதை












றஞ்சியின் கதையைச் சொல்ல வேணும். அதன்மூலம் அவருடைய நிலைமையை, அவர் சந்திக்கின்ற பாடுகளையெல்லாம் நாலு பேருக்கு அறியப்படுத்தலாம். அப்படிச் செய்யும்போது இதையெல்லாம் அறிகின்றவர்களிடமிருந்து  பிறக்கின்ற கருணையினால், அன்பினால், இரக்கத்தினால் அவருக்கு ஆதரவும் உதவியும் கிட்டக்கூடும்  என்று நீண்ட நாட்களாக யோசித்திருந்தேன்.

ஆனால், அந்தக் கதையை எழுதும்போது  அது சிலவேளை றஞ்சிக்குச் சங்கடங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் தயக்கத்தோடு அதைத் தவிர்த்தேன்.  ஒரு காலத்தில் யாரிலும் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்த்திருக்காமல் வாழ்ந்த நிலை மாறி, இப்ப பிறரை எதிர்பார்த்து, பிறரில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டு, அதுவும் இப்படி பலருக்கும் தெரியக்கூடிய பகிரங்க நிலைக்கு வந்து விட்டது என்று அவர் வருத்தப்படக் கூடும் என்பதே இந்தத் தயக்கத்துக்கு முதற் காரணம்.

கூடவே இது வேறு சில நெருக்கடிகளையும் அவருக்கு ஏற்படுத்தி விடலாம். இந்தக் கதையை மறு வளமாகப் பார்த்து, நாட்டு நிலைமை, தேசியப் பாதுகாப்பு என்று ஏதாவது சாட்டுகளைச் சொல்லி றஞ்சிக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படலாம். எனவே இதெல்லாத்தையும்  எண்ணி றஞ்சியைப் பற்றி எழுதுவதைத் தவிர்த்தேன். தவிர்த்தேன் என்று சொல்வதையும் விட ஒத்திப் போட்டேன் எனலாம். அவரைப்பற்றி, அவருடைய நிலைமையைப் பற்றி எழுதி உதவப்போய் நன்மைக்குப் பதிலாக தீமைகைளே வந்து விட்டால்...?

ஆனால், நண்பர் சஞ்சஜன் செல்வமாணிக்கம் தன்னுடைய முகப்புத்தகத்தில்  பெண் ஒருவர் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டு நிற்பதான ஒரு படத்தை வெளியிட்டு,  அதில்  குறிப்பிட்ட பெண் படுகின்ற பாடுகளைப் பற்றி ஒரு சிறிய  குறிப்பையும் இட்டிருந்தார். அந்தப் படத்தின்படியும்  குறிப்பின்படியும் சந்தேகமேயில்லை, அது றஞ்சிதான். போரிலே ஒரு கையும் காலும் செயற்படமுடியாத அதே நிலையில் உள்ள றஞ்சியே.  ஆனால், அதில் சஞ்சயன் குறிப்பிட்ட பெண்ணின் பெயரைப் போடவி்ல்லை. இடத்தையும் குறிப்பிடவில்லை. எனவே நூறு வீதம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றாலும் அந்தப் படம் றஞ்சியினுடையது என்றே பட்டது. அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் றஞ்சிக்கு உள்ளதைப் போல அதே வயதில் உள்ள பிள்ளையும் அந்தப் படத்திலிருந்தது. இவ்வளவும் இருக்கும் போது சந்தேகம் எதற்கு வரும்?

சஞ்சயனின் குறிப்பை வாசித்த போது இன்னும் கவலையாக இருந்தது. இந்த நிலைமை எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரிந்தவையே. நான் நேரிற் பார்த்தவையும் பார்த்துக் கொண்டிருப்பதும் கூட. ஆனாலும் இதை வாசிக்கும்போதும் அந்தப் படத்தைப் பார்க்கும்போதும் இந்தக் கவலை இன்னும் கூடியது.

உடனேயே றஞ்சியின் கதையை, எங்களுக்குத் தெரிந்த கதையை எழுதலாம் என்று தீர்மானித்தேன். அப்படியே எழுதத் தொடங்கியபோது சஞ்சயனோடு தொடர்பு கொள்ளவாய்த்தது. அவரிடம் கேட்டேன், “எப்ப றஞ்சியைச் சந்தித்தீங்கள்? எங்கே பார்த்தீர்கள்?“ என்று.

அவருக்கு ஒன்றுமே புரியவி்ல்லை. “யார் றஞ்சி?” என்று கேட்டார். நான் விளக்கம் கூறினேன். அவர் நேரிற் பார்த்து, விவரம் அறிந்து பதிவிட்ட  பெண்ணும் இடமும் வேறு என்று சொன்னார். ஆகவே குறிப்பும் படமும் வேறு ஒருவரைப் பற்றியது.

என்னால் நம்ப முடியவி்ல்லை. என்னால் மட்டுமல்ல. என்னுடைய வீட்டிலுள்ள யாராலும் இதை நம்பவே முடியவி்ல்லை. சஞ்சயன் போட்டிருந்த படத்தைப் பார்த்தால், அச்சு அசல் என்பார்களே, அதேமாதிரி அது றஞ்சிதான். இதில் வாதிடுவதற்கோ, சண்டை போடுவதற்கோ இடமில்லை. என்றாலும் சஞ்சயன் சொல்வதை ஏற்றுக்கொள்ள எங்களுக்குக் கடினமாக இருந்தது.

ஆனால் சஞ்சயன் சொல்வதை நிராகரிக்கவோ மறுக்கவோ முடியாது. அவர் இந்தப் பெண்ணை கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் சந்தித்திருக்கிறார். இந்தப் பெண் அம்பலாந்துறையில் வாழ்கிறார்.

இந்தப் பெ்ண்ணும் முன்னாள் (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ) போராளியே. அவருடைய போராளிக் கணவரும் றஞ்சியின் கணவரைப் போல இறந்து விட்டார். ஆகவே, றஞ்சியைப் போல இந்தப் பெண்ணும் பெருங்கஸ்ரங்களின் மத்தியி்ல் கிழக்கில் உள்ள ஒரு சிறிய - வசதியற்ற கிராமத்தில் ஏழ்மையோடும் வறுமையோடும் மல்லாடிக் கொண்டிருக்கிறார்.

என்றாலும் சஞ்சயன் விவரங்களைக் கேட்டறிந்தார். இன்று சஞ்சயனின் பிறந்த நாள்கூட. எனவே இந்த நாளில் எப்படியாவது றஞ்சிக்கு உதவவேணும் என்று அவர் நினைத்திருப்பார்  போலும். உடனேயே தனக்குத் தெரிந்த ஒருவருடன் தொடர்பு கொண்டு றஞ்சிக்கான உதவிக்கு ஏற்பாடு பண்ணினார்.

இதெல்லாம் சரி, இதற்குப் பிறகும் நான் றஞ்சியைப் பற்றி எழுதாமலிருக்க முடியாதல்லவா!

 00

றஞ்சியை நாங்கள் முதன் முதலில் சந்தித்தது கிளிநொச்சியில்.
2004 இல் நாங்கள் புதுக்குடியிருப்பிலிருந்து கிளிநொச்சிக்குப் பெயர்ந்து வந்திருந்தோம். யுத்தத்தினால் அழிந்து போயிருந்த கிளிநொச்சியில் குடியிருப்பதற்கான வீடுகளே இருக்கவில்லை. இந்த நிலையில் வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று தேடிப் பலரையும் விசாரித்துக் கொண்டிருந்த போது கூட்டுறவு அலுவலகமொன்றில் றஞ்சியைச் சந்தோம். அங்கே எங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் “வாடகைக்கு வீடு”  கிடைக்குமா என்று விசாரித்துக்கொண்டிருந்தபோது, இதைக் கவனித்த றஞ்சி, தன்னருகில் இருந்த எங்களுடைய நண்பரிடம் எங்களைப் பற்றி விசாரித்திருக்கிறார். அவர் விவரம் சொன்னதைத் தொடர்ந்து நாங்கள் விரும்பினால் தங்களுடைய வீட்டில் குடியிருக்க முடியும் என்றார்றஞ்சி. அவர் அங்கேதான் அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்தார்.

றஞ்சி இப்படிச் சொன்னது, எங்களுக்கு  ஆச்சரியத்தையும் கூடவே மகிழ்ச்சியையும் தந்தது. முன் பின் அறிமுகமில்லாத ஒருவர், தான் இருக்கிற ஒரு ஓலைக் குடிசையில் பாதியைத் தருவதற்காகச் சம்மதித்து அழைக்கிறார் என்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது. ஆனால், எங்கள் குடும்பத்தில் எண்ணிக்கை அதிகம். அங்கே றஞ்சியும் கணவரும் மட்டுமே. துணைக்காக இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்திருந்தார்கள்.

வீடென்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு சிறிய சமையற் பகுதி. இரண்டு சிறிய அறைகள். அவற்றில் ஒன்றிற்கு கதவு இல்லை. முன்பகுதியில் ஒரு கூடம். அவ்வளவுதான்.

நாங்கள் மறுநாளே எங்களுடைய பொருட்களுடன் அங்கே குடியேறினோம். பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டில் வைப்பதற்கு அங்கே வசதியில்லை.  பெரும்பாலான பொருட்கள் வெளியே மரநிழலில் வைக்கப்பட்டன. மழையில் நனைந்தால் பாதிக்கப்படக் கூடியவற்றை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டோம். அறையில் றஞ்சியும் கணவரும் படுத்துக் கொள்வார்கள். நாங்கள் கூடத்தில் வரிசையாகத் தரையில்.

ஒரே வீட்டில் ஒரே சமையல். இரண்டு சமையல் செய்வதற்கு றஞ்சியோ கணவரோ ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மிகக் குறைந்த பொருளாதார வளத்தோடு இருந்தாலும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அங்கே போவதற்கு முன் அவர்களுடைய வீட்டுக்கு யாரோ தீ வைத்து அந்த ஓலை வீடு எரிந்து சாம்பராகி விட்டது. பிறகு அமைத்த வீட்டில்தான்  நாங்கள் போய்ச்சேர்ந்தது.


றஞ்சி இலங்கையின் கிழக்கே அக்கரைப்பற்று - பனங்காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர். அவருடைய கணவருக்கும் அதுதான் ஊர். இருவரும் இளவயதிலேயே புலிகள் இயக்கத்தின் போராளிகளாகி விட்டனர். அதனால் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையைக் கூட எழுதியிருக்கவில்லை. ஆனால் இரண்டு பேரும் போர்க்களங்களில் தீரமாகப் போரிட்டார்கள். அதனால் பெருங்காயங்களைச் சந்தித்தார்கள். போர்க்களங்களில் திறமையாகச் சமராடும் திறனுள்ளவர் என்பதால் இயக்கம்  றஞ்சியை மகளிர் பிரிவொன்றின் இடைநிலைப் பொறுப்பில் வைத்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் இருவருக்கும் திருமணமும் நடந்தது. பிறகு நடைமுறைப் பிரச்சினைகளாலும் கருத்து நிலையினாலும் றஞ்சி இயக்கத்தோடு முரண்பட்டு அதிலிருந்து விலகினார். என்றாலும் கணவர் தொடர்ந்தும் இயக்கத்திலேயே இருந்தார். காயத்தின் காரணத்தினால் கணவருக்கு அடிக்கடி வலிப்பு நோய்  வரும். அந்த நோய் எப்ப வரும், எங்கே வரும் என்று தெரியாது. வீதியில் பயணிக்கும்போது, நித்திரையில், வேலை செய்யுமிடத்தில், குளிக்கையில் என எங்கும் எப்போதும். இதனால், மிக ஆபத்தான பல கட்டத்தையெல்லாம் அவர் சந்தித்தார். கணவரின் இந்த நோயின் காரணமாக அவருக்கு அதிக பழுவல்லாத ஒரு வேலையை இயக்கம் கொடுத்திருந்தது. போராளிகளுக்கு உணவு வழங்கும் பகுதியொன்றைக் கண்காணிப்புச் செய்யும் பொறுப்பு. கணவர் போராளி என்பதால் இயக்கத்தின் கொடுப்பனவு என்ற குடும்பத்துக்கான ஊதியத்தை இயக்கம் வழங்கியது.

சண்டைக்களங்களில் ஏற்பட்ட காயத்தினாலேயே றஞ்சிக்கு ஒரு கையும் காலும் இயங்காது. தலை வாரிவிடுவது, சமையல்  மற்றும்  வீட்டு வேலைகள் செய்வது துணி துவைப்பது எல்லாமே அவருடைய கணவர்தான். சில சந்தர்ப்பங்களில் அயல் வீட்டில் இருக்கும் பெண்கள். நாங்கள் அவர்களுடன் குடியிருக்கச் சென்றபிறகு என் மனைவி அதையெல்லாம் செய்தார்.

றஞ்சியின் கணவர் வலிப்புக் காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். யாராலும் அதனைத் தடுக்க முடியவில்லை. அவர்களுக்குக் கிடைக்கின்ற இயக்கக் கொடுப்பனவில் பாதிக்கு மேல் வைத்தியச் செலவுக்குப் போய்விடும். மீதியை வைத்துக் கொண்டு எதையாவது செய்வார்கள். இதற்குள் அவர்களுக்கு விருந்தாளிகளுக்கும் குறைவில்லை. எல்லோரையும் வரவேற்று, சாப்பிடச் சொல்லி அழைத்து உபசரிப்பார்கள்.  இரண்டு பேரிலும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. இப்படியான ஒரு நிலைமைக்குள் எப்படித்தான் அப்படிச் சந்தோசமாக இருக்கிறார்களோ என்று யோசித்திருக்கிறேன். எங்களுடைய இளைய மகனில் பெரும்பாசம் றஞ்சிக்கும் கணவருக்கும்.

எங்களைத் தேடி வரும் நண்பர்களோடும் றஞ்சியும் கணவரும் மதிப்பாகவும் அன்பாகவும் இருந்தார்கள். மு. திருநாவுக்கரசு, நிலாந்தன், அமரதாஸ், பாலகுமாரன் எனப் பலரோடும் அவர்களுக்கு நட்பு ஏற்பட்டது. நண்பர்கள் கூட றஞ்சி குடும்பத்தின் நிலைமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். கூடவே வருத்தமும்.

இப்படி இருக்கையில் நாங்கள் அங்கிருந்து கொண்டே வேறொரு இடத்தைப் பார்த்து வீடொன்றைக் கட்டிக் கொண்டிருந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் கவிஞர் சேரனும் அந்த வீட்டுக்கு வந்திருந்தார். அது ஒரு முன்னிரவு நேரம். முற்றத்திலிருந்து நானும் நிலாந்தனும் சேரனும் பேசினோம். குப்பி விளக்கு வெளிச்சத்தில் அன்று இரவு உணவைச் சேரனுக்குக் கொடுத்தோம். அதற்கு முழுதாக ஏற்பாட்டைச் செய்தது றஞ்சியும் கணவருமே.

பிறகு நாங்கள் அமைத்த வீட்டுக்குப் போய் விட்டோம். என்றாலும் அவர்களுடனான உறவும் தொடர்பும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. கணவர் மருத்துவ மனைக்குச் செல்லாத ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரண்டு பேரும் எங்களின் வீட்டுக்கு வருவார்கள். மதியம் சமைத்துச் சாப்பிட்டுச் செல்வார்கள்.

இப்படியிருக்கும்போது ஊனமுற்றோர் புனர்வாழ்வுக் கழகம் என்ற ஒரு அமைப்பு (இதைப் பிறகு மாற்றுத் திறனாளிகள் அமைப்பு என்று மாற்றி விட்டார்கள்) கிளிநொச்சி செல்வா நகரில் உடல் ஊனமுற்றவர்களுக்கு (மாற்றுவலுவுடையோருக்கு ) எனப் பெயரிட்டு ஒரு குடியிருப்பை அமைத்தது.  அது ஒரு கிறிஸ்தவ அமைப்பு. ஏறக்குறைய இருபத்தி ஐந்து குடும்பங்கள் அங்கே குடியமர்த்தப்பட்டனர். அதில் றஞ்சியின் குடும்பமும் ஒன்று.  சின்னஞ்சிறிய வீடுகள். ஆனால் சீமெந்துக் கல்லினால் அமைக்கப்பட்ட வீடுகள்.  அஸ்பெஸ்ரஸ் அமைந்த கூரை. ஆனால் அங்கே தண்ணீருக்குப் பெருந்தட்டுப்பாடு. ஒரேயொரு பொதுக்கிணறு மட்டும். இந்த மாதிரி முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட ஒரு குடியிருப்பை அமைப்பது பெரும் பிழை என்று நாங்கள் வாதிட்டபோதும் அதை அமைத்தவர்கள் கேட்டுக் கொள்ளவில்லை.

அங்கே போவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று றஞ்சி சொன்னார். முன்னர் இருந்த இடத்தில் அந்தக் குடிசை வீட்டை எடுத்துக் கொண்டு காணியை விடுமாறு காணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தவர்கள் நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இருந்தபோதே  அவர்கள் அப்படி நச்சரித்துக் கொண்டுதானிருந்தனர். உண்மையில் அந்தக் காணியின் உரித்தாளர்கள் கனடாவில் இருந்தார்கள். ஆகவே அதைக் கண்காணித்துக் கொள்வதற்காகக் கனடாக்காரர் கிளிநொச்சியில் இருந்த  உறவினர்களிடம் பொறுப்பைக் கொடுத்திருந்தார்கள்.

காணியில் இருப்பது இயக்கக் குடும்பம் என்பதால் அவர்களை நீண்டகாலம் அனுமதிப்பது ஆபத்தாகி விடும் என்ற அச்சம் காணி உரித்தாளர்களுக்கும் அதைப் பராமரிக்கிறவர்களுக்கும் இருந்தது. என்னதான் பெரிய பொறுப்பொன்றும் இல்லாதவர்களாக இருந்தாலும் இயக்கம் இயக்கம்தான் என்ற எண்ணம் அவர்களுக்கு. எந்த வேளையிலும் தங்களுடைய காணியை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணமே அது.

ஆகவே கிளிநொச்சியில் இருந்தவர்கள் எந்த நாளும் அந்தக் காணியை விடுவிப்பதற்காக எதையாவது சொல்லிக் கொண்டேயிருந்தனர். ஆனால் அவர்கள் றஞ்சியோடும் கணவரோடும் முரண்பட்டுக் கொள்ள விரும்பவி்லலை. முரண்பட்டால் எல்லாமே இறுகிவிடும் என்ற முன்னெச்சரிக்கையோடு விசயத்தைப் பக்குவமாகக் கையாண்டு கொண்டிருந்தார்கள்.

இந்த நச்சரிப்பைத் தாங்க முடியாத றஞ்சியும் கணவரும் இன்னொரு இரவற் காணிக்குச் செல்ல விரும்பவி்ல்லை. அதேவேளை சொந்தமாகக் காணியை வாங்கி் கொள்ளக்கூடிய பொருளாதார வசதியும் அவர்களிடம் இல்லை. எனவே இப்படி வந்த வாய்ப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். குடியிருப்பை அமைப்பதற்குப் பொறுப்பெடுத்த அமைப்போ உரிய முறையில் அந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கவில்லை. இதனால் றஞ்சி தெரிந்தவர்களிடம், பழகியவர்களிடம் வங்கியில் எனக் கடன் பட்டார். நாங்களும் எங்களால் முடிந்தவரையில் உதவினோம். எங்களுடைய நண்பர்களிற் சிலரும் உதவினார்கள்.

இயக்கத்தை விட்டு விலகிய பிறகு ஒற்றைக் கையினால் தட்டச்சுப் பழகிய றஞ்சி நான் முன்னர் குறிப்பிட்டவாறு கூட்டுறவு அலுவலகமொன்றில் வேலை செய்தார். பின்னர் கணினி வந்தபோது  ஒரு கையினால் அதைப் பழகினார். றஞ்சியின் நிலைமையைப் புரிந்து கொண்ட நிர்வாகமும் சக பணியாளர்களும் அவருக்கு ஆதரவாக இருந்தது றஞ்சிக்கு பெரும் உதவியாக இருந்தது.

இப்படி இருக்கும்போது நான்காம் கட்ட ஈழப்போர் இறுதிப் போராக ஆரம்பமாகியது. இந்தச் சூழலில் றஞ்சி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். கணவர் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை மேலும் மேலும் இறுகிவந்தது. ஒரு கட்டத்தில் கிளிநொச்சி இடப்பெயர்வு என அது வந்தபோது றஞ்சி கைக்குழந்தையோடும் நோய்வாய்ப்பட்ட கணவனோடும் கடுமையாகக் கஸ்ரப்பட்டார். அந்த நேரத்தில் அவரால் வேலைக்குப் போக முடியவில்லை. அதனால் வருமானமும் பட்டது. தான் தனித்து இயங்குவதற்கு மனதில் தைரியம் இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமற்ற தன்மைகளே கூடிவந்தன.

அந்தக் குடியிருப்பில் இருந்த அவ்வளவு குடும்பங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் யாரும் யாருக்கும் உதவ முடியாது என்ற நிலை. என்றாலும் றஞ்சியின் குடும்பத்தோடு நட்பாக இருந்தவர்கள் அவர்களுக்கு முடிந்தவரையில் உதவினர். சனங்களோடு சனங்களாக ஒவ்வொரு இடமாக மாறி மாறி நகர்ந்து கொண்டிருந்த றஞ்சியின் குடும்பம் கடைசியாக முள்ளிவாய்க்காலிலிருந்து படையினரிடம் சென்றது.

அங்கே போராளிகளை வகைப்படுத்திய படையினர் றஞ்சியின் கணவரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பினார்கள். றஞ்சி குழந்தையோடு செட்டிகுளம் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சனங்கள் றஞ்சியையும் பிள்ளையையும் முடிந்தவரையில் தங்களோடு இணைத்து ஆதரவாகப் பார்த்தனர். இடையிடையே கணவரைப் போய்ப் புனர்வாழ்வு முகாமில் பார்த்து  வந்தார் றஞ்சி.

ஒரு நாள் றஞ்சியின் கணவருக்குக் கடுமையான வலிப்பு. இது வழமையான வலிப்பையும் விட கடினமானதாக இருந்தது. படையினர் என்ன செய்தார்களோ சரியாகத் தெரியாது. ஆனால், றஞ்சியின் கணவர் அங்கேயே இறந்து வி்ட்டார்.

றஞ்சிக்குச் சேதி சொன்னார்கள். இடிந்தே போய்விட்டார் அவர். எவ்வளவோ கஸ்ரங்களின் மத்தியில், இறுதிப்போர்க்காலத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கூட வலிப்புக்கு வைத்தியம் செய்து காப்பாற்றிய கணவரை இப்போது தொலைத்து விட்டார். அவரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போர்க்களத்திலும் போர்ச் சூழலிலும் தப்பிப் பிழைத்து வந்து இப்படி அநியாயமாகச் சாகக் கொடுத்தேனே என்று புலம்பினார். ஆனால் என்னதான் பயன்?

கடைசியில் தனித்து விட்டார் றஞ்சி. அவருக்கு மிஞ்சியது தீராத்துயரமும் பெற்றெடுத்த குழந்தையுமே.

இரண்டோடும் ஒரு நாள் முகாமிலிருந்து விடுதலையாகி, அக்கரைப்பற்றுக்கு - தான் பிறந்த இடத்துக்குச் சென்றார் றஞ்சி. அங்கே ஊரோடும் உறவுகளோடும் சேர்ந்த வாழலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தமாதிரி அங்கே எல்லாம் அமையவில்லை. அங்கே அவரே மற்றவர்களைக் கவனிக்க வேண்டிய, மற்றவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலை.

என்ன செய்ய முடியும். பேசாமல் கிளிநொச்சிக்குத் திரும்பி, செல்வாநகரிலுள்ள ஊனமுற்றோர் குடியிருப்புக்குச் சென்றார். அங்கே கட்டப்பட்டிருந்த வீடு பாதி தகர்ந்து விட்டது. கூரை இல்லை. கதவுகள் இல்லை. குடியிருப்பதற்கான எந்த அடிப்படையும் இல்லை. ஆனாலும் என்ன செய்வது? இதை விட்டு வேறு எங்கே செல்வது?

உதவி அமைப்புகளும் அரச நிர்வாகமும் ஒரு மீள் குடியேறிக்கான உதவிகளைச் செய்தன. ஒரு தற்காலிக வீடு மற்றவர்களுக்குக் கிடைத்ததைப்போல அவருக்கும் கிடைத்தது.  புலம்பெயர்ந்தோரின் உதவிகளும் சிறிய அளவில் றஞ்சிக்குக் கிடைத்தன. நேசக்கரம் அமைப்பும் உதவியது. அவருடைய நிலைமையில் இது யானைப் பசிக்குச் சோழப்பொரிதான். சுயமாகத் தொழில் செய்யக்கூடிய மன வலிமை இருந்தாலும் பிற சாத்தியங்கள் குறைவு. அதற்கான ஆதரவும் உடல் வளமும் அவரிடமில்லை. ஆகவே பராமரிப்பு நிலை உதவியே அவருக்குத் தேவை.

ஆனால், றஞ்சி ஓய்ந்து விடாத அளவுக்கு உழைப்பும் திடமும் உள்ள சமூகச் செயற்பாட்டாளர். அதனால் ஊனமுற்றோர் அமைப்பை மீள் நிலைக்குக் கொண்டு வந்து தங்களுடைய பிரச்சினைகளையும் தேவையையும் வலியுறுத்த விரும்பினார் றஞ்சி. ஆனால், அந்த அமைப்பை கிளிநொச்சியில் இயங்குவதற்கு அனுமதிக்கச் சில நாட்கள் ஆகும் என்று தவிர்த்தது அரச தரப்பு. ஆனாலும் றஞ்சி சோரவில்லை. அவர் பல வழிகளிலும் இயங்கிப் பல தரப்பினரையும் சந்தித்துத் தங்களின் பிரச்சினைகளைச் சொன்னார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட வீடுகளைத் புனரமைப்புச் செய்வதற்கு வந்து பார்த்துச் சென்ற அதிகாரிகளை மறித்தார் ஒருவர். அந்த ஊனமுற்றோர் குடியிருப்புக் காணி தனக்கே சொந்தமானது என்றும் அந்தக் குடியிருப்பை விட்டு அங்கிருப்பவர்கள் அகலவேண்டும் என்றும் அவர்களுடைய வீடுகளைப்புனரமைக்கக் கூடாது என்றும் அவர் முறைப்பாடு செய்தார். தான் முன்னர் வந்து செல்ல முடியாத சூழல் இருந்ததைப் பயன்படுத்தி அந்தக் குடியிருப்பை அத்து மீறி அமைத்து விட்டார்கள் என்றும் அவர் தன்னுடைய முறைப்பாட்டிற் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாட்டையடுத்து எல்லாமே தடைப்பட்டன. ஆனாலும் றஞ்சி சோர்ந்து விடவில்லை. அவர் ஏனையவர்களையும் அழைத்துக்கொண்டு அரச நிர்வாகப் பகுதி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான அலுவலகம், பொலிஸ் என எங்கும் சென்றார். ஒரு தடவை அவர்கள் அனைவரையும் பொலிஸ் அடைத்தே விட்டது. அந்த முறைப்பாட்டின் காரணமாகவே தாம் அப்படி நடந்து கொண்டதாகப் பின்னர் அவர்களுககுப் பொலிஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டது. என்றாலும் இறுதிவரை போராடி அந்தக் காணி பொதுக்காணி என்பதை உறுதி செய்து விட்டார் றஞ்சி.

இதனை அடுத்து ஐ.நாடுகளின் அகதிகளுக்கான இல்லம்,  வீடமைப்பு அலுவலகம் என எல்லா இ்டத்துக்கும் சென்று குரலெழுப்பினார். சில இடங்களில் அவர் போரிட்டார் என்றே சொல்ல வேணும்.

இதன் பயனாக அந்தக் குடியிருப்பு வீடுகளைப் புனரமைப்புச் செய்து தருவதாக ஒத்துக் கொண்டு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் இன்னும் ஒரு ஆறு ஏழு மாதங்கள் காத்திருக்க வேணும்.

இவ்வளவுக்கும் றஞ்சியின் வீடு பல நாட்களாக பசியோடும் பட்டினியோடுமே கழிந்தது. அவரிடமிருந்த ஓர்மத்தைத் தவிர அவரிடம் வேறு எந்தப் பலமும் இல்லை. வேறு எந்த வளமும் இல்லை. பசியும் பற்றாக்குறையும் வழமையாகி விட்டன.

இந்த நிலையில் அந்தச் சின்னஞ்சிறு குழந்தை மெலிந்து கறுத்து விட்டது தன்னுடைய தாயைப்போல. ஒரு வாளி தண்ணீரை அள்ளுவதற்கே அவர்கள் யாரையாவது எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வறுமையிலும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக இருந்த றஞ்சியின் முகத்தில் இப்போது சிரிப்பைக் காண்பது அபூர்வம். கலகலப்பைக் காணவே முடியாது. எதையாவது கேட்டால் “நான் என்னண்ணா செய்வது” என்று பிள்ளையின் தலையை வருடிக் கொண்டு ஒடுங்கித் தணிந்த குரலில் சொல்கிறார்.

பிள்ளையோ எதுவுமே புரியாமல் குழிவிழுந்த கண்களால் தாயைப் பார்க்கிறது.

நான் தலையைத் தாழ்த்திக் கண்களைத் துடைத்தேன்.

  00                  






2 comments:

Rushangan said...

அண்ணா, கிளிநொச்சியில் நீங்கள் இருந்த இந்த றஞ்சியின் வீட்டுக்கு நானும் வந்திருந்ததாக ஞாபகம்.மனைவியுடன் ஒரு நாள் தங்கியிருந்த ஞாபகமும் உண்டு. ஆனால், என் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டீர்கள். போக, ஒரே மாதிரி இரண்டு றஞ்சிகள் அல்ல, ஏராளம் றஞ்சிகள் இருக்கிறார்கள்-இருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களுடைய வாழ்வை உயர்த்த நாம் ஏதாவது செய்தாகவேண்டும். குறைந்தபட்சம் எனக்குத் தெரிந்த, தங்கள் வீட்டில் தங்கியிருந்தவரின் நண்பரையும் மனைவியுடன் வீட்டில் தங்க அனுமதித்த அந்த உயர்ந்த உள்ளத்துக்கு என்னாலான எதையாவது நான் செய்யவேண்டும். என்ன செய்யலாம் என்பதை அறியத்தாருங்கள். இதுபோன்று இன்னுமின்றுமிருக்கும் ஏராளம் றஞ்சிகளுக்கான உதவிக்கான ஒரு ஆரம்பப்புள்ளியாக இது இருக்கட்டும்.

எஸ் சக்திவேல் said...

நிறைய றஞ்சிகள் இருக்கிறார்கள்; என்றாலும் உங்கள் போன்ற ஒரு சிலரால்தான் வார்தைகளில் பதிய முடியும்; தொடருங்கள்...