Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Tuesday, December 13, 2011

அ.செ.மு





அ.செ.மு என்ற அ.செ.முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர். 1950 களி்ல் ஒரு முக்கிய ஊடகவியலாளராக இருந்த அ.செ.மு, ஈழகேசரி, எரிமலை, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு ஆகிய ஊடகங்களின் ஆசிரிய பீடத்திற் செயற்பட்டவர்.


1.

தன்னுள் அடங்கி வாழ்தல். இப்படி எழுதும் போதும் வாசிக்கும் போதும் அ.செ.மு வே எப்போதும் நினைவுக்கு வருகிறார். நான் அறிந்த அளவில் அ. செ.மு பின்னாளில் யாருடனும் அதிகம் பேசியதாக இல்லை. கலகலப்பாக இருந்ததில்லை. எதற்கும் துக்கப்பட்டதாகவும் இல்லை. சந்தோசப்பட்டதாகவும் இல்லை. எதுவும் அவரைத் தீண்டியதாகவும் இல்லை. எதனாலும் அவர் வருத்தப்பட்டதையும் நானறியவில்லை. அல்லது அவருடைய வருத்தங்களையும் வலிகளையும் அவர் எப்போதும் வெளிப்படுத்தியதாகவும் தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு காலம் மிகவும் தீவிரமாக இலக்கியத்தில் இயங்கியவர். ஈழத்துச் சிறுகதையுலகில் தன்னடையாளத்தை துலக்கமாக உருவாக்கியவர். அவருடைய அந்த அடையாளம் இப்போதும் ஒளியோடுதானுள்ளது.

அவருடைய புகழ்பெற்ற சிறுகதைகளான காளிமுத்துவின் பிரஜா உரிமை, மாடு சிரித்தது, பழையதும் புதியதும் இரண்டும் மூன்றும் - இந்தப் போர்க்காலத்திலும் அப்படியே பொருந்தியிருக்கின்றன. காளிமுத்துவின் பிரஜா உரிமை பலதடவைகள், பல இடங்களிலும் மீள்பிரசுரமாகியுள்ளது. இது அந்தக் கதைக்கான முக்கியத்துவத்தைக் காட்டும். மாடு சிரித்தது, பழையதும் புதியதும் ஆகிய இரண்டும் மாறிச்செல்லும் சமூக இயக்கத்தின் போக்கைச் சுட்டும் குறிகாட்டிகள். அதேவேளை உலகமயமாதலின் போக்கை அ.செ.மு அன்றே தன் கதையில் விமர்சித்திருக்கிறார். இது வெளிப்படையான விமர்சனமல்ல. அவர் எதையும் வெளிப்படையாக விமர்சனமோ கண்டனமோ செய்யும் வகையைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

பழையதும் புதியதும் அவருடைய கதைகளிலேயே முக்கியமானது. கேலியும் நகைச்சுவையும் கூடிய மொழியில் அவர் கதையை விவரித்துச் செல்வது மிகச் சுவை.

“அவசரமில்லை அண்ணே, ரயிலுக்கு நேரமிருக்கு. மாடுகள் மௌ்ளப் போகட்டும். ஏது, சோடி வாய்த்து விட்டது போலிருக்கு, உனக்கு’’ என்று சும்மா சொன்னேன்.

கால் மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதிகள் எனக்குத்தெரியாதா. ஆனால், மனுசன் பாவம். நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான். முகஸ்துதியிலேயே பழைய காலத்து வெள்ளை மனம் தன்னை மறந்து போய்விடுகிறது.

இந்த மாதிரி கதை நெடுகிலும் ஒரு தொனி தொடர்ந்து கொண்டிருக்கும். இந்தக் கிண்டலும் கேலியும் தராசு முனையைப்போல சமனிலையில் ஆடிக்கொண்டிருப்பது. நமது மனதிலும் பட்டென்று ஒரு உதைப்பை ஏற்படுத்தும் பொறி இதிலுண்டு. தராசில் இருக்கும் முக்கோணத்தன்மை அ.செ.மு வின் கதைகளிலும் உண்டு. ஒரு தராசு பொருளுக்கும் அதை நிறுப்போருக்கும் அதை - அந்த நிறுவையை சாட்சியாக வைத்து பொருளை வாங்குவோருக்கும் இடையில் சமநிலையில் நின்றாடுகிறது. இங்கே அ.செ.மு வும் தன் படைப்புலகத்தை அவ்வாறே வைத்திருக்கிறார்.

அவர் சிலவேளை பொருளாகிறார். சிலபோது அவர் விற்போனாகிறார். இன்னொரு போது பொருளை தராசின் சாட்சியத்தோடு வாங்குவோராகிறார். அதற்கேற்ப நம்மையும் மாற்றிக் கொள்ள வைக்கிறார். இது தமிழ்ப் பெரும்பான்மையில் அதிகம் கிடைக்காத ஒரு பண்பு.

பழையதற்கும் புதியதற்கும் இடையில் நிகழும் மோதலையும் நாகரீக வலையில் ஈர்க்கப்படும் மனித இயல்பையும் அதை மனித வாழ்க்கையே மறுபடி பழைய நிலைக்கு கொண்டு போகும் வேடிக்கையையும் இந்தக்கதை விவரிக்கிறது. போர் எல்லா வளர்ச்சியையும் சமனிலைப்படுத்தி மனிதனை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு போய்ச் சேர்க்கிறது. புதியனவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மனம் தன்னையறியாமலே போரின் மூலம் பழைய இடத்தை சென்றடைகிறது என்பதை மிக ஆழமாக உணர்த்துகிறது இந்தக்கதை. உளவியற் பரிமாணத்தில் விரியும் இந்தக் கதையை வாசிக்கும் போது எழும் வியப்பு பெரிது.

பொதுவாக போரை பிற்போனது எனவும் போர் விரும்பிகள் எப்போதும் அடிப்படைவாதிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. அ.செ.மு வின் இந்தக்கதை இதற்கு நல்ல ஆதாரம்.

மாட்டு வண்டி சவாரி வைத்திருக்கும் கார்த்திகேசுவுக்குப் போட்டியாக மலையாளத்தானின் கார் வந்து விடுகிறது. அந்தக் காரோடு கார்த்திகேசுவின் மாட்டு வண்டியால் போட்டி போடவே முடியவில்லை. இந்த இயலாமை - அவனுடைய கோபம் ஒரு கட்டத்தில் மாடுகளின் மேல் பாய்கிறது. காரோடு போட்டிபோடும் படி அவன் மாடுகளுக்கு செம அடி அடிக்கிறான். ஆனால் மாடுகளால் காரோடு போட்டியிட முடியுமா. இதையெல்லாம் கார்த்திகேசு பிறகொரு சந்தர்ப்பத்தில் புரிந்து கொண்டு வெட்கப்படுகிறான்.

கார் வெளித்தரப்பின் உற்பத்தி. ஆக அதற்குச் செலவு செய்யும் முதலீடு வெளியேயே போகிறது. அதற்கு செலவும் அதிகம். ஆனால் மாட்டு வண்டிக்கு அதெல்லாம் கிடையாது. அது உள்@ர் தயாரிப்பு. அதனால் அதன் வரவும் செலவும் ஊருக்குள்ளேயே சுற்றும். என்றெல்லாம் தன்னுடைய வண்டிக்கு நியாயம் சொல்லும் கார்த்திகேசுவின் வண்டியை யாரும் ஏற்பதாகவேயில்லை. அவனுடைய அந்தக் கருத்தையும் எவரும் பொருட்படுத்துவதாகவும் இல்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த நிலைமை மாறுகிறது. காலம் வேறாக மாறி வரும்போது – யுத்த காலம் வரும்போது - கார்கள் பெற்றோல் இல்லாமல், தெருவில் இறங்க முடியாமல் வீடுகளில் முடங்கி விடுகின்றன. பதிலாக பத்தாண்டுகளாக யாராலும் கவனிக்கப்படாதிருந்த மாட்டு வண்டி இப்பொழுது மறுபடியும் தெருவுக்கு வந்திருக்கிறது. போர் அதைக் கொண்டு வந்திருக்கிறதுது. அது எரிபொருட்தடையைக் கொண்டு வந்ததால் எல்லாமே மாறிவிட்டன. கார்திகேசு மீண்டும் சவாரிக்காரனாகி விட்டான்.

இந்தக்கதைகள் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் 1943 காலப்பகுதியில் அ.செ.மு வினால் எழுதப்பட்டவை. சொன்னால் நம்ப மாட்டீர்கள், இப்பொழுதும் இதே நிலைமைதான ஈழத்தில். அப்படியே கதை அதே இளமையோடு காலத்தை ஊடுருவிப் பொருந்துகிறது.

தமிழில் போர்க்கதைகள் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் பாதிப்பு அன்றைய படைப்பாளிகளை போர்க்கதைகளை எழுத வைத்துள்ளது. இந்தவகையில் தமிழக எழுத்தாளர்கள் பர்மாவை மையமாக வைத்தும் அதைத் தொட்டும் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஏன், ப.சிங்காரத்தின் நாவல்களில் கூட போர்ச்சூழலின் பிரதிபலிப்பைக்காணலாம்.

அவ்வாறாயின் அ.செ.மு ஈழத்துப் போர்க்காலக் கதைகளின் முன்னோடி எனலாமா. எப்படியோ அ.செ.மு வின் கதைகளில் காலத்தின் துருவேறா நிலை உள்ளது.

2

அ.செ.மு வின் இளமைக்காலத்தைப்பற்றி பலரும் பலவிதமாக சொல்கிறார்கள். அவர் சிறுவதிலேயே அமைதியான சுபாவங்கொண்டவராக இருந்தார் என்று அளவெட்டியைச் சேர்ந்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அ.செ.மு அளவெட்டியில் பிறந்தவர். அளவெட்டி எழுத்துத்துறையிலும் இசை மற்றும் பிற கலை ஈடுபாடுகளிலும் அதிகமானவர்களைக் கொண்ட பேரூர். யாழ்ப்பாணத்திலேயே அளவெட்டிதான் பெரிய ஊர். புகழ்மிக்க இசைக்கலைஞர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் கவிஞர்களும் அளவெட்டியைச் சேர்ந்தவர்களே. ஆகக்குறைந்தது ஐம்பது பேராவது இந்தப்பட்டியலில் சேருவார்கள்.

தவில் மேதை தட்சணாமூர்த்தி, நாதஸ்வர வித்வான் என்.கே. பத்மநாதன், பாவலர் துரையப்பா பிள்ளை, பண்டிதர் நாகலிங்கம், நவீன ஈழக்கவிதையின் பிதாவாகக் கொள்ளப்படும் மஹாகவி, அ.ந.கந்தசாமி, சிறந்த சிறுகதை எழுத்தாளர் அ.செ.மு, கவிஞர் சேரன், புதுசு ரவி என்றழைக்கப்படும் இரவி அருணாசலம், விஜயேந்திரன், பாலசூரியன், ஓவியர் ரமணி, ஈழத்துச் சினிமாவின் புதிய அலையை தொடக்கிவைத்த ஞானரதன் என்ற சச்சிதானந்தன், ஒளவை என்று ஒரு நீட்சி அளவெட்டிக்குண்டு. இதில் இன்னும் பலர் இருக்கிறார்கள்.

இரண்டு மூன்று தலைமுறைப்படைப்பாளிகள், கலைஞர்கள் அளவெட்டியின் புகழைப் பரப்பியிருக்கிறார்கள். அதில் அ.ந.கந்தசாமியும் அ.செ.முவும் முக்கியமானவர்கள்.அ.ந.கந்தசாமி இடதுசாரி இயக்கத்தில் இயங்கிய முக்கியமான படைப்பாளுமை. அ.செ.மு பிரகடனங்கள் அற்ற, அரசியல் அமைப்புகளையோ நிலைப்பாடுகளையோ பகிரங்கப்படுத்தாத ஒருவர். அ.செ.மு புகழுக்கும் பெருமைக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதாகவே எப்போதும் நடந்திருக்கிறார்.

அ.செ.மு ஈழத்துச் சிறுகதைகளின் இரண்டாம் தலைமுறைப்படைப்பாளிகளில் முதல் ஆள். முதல் தலைமுறையில் இயங்கிய சி.வைத்திலிங்கம், சம்மந்தன், இலங்கையர்கோன் ஆகியோரில் அ.செ.மு வுக்கு இலங்கையர்கோனிலேயே அதிக ஆர்வம் இருந்தது. இதை அவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு தடவை என்னிடமே சொன்னார்.

ஆனால் அவர் தமிழகப்படைப்பாளிகளிடமும் ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். மௌனியை அவருக்கு நிறையப்பிடித்தது. புதுமைப்பித்தனை அவர் கொண்டாடினார். அ.செ.மு வின் சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் தொடர்ச்சியையே நாம் அவதானிக்கலாம். அவர் புதுமைப்பித்தனின் தொடரியே. அதிகம் அறியப்பட்ட அவருடைய சிறுகதையான மாடு சிரித்தது புதுமைப்பித்தனின் தொடரியாக அ.செ.மு இயங்கினார் என்பதற்கு நல்ல ஆதாரம். புதுமைப்பித்தனில் தொனிக்கும் கிண்டலும் கேலியும் கலந்த அங்கதம் அ.செ.முவிடமும் தொனிக்கிறது.

அ.செ.மு முதல் தலைமுறைப்படைப்பாளர்களைப் போலல்லாமல் தன்னுடைய எழுத்துக்கு வசதியாக பத்திரிகைத் துறையில் வேலை செய்தார். இது அவர் எழுத்துத்துறையில் இயங்குவதற்கு இன்னும் வாய்ப்பாகவும் வசதியாகவும் இருந்தது. ஒரு காலகட்டத்தில் அவர் நிறைய எழுதுவதற்கு நன்றாக உதவியிருக்கிறது இந்தத் தேர்வு.

தான் வேலைசெய்த ஈழநாடு பத்திரிகையில் அ.செ.மு தொடர்கதைகளாகவும் சிறுகதைகளாகவும் குறுநாவல்களாகவும் கட்டுரைகளாகவும் எழுதித்தள்ளினார்.


ஈழநாட்டில் புகையில் தெரிந்த முகம், யாத்ரீகன், ஜீவபூமி, ஜெயந்தி ஆகிய நாவல்களை தொடராக எழுதினார். இதில் ஜெயந்தி முழமையடையவில்லை. (ஆனால் அதை அவர் ஒரு குறுநாவல் என்ற அளவில் மாற்றியமைத்ததாகச் சொல்கிறார்). இதைவிட குறுநாவல்கள் வேறு. ஒரு நேர்காணலில் அவர் சொல்வதைப்போல ஈழநாடுவிலிருந்து விலகியபிறகும் பதினைந்து ஆண்டுகளாக ஈழநாடு பத்திரிகைக்கு தொடர்ந்து விசயதானங்களைக் கொடுத்திருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவை எழுதித்தள்ளியிருப்பார் என்று நம்மால் ஊகிக்க முடியும். ஆனால் அவை எதுவும் முழுமையாக யாராலும் தொகுக்கப்படவில்லை.

ஏன் மனிதமாடு என்ற ஒரு சிறுகதைத் தொகுதிக்கு மேல் அவருடைய கதைகளே தொகுக்கப்படவில்லை. இவ்வளவுக்கும் அ.செ.மு ஈழத்துச் சிறுகதைகளில் முக்கியமான படைப்பாளி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஈழத்து இலக்கியத்திலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக படைப்பாளிகளிடத்திலும் செல்வாக்குச் செலுத்திய ஆளுமை. இப்போதும் கூட அவருடைய பாதிப்பு பலரிடமுண்டு. அவருடைய சிறுகதைகள் இப்போதும் அதே கவர்ச்சியையும் பெறுமதியையும் கொண்டிருக்கின்றன.


3

அ.செ.மு வை நாம் இரண்டு நிலைகளில் நோக்கலாம். அப்படி நோக்குவது ஒரு வகையில் அவசியமும் கூட. ஒன்று அவர் ஒரு படைப்பாளி. அதிலும் உரை நடையில் அவர் செலுத்திய ஆளுமை. இந்த வகையில் அவருடைய இடம், அவருடைய அடையாளம், அவருடைய பயணத்திசை, அதன் தடங்கள் என்று இதைப் பார்க்க வேணும். மற்றது, அ.செ.மு ஒரு ஊடகக்காரர் என்ற வகையிலானது. ஆனால் அ.செ.மு ஊடகவியலாளராக தொழில் செய்திருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு படைப்பாளியாகவே இருந்திருக்கிறார். அவருடைய விருப்பமும் கவனமும் எழுத்துத்தான். அதற்காகவே அவர் ஊடகங்களைச் சார்ந்திருந்தார். அவை போதாதபோது வேறு இதழ்களையும் பத்திரிகையையும் வெளியிட்டார்.

இங்கே முதலில் அவருடைய எழுத்து ஈடுபாட்டைப் பார்க்கலாம். படிக்கிற காலத்திலேயே அ.செ.மு எழுத ஆரம்பித்து விட்டார். அவர் படித்தது, யாழ்ப்பாணத்தில் பேரோடு விளங்கிய தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியில். அப்போதே அவருக்கு இலக்கிய நண்பர்களாக அ.ந.கந்தசாமி, மஹாகவி, கதிரேசன் பிள்ளை ஆகியோர் இருந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் அ.செ.மு ஈழகேசரியின் இளைஞர் பக்கத்தில் எழுதினார். இது 1930 களின் இறுதிப்பகுதியில். பிறகு 1941 இல் அவர் ஈழகேசரியில் இணைந்தே விட்டார். ஆக அப்போதே எழுதுவதற்காக என்று அவர் அதற்குத் தோதான தொழிலைத் தேர்ந்திருக்கிறார். அதுதான் பின்னாளிலும் தொடர்ந்திருக்கிறது.

ஈழகேசரியிலும் அ.செ.மு நிறையக்கதைகளை எழுதியிருக்கிறார். ஈழகேசரி அவரையும் அவரைப்போல பல இளைஞர்களையும் அவர்கள் தங்களுக்கேற்றமாதிரி உருவாகிக் கொள்வதற்கு ஒரு தளமாக இருந்திருக்கிறது. அதற்கான முழுச்சுதந்திரத்தையும் அது கொடுத்திருக்கிறது. அரசியல் சாய்வுகள், அதிகாரங்கள் எதுவுமில்லாத இந்தத்தளத்தில் அப்போது அ.செ.மு வைப்போன்ற பலரும் தங்களை உருவாக்கிக் கொண்டார்கள். இதற்காக அது இளைஞர் இலக்கிய மாநாடுகளையும் நடத்தியிருக்கிறது. அவற்றில் அ.செ.மு வும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

ஈழசேகரியில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களிலேயே அ.செ.மு வரதர், அ.ந.கந்தசாமி ஆகியோருடன் இணைந்து மறுமலர்ச்சி என்ற சங்கத்தை உருவாக்கினார். இந்தச் சங்கம் யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சி என்ற இதழை வெளியிட்டது. இது தமிழகத்தில் வந்து கொண்டிருந்த மணிக்கொடி, கிராம ஊழியன், கலைமகள் போன்ற இதழ்களின் தாக்கத்தினால் உருவானதாக ஊகிக்க முடிகிறது. அதுவே பின்னாளில் ஈழத்திலக்கியத்தில் மறுமலர்ச்சிக் காலகட்டம் என்ற சிறப்பான ஒரு காலத்தைக் கொண்ட இலக்கியவளர்ச்சிக்கு உதவியது. தமிழகத்தில் மணிக்கொடி காலகட்டத்தைப்போல ஈழத்தில் மறுமலர்ச்சிக் காலகட்டத்தை நோக்கலாம்.

அ.செ.மு மறுமலர்ச்சியின் ஆசிரியப் பொறுப்பிலிருந்தார். அந்த நாட்களில் மிகச்சுறுசுறுப்பாக அ.செ.மு இயங்கியிருக்கிறார். பெரும் வசதிகளைக் கொண்; குடும்பப்பின்னணி எதுவும் அ.செ.மு வுக்கில்லை. என்றபோதும் அவர் தன்னுயை இயங்கும் முறையினால் எப்போதும் இதழ்களையோ பத்திரிகைகளையோ வெளியிட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார். அவருடைய அணுகுமுறையும் இயங்கும் விதமும் அவரின் அமைதியான சுபாவமும் விரிவான நோக்கங்களும் சாய்வற்ற நிலைப்பாடும் பிறரை அவரின் மேல் ஈடுபாடு கொள்ள வைத்திருக்கின்றன. அதுவே அவருக்கு வெற்றியைத் தந்தது.

மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த நாட்களில் அவர் முழுதாக இலக்கிய வாழ்க்கையையே வாழ்ந்தார். அவருடைய மற்றத் தோழர்களைப்போல குடும்பம் பிற விவகாரங்கள் என்று எதுவும் இல்லாதது அ.செ.முவுக்கு ஒரு வசதி. அவருக்கும் பிற சகோதரர்களோ சகோதரிகளோ இல்லை. அவர் தனிப்பிள்ளை. தாய் மட்டும்தான். ஆக பார்க்க வேண்டிய ஒரே பொறுப்பு அவருக்கு தாய் மட்டும்தான். எனவே தன்னுடைய புலன் முழுவதையும் அவர் எழுத்துக்கும் இதழ் வெளியீட்டுக்குமாகவே செலவிட்டார். அதனால் பின்னாளில் வந்த யாழ்ப்பாணத்தின் எழுத்தாளர்களுக்கெல்லாம் மறுமலர்ச்சி வாய்ப்பான பெருங்களத்தைத் திறந்து கொடுத்தது. மறுமலர்ச்சியில் அ.பஞ்சாட்சர சர்மா, சு.வே என்று பின்னாளில் வேறு ஆட்களும் இணைந்து கொண்டாலும் அ.செ.முவே இதில் மையசக்தியாக இருந்தார். அந்த நாட்களில் அ.செ.மு இலக்கியக்காரர்களிடம் பெரும் செல்வாக்கொடு இருந்திருக்கிறார்.

மறுமலர்ச்சியில் மூன்று தலைமுறைப்படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள். பதினைந்து ஆண்டுகால மறுமலர்ச்சி இதழின் வரலாற்றில் அதன் சாதனையாக ஏறக்குறைய நூறு வரையான சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

அ.செ.மு வுக்கு மறுமலர்ச்சியில் தொடர்ந்து இயங்க விருப்பம் இருந்தாலும் அவரால் அதில் தொடர்ந்து செயற்பட முடியவில்லை. அ.செ.முவை விரட்டிக்கொண்டேயிருந்த நோய் அவரை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு விரட்டியது. ஆனாலும் அங்கே போன அ.செ.மு சும்மா ஆஸ்பத்திரியில் படுத்திருக்வில்லை. அவர் திருகோணமலையில் எரிமலை என்ற பத்திரிகையைத் ஆரம்பித்தார். அவருக்குத் துணையாக தாழையடி சபாரத்தினம் உதவினார். ஈழநாடுவிலும் ஈழகேசரியிலும் மறுமலர்ச்சியிலும் அவருக்கு அறிமுகமாகியிருந்த படைப்பாளிகளை எரிமலையில் எழுதவைத்தார். ஆனால் எரிமலை ஆறு இதழ்களுடன் திருகோணமலையின் முதலாவது பத்திரிகை என்ற பெயருடன் நின்று விட்டது. அது நின்று போனதுக்கு பொருளாதாரப்பிரச்சினையே காரணம் என்று பின்னாளில் அ.செ.மு வருத்தத்தோடு சொன்னார்.


4

அ.செ.மு எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஈழத்தில் இரண்டு பெரும் இலக்கியப்போக்குகள் செல்வாக்கிலிருந்தன. தமிழ்த் தேசிய அரசியல் அப்போது வெகுஜன மட்டத்தில் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாக இடதுசாரிகளின் அரசியல் இலக்கியத்திலும் செல்வாக்கைச் செலுத்தத் தொடடங்கியிருந்தது. ஆனால் இந்த இரண்டு அரசியல் குழாத்திலும் அ.செ.மு சேரவேயில்லை. அவர் இந்த ஈர்ப்பு விசைக்கு அப்பால் தன்னை வைத்துக் கொண்டார். அவருக்கு எந்த அரசியலிலும் ஈடுபாடிருக்கவில்லை. அவர், சுதந்திரனில் எழுதியபோதும் அந்த அரசியலை அவர் விலக்கி தன் அடையாளத்தையே அதில் வைத்திருந்தார். ஆனால் தான் ஒரு மிதவாதி என்றே சொல்கிறார். ஆனாலும் அந்த மிதவாதத்திலும் அவர் தீவிரம் கொண்டவரல்ல. அவர் அமைதியான விலகிய தனித்த புள்ளி.

அ.செ.மு வின் எந்தச் சிறுகதையும் நேரடியாக அரசியலைப் பேசியதில்லை. வாழ்வை, அதன் ஆதார சுருதியை, அதனுள்ளோடும் புரியாமலும் நீங்காமலும் தொடரும் புதிர்களை நோக்கியே அவருடைய கரிசனை இருந்தது. கதைகளின் உட்தொனியிலேயே அவர் கவனமெடுத்தார். பரப்புரை எழுத்துக்கு எதிரான இயக்கம் அவருடையது. அதில் அவருக்கு நம்பிக்கையுமில்லை.

இதற்கு நல்ல சான்று சுதந்திரனில் வேலை செய்தபோதும் அவர் அந்த அரசியலில் ஆர்வப்படவில்லை என்பது. சுதந்திரன் தமிழரசுக்கட்சிப்பத்திரிகை. அப்போது தமிழ்த் தேசிய எழுச்சி பிரமாண்டமாக இருந்தது. ஆனால் அந்த அரசியலுக்குள் அவர் இறங்கவுமில்லை. ஏறவுமில்லை. அதைப்போல அவர் முற்போக்கு அணிக்குள்ளும் போகவுமில்லை. வரவுமில்லை. மட்டுமல்ல, எந்த அணியை ஆதரிக்கவுமில்லை, நிராகரிக்கவும் இல்லை. அவர் தன்பாட்டில் தன் வழியில் பயணித்தார். அவருடைய சுபாவமே இதுதான். தன் பாட்டில் இருப்பது. இதன்படி ஒரு துலக்கமான தனிக் கோடு அ.செ.மு.

அ.செ.மு வுக்கு தல்ஸ்தோயைப்பிடிக்கும். காஃகாவையும் பிடிக்கும். அவருடைய ஈடுபாடுகள் இப்படியே இருந்தன. சார்;புகளை விட்டு விலகிய பாதையில் அவருடைய பயணம் நிகழ்ந்ததால் அவர் எல்லாவற்றையும் படித்தார். எல்லாவற்றையும் விரும்பினார். அவருடைய தேர்வுகள் பரந்ததாகவும் வரையறைகளற்றதாகவும் இருந்தது.


5

அடுத்தது அ.செ மு வின் ஊடகப் பங்களிப்பு. புதுமைப்பித்தன் சினிமாவில் இயங்கியிருந்த போதும் அவருடைய அடையாளம் சிறுகதையில் இருப்பதைப்போல அ.செ.மு வும் பத்திரிகைகளில் வேலை செய்திருந்தாலும் அவர் ஒரு சிறுகதைப்படைப்பாளியாகவே தெரிகிறார். ஆனால் அவர் ஊடகங்களில் இயங்கிய காலகட்டம் உலக அரசியலிலும் இலங்கை அரசியலிலும் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரும் அதன் முடிவில் கொலனி ஆதிக்கமும் மறைந்த காலகட்டம் அது. இந்த நாட்களில் இலங்கை நிலவரம் மிகப் பெரிய மாறுதல்களை நோக்கியிருந்தது. அத்துடன் தமிழ் - சிஙகள முரண்பாடுகள் வரலாற்று மீட்புடன் மீண்டும் முளைவிடத் தொடங்கியது. இதற்குள் அவர் அமைதிவழித் தீர்வை வலியுறுத்திச் செயற்பட்டார். வன்முறைக்கெதிரான நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார். ஆனால் அவருடைய அந்த எண்ணத்துக்கு எந்த மதிப்பும் இலங்கை நிலவரத்தில் கிடைக்கவில்லை. என்றபோதும் அ.செ.மு இன்று உலகம் வலியுறுத்துகின்ற அமைதியை அன்றே முன்னிறுத்தியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் வெளியான பிராந்தியப்பத்திரிகையான ஈழநாடுவை வெற்றிகரமமாக வளர்த்தெடுக்க அ.செ.மு உழைத்ததை பலரும் நினைவு கூர்கிறார்கள். அதைப்போல திருகோணமலையில் தணிகரமாக ஒரு தமிழ்ப்பத்திரிகையை வெளியிட்டுமிருக்கிறார். மறுமலர்ச்சியின் ஆசிரியராக அதன் பதினெட்டு இதழ்கள் வரையிலும் இருந்திருக்கிறார். இதைத்தவிர முன்னர் குறிப்பிட்டுள்ளதைப்போல ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் வேலை செய்திருக்கிறார். இதில் எல்லாம் அ.செ.மு வின் பங்களிப்பு இலக்கிய வகையானதானதே. அரசியலுக்கு அவர் அளித்த நம்பிக்கையை விடவும் இலக்கியத்துக்கு வழங்கிய முன்னுரிமையும் அந்தப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலுமே அதிக அக்கறையை அவர் கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் மறுமலர்ச்சி தவிர ஏனைய பத்திரிகைகள் வெகுஜன ஏடுகள். அதனால்தான் அவர் ஊடகங்களிலும் படைப்பாளியாகவே பார்க்கப்படுகிறார். படைப்பாளிகளை ஊடகங்களுடன் இணைக்கும் ஒரு நுட்பவியலாளராகவும் அவர் கருதப்படுகிறார். அ.செ.மு வுக்குப்பிறகு இதுவரையிலும் ஈழத்தில் அவரைப் போன்றதொரு ஆளுமை எந்தப்பத்திரிகைகளிலும் வரவில்லை.


1981 இல் இலங்கை அரசாங்கத்தின் வன்முறையில் யாழ்ப்பணம் எரிக்கப்பட்டது. அப்போதுதான் யாழ்ப்பாண நூலகம், ஈழநாடு பத்திரிகை, நகரிலிருந்த பூபாலசிங்கம் புத்தகக்கடை எல்லாம் எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் எல்லோரையும் போல அ.செ.முவையும் ஆழமாகப்பாதித்தது. இதற்குப்பிறகு அவர் எழுதவேயில்லை. அ.செ.முவையும் அவருடைய எழுத்தையும் அந்த வன்முறைத்தீ எரித்து விட்டது.

6

நான் அ.செ.மு வைச் சந்தித்தது அவர் எழுதுவதைக்கைவிட்டிருந்த நாட்களில்தான். ஆனால் அவரோடு எழுத்தைப்பற்றி, அவருடைய காலத்தைப்பற்றி பேசினால் முதலில் எந்த ஆர்வமுமில்லாதவராக இருப்பார். தொடர்ந்து மெல்லப்பேசிக் கொண்டிருந்தால் அவர் பூனை மெதுவாக நடந்து வருதைப்போல மெல்ல உரையாடலில் நுளையத் தொடங்குவார். ஆனால் அதிக சத்தமோ, விவாதமோ கிடையாது. ஆர்வமும் பெரிதாக இருக்காது. மெதுவாக, தன்பாட்டில் எதிலும் பற்றற்ற ஒரு விவரிப்பாளனைப்போல தணிந்த குரலில் பேசுவார். இதுவும் எப்போதுமென்று சொல்ல முடியாது. பின்னர் இதுவும் நின்று போயிற்று.

அந்த நாட்களில் அவர் நோயாலும் ஆதரவற்ற நிலையாலும் பொருளாதாரக் குறையாலும் பெரிதும் சிரமப்பட்டார். வீடு இல்லை. யாரோ ஒரு தெரிந்தவரின் வளவில் ஒரு சிறு குடிசையைப் போட்டுக் கொண்டு அதில் குடியிருந்தார். ஆஸ்மாவும் நீரிழிவும் அவரைப் படுத்திக் கொண்டிருந்தன. எங்கேயும் போவதில்லை. யாரோடும் தொடர்பில்லை. எல்லாவற்றையும் அவர் துண்டித்து விட்டார். எதுவும் அவருக்குத் தேவைப்படவில்லை. அநேகமாக அவர் பின்னாளில் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமலிருந்தார். அவருக்கு அவற்றில் ஆர்வமேயில்லை. அவையெல்லாம் அவரைத் தொந்தரவு படுத்துவதாகவே அவர் உணர்ந்திருக்கக்கூடும். இலக்கிய ஆர்வத்துக்கு அவருடைய வாழ்க்கை நிலவரம் இடமளிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இதெல்லாம் பின்னாளில் அவருக்குத் தேவையில்லாத சங்கதிகள் ஆகிவிட்டன. அவர் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை வைத்துக் கொண்டார் என்றே நினைக்கிறேன்.

அ.செ.முவை அவருடைய முதுமைக்காலத்தில் கோகிலா மகேந்திரன், நா.சுப்பிரமணியன், கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை போன்றோர் இயங்கிய தெல்லிப்பழை கலை, இலக்கியக் களம் ஆதரித்தது. அவருக்கு நிதி சேகரித்துக் கொடுத்தார்கள். ஆனால் எதுவும் அவரை பழைய நிலைக்கு கொண்டு வரவில்லை. எவ்வளவு காசைக் கையில் கொடுத்தாலும் அவர் இனிப்புப் பண்டங்களிலேயே அதையெல்லாம் கரைத்துவிடுவார். அவர் ஒரு குழந்தையைப்போல தன்னிலை இழந்து இயங்கினார்.

இதை துக்கத்தோடு சொல்வார் ஏ.ரி.பி.

அ.செ.மு பின்னாளில் குழந்தையாகி விட்டார். நீரிழி வியாதி அவரைப் பாடாய்ப் படுத்தியது என்று சொன்னேனே. அது இனிப்பைக் கொடுத்து அவரை அப்படியே உறிஞ்சி விட்டது. அவர் மெலிந்து துரும்பாகியிருந்தார். இருமி இருமி களைத்த அந்த மெல்லிய உடலை தொடவேண்டும். அதற்கு ஆதரவாயிருக்க வேண்டும் என்று என் மனம் எத்தனையோ தடவை உள்ளே கூவியிருக்கிறது. ஆனால் அவர் அதற்கெல்லாம் நெகிழ்ந்து கொடுக்க வில்லை. தனியாகவே இருந்தார். அவருடைய மனதுக்கு அது தேவையாக இருந்திருக்கலாம். அவரை நண்பர்களும் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளும் போய்ப்பார்த்து பேசி வந்தார்கள். ஆனால் அந்தச் சந்திப்புகள் எல்லாமே மரியாதையின் நிமித்தமான – அனுதாபத்தின் பாற்பட்;ட சந்திப்புகளாகவே இருந்தன. அவருக்குள் அடங்கிப் போயிருந்த ஒரு பேராற்றை, உறைந்துபோன ஒரு படைப்பாளியை பின்னாளில் எவரும் பார்க்கவேயில்லை.

1991 இல் அவருக்கு உதவி நிதியளிப்பதற்காக வெளிச்சம் இதழின் சார்பில் நான் அவரிடம் போயிருந்தேன். அ.செ.மு வைப்போல அல்லை ஆறுமுகமும் தனிமையிலும் முதுமையிலும் வறுமையிலும் வதங்கிக் கொண்டிருந்தார்;. இருவருக்கும் விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம் உதவ முன்வந்தது. அந்த நிகழ்வுக்காக அழைக்கப் போயிருந்தேன். அ.செ.மு வரத்தயங்கினார். அவர் இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் விட்டு பல வருசங்களாகிவிட்டது. புதுமைப்பித்தன் தன்னுடைய கஸ்ரங்களைப் பகிர்ந்து கொள்ள அவருக்கு கமலா இருந்தார். பாரதிக்கு செல்லம்மா இருந்தார். அ.செ.மு வுக்கு யாருமேயில்லை.
எனக்கு அவருடைய நிலைமை புரிந்தது. அவர் உடுத்து வருவதற்கு உடைகளே இருக்கவில்லை.
ஒரு வாங்கு, சில தினப்பத்திரிகைகள், பழைய துணிகள், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்குமான பாத்திரங்கள் என்று இருந்த அந்தச் சிறு குடிசையின் முற்றத்தில் அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் நிகழ்வில் கலந்து கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார். உடுத்துக் கொண்டு வருவதற்கு வேட்டியையும் சேர்ட்டையும் கொண்டு வருவதாக சொன்னேன். அதற்குப்பிறகே அவர் முழுதாகச் சம்மதித்தார்.

இந்த நிலைமையை நான் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரையிடம் சொன்னேன். அவர் ஏற்பாடுகளைச் செய்தார்.

அ.செ.மு கலந்து கொண்ட இறுதி இலக்கிய நிகழ்வு வெளிச்சம் முதலாவது இதழ் வெளியீடாகத்தானிருக்கும் என நினைக்கிறேன். அதற்குப்பிறகு வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை.

அ.செ.மு கடைசி நாட்களில் திருகோணமலையில் முதியோர் விடுதியொன்றில் இருந்தார். அங்கேயே அவர் மரணத்தையும் சந்தித்தார். அவர் இரண்டு தடவைகள் இறந்து விட்டதாக பத்திரிகைகள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு செய்தி வெளியிட்டன. ஆனால் அவர்; ஒரு தடவைதான் இறந்தார்.

00

அ.செ.மு.வின் புனைபெயர்கள் - யாழ்பாடி, வள்ளிகந்தன், யாழ்தேவி, பீஷ்மன், முருகு,நீலாம்பரி, காங்கேயன், கதிரவன், மயிற்புறவம், இளவேனில், புராடன், சோபனா, மேகலை, தனுசு, கத்தரிக்குறளி.

00

அ.செ.மு 1950 இல் தன்னுடைய “புகையில் தெரிந்த முகம்“ என்ற கதைநூலுக்கு எழுதிய முன்னுரையை இத்துடன் இணைத்துள்ளேன். இந்த நூல் 136, செட்டியார் தெரு, கொழும்பில் இயங்கிய நவலட்சுமி புத்தகசாலையினால் - நவலட்சுமி பிரசுரம் 01 என வெளியிடப்பட்டது. அப்பொழுது இதன் விலை 50 சதம் மட்டுமே.

இந்தக் கதையை நீங்கள் noolaham.net இல் படிக்கலாம்.

கதையின் கதை

சில மாசங்களின் முன் சிறுகதை ஒன்று எழுதி ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன். சில தினங்களின் பின் ஒருநாள் அது திரும்பி வந்தது. திரும்பி வந்தபோது ஒரு கடிதத்தையும் அது கொண்டுவந்தது. கடிதம் பின்வருமாறு போயிற்று.

அன்ப,

உங்கள் கதையைப் பார்த்தேன். தயவுசெய்து அதனை ஒரு தொடர்கதையாகவே நீட்டி எழுத வேண்டுகிறேன். ஒரு நல்ல தொடர் கதையைப் பொறுத்த வரையில் நமது பத்திரிகைக்கு இப்பொழுது மழைக்காலம்” (அதாவது பஞ்சகாலம்).

இந்தப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எப்பொழுதும் தங்கள் தங்கள் பத்திரிகைகளைப் பற்றித்தான் முதல் கவலை. நாலைந்து இதழ்களுக்கு நல்ல சரக்காக ஏதாவது கிடைக்குமா வென்று எங்கேயும் எந்த சந்தர்ப்பத்திலும் து}ண்டில் போட்டுக்கொண்டேயிருப்பார்கள். அவர்களத முக்கிய பிரச்சினை அதுதான். இல்லாவிட்டால் ஒரு சிறு கதையை பெருங்கதையாக நீட்டும்படி கேட்க என்ன துணிச்சல்! சிறுகதை என்றால் என்ன இழுப்பு மிட்டாயா அல்ல ரப்பரா?

அந்த ஆசிரியருக்கும் எனக்கும் ஏற்கனவே அறிமுகமிருந்தபடியால் போனால் போகிறது என்று விட்டுவிட்டேன். அவர் கேட்டுக்கொண்ட படியே சிறு கதையைப் பெருங் கதையாக நீட்ட (நீட்டி முழக்க!) தொடங்கினேன்.

அந்த உருக்குப்பட்டடை வேலையின் முடிவு தான் - 50 பக்கங்கள் வரை கொண்ட இந்தச் சிறு புத்தகம்.

இனி, அது எப்படி புத்தக வடிவெடுத்தது என்பதையும் சொல்லிவிடுகிறேன். காசு கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கும் வாசக நேயர்களுக்கு இவைகளை யெல்லாம் தெரிந்துகொள்ள உரிமை இல்லையென்றால் வேறு யாருக்கு அது இருக்க முடியும்?

தொடர்கதை பத்திரிகையில் வெளியாகிக் கொண்டிருந்தபோது வாரம் வாரம் அதுபற்றி வரும் கடிதங்களை ஆசிரியர் எனக்கு அனுப்பி வைத்தார். அதாவது டெலிபோன் எக்ஸ்சேஞ் நிலையத்திலுள்ள டெலிபோன் ஒப்பரேட்டர் வேலையை ஆசிரியர் வாசகர்களுக்கும் எனக்கும் மத்தியில் நின்று சில மாசங்களாகச் செய்து கொண்டிருந்தார்.

ஆசிரியர் அனுப்பிய வாசகர்களின் கடிதங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக வைத்துப் பார்த்தபோது அது ஒரு நெல்லிக்காய் மூட்டையைப்போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் கோணிக்கொண்டு போயிற்று. ஒருவருக்கு வண்டில் சவாரி வர்ணனை பிடித்திருக்கும்@ இன்னொருவருக்கு திருவிழாபற்றிய வர்ணனைதான் பிடித்துப் போயிருக்கும். வேறொருவருக்கு கறிக்கு உப்புக் குறைவானதுபோல கதாநாயகர்களின் காதல் சம்பாஷணை போதாமலிருக்கும். மற்றொருவருக்கு கதையில் வரும் புகையிலைச் சுருட்டுப் பிடிக்கும் (அதாவது அது அவரைப் பிடித்துவிட்டது என்பது கருத்து!)

இப்படியே ரசிக மகாகோடிகளின் பல வேறுபட்ட அபிப்பிராயங்களின் நடுவே குறிப்பிடத்தக்க ஒரு கடிதம் இருந்தது. குறிப்பிடத் தக்கது என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் வருஷக் கணக்காக கடிதங்கள், யாத்திரை செய்துகொண்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும் இந்தக்காலத்தில் கடல்கடந்திருக்கும் ஒருவர் எனது கதையைப்பற்றி அபிப்பிராயம் தெரிவித்து எழுதிய கடிதம் மட்டும் காலாகாலத்தில் NÑமமாக என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டதல்லவா, அதனால்தான்!

குறித்த கடிதம் எட்டயபுரம் பாரதி மண்டபத்திலிருந்து வந்தது. திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரின் ‘தோழமைத் தொண்ட’ரும் தற்சமயம் பாரதி மண்டபத்து நு}ல் நிலைய கண் காணிப்பாளராயிருப்பவருமான திரு.ல.நாராயணனுக்கு எனது கதை பிரமாதமாகப் பிடித்துப் போய்விட்டதாம்! என்ன ஆச்சர்யம்!

‘ஈழ நாட்டுத் தமிழ் மக்களின் - பிரதானமாக யாழ்ப்பாணத்து கிராம மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும்’ இந்தக் கதையை அவர் வெகு ‘அருமையாக’ ரசித்துப் படித்தாராம். தென்னிந்திய தமிழர்கள்இந்த வெளியீட்டை நிச்சயம் வரவேற்பார்கள் என்று தென்னாட்டுத் தமிழர்களின் பிரதிநிதியாகவே திரு. நாராயணன் நின்று பேசினார் - அல்ல, எழுதினார்.

சுருட்டுப் புகையின் மயக்கத்தில் கற்பனை பிறக்கும் எனக்கு பாரதி மண்டபத்தில் பிறந்த இக் கடிதத்தில் கற்பனை தோன்றுவது பெரியகாரியமா?

மகாகவி பாரதியார் நேரில் வந்து “சபாஷ் பாண்டியா! உன் புத்தகத்தை இப்படிக் கொடடா” என்று தட்டிக் கொடுத்ததுபோல எனக்கு ஒரு பிரமை மனத்தில் தட்டிற்று!

இந்தப் புத்தகத்தை என் அன்பார்ந்த வாசகர்களின் தலையில் சுமத்தவேண்டி ஏற்பட்டதற்கு இதோடு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

“உமது புத்தகங்களை அன்பளிப்பாகவே அனுப்பிச் செலவாக்கவேண்டிய நிலைவரம் உமக்கு ஏற்படாமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். அதைப்பற்றி நீர் கொஞ்சமும் யோசிக்காமல் புத்தகத்தை வெளியிடும்” என்று தைரியம் கூறிய ஒரு நண்பர், இதை மனமுவந்து அச்சிட்டுக் கொடுத்த ‘சுதந்திரன்’ அதிபரும் அச்சுக்கூட நிர்வாகஸ்தர்களும், இதை தங்கள் பொறுப்பாகவே ஏற்று வெளியிட முன்வந்த நவலட்சுமி புத்தகசாலையார், சித்திரம் எழுதி உதவிய அன்பர் ‘கதிர்’, மகாகவி சுப்பிரமணி பாரதியார் - ஆகிய இத்தனை பேர்களும் தான் இந்தப் புத்தகம் வெளியாவதற்கு, காரணமாக - காரணஸ்தர்களாக உள்ளனர்.

பத்தகத்தைப் படித்து முடித்த வாசகர்களுக்கு, யாரையாவது பாராட்ட வேண்டுமென்று தோன்றினால் உங்கள் பாராட்டுதல்களை மேலே கூறியவர்களுக்கே செலுத்துங்கள்.

அடுத்தபடியாக இந்த முகவுரையை ஏன் எழுதினீர் என்று கேட்கிறீர்களா? சரி அதையும் சொல்லிவிடுகிறேன்.

புத்தகத்தின் அச்சு வேலை முடிவடைந்த போது பிரசுராலயத்தார்கள் அதில் ஒரு பிரதியை கொண்டுவந்து என் முன்னால் போட்டுவிட்டு “இதென்ன இப்படி மெலிந்து போயிருக்கிறதே!” என்றார்கள். அதைக் கொழுக்க வைக்க பயில்வான் லேகியம் வாங்கலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது நோயைத் தெரிவித்த அவர்களே அதற்கு மருந்தும் சொன்னார்கள். ஒரு தடைவ பேனா இன்ஜெக்ஷன் கொடுத்தால் சரியாய்ப் போய்விடும் என்றார்கள். அவர்களது யோசனைதான் இப்படி முன்னுரை என்ற பெயரில் ஐந்து பக்கங்கள் கொண்ட வெட்டிப் பேச்சாக முடிந்தது.

முன்னுரையை நானேதான் எழுதவேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் - அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகிறேன். புத்தகத்தை எழுதியவரே அதற்கு முன்னுரை எழுதக்கூடாது என்று நியதி இருக்கிறதா?

இன்னும் சொல்லப்போனால், நான் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத என்னைவிட வேறு யார் அதிகமாக ஆசைகொள்ளப் போகிறார்கள்?

வணக்கம்

அ.செ.மு.
கொழும்பு
1-08-50


00
1998

Wednesday, November 16, 2011

தனிவழியில் ஒரு வெளி



தா.இராமலிங்கம் – கருணாகரன்

00

அ.செ.முவையும் தா. இராமலிங்கத்தையும் நினைக்கும் போது ஏனோ தெரியாது, எனக்கு நகுலனும் பிரமிளும் ஞாபகத்துக்கு வருவார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்பாளுமை, படைப்புலகம் என்பன வேறுவேறானவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை. ஆனால் இந்த நான்குபேரும் ஏதோ ஒருவகையில் உள்ளார்ந்த விதமாக ஒன்றுபட்டிருப்பதைப் போலவே உணர்கிறேன். அந்த ஒன்று படுதல் என்ன என்று இதுவரையில் துலக்கமாகத் தெரியவில்லை.

ஆனாலும் ஏதோ ஒன்று மெல்லிய இழையாக இவர்களுக்கிடையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏதோ ஒரு விசயம் அல்லது ஏதோவொரு அம்சம் என்னவென்று என்றேனும் நிச்சயம் கண்டுணரலாம். உணர்தளத்திலிருந்து அது துலக்கமாக மேற்கிளம்பி வரக்கூடும்.
இதுவரையில் எனக்குப்பட்டது இவர்களிடம் குவிந்திருக்கும் தனிமைதான் இந்த நான்குபேரையும் அப்படி ஒன்றாக நினைக்கத் தோன்றுகிறது எனலாம். ஆனாலும் இதை நான் மங்கலாகவே கண்டுள்ளேன். இந்தத் தனிமையை இவர்களின் படைப்புகளின் வழியே துலக்கமாகக் காணமுடியவில்லை. பதிலாக இவர்களின் வாழ்க்கையில்தான் அதைப் பார்க்க முடியும்.

வாழ்க்கையில் இருந்த இந்தத் தனிமை இவர்களிடம் அந்தப் பிரக்ஞையுடன் உணரப் பட்டிருந்தால் அது எப்படியும் இவர்களின் படைப்புகளில் வெளிப்பட்டிருக்குமே என்று ஒரு நண்பர் கேட்டார். இதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களின் எழுத்துகளில் உள்ளோட்டமாகப் படிந்திருக்கும் பிரபஞ்சப் பிரக்ஞையும் ஆன்மீக தரிசனங்களும் சொல்வதென்ன? தனிமையின் புள்ளியிலிருந்து வேர்விடும் தரிசனம்தானே இது.

பிரமிள் வேகமும் தீவிரமும் உடையவர். அந்த வேகத்தையும் தீவிரத்தையும் இன்னொரு நிலையில் கொண்டவர் நகுலன். ஆனால் அந்த அளவுக்கு அ.செ.முவும் தா.இராமலிங்கமும் வேகமும் தீவிரமும் கொண்டவர்களல்ல. அ.செ.மு முழுக்க முழுக்க வெளிப்டையாகவே சமூகத்தை விமர்சிக்கும் எழுத்தின் நாயகர். சமூக நடத்தைகளின் வழியாக எழும் உணர்வுகளைப் பதிவு செய்யும் எழுத்தாளர். பிரகடனங்களில்லாத எழுத்துலகம் அவருடைய பலம். கிண்டலும் அங்கதமும் அவருடைய சிறப்பு.

பிரமிளும் நகுலனும் பரிசோதனைகள், படைப்புலகத்தின் பல்வேறு சாத்தியப்பாடுகளை, வடிவங்களை எல்லாம் தங்கள் படைப்பு வாழ்க்கையில் கொண்டவர்கள். தமிழ்ப் படைப்புலகில் இந்த இரண்டு பேரும் சாதனைகள் என்ற அளவில் தங்களை நிலை நிறுத்தியவர்கள். அ.செ.மு அந்த அளவுக்குச் செல்லவில்லை. ஆனாலும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு தன்னை நிறுவியவர்.

தா. இராமலிங்கம் கவிஞர். இராமலிங்கத்தின் சிறப்பு பேச்சோசையை, நடைமுறை வாழ்க்கையை, புழங்கு மொழியை தன்னுடைய கவிதை இயக்கத்தில் கொண்டு வந்தவர். ஈழத்துக் கவிதைகளில் இந்தப் பண்புகளை மஹாகவியும் தா. இராமலிங்கமும் மிகச் செழிப்பாக, பிரக்ஞை நிலைப்பட்டுக் கொண்டு வந்தவர்கள். இதை 1950 களில் இவர்கள் இருவரும் ஆரம்பித்து வைத்தார்கள்.

மஹாகவி மரபான வெளிப்பாட்டு வடிவத்தில் புதுமைகளை நிகழ்த்த முனைந்தவர். அதில் குறிப்பிடக் கூடிய எல்லைவரை சென்றவர். ஆனால், தா.இராமலிங்கம் புதிய வெளிப்பாட்டு முறைமையில் மிகச் சாதரணமாகவே தன் கவிதைகளை, தன்னுடைய படைப்புலகத்தை உருவாக்க முனைந்தவர். அதுவரையுமிருந்த வெளிப்பாட்டு முறைமைகளையும் எல்லைகளையும் தாண்டியவர். தா. இராமலிங்கம் அதிகம் எழுதவில்லை. படைப்புலகத்தில் தொடர்ந்து இயங்கவும் இல்லை. தீவிரமாகப் படைப்புலகத்தை அவர் அணுகவும் இல்லை. ஆனால் அவர் ஈழத்துக் கவிதையுலகத்தில் நிராகரிக்க முடியாத படைப்பாளி. புதிய கவிதைகளின் முன்னோடி. ஈழத்தில் முதன்முதலில் புதுக்கவிதை நூலினை 1960 களில் வெளியிட்டு ஊக்கநிலையை ஏற்படுத்தினார் அவர். அப்போது ஈழத்தில் நிலவிய இலக்கியப் போக்கையும் விமர்சன இயக்கங்களையும் மேவி எழுந்தார் தா. இராமலிங்கம்.

தா. இராமலிங்கத்தை முதன்முதலில் சரியாக இனங்கண்டவர் மு. தளையசிங்கம். இராமலிங்கத் தின் முதலாவது கவிதை நூலான ‘புதுமெய்க் கவிதைகளு’க்கு கவிஞர் இ. முருகையன் முன்னுரை எழுதியிருந்தபோதும் தா. இராமலிங்கத்தின் கவிதைகளை ஏற்பதற்கோ, புதிய கவிதை இயக்கத்தை அங்கீகரிப்பதற்கோ முருகையனிடம் தயக்கங்களிருந்தன. ஆனால், மு. தளையசிங்கம் தா. இராமலிங்கத்தையும் அவருடைய புதிய கவிதை இயக்கத்தையும் சரியாக இனங்கண்டு கொண்டார். அதை அவர் பேருவகையுடன் முன்னிலைப் படுத்தினார். இதை நாம் தா. இராமலிங்கத்தின் இரண்டாவது கவிதை நூலான காணிக்கையில் (1965) காணலாம். இந்த நுலீலில் எஸ். பொவும் முன்னீடும் உண்டு.

ஆனால், காணிக்கை கவிதைத் தொகுதிக்கு மு. தளையசிங்கம் எழுதியிருக்கும் முன்னுரை முக்கியமானது. அது புதிய கவிதை இயக்கத்தைக் குறித்த விரிவான ஒரு ஆய்வுரையே.
அப்போது பேராசியர் க. கைலாசபதியும் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் ஈழத்து விமர்சன உலகில் மிகப் பெரிய ஆதிக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், தா. இராமலிங்கம் இவர்கள் இருவரிடமும் தன்னுடைய நூல்களுக்கான முன்னுரையினை வாங்கவில்லை. பதிலாக இவர்களிடமிருந்து விலகியிருந்த மு. தளைய சிங்கத்திடமும் எஸ்.பொ. விடமும்தான் முன்னுரை களை வாங்கியிருக்கிறார். அவர் தன்னுடைய இலக்கிய வழியை, அதன் செல்நெறியை மு. தளைய சிங்கத்திடம்தான் கண்டிருக்கிறார். பின்னாளில் மு. தளையசிங்கத்தின் மெய்யுள் வழியில்தான் அதிக நம்பிக்கையோடு தா. இராமலிங்கம் நெருக்கமாக நின்றார். இதற்கு அவரிடம் உள்ளோட்டமாக இருந்த ஆன்மீக ஈடுபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தா. இராமலிங்கத்தின் கவிதைகள் சமூக அக்கறையுடையவை. போலி ஆசாரங்களின் மீதும் பொய்யான நம்பிக்கைகளின் மீதும் ஆழமான விமர்சனங்களை முன்வைப்பவை.
யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் மீதும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் பேரினவாதச் சிந்தனையில் மையங் கொண்டிருக்கும் இலங்கை அரச இயந்திரத்தின் மீதும் தா. இராமலிங்கம் கடுமையான எதிர் வினைகளை ஆற்றியிருக்கிறார். அவர் இயங்கிய கால எல்லையில் நிலவிய அனைத்துவகையான சமூக நீதியின்மைகளுக் கெதிராகவும் அவர் குரல் எழுப்பியிருக்கிறார். இதை மு.தளையசிங்கமே மிகவும் தெளிவாகத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் – ‘தா. இராமலிங்கத்தின் கவிதைகளிலே முழுக்க முழுக்க அவரிடமிருக்கும் தன் காலம், சூழல் பற்றிய உணர்வும் அந்த உணர்வு பிறப்பிக்கும் திருப்தி யின்மையும் அந்தத் திருப்தியின்மெ கோரும் மாற்றமும்தான் முத்திரை பதித்து நிற்கின்றன’ என்று.

யாழ்ப்பாணத்தில் நிலவும் போலியான ஆசாரங்கள் பலவும்தான் யாழ்ப்பாணத்தின் முகமாக இருக்கிறது. அதேவேளை எந்தச் சமூகங்களுக்கும் இருக்கும் தனிச்சிறப்பும் யாழ்ப்பாணத்துக்கும் உண்டு. உதாரணமாக வரண்ட பூமியான யாழ்ப் பாணத்தை தங்களுடைய உழைப்பால் வளப்படுத்தி, அந்த வளத்தை வைத்து வாழ்கின்ற இயல்பையும் சிறப்பையும் மஹாகவி எழுதியிருக்கிறார். நிலாந்தன் எழுதியிருக்கிறார். இதைப் போல பலரும் யாழ்ப்பாணத்தின் சிறப்புகளை தங்கள் படைப்புகளில் பதிவுகளாக்கியிருக்கிறார்கள்.

அதைப்போல எல்லோரும் இந்தச் சமூகத்தின் குறைபாடுகளை விமர்சனத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றனர். இது ஒரு சுவாரஷ்யமான விசயம். கடந்த அறுபது எழுபது ஆண்டுகால எழுத்துகளைத் தொகுத்துப் பார்த்தால் யாழ்ப்பாணச் சமூகத்தின் அத்தனை போக்குகளையும் இனங்காண முடியும். இந்தக் காலப்பகுதியில் நிலவிய சாதியப் பிரச்சினைகள், அதற்கெதிரான போராட்டங்கள், தமிழ் மக்களின் இனவுணர்வு, அதன் விளைவான அரசியல், அதன் தொடர்ச்சியான போராட்டங்கள், தமிழ்ச் சமூகத்தின் அத்தனை குறைபாடுகளுடனும் சிறப்புகளுடனும் முன்னெடுக் கப்பட்ட ஆயுதப் போராட்டம், அந்த ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் சிறப்பும் ஜனநாயக மறுப்பும் எனச் சகலதையும் நாம் இந்தக் கால எழுத்துகளில் பார்க்க முடியும்.

ஆனால், இராமலிங்கம் இந்தக் காலப்பகுதியில் தான் இயங்கிய காலப்பகுதியின் நிழ்வுகளையும் போக்களையும் அதற்காதரவான/எதிரான நிலைப் பாடுகளையும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சாதியத்துக்கெதிரான அவருடைய பதிவுகள் முக்கியமானவை.

‘…வேளாளர் குடிப்பிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும் …..’
‘இன்பம் நுகர்ந்தேன்
என்
ஆசார முட்டையிலும்… ஆசார முட்டையிலும்
கறுப்பு மயிர் கண்டேன்…’
(ஆசைக்குச் சாதியில்லை)


‘ஐயோ வாடி வீடே
நீ வதை கூடமானாயே…’
என்றும்
சாவிளைச்சல் சாவிளைச்சல்
சரித்திரம் காணாத சாவிளைச்சல்…’
எனவும்
‘கோழி குழறகுதே
மரநாய்தான் மரநாய்தான் …’

(நெஞ்சு பதறுகுது)

என்றும் அரச பயங்கரவாதத்தின் விளைவான எண்பதுகளின் நிலைமைகளை இராமலிங்கம் எழுதினார். இராமலிங்கம் இப்படி எழுதியவை பின்னாளில் தமிழ் அரசியலில் நிகழ்ந்தேறிய துரதிர்ஸ்டம் வேறு. அப்போதும் அவருடைய கவிதைகள் நினைவில் வந்தன.

யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பகுதியில் கல்வயல் என்ற இடத்தில் பிறந்தவர் தா. இராமலிங்கம். இந்தக்கிராமத்தில்தான் ஈழத்தின் இன்னொரு முக்கிய கவிஞரான இ. முருகையன், அவருடைய தம்பியாரான இ. சிவானந்தன், கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி ஆகியோரும் பிறந்தனர். இவர்கள் எல்லோரும் பேச்சோசையைத் தங்கள் கவிதைகளில் மையமாகக் கொண்டிருந்தவர்கள். பின்னர் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும் ஒரு மையமாக இந்தப் பண்பைக் கொண்டியங்கியவர்கள். அதேவேளை இவர்கள் அனைவரும் அமைதி, தீவிரம் என்ற நிலைகளில் அதிக ஒற்றுமையையும் கொண்டிருந்தனர். கல்வயல் வே. குமாரசாமி கொஞ்சம் உணர்ச்சிவசப்படும் ஆள் என்றாலும் மற்றவர்களிடம் இருந்த நெருக்கத்தைப் பேணும் இயல்பைக் கொண்டிருந்தனர் எல்லோரும்.

பிரமிள் எழுதத் தொடங்கிய காலப்பகதியில்தான் தா. இராமலிங்கமும் எழுதத் தொடங்கினார். அதுவும் புதுக்கவிதை இயக்கத்தில். ஆனால் இவர் தமிழகத்தில் அதிக கவனத்தை பெறவில்லை. தமிழகத்தில் படிப்பை முடித்துக் கொண்டு தா. இராமலிங்கம் ஈழத்துக்குப் பதுக்கவிதை இயக்கத்தைப் பற்றிய கனவுகளோடு திரும்புகிறார். அந்தக் கனவுகளோடு பிரமிள் ஈழத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்கிறார். இந்த இருவருக்கும் உள்ள சில நெருக்கமான ஒற்றுமைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவன. பிரமிள் தமிழகத்தில் கவிதை இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டார். அவரால் அதில் உச்சங்களைத் தொடமுடிந்தது. ஆனால் தா. இராமலிங்கம் இடையில் நின்று கொண்டார்.

தா. இராமலிங்கம் 1950களில் எழுதத் தொடங்கினாலும் தொடர்ந்து படைப்பியக்கத்தில் அவர் ஈடுபட்டதில்லை. இடையிடையே அவருக்கு உறங்கு காலங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக அவருடைய மகன்களில் ஒருவர் அகாலமரணமானதை அடுத்து அவர் குறிப்பிட்ட காலம் எழுதவேயில்லை. அப்போது மிகுந்த அழுத்தத்துக்கும் உள்ளாகியிருந்தார்.

தா.இராமலிங்கத்தை நான் சந்தித்ததும் இந்தக் காலப்பகுதியில்தான். அது எண்பதுகளின் இறுதிப்பகுதி. அலையிலும் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுதியிலும் தா.இராமலிங்கத்தை அடையாளம் கண்டிருந்தேன். அதன் பின்னரே அவருடைய புதுமெய்க் கவிதைகளையும் காணிக்கை யையும் நண்பர் யேசுராசா தந்திருந்தார். யேசுராசாதான் தா.இராமலிங்கத்தையும் அறிமுகப்படுத்தினார். ஆனால், இந்த விவரங்களும் தா. இராமலிங்கத்தின் கவிதைகளும் அவரை எப்படியும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டின. அந்தக் காலப்பகுதியில் நான் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருந்தது.

எண்பதுகளின் தொடக்ககால அரசியல் போக்கில் ஈடுபட்டதன் விளைவாக எண்பதுகளின் இறுதிப்பகுதியிலும் அப்படியரு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். தா. இராம லிங்கத்தை நான் சந்தித்தபோது அவர் பெரும்பாலும் மௌனநிலையிலேயே இருந்தார்.

மௌனத்தையே தன் பொழுதில் பெரும்பாலும் அவர் கடைப் பிடித்தார். தியானமும் மௌனமும் தான் அவருடைய பொழுதுகள் என்றிருந்தன அப்போது. அபூர்வமாக எப்போதாவது பேசுவார். ஆனாலும் நான் அவரிடம் இடையிடையே போய்வந்து கொண்டிருந்தேன். அவர் சிலபோத ஆர்வத்தோடு கதைப்பார். பல சமயங்களிலும் எதுவும் பேசாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார். சாந்தமான அந்த முகத்தில் ஒரு போதும் நான் எந்த வன்மத்தையும் சினத்தையும் கண்டதில்லை. மெல்லிய புன்னகை மலர்ந்திருக்கும். கேலி, கிண்டல், அதிர்ந்த பேச்சு, பிறரைப்பற்றிய விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் என்று எதையும் அவருடைய எந்த உரையாடலிலும் நான் கண்டதில்லை.

ஏன், தன்னுடைய எழுத்துகளைப் பற்றியும் அவர் அதிகம் பேசியதில்லை. ஆனால் தியானத்தை, மௌனத்தில் இருக்கும் ஆனந்தத்தை, தன் மனதில் இருக்கின்ற விடுதலைத் தாகத்தை, பிரபஞ்சம் பற்றிய தன்னுடைய வியப்பை, அதை நோக்கிய தனது பயணத்தை, அந்தப் பயணத்தின் தரிசனங்களை எல்லாம் அவர் ஆர்வத்தோடு சொல்வார்.

அப்போது அவருடைய கண்களில் மகிழ்ச்சி பொங்கும். முகம் பரவசமாகி மலரும். எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு மலர்ந்திருந்த காலப்பகுதியில் அவர் பெரும்பாலும் இலக்கியத்தை விட்டு, எழுத்துகளை விட்டு தியானத்திலேயே அதிக கவனத்தைக் கொண்டிருந்தார். அதனால் அவருடைய பேச்சுகள் தியானத்தைப் பற்றியும் மௌனத்தைப் பற்றியுமே அதிகமும் இருந்தன. எப்போதாவது இருந்தாற்போல இலக்கியத்தைப் பற்றிப் பேசுவார். ஆனால் தான் எழுதிவைத்திருந்த கவிதைகளைக் காட்டுவார். இது அபூர்வ நிகழ்ச்சி. என்றாலும் அந்தக் கவிதைகளை அவர் முறைப்படி சேகரித்து வைத்திருந்தமை சற்று மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஒருவர் எதில் அதிக கவத்தைக் குவித்திருக் கிறாரோ அதைப்பற்றியே அவருடைய கவனமும் ஈடுபாடும் இருக்கும். தா. இராமலிங்கத்துக்கு இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும் விட தியானத்தில் இருந்த ஈடுபாடும் சுகமும் அலாதியானது. அவருடைய அந்த ஈடுபாட்டைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியாது அவருடைய குடும்பத்தினரும் அவருக்கேற்றமாதிரி நடந்து கொண்டனர்.

ஒரு பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் சாதாரணமாக இப்படியான வாழ்வில் ஈடுபடுவதென்பது சாத்தியக் குறைவானது. அதுவும் யாழ்ப்பாணவாழ்க்கையில் இந்த மாதிரி ஆட்கள் இருப்பது மிகக் கடினமும் குறைவும். இந்த நிலையில் தா. இராமலிங்கம் எனக்கு மிகப் பிடித்தவரானார். இன்னும் தன்மீது ஆர்வத்தைக் குவித்தார். அவரை நான் அடிக்கடி சந்தித்தேன். நட்பு மலர்ந்தது. நெருக்கம் கூடியது. இப்போது நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவரும் மெல்ல மெல்ல பல விசயங்களைப் பற்றியும் கதைக்கத் தொடங்கினார். இலக்கியத்தை, தன்னுடைய இலக்கிய ஈடுபாடு ஏற்பட்டவிதத்தை, பின்னர்தான் புதிய கவிதைகள் எழுதத் தலைப்பட்டதை, முதல் தொகுதிகள் வெளியிடும் போது எதிர் கொண்ட சூழலை என்று பலதையும் சொன்னார்.

மௌனம் பேச்சாக மாறியது. ஆனால் இது முழு இயல்போடு வளர்ச்சியடைந்தது என்று சொல்ல மாட்டேன். முன்னர் இருந்ததையும் விட சற்று மாறுதலான ஒரு நிலையில் அவர் இயங்கினார். இந்தக் காலப்பகுதியில் அவர் தன்னுடைய தியானத்தின் வழியான தரிசகங்களை எழுதினார். வெளிப்பார்வைக்கு மேலொட்டம் போலத் தெரியும் ஆழமான பல விசயங்களை எல்லாம் அவர் எழுதினார். அப்படி எழுதிய கவிதைகளை, உரை நடைக்குறிப்புகளை அவர் சிலவேளை எனக்குக் காட்டுவார். ஆனால் அவை பற்றி எந்த விளக்கத்தையும் அவர் சொல்வதில்லை. என்னுடைய அபிப்பிராயத்தை எதிர்பார்த்ததும் இல்லை. ‘ஏதோ எழுதியிருக்கிறேன். வேண்டு மானால் பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றிய அபிப்பிராயங்கள் எல்லாம் உங்களைப் பொறுத்தது. என்னுடைய மனநிலையும் அதன் பயணமும் செல்லும் திசையைப் பாருங்கள்’ என்ற மாதிரி அவருடைய எழுத்துகள் இருந்தன. அவர் அப்படித்தான் நினைக்க வைத்தார்.

மு. தளையசிங்கத்தின் மீது அதிக ஆர்வமும் மதிப்பும் கொண்டிருந்தார் தா. இராமலிங்கம். கவலைக்குரிய சங்கதி என்னவென்றால், தளைய சிங்கம் ஏற்கனவே, இளவயதில் இறந்தமையே. ஒரு வகையில் தா. இராமலிங்கத்தை இந்த மரணமும் பாதித்திருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு. அவருடைய மகனுடைய இழப்புக்காக மட்டும் அவருடைய மனம் இப்படிப் பாதிப்படையவில்லை. அது ஏற்கனவே மு. தளையசிங்கத்தின் இழப்பினால் அதிர்வுக்குள்ளாக்கியிருக்கிறது. பின்னர் மகனின் இழப்பு அதை மேலும் தாக்கிய போது அவர் இறப்புக்குறித்து, வாழ்க்கை குறித்து விசாரணைகள் செய்யத் தொடங்கினார். அந்த விசாரணைகளின் வழியே அவர் சில கவிதைகளை எழுதியும் வைத்திருந்தார். அந்தக் கவிதைகளை வெளியிடவேண்டுமென அவர் மெல்லிய விருப்பத்தையும் கொண்டிருந்தார்.

இராமலிங்கத்தின் இந்தத் தியானம் சாதாரண வாழ்க்கை குறித்த மீள் மதிப்பீட்டுக்குள்ளாக்கியது. அவர் பின்னர் ஏற்பட்ட சரிவுகளை / சமூக நிகழ்வுகளை அதிக அக்கறையோடு பார்க்கவில்லை. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு. எதுவும் அவற்றின் சுற்றுப் பயணத்தில்தான் பயணிக்கும். அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பார் அவர். பிரபஞ்ச இயக்கத்தைப் பாருங்கள். அது சுற்றொழுங்கில் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பது அவருடைய நிலைப்பாடு. ‘கை மீறிச் செல்லும் விசயங்களுக்காக நம்மால் துக்கப்படத்தான் முடியும். அதற்குமேல் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்’ என்றார் எங்களுடைய போராட்டத்தின் போக்குகளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள்.

அவர் அந்த உரையாடலில் ஆர்வமே காட்டவில்லை. அது ஒரு பயனற்ற விசயம் என்பது அவருடைய எண்ணம். இந்த நிகழ்ச்சிப் போக்குகள் எங்கே செல்லும், அதன் விளைவுகள் எப்படி அமையும் என அவருக்கு ஏற்கனவே தெரியும். அவர் ஒரு மெல்லிய புன்னகையும் எந்தப் பதற்றமும் இல்லாமல் அதை எதிர் கொண்டார்.

வாழ்க்கை பற்றிய புரிதல்கள் வேறுவிதமாக ஏற்படத்தொடங்கியதை அடுத்து அவருடைய மன இயக்கத்தின் திசையும் நிலையும் மாறிவிட்டன. அதனால் அவர் பொதுவான இலக்கியப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார். அல்லது அவரைப் பொதுவான இலக்கிய உலகம் விட்டுவிட்டது. யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பகுதில் அவர் இருந்தபோதும் அவரை அதிகமான எழுத்தாளர்கள் சந்திப்பதில்லை. அவருடன் யாரும் தொடர்பு கொள்வதுமில்லை. அவரும் கலந்துரை யாடல்கள், வெளியீட்டு விழாக்கள், இலக்கிய அரங்குகள், இலக்கியச் சந்திப்புகள் என்று எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த, இருக்கின்ற பலருக்கு தா. இராமலிங்கத்தை நேரில் தெரியாது. ஆனால் அவரைப் பற்றி எல்லோரும் நிறைய அறிந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே கூட தா. இராமலிங்கத்துடன் மு. தளையசிங்கம், எஸ்.பொ, அ. யேசுராசா, மு.பொ, சு. வில்வரெத்தினம் போன்ற மிகச் சிலருக்குத்தான் அறிமுகமும் பரிச்சயமும் இருந்தது. ஏறக்குறைய தா. இராமலிங்கம் மெய்யுள் பண்ணையைச் சேர்ந்தவராக இருந்ததால் அவருக்கு இயல்பாக இந்தத் தரப்பைத் தவிர பிறருடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதில் ஆதவையே ஆர்வமோ இல்லாமல் இருந்திருக்கக் கூடும். மு. தளையசிங்கத்தின் மறைவு இந்த ஆர்வத்தை மேலும் குறைத்திருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.

தா. இராமலிங்கத்துடன் என்னுடைய உறவு நீடித்ததன் பயனாக சில காரியங்களை என்னால் செய்ய முடிந்தது. வெளிச்சம் சஞ்சிகையில் நான் பணி யாற்றிய போது தா.இராமலிங்கத்தின் கவிதைகள் சிலவற்றை அதில் பிரசுரிக்கக் கூடியதாக இருந்தது. அவர் ஏற்கனவே எழுதி பிரசுரமாகாதிருந்த கவிதைகளை இதில் பயன்படுத்தினேன். அந்தக் கவிதைகளில் இருந்த விசயங்கள் காலப் பொருத்தம், சூழல் பொருத்தம் என்பவற்றுக்கு ஏற்ற மாதிரி யிருந்தது இந்த வாய்ப்பைத்தந்தன. அதே வேளை இராமலிங்கத்தை ஓரு நேர்காணலும் செய்திருந்தேன். அந்த நேர்காணலில் அவர் பல விசயங்களைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அது சிறிய நேர்காணல்தான் என்றாலும் பலருடைய கவனத்தையும் பெற்றது.

இதற்குப் பின்னர் தா. இராமலிங்கத்தைப் பற்றிய ஆர்வம் மீண்டும் ஈழத்து இலக்கிய உலகத்தில் இளைய தலைமுறையிடத்தில் அதிகமாகியது. அவருடைய கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டன. அவருடைய கவிதைகள் மீள் பிரசுரத்துக்குள்ளாகின. ஆனால் எப்போதும் அவருடைய கவிதைகளை முன்னிலைப்படுத்தி வந்தவர் அ. யேசுராசா. அவருடைய ‘கவிதை’ இதழில் ‘காணிக்கை’ நூலுக்கு மு. தளையசிங்கம் எழுதியிருந்த முன்னுரை மீளப் பிரசுரித்தார் யேசுராசா. தா. இராமலிங்கத்தின் கவிதைகளின் சிறப்பையும் அவை முன்மொழிந்த வெளிப்பாட்டு முறைமை களையும் பேச்சோசையையும் புழங்கு மொழியையும் இராமலிங்கம் பயன்படுத்திய விதத்தையும் அவர் பலருக்கும் விளக்கினார். இது இராமலிங்கத்தின் மீதான ஆர்வத்தைப் பலரிடமும் குவித்தன. ஆனாலும் எவரும் நேரில் தா. இராமலிங்கத்தைச் சந்திக்கவில்லை. இது ஒரு பெருங்குறைபாடே. ஒரு விதிவிலக்காக அவரை நண்பர் தா. விஷ்ணு தன்னுடைய நினைவுள் மீள்தல் என்ற கவிதை நூலின் வெளியீட்டுக்கு தா. இராமலிங்கத்தை அழைத் திருந்தார். அவர் அதில் உரையாற்றினார். அதுதான் அவர் இறுதியாக நிகழ்த்திய இலக்கிய உரை என்று நினைக்கிறேன்.

இந்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கவிதைகளை ‘புதுமெய்க் கவிதைகள்’, ‘காணிக்கை’ ஆகிய தொகுதிகளுக்குப் பின்னர் எழுதி நூலுருப் பெறாத கவிதைகளை ஒரு நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அதற்காக அவரிடமிருந்த அந்தச் சேகரிப்பிலிருந்து ஒரு பிரதியை எடுத்தும் கொண்டேன். அதில் மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலிருந்த கவிதைகள் உட்படப் பல நல்ல கவிதைகள் இருந்தன. அவற்றை இரண்டு தொகுதிகளாக்கலாம் என்று திட்டமிட்டோம். ஒரு தொகுதி அரசியல் சமூகம் சார்ந்த கவிதைகள். அடுத்த தொகுதி தா. இராமலிங்கத்தின் மெஞ்ஞானக் கவிதைகள். முதல் தொகுதிக் கவிதைகளை தொகுப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாண இடப் பெயர்வு வந்தது. அந்த இடப்பெயர்வோடு நிலைமைகள் மாறின. ஆனால் அவருடைய கவிதைப் பிரதியை வன்னிக்குக் கவனமாகக் கொண்டு போய்ச் சேர்த்தேன் என்ற போதும் தா.இராமலிங்கத்தைப் பற்றிய தொடர்புகள் இல்லாமற் போய்விட்டது. எனினும் அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அவருடைய இரண்டு புதல்வர்கள் வன்னியில் இருந்தார்கள். இரண்டு பேரும் மருத்துவர்கள். அதில் ஒருவர் பின்னாளில் வன்னியை விட்டுப் போய்விட்டார். அடுத்தவர் வன்னியின் இறுதிப் போர் வரையில் வன்னியிலேயே இருந்தார்.

2002இல் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது மீண்டும் நான் தா. இராமலிங்கத்தைச் சந்தித்தேன். முன்னரை விடவும் மெலிந்து போயிருந்தார. முதுமை தெரிந்தது. அதே அமைதி. அதே தியானம். இன்னும் கொஞ்சக் கவிதைகளை- தன்னுடைய தியான தரிசனங்களை எழுதியிருந்தார். படிக்கத் தந்தார். அப்போதுதான் அவருடைய கவிதைகளை நூலாக்கும் முயற்சியில் கல்வயல் வே. குமாரசாமி ஈடுபட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வேண்டுமானால் என்னிட மிருக்கும் கவிதைகளையும் நூலாக்கலாம் என்று அவருக்குச் சொன்னேன். தேவையில்லை. அதே கவிதைகள்தான் இப்பொது நூலாக்கப்படுகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவையே அதைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்றார் கல்வயல் வே. குமாரசாமி.

நாட்கள் கடந்தன. தொகுதியை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தோம். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. தொகுதி வரவில்லை. பின்னர் சண்டை தொடங்கிவிட்டது. தகவல் எதுவும் இல்லை. அவருடைய மகன் கதிர் ஒருநாள் சொன்னார் சொன்னார் ‘அப்பா மல்லாவியில் இருக்கிறார்’ என்று. போர் மீளவும் ஆரம்பிப்பதற்கு முன்னர் கதிருடன் வந்து அவர் தங்கியிருக்கிறார். கதிர் மல்லாவி மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்தார். அதனால் அங்கே தா. இராமலிங்கமும் இருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபின்னர் நானும் நிலாந்தனும் தா. இராமலிங்கத்திடம் போவதாகத் திட்டமிட்டிருந்தோம். நாட்கள் கழிந்தன. ஆனால் அது கைகூடவில்லை. அதற்கிடையில் சண்டை வலுத்து இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

போர்க்கள நிலைமை எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கேள்விப்பட்டேன் தா. இராமலிங்கம் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்று. அவர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து வந்திருந்தார். ஆனால் நினைவு மறதி அவரைப் பீடித்திருந்தது. நன்றாகத் தளர்ந்து போயிருந்தார். அங்கே வந்து சில நாட்களிலேயே எதிர்பாராத விதமாக அவர் அங்கே மரணமடைந்தார். போர்க்களப் பதற்றம், இடப்பெயர்வு நிலைமைகளில் அவருடைய இறுதி நிகழ்வு நடந்தது.

தா. இராமலிங்கத்தின் மறைவை அடுத்து அவருடைய 31 ஆவது நாள் நினைவையட்டி அவருடைய கவிதைகளை ஒரு நூலாக்கலாம் என்று அந்த நெருக்கடி நிலையிலும் மகன் கதிரும் அவருடைய நண்பர்கள் சிலரும் திட்டமிட்டு அந்த வேலைகளை என்னிடம் ஒப்படைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் பணிகளை இன்னொரு நண்பர் செய்திருந்தார்.

இறுதிவடிவத்தை நான் பார்வை யிடுவதாக இருந்தது. அந்தத் தொகுதிக்கான முன்னுரையை என்னை எழுதும்படி கேட்டிருந் தார்கள். மிகவும் நெருக்கடியான நிலையில் இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஆயினும் நான் அதற்கான முன்னுரையை எழுதிமுடித்தேன். புத்தக வேலைகளை முடிக்க வேண்டியது இனி அச்சகத்தின் பொறுப்பு. ஆனால் நிலைமை வரவர மோசமாகிக் கொண்டிருந்தது.

அந்த நிலையில் புத்;தகத்தை அச்சிட்டு முடிக்கலாம் என்று தோன்றவில்லை. அதனால் அதை அந்த நிலையில் ஒத்தி வைத்துக் கொள்வதாகவும் பின்னர் நிலைமையின் போக்கைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தீரமானித்தோம். நிலைமை மாறவேயில்லை. அது தீவிரமாகிக் கொண்டேயிருந்தது இறுதிவரை. தருமபுரம், விசுவமடு, வள்ளிபுனம், தேவிபுரம் வரையில் அவருடைய அந்தக் கவிதைத் தொகுதிக் கான முன்னுரையைக் காவிக் கொண்டேயிருந்தேன். ஆனால் இறுதியில் தொலைந்து போன என்னுடைய ஆறாயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், நான் எழுதிய குறிப்புகள் எல்லாவற்றோடும் அந்த முன்னுரையும் தொலைந்து போயிற்று. மிஞ்சி யிருப்பது இந்த இழப்புகளைப் பற்றிய கவலைகள் தான்.


எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010


00
தா.இராமலிங்கத்தின் இரண்டு கவிதைத்தொகுதிகள்

1. புதுமெய்க்கவிதைகள் (1964)
2. காணிக்கை (1965)

Tuesday, July 3, 2007

வரதர்-தனியான அடையாளங்கள் கொண்டவர்

---------------------------------

எழுதியவர்-கருணாகரன்

-----------------------------------------


கமல்ஹாசனின் 'ஹேராம்' படததைப் பார்த்தபோது வரதர்தான் நினைவுக்கு வந்தார். வரதர் காலமாகியபோது ஹேராம் நினைவுக்கு வந்ததானது வேடிக்கையா? அல்லது உண்மையா? யதார்த்தமா? அல்லது எல்லாமே கலந்த துன்பியலா?'ஹேராம்' ஒரு துயர்மிகு சினிமா. அதை ஏனையவர்கள் எப்படி அதை விளங்கினார்களோ தெரியவில்லை. அதைப்பார்த்தபோது எனக்கு அப்படித்தான் பதிந்ததாக ஞாபகம்.



யுத்தம் முழுச் சந்நதமாடிய "ஜெயசுக்குறு" காலகட்டத்தில் ஒரு முன்னிரவில் எதிர்பாராத விதமாக 'ஹேராமை'ப் பார்க்கக் கிடைத்தது.ஏழு பேர் பார்க்க இருந்தோம். படத்தின் பாதியிலிருந்து நான் மட்டுமே மிஞ்சியிருந்தேன். துயரத்தைப் பகிர்வதற்கு அதிகம்பேர் இருப்பதில்லை என்பார்கள். அது உண்மைதான். உண்மையில் ஹேராம் கமல்ஹாசனுக்கு தோல்வியுமல்ல, சேதாரமுமல்ல. ஆனால் அதற்காக அதற்கு விமர்சனங்கள் இல்லையென்றில்லை. அதுவொரு முதன்மைச்சினிமா. அதற்கு எப்போதும் ஒரு இடமுண்டு. துயர்மிகு காலமும், வாழ்வும் நிகழும்வரையில் அதற்கிடமுண்டு. ஹேராமில் கமல்ஹாசன் சொல்கிற அதே சேதிதான் வரதர் சொல்வதும். ஹேராமில் இந்திய அவலத்தை கமல்ஹாசன் சொல்கிறார்.


வரதரோ தன்னுடைய கதைகளில் ஈழத்தமிழரின் அவலங்களைச் சொல்கிறார்.ஹேராமில் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இந்து முஸ்லீம் வன்முறை தொடங்கிவிட்டது என்பதைக்காட்டப்படுகிறது. சுதந்திரத்தின் பின்னர் இப்போதும் இந்து முஸ்லீம் கலவரங்களும், வன்முறையும் தொடர்கிறது. இடையில் காந்தி மீதான கடுமையான விமர்சனங்களும் காந்தியின் அணுகுமுறை மீதான ஆட்சேபணைகளும் வைக்கப்படுகின்றன. காந்தி சுட்டுக்கொல்லப்படுகிறார். வன்முறை அடங்கவில்லை. இன்றும் தொடர்கிறது. எங்கே தவறு ….?வன்முறையால் சுதந்திரத்துக்கு முன்பு ஒருமனிதர் தன் துணையை அநியாயமாக இழக்கிறார். அதே வன்முறையால் சுதந்திரம் கிடைத்து ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் எட்டுகிறபோதும் அதே மனிதர் பாதிப்புக்குள்ளாகிறார். இவ்வளவுக்கும் அந்த வன்முறைக்கும் அந்த மனிதருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை. வன்முறைகள் எப்போதும் பொது மனிதர்களையே தின்கின்றன. வன்முறைக்குத் தூண்டப்பட்டு, வன்முறையத் தூக்கி, வன்முறையிலேயே பொது மனிதர்கள் அழிந்து போகிறார்கள். ஆனால், வன்முறையின் சூத்திரதாரிகள், அல்லது வன்முறை மையங்கள் அப்படியே பாதிப்பில்லாமல் இருக்கின்றனர். அத்துடன் அவை மேலும் பலம் பெறுகின்றன.இக்குறிப்பு 'ஹேராம்' மீதான விமர்சனமல்ல.



வரதர் பற்றி சிந்திக்கும்போது 'ஹேராமி'ன் நினைவு தவிர்க்கமுடியாமல் வந்து குவிவதால் எழுதவேண்டியிருக்கிறது.வரதர் 1958இலோ 60ஆம் ஆண்டிலோ 'கற்பு' என்ற சிறுகதையை எழுதியிருந்தார். 1958 இல் கொழும்பு, மற்றும் சிங்களப்பகுதிகளில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது நடாத்திய வன்முறையை பதிவுசெய்த கதை அது. அந்தக்கதை இதுவரையில் ஐம்பது தடவைக்குமேல் பிரசுரமாகியிருக்கும். பல இதழ்கள் மீளமீள அதை பிரசுரிக்கின்றன. இன்னும், அந்தக்கதை மீள் வெளியீட்டுக்குள்ளாகும். அதற்கான சூழல் மாறாதிருக்கும்வரை அது மீளமீள வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும். இதுவொரு துன்பியல் நாடகம். துயரமும், அருவருப்பும் தருகிற கதை அது. ஆனால், அதுதான் யதார்த்தமாக இருக்கும்போது அந்தக்கதைதானே வேண்டியிருக்கிறது. அதாவது இனக்குரோதமும் வன்முறைச் சூழலும் தீராதவரையில் வாழ்க்கை தவிர்க்க முடியாதவாறு அருவருப்பூட்டுவதாகவேயிருக்கும்.'கற்பு' கதையை வரதர் எழுதுவதற்கு 1958 இல் தமிழர்கள் சிங்களவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் காரணமாகியது. களுத்துறையில் வன்முறையின்போது சிங்கள வன்முறைக் கும்பலால் சிதைக்கப்பட்ட தமிழ்ப்பெண்களை ஒரு குறியீடாக்கினார் வரதர்.தன் துணைவியை – தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளும் கணவனின் கதையே 'கற்பு'. அவள் மீது எந்தக்குற்றமும் இல்லையென்று கணவருக்குத்தெரியும். அவர் வன்முறையை விரும்பவில்லை. ஆனால், அதுவொரு பெரும் பிசாசாக வெறிகொண்டுவரும்போது அதனை எதிர்க்க அவரால் முடியவில்லை. ஆனால் அவர் தனக்குள் வளர்த்து கொண்ட பக்குவத்தினால் அதனை தன்னளவில் கடந்து செல்கிறார்.




வரதர் அந்தக் கதையை எழுதத்தூண்டிய சூழலும் நிலவரங்களும் இன்றும் மாறவில்லை. அது மாறக்கூடிய சாத்தியங்களும் தென்படவில்லை. காலம் நகர்ந்துவிட்டது. உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. தலைமுறைகள் மாறிவிட்டன. சிறுகதையின் வடிவத்தில்கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. கதை சொல்லும் முறைகள் எல்லாம் மாறியுள்ளன. ஆனால், காயங்கள் ஆறவில்லை. வலி தீரவில்லை. மூடத்தனமும், வன்முறையும், இனவெறியும் நீங்கவில்லை. வாழ்வில் தொடரப்படும் ஈனக்கதைகள் மாறவில்லை. வரதரின் 'கற்பு' சொல்லும் 'ரணகளம்' திரும்பத் திரும்பத் நிகழ்ந்தபடியே இருக்கிறது. குருதியும், ஓலமும் குரூரமாக வெளிச்சிதற வன்முறை நிகழ்கிறது. அது முடிவற்ற வன்முறை. வாழ்வைத்தின்னும் தீராப்பசி கொண்ட வன்முறை. இந்த வன்முறைபற்றி ஒவ்வொருவரும் அவரவர் தத்தம் நிலைப்பாட்டிலிருந்து ஆயிரமாயிரம் நியாயங்களை முன்வைக்கலாம். ஆனால் அது வாழ்வைத்தினகிறது என்பது மட்டும் உண்மை.நன்றி மடத்துவாசல் பிள்ளையாரடிவரதர் தமிழரசுக்கட்சிப் பாரம்பரிய அரசியலை முன்நிறுத்திய இலக்கியப்படைப்பாளி. இதனால், அவர் ஒருபக்கம் அங்கீகரிக்கப்பட்டார். இன்னொரு பக்கத்தில் விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவர்மீதான விமர்சனங்களையும், கண்டனங்களையும் இதுவரை யாரும் காட்டியதோ, கடுந்தொனியிலோ முன்வைக்கவில்லை. வரதர் ஒரு 'சனாதனி' என்று சொல்லுவோர்கூட அவரை முற்றாகப் புறக்கணிக்கவில்லை. வரதரின் இயல்பே இதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியானவர். தன்னுடைய எழுத்துக்களிலோ, உரையாடலிலோ என்றைக்கும் உரத்ததொனியை அவர் எழுப்பியதில்லை. விமர்சனங்கள், சர்ச்சைகள், மறுப்புக்கள், எதிர்வினைகள் எதிலும் அவர் கடுமையாக ஈடுபட்டதாகவும் இல்லை. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்புத்துறையில் இயங்கிவந்த வரதருக்கு எதிர்முகாம்கள் இருந்ததாக அறியமுடியவில்லை. பதிலாக சகல தளங்களிலும் இயங்கிய அவரையொத்தவர்களிடையேயும், அடுத்தடுத்த தலைமுறையினரிடத்திலும் அவருக்கு உறவிருந்தது. அவரவர் கருத்துக்களுக்கும், நிலைப்பாட்டிற்கும் அவரவரே பொறுப்பு என்ற நிலைப்பாடுடையவர் அவர். அதேபோல தன்னளவில் தன்னிடம் ஒரு கருத்துநிலையும் செயற்பாட்டுக்களமும் உண்டு என்ற கருத்துடையவர். இது ஒருவகைப் பண்பு ஜனநாயகம். வரதர் இதைக் கடைசிவரை பின்பற்றினார்.



மறுமலர்ச்சிக்காலத்தில் இருந்து படைப்புத்தளத்தில் இயங்கிய வரதர் இலக்கியத்தின் பண்முகத்தன்மையராகவே இருந்திருக்கிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பத்தி எனப் பல வடிவங்களில் எழுதியிருக்கிறார். எழுத்தைவிட பதிப்புமுயற்சிகளிலும்; செயற்பட்டுள்ளார். வரதர் பதிப்பகம் நூறுவரையான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. இப்போது வரதர் இறக்கும்வேளையிலும் நான்கு புத்தகங்களை அவர் அச்சிட்டுக்கொணடிருந்தார்.அவை இனிமேல்தான் வெளியிடப்படவுள்ளன.



மகாகவியின் வள்ளி தொடக்கம் பல நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். பேராசிரியர் கைலாசபதி பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை சொக்கன் எனப் பலரின் புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார். தவிர அரசியல் ரீதியான பதிவுகளையும் துணிச்சலாக நெருக்கடிக் காலகட்டத்தில் வெளியிட்டார். 'யாழ்ப்பாணம் எரிகிறது' '24 மணிநேரம்' உட்பட முக்கியமான வன்முறை அழிவு சார்ந்த பல வெளியிடுகளை அந்த கொதிப்பான சூழலில் வெளியிட்டவர் அவர். அதுவும் துணிச்சலுடன் தன்னுடைய பதிப்பகத்தின் பெயரில் வெளிப்படையாக 'வரதர்' வெளியீடாகவே வெளியிட்டிருந்தார். அந்த நூல்களை எழுதிய செய்கை ஆழியான் அவற்றை நீலவண்ணன் என்று பெயர் குறிப்பிடும் போது பதிப்பாளரான வரதரோ துணிச்சலுடன் தன்னுடைய பதிப்பகத்தின் பெயரிலேயே அவற்றை வெளிக்கொண்டு வந்தார். இப்படி பலநூல்கள் வரதர் வெளியீடாக வந்திருக்கின்றன. வரதர் இதழியல் துறையிலும் இயங்கினார். 'தேன்மொழி' என்று கவிதைக்கான இதழை நடத்தினார். இதில் வரதருடன் மகாகவி இணைந்திருந்தார். அதற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'மறுமலர்ச்சி' என்ற இதழை 1940களில் வரதர் ஏனைய படைப்பாளிகளுடன் இணைந்து வெளியிட்டார். பின்பு 'புதினம்' என்ற வாரப்பத்திரிகையும் வரதரால் வெளியிடப்பட்டது. கூடவே மாணவர்களின் அறிவுவிருத்தி கல்வி வளர்ச்சிக்காக 'அறிவுக் களஞ்சியம' என்ற இதழையும் சில காலம் வெளியிட்டார். தன்னுடைய முதுமைக்காலத்திலும் அவர் தளர்ந்திருந்ததில்லை போரின் நெருக்குவாரங்கள் சூழ்ந்திறுக்கிய போதும் அவர் அதற்கெதிராக இயங்கிக்கொண்டேயிருந்தார்.




யாழ்ப்பாணம் 1990களில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு பொருளாதாரத்தடை இறுக்கமாக வாழ்வை இறுக்கிப்பிடித்திருந்த காலம் அது. வரதர் அப்போது வெளியிடுகளை கொண்டு வரும் மும்முரத்தில் இயங்கினார். யாழ்ப்பாணம் கே கே எஸ் வீதியில் உள்ள ஆனந்தா அச்சகத்தில் தினமும் வரதரை எவரும் காணலாம். நிமிர்ந்த நடை. நல்ல உயரமான தோற்றம். நரைத்த தலை ஏறக்குறைய 30 வருடமாக இதேமாதிரியான தோற்றத்தில்தான் வரதரைப் பார்த்திருக்கிறேன். பெரிய தடித்த பிறேம் போட்ட முக்குக்கண்ணாடி போட்டிருப்பார். வெள்ளை அரைக்கைசேட்டும் வெள்ளை வேட்டியும் உடுத்திருப்பார். அவர் சத்தமிட்டுப் பேசியோ சத்தமிட்டு சிரித்தோ நான் கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை. யாரையும் அவர் திட்டியதையும் குறைசொன்னதையும் அறிந்ததில்லை அவருடைய இயல்பும் வாழ்வும் ஒரு வகையானது. தனியான அடையாளங்கள் கொண்டது.ஆனந்தா அச்சகத்தில் அவர் உழைத்ததை விடவும், அதனைப் பயன்படுத்தி தன் விருப்பங்களுக்குரிய காரியங்களைச் செய்தார் என்றே சொல்லவேண்டும்.யாழ்ப்பாண சைவவேளாள வாழ்க்கையிலிருந்து வரதர் விலகவில்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கும் தரப்பினருண்டு. ஒருவகையில் அவர் அப்படித்தான் வாழ்ந்தார் எனலாம். அவர் அந்த வாழ்க்கை வட்டத்தைவிட்டு விலகவில்லை என்பது உண்மை என்ற போதும் அதற்குள்ளிருந்த மேலாதிக்கத்தையோ, வன்முறையையோ அவர் பின்பற்றவில்லை. ஆனால், அந்த சைவவேளாள ஆதிக்கத்தையோ, அல்லது சைவவேளான வாழ்முறையையோ அவர் விமர்சிக்கவும், கண்டிக்கவும் இல்லைத்தான். தன் சமூக அமைப்பிற்குள் தன்னை ஒழுங்குபடுத்தி அதற்குள் அமையக்கூடிய அளவுக்கான அறத்தைப் பின்பற்றி அவர் வாழ்ந்தார். இதை ஒருவகையான சாதுரியம், தந்திரம், பதுங்கல், சமாளிப்பு எனக் கூறுகிறார்கள் சிலர். ஆனால், வரதரின் இயல்பு குறித்தும், அவருடைய வாழ்க்கை குறித்தும் பகிரங்கமான எந்த விமர்சனங்களும் இதுவரை எழுப்பப்படவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல அவருக்கு எதிர்முகாம்கள் இல்லாமல் இருந்ததுதான் இதற்கான காரணமாக இருக்கலாம். இன்னொரு வகையில் சொன்னால், எதிர்முகாம்கள் உருவாகமுடியாத அளவுக்கு நுட்பமாக தன்னை அவர் ஒழுங்கமைத்திருந்தாரோ என்னவோ. இனப்பிரச்சினைபற்றிய வரதரின் நிலைப்பாட்டிற்கும் யாழ்ப்பாணச்சமுகம் பற்றிய அவருடைய நிலைப்பாட்டுக்குமிடையில் வேறுபாடுகள் இருந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவருடைய பங்களிப்பை யாரும் மறுத்துவிடமுடியாது.வரதரின் இலக்கிய இயக்கத்திற்கும், கோட்பாட்டுக்கும் மாற்றான தளத்தில் இயங்கிய கே. டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், தெணியான், எஸ்.பொ. போன்றோர் தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள். எதிரெதிர் அணிகளாகினார்கள். ஆனால், வரதர் எல்லோருக்குமிடையில் பாலத்தை நிர்மாணித்தே இருந்தார். இது தொடர்பாக நிச்சயம் விரிவாக ஆராயவேண்டும்.வரதருக்கு கைலாசபதியோடும் உறவியிருந்தது. கா.சிவத்தம்பி, மு.த. டொ மினிக் ஜீவா, யேசுராசா எனச்சகலதரப்புக்குமிடையில் தொடர்பாடல் நிகழ்ந்து வந்தது. என்றைக்கும் இது முறிந்துபோனதாக இல்லை. இது எப்படி நிகழ்ந்தது?




தமிழரசுக்கட்சி அரசியலை ஆதரித்த வரதர் அதன்வழியான தமிழ்த்தேசியத்தையே தொடர்ந்தும் ஆதரித்தார். ஆனால், எண்பதுகளில் ஏற்பட்ட தலைமுறை மாற்றம், ஆயதப்போராட்ட அரசியலின் பக்கம் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தினார் என்றோ அவற்றை சார்ந்தார் என்றோ சொல்ல முடியாது.அவருடைய முதல் இலக்கிய நோக்கு தமிழ் மக்கள் சிறீலங்கா அரசினால் அல்லது சிங்கள ஆளும்வாக்கத்தினால் வன்முறைக்குள்ளாக்கப்படுவதை எதிர்ப்பதே. அதன் வழியாக தமிழ்மக்கள் நிம்மதியாக நீதியுடன் வாழக்கூடிய ஒரு நிலையைக் காண்பதே. இதற்கப்பால் புதிய அரசியல் உருவாக்கம்பற்றியோ, சமூக மாற்றத்துக்கான கலகங்களிலோ அவரின் அக்கறைகள் கட்டமைவுகொள்ளவில்லை.வரதர் பின்னாளில் மல்லிகையில் தொடராக எழுதி பின்னர் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்த 'தீ வாத்தியார்' ஒருவகையில் வரதரின் தன்னடையாளத்தைக் காட்டும் படைப்பு. தீ வாத்தியார் அவரைக் காண்பதற்கும், விமர்சனம் செய்வதற்கும் அதிகம் இடமளிக்கும் ஒரு பிரதி என்று சொல்லமுடியும். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான 'கயமை மயக்கம்' என்பதில் இருந்து அவர் கடைசிவரை எழுதிய அநேக கதைகளில் 'மூர்த்திமாஸ்ரர்' என்ற பாத்திரத்தை தொடர்ந்து இயக்கி வந்தார். அந்த மூர்த்திமாஸ்ரர் தலைமுறைகளைக் கடந்தாரா? மூர்த்தி தயங்கிய இடங்கள், தடுமாறிய இடங்கள், அவருடைய நிலைப்பாட்டிற்கும், வாழ்க்கைக்குமான இடைவெளி எந்தளவு என்பனவும் தனியான கவனத்திற்குரியது. வரதரை விளங்கிக்கொள்வதற்கும் அவரை வாசிப்பதற்கும் இதுவும் அவசியமானது.வரதர் தொடர்பான முழுமையான மதிப்பீடுகள் செய்யப்படவேண்டும். ஆனால் அவை அவரை நிபந்தனையின்றிக் கொணடாடுவதாகவோ அல்லது காழ்ப்புடன் புறக்கணிப்பதாகவோ இருக்க்கூடாது.



வரதர் ஒரு முன்னோடி. ஈழத்திலக்கியத்தில் அவருக்கென்றொரு வலுவான பாத்திரமுண்டு. கைலாசபதி நவீன கவிதையை அங்கீகரிக்க மறுத்தபோது வரதர் நவீன கவிதையை அங்கீகரித்திருந்தார். தவிர நவீன கவிதைகளுக்கிடமளித்து தனியாக கவிதைக்கான இதழையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் வரதருடைய பதிப்பு முயறசிகள் குறித்தும் சரியாக மதிப்பிட வேண்டும்.ஈழத்தில் பதிப்புத்துறை இன்னும் செழுமையாக வளர்ச்சியடையவில்லை. ஆக வரதரின் பங்களிப்புக்குறித்து சரியான புரிதலுடன் மதிப்பீடு செய்தல் அவசியம்.

------------------------------