Showing posts with label விமர்சனங்கள். Show all posts
Showing posts with label விமர்சனங்கள். Show all posts

Thursday, October 25, 2012

“வாழும் கணங்கள்”அமரதாஸ் ஒளிப்படங்கள்




                     














அமரதாசின் ஒளிப்படங்கள் நூலாக வெளிவந்திருக்கின்றன. நூல் வெளியீட்டையொட்டி அவருடைய ஒளிப்படக் காட்சியும் கிளிநொச்சியில் நடக்கின்றது. ஒளிப்படக் காட்சியையொட்டி நூல் வெளியிடப்பட்டதா அல்லது நூல் வெளியீட்டையொட்டி ஒளிப்படக் காட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை நூலிலுள்ள படங்களில் தேர்வு செய்யப்பட்டு ஒரு தொகுதிப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நூல் மதிப்பு மற்றும் வெளியீட்டையும் ஒளிப் படக்காட்சியையும் தமிழீழ நண்கலைக் கல்லூரி ஏற்பாடு செய்திருக்கின்றது. ஐந்து நாட்கள் முழுநாட்காட்சியும் இறுதிநாள் விமர்சன அரங்கிற்கும் ஏற்பாடு.

நுண்கலைக்கல்லூரி முன்னர் கேணல் கிட்டுவின் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தது. அந்த அனுபவத்தை ஆதராமாகக் கொண்டு அல்லது முன்னனுபவமாக வைத்துக் கொண்டு இந்தக் காட்சியையும் ஒழுங்கமைத்து இருக்கிறது.

அமரதாஸ் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக ஒளிப்படங்களை ஆர்வத்தோடு எடுத்து வந்திருக்கிறார். தனக்கு சாத்தியமான எல்லைவரையில் இயங்கி எடுத்த படங்களை இப்போது பார்வையாளர்களுக்கு அளித்திருக்கிறார்.
அமரதாஸ் ஒளிப்படத்துறையில் ஈடுபடத் தொடங்கிய காலம் ஈழத்தில் கடுமையான யுத்த நிகழ்ந்து கொண்டிருந்தது. தினமும் வீரச்சாவுகளும் சனங்களின் தொகையான மரணங்களும் இடம்பெயர்வு அகதிவாழ்க்கை என்று முற்றிலும் வாழ்க்கை எதிர் முகத்தோடு இயங்கியது. குண்டு வீச்சுகளும் படை நடவடிக்கைகளுமே பெரும் செய்திகளாக இடம்பெற்றிருந்த வேளை அது. அவ்வறான சூழலில் ஒளிப்படங்களை எடுக்கத்தொடங்கிய அமரதாஸ் தேட்டத்தை திரட்டி இப்போது அளிக்கின்றார்.

அமலதாஸ் ஒளியை அதன் நுட்பங்களோடும் வினோதங்களோடும் ஆளவிரும்பும் தன்மையை தன்படங்ளினூடு வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளியை வைத்துக் கொண்டு சாகாஸங்களை நிகழ்த்துகிறது வித்தைத்தனம் இது ஒளியை அதன் இயல்பும் தொழிலும் சிதையமல் படமாக்குவது ஒருவகை ஒளியை மெருகூட்டி வித்தையாக வினோதமாகக் காண்பிப்பது. இன்னொருவகை இரண்டுவகையிலும் தனித்தன்மைகளும் சிறப்புகளும் உண்டு. ஆனால் இரண்டும் எதிரெதிர் அடையளமும் இயல்புமுடையவை.

இயல்போடு எளிமையோடும் யதார்த்தம் தொனிக்க ஒளியைக் கையாண்டு அதைக்கலையாக முன்வைப்பது மிகச்சிறப்பானது. இதில் புனைவைவிடவும் யதார்த்தம் நிலை பெறுகிறது. ஆனால் எல்லோரும் இந்த முறையைத்தான் பின்பற்றவேண்டும் என்றில்லை அதேவேளை எப்படியும் படம் எடுக்கலாம் என்றுமில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஒளியை மெருகூட்டி படத்தை எடுக்கும் போது யதார்த்தை மீறிய அழகு புனைவினூடாக கிடைக்கின்றது. இந்த அழகு மனம் காணவிரும்பும் அதீத நிலைகளையும் கனவின் தாகத்தையும் நிரப்பலாம். ஆனால் சூழலின் முகத்தையும் ஆன்மாவையும் பிரதிபலிக்கும் உள்ளீட்டையோ அதன் குருதியையோ காணமுடியாது.

அமரதாசின் படங்கள் அநேகம் இந்த வகையைச் சேர்ந்தவை ஒளியினுடாக அவர் எல்லவற்றையும் அழகாக்கும் உத்தியை பின்பற்றுகிறார். இந்த முறையில் தான் அவருக்கு அதிகம் நம்பிக்கையும் உண்டு தமிழில் இதற்கான நல்ல உதாரணம் பாலுகேந்திரா.

பாலுகேந்திரவின்கமெரா எப்போதும் எதையும் அழகாக்கும் கண்ணும் பார்வையும் கொண்டவை. அவரால் ஊட்டியை அழகான ஊட்டியாகவே கான்பிக்கமுடியும் அவருடைய மனிதர்கள் அழகான சூழலும் அழகான நிலைகளிலும் இருக்கின்றார்கள். யதார்த்தத்தில் அப்படியெல்லாம் இருக்குமென்றில்லை ஆனால் அழகு ஈர்ப்பும் கவர்ச்சியும் மிக்கவை. அவருடைய காண்பிய முறைமை திரைக்கு வெளியே ஒன்றாகவும் திரையில் இன்னொன்றாகவும் இருக்கும் இருநிலைக் கொண்ட காண்பியங்கள் அமரதாசின் ஒளிப்படங்களும் இந்த அடிப்படையைக் கொண்டவையாகவே இருக்கின்றன.

பார்க்கும் போது அழகாக இருக்கின்றன வியப்பை ஊட்டுகின்றன குறிப்பாக சிலகாட்சிகள் மற்றும் இயற்கைச் சித்திரங்கள். இந்தப்படங்களில் உள்ள காட்சிகளைப் பின்தொடந்து காட்சிகள் பதிவாகிய இடத்தை என்றேனும் ஓருவர் பார்க்கமுயன்றால் அவருக்கு அங்கே அந்த மாதிரியான இடம் தோற்றம் ரூபம் எதுவும் கிடைக்கும் என்றில்லை இந்தப்படங்களின் வழியாக தன் ஞாபகங்களை மீட்டுக் கொண்டு ஒருவரின் நினைவுப்பரப்பில் இந்தக் காட்சிகளுக்கும் அவரின் பதிவிலுள்ள காட்சிக்கும் இடையில் தொடர்பிருக்கும் என்றில்லை.

அமரதாஸ் தன் திறன்மூலம் ஒளியை தூரிகையாக்கி தனது படங்களை அழகாக்கியிருக்கிறார். அமரதாசின் படங்களில் பொதுக்குணமும் தீவிர நோக்கமும் அழகுதான் அமரதாஸ் அழகுபடுத்தலிலேயே குறியாக இயங்குகிறார். அழகுப்படுத்தல் என்பது எந்தச் சூழ்நிலையிலும் பொருந்திவிடாது அது உண்மையிலிருந்து சமயங்களில் விலகியும் விடுகிறது.

உதாரணமாக அமரதாசின் ஸ்கந்தபுரம் பற்றிய படங்களை இங்கே கவனிக்கலாம் படங்களிலுள்ள ஸ்கந்தபுரத்துக்கும் யதார்த்தத்திலுள்ள ஸ்கந்தபுரத்துக்கும்மிடையிலான வெளி.

ஒருவிவசாயக்கிராமத்தின் சாயலை இந்தப் படங்கள் எந்தளவுக்கு பிரதிபலித்துள்ளது என்ற கேள்வி தானகவே கிளம்புகிறது. அவற்றில் ஸ்கந்தபுரத்தின் கோடையும் மாரியும்  அதன் விதைப்புக் காலமும் அறுவடை நாள்களும் தெரிகின்றனவா ஒளி மனம் கேட்கின்றது. தவிர அந்தக் கிராமத்தின் தெருக்களும் வாய்க்கால் கரையும் இந்தப் படங்களின் காட்சியின் விரிவாக உள்ளனவா என்று இந்தக் கேள்விகள் விரிக்கின்றன.
ஆனால் இந்தக் கிராம வாசி ஆச்சரியப்படும் வகையில் அதிசயமாக ஒளியைக் கலைப்படுத்தி அந்த இடங்களை பதிவாக்கியிருக்கிறார். எதையும் அழகாக்கும் பார்வையே அமரதாசின் பிரதான அக்கறையாக இருப்பதால் யாதார்த்தத்திலிருந்து புனைவுகள் நிரம்பி விடுகின்றன அமரதாசின் படங்கள்.

“வாழும் கணங்கள்” என்ற இந்தப் ஒளிப்படத் தொகுதியிலும் காட்சியிலும் உள்ள படங்கள் எல்லவற்றையும் படமாக்கும் முனைப்புடன் எடுக்கப்பட்டுள்ளன. நல்லபடங்கள் முக்கியத்துவம் உள்ளப்படங்கள் இவற்றில் உள்ளன ஆனால் இவற்றை ஒழுங்கமைக்க முடியதவாறு ஏனைய படங்கள் கவனத்தை சிதைக்கின்றன. ஒளிப்படங்களை எடுப்பது வேறு அவற்றை தொகுப்பதிலும் காட்சிப் படுத்துவதிலும் ஒழுங்குகள் அவசியம். இங்கே எடுக்கப்பட்ட எல்லாப்படங்களையும் அடுக்கிவிட வேண்டும் என்ற தவிப்பு நிகழ்ந்திருப்பதினால் காட்சியினூடே பயணிக்கும் பார்வையாளர் சலிப்ப+ட்டப்படுகின்றார்.

எடுக்கப்பட்ட எல்லாக் காட்சிகளையும் அப்படியே தந்தால் அந்தச் சினிமாவை எப்படி ஒருவர் பார்க்க முடியாதோ அதுபோலத் தான் இதுவும். உண்மையில் இந்தத் தொகுதியிலும் காட்சியிலும் தேர்வும் ஒழுங்கமைவும் இருந்திருக்க வேண்டும் அதைக் கவனிக்காததால் தொகுதியிலும் காட்சியிலும் இடம் பெறுகின்ற நல்ல படங்களும்  பாதிப்பை ஏற்படுத்த தவறி விடுகின்றன. எல்லாமே பதிவாக்கப்பட்டுள்ளன சகல புறங்களினதும் கவனப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. என்ற தன்மை இருக்கின்றதே தவிர அந்த விரிந்த பார்வைக்குறிய அழுத்தமும் பாதிப்பும் இல்லை.

தனித்தனியாக துலக்கமாக தெரிந்த அமரதாசின் ஒளிப்படங்கள் கூடிச் சேரும் போது இன்னும் கூடுதல் துலங்கலை தந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே நிகழ்ந்ததோ எதிர் மாறானது கலவை முறையில் சேந்திருந்தால் கூட அதற்குரிய ஒழுங்குகளையிட்டு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் வன்னியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் முதலாவது தனி நபர் ஒளிப்படக் காட்சி அமரதாஸ் சாத்தியமாக்கிருக்கின்றார் அவருடைய முனைப்புக்கு தமிழீழ நூண்கலைக் கல்லூரி ஆதரவு அளித்திருக்கிறது அதற்கு பாராட்டும் நன்றியும் உண்டு. வன்னியையும் கடந்த பத்தாண்டு கால ஈழத் தமிழரின் வாழ்வையும் தேடும் ஒருவர் இந்த ஒளிப்படக் காட்சியின் மூலம் பெறுகின்ற அனுபவம் பொறுத்து கேள்விகள் இருக்கவே செய்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

00
அமரதாஸின் ஒளிப்படங்கள் - வாழும் கணங்கள் - என்ற பெயரில் நூலாக வெளியாகியிருந்தது. அந்த நூலுக்கான குறிப்புரை. 2007 இல் எழுதப்பட்டது.

00

Tuesday, September 25, 2012

ஒலிரும் ஓசையும் இயல்பின் மொழியுமாய் விரியும் அமரதாஸ் கவிதைகள்











கவிதை ஒரு அழியாப்பொருள். மனித மனம் உள்ள வரை, மன இயக்கம் நிகழும் வரை கவிதை வாழ்ந்துகொண்டிருக்கும். மனதின் வெளிப்பாடாகவும் மனதின் உள்வாங்கலாகவும் கவிதையின் தொழிற்பாடு நிகழும். இயற்கை இருக்கும் வரையில், இயற்கை அழிப்பு நிகழும் வரையில், பிரச்சினைகள் தோன்றிக்கொண்டிருக்கும் வரையில் அவை தீர்க்கப்படும் வரையில் என எல்லாவற்றோடும் எப்போதும் கவிதை இருந்து கொண்டிருக்கும். இறுதிக்கவிதை  என எந்தவொரு கவிதையும் இருக்கப்போவதில்லை. ஏனெனில், கவிதை காலத்தோடு இணைந்தது. காலத்தை தன்னுடன் இணைப்பது. காலத்தை தன்னுள் ஏந்தி வைத்திருப்பது. எனவே, காலமுள்ள வரையில் கவிதையும் இருக்கும்.

கவிதை, மனதின் ஆன்மாவாக, இனத்தின் உணர்வாக, சமூகத்தின் உணர்வாக, காலத்தின் தடமாக, மொழியின் உயிர்ப்பாக என விரிந்த தளத்தில் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. மொழியும் அனுபவமும் சிந்தனையும் இணைந்த ஒரு பேரியக்கமாக கவிதையின் தொழிற்பாடு நிகழ்கிறது. கவிதை எண்ணற்ற வடிவங்களுடையது. எல்லையற்ற  பொருள்களை உடையது. பரிணாமத்தையும்  பரிமாணங்களையும் தன்னுள் கொண்டியங்குகின்றது. அது பெரிதும் உணர்வு சார்ந்தது. அனுபவத்தை தூ}hண்டும் உணர்வாகவும் அனுபவத்தைக் கோரும் உணர்வாகவும் அது இருக்கின்றது. உணர்வைக் கோருகின்றது மனம். அது உணர்வை வெளிப்படுத்துகின்றது. இந்த இருநிலைச் செயற்பாட்டில் கவிதையும் நிகழ்கின்றது. இங்கே அமரதாஸின் கவிதைகளும் இந்த தன்மைகளுடனேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அமரதாஸ் 23 வயது இளைஞர். ஈழக்கவிஞர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து எழுதத்தொடங்கியவர். இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர். ஒளிப்படக்கலைஞர். வாழ்வின் சகல விடயங்களைப் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர். புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப்பின் புலங்களை உணரமுடியும். இவற்றுக்கு அப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் கூட இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும். அவற்றில் ஓரம்சமாக இருப்பது இவர் கவிதைகள் பெருமளவுக்கும் காட்சிரூபமான உணர்வைக் கிளர்த்துபவை. படிக்கும் மனதில் காட்சியை வரித்து, கோலங்களைக் காண்பிக்கும் ஒரு வழிமுறையை தனது கவிதைகளில் பெரிதும் கொண்டியங்குகின்றார். அமரதாஸ் ஒரு நல்ல ஒளிப்படக்கலைஞர் என்பதால் இந்தத் தன்மை இவருக்கு அதிகமும் வாய்த்திருப்பதாகப் படுகின்றது.

அமரதாஸ் அனுபவ முதிர்ச்சியையும் அழகியல் உணர்வின் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் கவிதைகளை இந்த தொகுதியில் தருகின்றார். இதை முகம் பற்றி கவிதையில் இவர், தன் முகத்தை தான் தேடுதலிலும் தான் காணும் முகங்களில் தனக்கான முகங்களைத் தேடுதலிலும் அடையாளங்களைக் காண்பதிலும் அதிகமும் உணரமுடிகின்றது. இது போல சுயத்தை உருவாக்குவதிலும் சுயமாக இருப்பதிலும், சுயசுதந்திரத்தை சுயமாக அனுபவிப்பதிலும் சுதந்திரத்தைச் சுயஉழைப்பினாலேயே பெறுவதிலும் சுயத்தை நிர்மாணிப்பதிலும் இருக்கும் நிறைவை, நியாயத்தை, அழகை, உண்மையை வெளிப்படுத்துகின்றார். சிலையின்  உயிர் கவிதை உணர்த்தும் இந்தச் சுயம் பொதுவானது. அதேவேளை தனியானதும்கூட. தேச விடுதலையாக, பண்பாட்டின் தேடலாக, அதன் புதிதாக்கலாக, எமது வாழ்வைக் கண்டெடுத்தலாக எம்மை நாமே ஒழுங்குபடுத்தலாக என்று இன்னும் பல பரிமாணங்களில் தன்னை  விரிக்கும் இந்தக் கவிதை நேர்த்தியும் ஆழமும் கூடியது.

இயற்கை மீதாக நேசிப்பையும் இயற்கைக்கும் மனிதனுக்குமானஉறவையும் முரணையும் இவரது கவிதைகள் பேசுகின்றன. விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு, குளம் பற்றி, வனம் பற்றி என்பன இந்த வகையில் கூடுதல் அழுத்தமுடையவை.

வாழ்வு நிகழும் காலத்தையும் சூழலையும்தளமாகவும் பொருளாகவும் உள்ளடக்கி, அகவெளிப்பாடாகியுள்ள இந்தக் கவிதைகளில் எமது வாழ்வின் பிரதிபலிப்புக்களைக் காணலாம்.
அமரதாஸின் கவிதைகள் அமைதியும் தீவிரமும் உடையவை. நிததானமானவை. மொழிச்செம்மையை உடையவை. ஒருமுகப்பட்ட தன்மையை நிராகரித்து கவிதைக்குரிய பன்முகப்பண்புடனும் பரிமாண இயல்போடும் பொருள் உணர்த்துபவை. காட்சி ரூபமாக விரிபவை. எதனிலும் கட்டுண்டு போகாமலும் எதனையும் சாராமலும் தனித்திருப்பவை. சுயாதீனத்தைக் கோருபவை. காலத்தை முடிச்சிட்டும் அவிழ்த்தும் பார்க்கும் இயல்புடையவை. இத்தகைய பண்புகளைக் கொண்ட கவிதை முறைமையை ஈழத்தின் இன்றைய கவிஞன் கடைப்பிடிப்பது அப+ர்வமானது.

ஈழத்தின் நவீன கவிதைப்பண்பு அநேகமாக சமூக இயக்கத்தின் புறவெளிப்பாடுகளையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. இதையே படைப்பாளிகளும் விமர்சகர்களும் கடைப்பிடித்தும் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார்கள். ஒரு மெலிதான நெகிழ்ச்சியிள் மூலம் அதிலிருந்து சற்றுவிலகி மகாகவி, நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், மு.பபொ., சு.வி உட்பட வெகு சிலர், அக உணர்வுத்தரிசனத்தையும் கவிதையாக்கியுள்ளனர். இந்தப் பண்பு நிலையிலேயே அமரதாஸ{ம் தனித்துவத்துடன் இயங்குகின்றார்.

ஈழத்துக் கவிதை இரண்டு போக்குகளைக் கொண்டே இயங்கி வந்திருக்கின்றது. ஆர்ப்பாட்டமும் வேகமும் உள்ள கவிதைகள் ஒன்று. அமைதியும் நிதானமும் தீவிரமும் இணைந்த போக்கு மற்றையது. அமரதாஸ் இந்த இரண்டாவது போக்கிலேயே இயங்குகின்றது. தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் வேகமும் உள்ள கவிதைளுடனேயே அதிகமும் பரிச்சயம் கொண்;டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் எதிர்பார்க்கையும் இவ்வாறான கவிதைகளையே கோருகின்றது. இதனால் நெகிழ்ச்சியும் நிதானமும் தீவிரமும் கொண்;ட கவிiதைகள் மிகப்பிந்தியே வாசகர்களிடம் அறிமுகமாகின்றன. இதுவே மகாகவி, நீலாவணன் போன்றோருக்கும் நிகழ்ந்தது. இந்நிலையே இன்றும் தொடர்கின்றது. காலம் பிந்திய கவனிப்பாகவும் கவனிக்கத்தவறிய கணிப்பாகவும் இந்நிலை பராமரிக்கப்படுகின்றது. இத்துயர நிலையை தகர்ப்பது வாசகனிடத்துள்ள முக்கிய பொறுப்பாகும்.

ஏற்கனவே பரிச்சயம் கொண்ட வாசிப்பு முறையினூடாக ஒரு புதிய கவிதையை அணுக முடியுமென எதிர்பார்ப்பது முற்றிலும் பொருத்தமானதல்ல. இங்கே அமரதாஸ் தன் கவிதைகளுடனான உறவை வாசகன் கொள்வதற்கு புதிய விரிந்த அனுபவத்தை வாசகனிடத்தே கோருகின்றார். சுருங்கிய வட்டத்துள் உறவைக் கொண்டிருக்கும் ஒரு வாசகன் அமரதாஸின் இந்தக் கவிதைகளை உணரமுடியாமல் தவறிவிடுவான். இந்த தொகுதியில் புத்தகம் பற்றி என்ற கவிதை மிக முக்கியமான சவால்களை வாசகனிடத்தில் எழுப்புகின்றது. வாசகன் தன் அனுபவங்களுடனும் சிந்தனைகளுடனும் இக்கவிதையை எதிர்கொள்ள வேண்டியதாகின்றது. இத்தொகுதியில் உள்ள சில கவிதைகள் நெடுங்கவிதைகளுக்கான அடையாளக்கூறுகளைக் காடடுகின்றன. அதேவேளையில் இவற்றின் பல பகுதிகள் தனித்தனிக் கவிதைகளாகவும் சேர்த்துப் பார்க்கையில் முழுக்கவிதையின் வடிவத்தோடும் இணைந்திருக்கின்றன. இவற்றில் புத்தகம் பற்றி என்ற கவிதை கொண்டுள்ள தீவிரம் நம்மிடம் எழுப்பும் உணர்வும் சிந்தனையும் சாரம் நிறைந்தது: ஆழமானது: வலுவானது: நுட்பமானது.

அமரதாஸ் தனக்கும் கவிதைக்குமான உறவையும் இடைவெளிகளையும் தன் கவிதைகள் மூலமாகக் காட்டியுள்ளார். தன்னில் தான் வாழ்தல் என்பதே அவர் கவிதைகளில் தொனிக்கும் சாராம்சமாகும்.  இந்த தொனிப்பே மெய்யாகவும் மனிதனின் உண்மை முகமாகவும் இருக்கின்றது.

இன்றைய கவிஞன் (கவிஞன் மட்டுமல்ல சகலரும் தான்) மொழியை அது உணர்த்தி வந்த பொருளில் கையாளமுடியாத அவலத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறான். “உண்மை என்ற சொல்லை அது உணர்த்தும் பொருளில் மெய்ப்பிக்க – நிறுவிக்கொள்ள – எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கின்றது. நன்றி என்ற வார்த்தை வெறுமனே சம்பிரதாயமாக பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற வார்த்தை பாசாங்குத்தளமாக உச்சரிக்கப்படுகின்றது. அது போலவே ஜனநாயகம் என்பதும் நீதி என்பதும் சமாதானம் என்பதும் இன்னும் பலவும். இந்நிலையில் கவிஞன் இருக்கும் சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியம். அவன் புதிய சொற்களைக் கண்டறிய வேண்டியிருக்கின்றது. புதிய உணர்த்து முறைமையை கையாள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அமரதாஸ் தனது கவிதைகளில் புதிய உணர்த்து முறைமையினையும் புதிய சொற்களினையும் கையாண்டிருக்கிறார். இவ்வாறு புதிய திசையில் எல்லாவற்றையும் பயணிக்க வைக்க முயல்கின்றார்.

திரும்பத்திரும்ப வாசிக்கக்கோரும் இக்கவிதைகள், ஒவ்வொரு வாசிப்பிலும் சுவாரஸ்யத்தைக் கிளப்பியபடியே புதுப்புது அனுபவங்களையும் சிந்தனையையும் விரிக்கும் இயல்புடனிருக்கின்றன. மறுபடியும் மறுபடியும் வாசிக்கத ;தூண்டும் ஆவல், கவிதைகள் வாசக மனதில் ஏற்படுத்தும் பதிவை வலுவாக்குகின்றன. இத்தன்மைகள் மூலம் அமரதாஸ் கவிதைகளைக் காலத்தில் பரப்பிவிடுகின்றார். மிக இயல்பாகவும் நுட்பமாகவும் ஒலிரும் ஓசையும் இயல்பின் மொழியுமாய்க் கூடி விளைந்திருக்கும் இக்கவிதைகள் குறித்துக் காலம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும். இது மகிழ்ச்சியை அளிக்கின்றது.


“இயல்பினை அவாவுதல்“ என்ற அமரதாஸின் கவிதைத் தொகுதிக்கான முன்னுரை.

Sunday, August 12, 2012

‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’


யோ. கர்ணனின் கதைகள் - சேகுவேரா இருந்த வீடு
















‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’ என்று அஸ்வகோஸ் தன்னுடைய கவிதைகளில் குமுறுகிறார். அஸ்வகோஸ் மட்டுமல்ல, றஷ்மி, பா.அகிலன், வரதர், மு.தளையசிங்கம், தா.இராமலிங்கம், சு.வி, சிவரமணி, அனார், ஓட்டமாவடி அரபாத், இளைய அப்துல்லா, திருமாவளவன், கி.பி. அரவிந்தன், த.அகிலன், சித்தாந்தன், எஸ்போஸ், தாமரைச்செல்வி, கோவிந்தன், டொமினிக் ஜீவா, நந்தினி சேவியர், டானியல், சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சண்முகம் சிவலிங்கம், சு.மகேந்திரன், மலைமகள், ஆழியாள், பானுபாரதி, சேரன், நட்சத்திரன் செவ்விந்தியன், சாந்தன் என்று ஈழத்தின் எந்த எழுத்தாளரும் எந்தக் கவிஞரும் காயங்களின் மொழியில்தான் தங்களுடைய கதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளனர்@ இன்னும் எழுதி வருகின்றனர். இதில் தலைமுறை வேறுபாடுகள், இட அமைவுகளின் வேறுபாடுகள் எதுவுமில்லை. அந்த அளவுக்கு ஈழத்திலக்கியப் பரப்புக் காயங்களாலும் வலியினாலும் நிரம்பியுள்ளது. ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைகள் இதற்கொரு சான்று.

ஈழத்தில் மட்டுமல்ல உலக இலக்கியத்தின் பெரும்பரப்பும் காயங்களினாலும் வலிகளினாலும் நிரம்பியதே. அதிலும் யுத்தம் நடந்த சூழலில், ஒடுக்குமுறைகள் மலிந்த தருணங்களில், அதற்கெதிரான போராட்டங்கள் நடந்த இடங்களில் இந்த வலியும் வேதனையும் இன்னும் அதிகம். எந்தக் காயமும் வலியைத் தரும். எந்தக் காயமும் இரத்தமும் சீழும் வலியும் முனகலும் நிரம்பியதே. இன ஒடுக்குமுறையினால், சாதியத்தினால், மதத்தின் பேரால், பால்வேறுபாடுகளினால், மொழியின்பேராலான முரண்களினால், புலப்பெயர்வினால் என எதன் நிமித்தமான காயமாகவும் இருக்கலாம்;.

ஆனால், ஒருவரின் காயங்களை மற்றவர் புரிந்து கொள்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சாதி ரீதியாக ஒருவருக்கு ஏற்படுகின்ற காயம் - அவமானம் என்பதெல்லாம் அந்தப் பாதிப்பை அறியாதவர்களுக்கு அநாவசியமானதாகப்படுகிறது. பெண்கள் சந்திக்கின்ற வலிகளும் காயங்களும் பெண்ணின் நிலையை உணராதவர்களால் பெரிதாகத் தோன்றுவதில்லை. சிவரமணி எழுதியது காயங்களின் வலிகளையே. சிவரமணியைப்போல எழுதிய பிற பெண்களின் எழுத்துகளும் அவர்களுடைய  காயங்களைப் பற்றியவைகளே. அப்படியே முஸ்லிம்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் உண்மைகளையும் அவர்களுடைய நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாதோருக்கு அது அவர்களுடைய புலம்பல்களாகவும் குற்றச்சாட்டாகவும் தெரிகிறது. இதுதான் மலைய மக்களின் உணர்வுகளைப் பிற பொதுப்பரப்பினர் அணுகும் அடிப்படையும். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள பொதுக்குறைபாடு. கறுப்பர்களின் காயம் வெள்ளையர்களுக்கு வலிப்பதில்லை. பலஸ்தீனர்களின் கண்ணீர் இஸ்ரேலியர்களின் இதயங்களைக் கரைப்பதில்லை என்பது இதைத்தான்.

முஹமட் தர்விஷ், அன்னா அக்மத்தோவா, ஆத்மாநாம், அடோனிஸ், ஆன் ரணசிங்க, லாங்ஸ்டன் கியூஸ், ஆதவன் தீட்சண்யா என்று எந்த மொழியில், எந்தத் திசையில், எந்த இனத்தில் எழுதுவோராக இருந்தாலும் எவராலும் கண்ணீரைத் தவிர்த்து விட முடிவதில்லை. துயரத்தின் ரேகைகள் படராத இடமே இந்தப் பூமியில் இல்லை. அதனுடைய ரத்த ஓட்டம் நிகழாமல் எந்தக் கலையும் இல்லை. இலக்கியம், வரலாறு, வாழ்க்கை எல்லாவற்றுக்கும் கண்ணீரின் உப்புத்தான் சுவையூட்டுகிறது. வெற்றியைப் பற்றி, வீரத்தைப் பற்றிஅ அவை பேசினாலும் அவற்றின் அடியே வற்றாத நீரூற்றுப்போலக் கண்ணீர்ப்பரப்பிருப்பதைக் காணமுடியும். காப்பியங்கள், இதிகாசங்கள், மகத்தான திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியங்கள் எவையும் கண்ணீரின் உப்பை ருஸியாகக் கொண்டவையே அதிகம். எல்லாச் சுவையையும் விட அவலச் சுவையையே மனித மனம் அதிகம் விரும்புகிறது. கண்ணீருக்கும் வலிக்கும் அத்தனை குரூரமான ருஸியுண்டா? என்பதாற்தான் ‘துக்கப்படுபவனே பாக்கியவான்’ என்றுரைக்கிறது போலும் வேதாகமம்?

ஆனால், காயமென்பதும் வலியென்பதும் துக்கமென்பதும் எளிமையானதல்ல. அவை மிகமிகக் கடினமானவை. இந்தப் பூமியிலேயே கடினமானது காயத்தையும் துக்கத்தையும் வாழ்ந்து கடப்பதுதான். மனித வாழ்க்கை சதா துக்கத்தைக் கடக்க முடியாமற் தத்தளித்துக்கொண்டேயிருக்கிறது. ஆற்ற முடியாதிருக்கும் காயத்தையும் நிரந்தரத்துக்கத்தையும் குறித்த கேள்விகளிலிருந்தே உலகின் அத்தனை தத்துவங்களும் உண்டாகியிருக்கின்றன. ஆனாலும் புதிர்கள் இன்னும் தீரவில்லை. இதில் கவனிக்க வேண்டியது மனிதனிடமுள்ள அதிகாரத்தின் போதையே பெரும்பாலானவர்களின் காயங்களுக்கும் துக்கத்துக்கும் காரணமாக இருக்கின்றன என்பதை. மனிதனின் அறிவியலுக்கும் அறவியலுக்கும் சாவாலான விசயமாக இருப்பது இந்தத் தீராத துக்கமே.

யோ. கர்ணனும் காயங்களின் மொழியில், காயங்களினால் ஏற்பட்ட வலிகளின் மொழியில், அந்த வலிகளினால் ஏற்பட்ட வேதனையின் மொழியில், அந்த வேதனை ஏற்படுத்தும் சினத்தின் மொழியில் தன்னுடைய கதைகளைச் சொல்கிறார். ஆகவே கர்ணனின் கதைகளும் காயங்களின் கதைகளாகவே  இருக்கின்றன. இவற்றை வாசிக்கும்பொழுது இந்தக் காயங்களின் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் வலியை உணரமுடிகிறது. முக்கியமாக இந்தக் கதைகளில் அதிகமானவை ஈழப்போராட்டத்தின் இறுதிப் போர்க்காலத்தை மையப்படுத்திய – வன்னிப் போரின் காயங்களாகவுள்ளன@ காயக் கதைகளாக உள்ளன.

இறுதிப் போர்க்காலத்தில், போர் நடந்த சூழலில் - முள்ளிவாய்க்கால் வரையில் கர்ணனும் சிக்குண்டவர் என்றவகையிலும் பின்னர் ‘அகதி’, ‘சரணடைந்தோன்’, ‘கைதி’, ‘திரும்பிவந்தவன்’ எனப் பலவகையான கொடுமை நிறைந்த ‘வரலாற்று’ ப் பாத்திரங்களை ஒரு நெருக்கடிக் காலத்தில் வகிக்க வேண்டிய நிலைக்குள்ளானவர் என்ற வகையிலும் அந்த அனுபவங்களை அவர் எழுதும்போது அவை நிராகரிக்கவே முடியாத இலக்கிய சாட்சியமாகவும் முதன்மையான உண்மை சார்ந்த பதிவுகளாகவும் அமைகின்றன. மட்டுமல்ல, ஈழத்தின் பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கு நேர்ந்ததைப்போல, கர்ணனின் இளமைக் காலமும் துயரப் பரப்பிற்தான் சிக்கியது. எனவே அதையும் கர்ணன் தன்னுடைய கதைப் பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

வடலி வெளியீடாக 2012 மார்ச்சில் வந்திருக்கும் ‘சேகுவேரா இருந்த வீடு’ யோ. கர்ணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற முதற்தொகுதி 2011 இல் வடலி வெளியீடாக வெளியாகி, அந்த ஆண்டின் சிறப்புச் சிறுகதைத் தொகுதிக்கான ‘ஆனந்த விகடன்’ விருதினைப் பெற்றிருந்தது. ஆனால், ‘தேவதைகளின் தீட்டுத்துணி’யையும் விட ‘சேகுவேரா இருந்த வீடு’ பொருட்பரப்பிலும் வெளிப்பாட்டு முறையிலும் அழகியல் பொறுத்தும் நிறைய முன்னோக்கிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதியிலுள்ள 13 கதைகளில் ஏழு கதைகள் ஈழத்தின் யுத்த  சாட்சியத்துக்கான மிகச் சிறந்த இலக்கியச் சான்றுகள். இறுதிப் போர்க் காலத்தையொட்டிய நிகழ்ச்சிகளை மையப்படுத்திய கதைகள் இவை என்பதால், இவைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் ஏற்படுகின்றன. யுத்தக் குற்றங்கள் குறித்த விவாதங்கள் சர்வதேச அளவில் கவனப்பட்டிருக்கும் சூழலில் இந்தக் கதைகள் யுத்த நிகழ்ச்சிகளின் - யுத்தத்துக்குப் பின்னரான நிலைமைகளின் இலக்கிய சாட்சியமாக இருப்பதால் இவற்றின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது. யுத்தத்தினால் ஏற்பட்ட வலியும் அவல நினைவுகளும் மங்க முன்னரே இந்தக் கதைகள் அந்த வலியுடனும் காயாத நினைவுடனும் வருவதால், இந்த முக்கியத்துவம் மேலும் கூடுகிறது. அதிலும் இந்தத் தொகுதியிலுள்ள ‘திரும்பி வந்தவன்’, ‘திரும்பி வந்தவள்’ ஆகிய இரண்டு கதைகளும் தமிழ்வாழ்வில் புதிய அனுபவத்தைப் பேசும் முக்கியமான கதைகளாக உள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் சிதைந்த வாழ்வை வெளிப்படுத்துவதன் மூலமாக போராட்டத்தின் சிதைவைக் குறியீடாக்கி யதார்த்தத்தையும் உண்மையையும் உணரவைக்கிறார் கர்ணன். இதன்மூலம் தமிழ்ச்சமூகத்தின் சிதைவும் அவலமும் புலப்படுத்துப்படுகிறது. இந்தச் சிதைவுகளைச் சீர்ப்படுத்துவதற்கான மனிதாபிமானத்தை நோக்கிய ஒரு சிந்தனையைக் கோரும் உள்ளுணர்த்தலின் மூலம் அழைப்பை விடுத்து, இந்த நிலைமையை மாற்றவதற்கு இந்தக் கதையுரைப்பைக் கர்ணன் பயன்படுத்துகிறார் எனத் தோன்றுகிறது. அவல நிலையை அறியும் ஒரு மனிதாபிமானி அந்த நிலையை எந்த வகையிலும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ போவதில்லை. ஆகவே, அதைத் தீர்ப்பதற்கான செயல் முனைப்பொன்றை அந்த மனிதாபிமானி நிச்சயம் கொள்வார். அதையே கர்ணனும் எதிர்பார்க்கிறார்; இந்தக் கதைகளின் வழியே.

இதேவேளை இவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பொது நிலைப்பெறுமானம், அதனுடைய அரசியற் பெறுமானம், அதனுடைய பண்பாடு பற்றிய சித்திரங்கள், அதனுடைய பெருமித உளவியல் போன்ற எல்லாவற்றையும் திறந்து ‘நடிப்புச் சுதேசி’களாக இயங்கும் நிலையையும் இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பாரதிக்கு ஏற்பட்ட இந்த அவதானம் ஈழப்போரில் இன்று கர்ணனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிலையைக் கண்டு கர்ணன் உள்ளே கொதிக்கிறார். இதையிட்ட சினம் அவரிடம் பொங்குகிறது. ஆனால், ஒரு படைப்பாளி உணர்ச்சி மையத்தில் மட்டும் நின்று செயற்பட முடியாது என்பதற்கிணங்க, கதைகளின் பாத்திரங்களின் இயல்பினாலும் நிகழ்ச்சிப் போக்கினாலும் எல்லாவற்றையும் எல்லாத்தரப்பையும் சமனிலைப்படுத்தி விமர்சனபூர்வமாகக் கேள்விக்குட்படுத்துகிறார். மட்டுமல்ல, ‘தேவதைகளின் தீட்டுத்துணி’, ‘சேகுவேரா இருந்த வீடு’ எனத் தன்னுடைய கதைத் தொகுதிகளைச் சுட்டுவதன் மூலமாக, இந்தப் பெயர்கள் சாராம்சத்தில் கொண்டிருக்கும் அர்த்தப்பாடுகளைச் சிதைத்து எல்லாவற்றையும் முழுமையாகவே கேள்விக்குள்ளாக்குகிறார். இதன்படி, தேவதைகள் என்ற சொல்லுணர்த்தும் படிமமான புனிதம், அழகு, இனிய கனவு என்ற அர்த்தங்கள் கலைகின்றன. அதேவேளை ‘தேவதைகளுடைய தீட்டுத்துணி’யைப் பற்றி வாசகர்கள் சிந்திக்க வைக்கப்படுகின்றனர். தேவதைகளுக்கும் தீட்டுத்துணி உண்டு என்ற அதிர்ச்சிகரமான ஒரு விசயம் இங்கே நமக்குப் புலப்படுகிறது.
இதன்மூலம் அனைத்துப் பிம்பங்களும் புனிதங்களும் கலைந்து விடுகின்றன.

அதன் தொடர்ச்சியாக இப்போது ‘சேகுவேரா இருந்த வீடு’ என்று சொல்வதன் வழி இன்னொரு படிமக்கலைப்பை நிகழ்த்துகிறார் கர்ணன். (கவனிக்கவும் படிம உரிவாக்கத்திற்குப் பதிலாக படிமக் கலைப்பு நிகழ்வதை). அரசியல் வரலாற்றிலும் போராட்ட வரலாற்றிலும் ‘சே குவேரா’ என்ற பெயர் உருவாக்கும் படிமம் புரட்சிசார்ந்தது@ விடுதலைக்கான குறியீட்டை மையப்படுத்தியது. ஆனால், ஈழப்போராட்டம் உருவாக்கிய இந்தச் சேகுவேரா என்ற படிமத்தின் உணர்கை இதற்கு மாறானது. சேகுவேரா என்ற பெயரையுடைய போராளி அவனுடைய அணியோடு தங்கியிருந்த வீடு எப்படிச் சிதைந்து போகிறது, பின்னர், வீட்டின் உரிமைக்காரரர்களால் அதை மீட்க முடியாத சிரமங்களுக்குள்ளாகியிருக்கிறது, எப்படி அது ஆயுதந்தாங்கிய அதிகார மையங்களின் இருப்பிடமாக மாறிச் செல்கிறது என்பதையெல்லாம் சொல்லி சிதைந்த போராட்டத்தின் குறியீடாக்குகிறார் இங்கே கர்ணன். எப்படி சிதைந்த போராட்டமாக ஈழப்போராட்டம் மாறியதோ, அதைப் பற்றிய படிமங்களும் நம்பிக்கைகளும் எவ்வாறு உடைந்து நொறுங்கினவோ, அவ்வாறே இந்தப் படிமங்களின் சிதைவும் நிகழ்கின்றது என்பதை உணர்த்துவதே இந்தக் கதைகளின் இயக்கம். கூடவே, மக்களின் அவல நிலைமையையும்; இந்தக் குறிப்புணர்த்தலின் வழியாகச் சுட்டிவிடுகிறார்.

இவற்றையெல்லாம் கர்ணன் கேள்விக்குட்படுத்துவதை விட இவையெல்லாம் மெய்யாகவே நடந்த நிகழ்ச்சிகளினால் கேள்விக்குள்ளாகின்றன என்பதே உண்மையானது. அவற்றைக் கர்ணன் தன்னுடைய எழுத்துகளின் மூலமாக கவனப்படுத்துகிறார்@ இந்த அவலப்பரப்பின் மீது, இந்தச் சிதை மேட்டின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறார். அவ்வளவுதான். ஒரு தேர்ந்த படைப்பாளி இப்படித்தான் இயங்க முடியும்@ இப்படித்தான் இயங்குவார். இந்தக் கவனப்படுத்தும் உத்திக்கு கர்ணன் பொருத்தமான கதைகூறல் முறையைக் கொள்கிறார்@ அதற்கிசைவான மொழியிலும் மொழிதலிலும்.

இப்படிச் சொல்லும்பொழுது அவர் கையாளும் பொதுவான உத்தியாகக் காணப்படுவது அங்கதம். எல்லாவற்றையும் அங்கதமாக்கும், எதையும் கேலியாகவே பார்க்கும் ஒரு வகையான மனோநிலையினூடாக இந்தத் துயர்ப்பரப்பைக் கடந்து விட முயற்சிக்கிறார் அவர். அல்லது இந்தத் துயர்ப்பரப்பின் பின்னணியை விவரித்துப் பதிவாக்க முற்படுகிறார். அல்லது தன்னுடைய துக்கங்களையும் வலிகளையும் சொல்வதன் மூலமாக – தன்னுடைய பாரங்களை இறக்கி வைப்பதன் மூலமாக ஒரு சமனிலையைக் காண முற்படுகிறார்.

இதேவேளை அப்படிப் பார்ப்பதன் மூலமாகத் தன்னுடைய உளநிலையையும் சம நேரத்தில் இந்த நிகழ்ச்சிகளினால் பாதிக்கப்பட்டவரின் உளநிலையையும் சமனிலைப்படுத்துகிறார் கர்ணன். எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட தன்னுடைய துக்கத்தை தன் குதிரையிடம் சொல்லி மனமாறும் றிக்ஷா வண்டிக்காரனின் உளநிலையை அன்ரன் செக்கோ வெளிப்படுத்துவதைப்போல, இங்கே கர்ணன் செயற்படுகிறார். ஆனால், இங்கே கர்ணன் செக்காவைப் போலல்லாது, குதிரை வண்டிக்காரனைப் போல சொல்லத்துடித்துக்கொண்டிருக்கும் - பாரத்தை இறக்கத் துடித்துக் கொண்டிருக்கும் துக்கங்களோடிருக்கிறார் என்பதே கூடுதல் கவனத்திற்குரியது. எனவே கர்ணனுடைய கதைகள் பெரும் துக்கத்தினாலான அதிர்ச்சிக்குரியனவாகின்றன.

இங்கே ‘திரும்பி வந்தவன்’ என்ற கதையில் வரும் போராளி, போராட்டத்தில் ஈடுபட்டபோது, இயக்கத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் தன்னைக் கட்டமைத்துத் தோற்றப்படுத்தும் பிம்பத்துக்கும் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு - இயக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர் இயங்கும் தோற்ற நிலைக்கும் இடைவரையான பரப்பைக் காண்பிப்பதன் மூலமாக கர்ணன் மேற்குறித்த விசயங்களை தெளிவாக்குகிறார். முன்னர் மகிமை குறித்த பிம்பமாகத் தோற்றம் காட்டிய அதே போராளி, போராட்டத்தின் வீழ்ச்சியை அடுத்து, சீரழிவு நிலையில் சிதைந்த தோற்றத்தைப் பெறுகிறான்.

‘திரும்பிவந்தவள்’ கதையில் இது மாறிக் காண்பிக்கப்படுகிறது. இங்கே பெண்போராளி திரும்பி வந்திருக்கிறாள். அவளை இன்றைய ஈழத்தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் விதம் எப்படியாக மாறியுள்ளதென்பது காட்டப்படுகிறது. அதிலும் போராட்டத்தை ஆதரிக்கின்ற, ஒரு காலத்தில் போராளிகளை மதித்த ஆதரவாளர்கள் தங்களைத் திசைமாற்றி, அவளை அங்கீகரிப்பதற்குத் தவறுகின்றனர் என்ற நிலையைக் கர்ணன் அங்கதம் தொனிக்கச் சொல்கிறார். ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருப்பதைப்போல ஈழத்தில் திரும்பி வந்தவன் அல்லது திரும்பி வந்தவள் என்பதற்கான அர்த்தங்கள் அதிகம். போராட்டத்திலிருந்து திரும்பி வந்தவன், அகதி முகாமிலிருந்து திரும்பி வந்தவன், சிறையிலிருந்து திரும்பி வந்தவன், காணாமற்போய்த்திரும்பி வந்தவன், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தவன், போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு தடுப்பு முகாமிலிருந்து திரும்பி வந்தவன், புலம்பெயர்ந்து போய்த்திரும்பி வந்தவன், நாடு கடத்தப்பட்டுத்திரும்பி வந்தவன், இயல்பு வாழ்வுக்குத் திரும்பி வந்தவன் எனப் பல அர்த்தங்களில், பல நிலைகளில் இந்தத் திரும்பி வருகை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் பெண்களின் திரும்பி வருதல் என்பது இன்னும் பல மடங்கு கொடுமையானது. பெண்களைப் பற்றிய பிம்பங்களைத் தன்னகத்திற் பெருமளவிற் கொண்டுள்ள தமிழ்ச் சமூகம் இந்தப் பெண்களைக் குறித்து எத்தகைய நிலைப்பாட்டுடன் இருக்கிறது என்பதை கர்ணன் கேள்விக்குட்படுத்துகிறார்.

கர்ணனுடைய கதையுரைப்பு முறையில் அங்கதம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்று பார்த்தோம். இந்தப் பூமிப்பரப்புக்குக் கீழே இருக்கின்ற எல்லாவற்றையும் ஒரு விதமான நகைச்சுவையுணர்வுடன் பார்க்கின்ற போக்கைக் கர்ணன் கொண்டிருக்கிறார். துயரங்களைக் கடப்பதற்கான ஒரு உபாயமாக அவர் இதைக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. பெரும்பாலான போராளிகள் மிக நகைச்சுவையுணர்வுள்ளவர்கள். அவர்கள் தங்களுடைய இளைய வயதில் இழந்த பலவற்றையும் இந்த நகையுணர்வின் மூலம் கடக்க முயற்சித்தார்கள் என்றே நினைக்கிறேன். கர்ணனும் இத்தகைய அனுபவநிலையைப் பெற்றவர். இந்த நகையுணர்வு அல்லது அங்கதம் அவருக்கு எல்லாவற்றுக்கும் கைகொடுக்கிறது.

இந்த நகையுணர்வைத் தன்னுடைய கதையுரைப்பின் உத்தியாகப் பயன்படுத்தி,  ஈழப்போராட்டத்தில் செல்வாக்கையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய தரப்புகள் பலவற்றையும் கர்ணன் தன்னுடைய கதைப் பரப்பிற்குள் கொண்டு  வருகிறார். இதனால் இந்தத் தரப்புகள் அனைத்தும் கதைகளில் ஊடாட்டம் கொள்ளப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் அவர் இந்த நகையுணர்வின் மூலம் மெல்ல நிறமிழக்க வைக்கிறார். இதேவேளை ஒரு இலக்கிய சாட்சியாக நின்று இந்தச் சூழலின் மெய்யான நிறங்களைக் காண்பிக்க முற்படுகிறார். இப்படிப் பார்த்தால், கர்ணன் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் போராட்ட இலக்கிய சாட்சியம் என்ற பாத்திரத்தை இந்தத் தொகுதிக் கதைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார் என்றே கூறமுடிகிறது.

கர்ணன் வெளிப்படுத்துகின்ற இந்த அனுபவம் களத்திலிருந்தோருக்கே – போராட்டத்துடன் நெருங்கியிருந்தோருக்கே கிட்டியது. எனவே அவர்களே அதனுடைய சாட்களாகின்றனர். பொதுவாகவே சாட்சிகளின் நிலை மிகவும் நெருக்கடிக்குரியது. அதிலும் இந்த மாதிரி யுத்தகள – போராட்டக் கள நிலைவரத்தைப் பற்றிய சாட்சியமளித்தல் என்பது மிகச் சிக்கலுக்கும் அபாயங்களுக்குமுரியது. ஈழப்போராட்டத்தின் உள் நெருக்கடிகளை இலக்கிய சாட்சியமாக்கிய செழியன், கோவிந்தன், சக்கரவர்த்தி, சேரன், ஷோபாசக்தி, கலாமோகன், கற்சுறா, நட்சத்திரன் செவ்விந்தியன், ஓட்டமாவடி அரபாத், றஷ்மி, சிவரமணி, செல்வி போன்றோர் இத்தகைய நெருக்கடிகளை நேரடியாகவும மறைமுகமாகவும் சந்தித்தவர்கள். இன ஒடுக்குமுறையின் பாற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய சாட்சியங்களை அளித்த அத்தனை இலக்கியப் படைப்பாளிகளும் இன்னும் அத்தகைய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். சாட்சிகளை விசுவாசிகளும் பக்தர்களும் என்றைக்கும் விரும்புவதில்லை. அது அவர்களுடைய இருப்பிற்கும் விருப்பிற்கும் அச்சுறுத்தலானதாக அமைகிறது. சாட்சி உண்மையை வெளிக்கொண்டு வரும் ஒரு ஆயுதமாகத் தொழிற்படுவதால் உண்மையைக் கண்டு அஞ்சுவோர் சாட்சிகளின் குரல்வளையிற் கையை வைக்கின்றனர். சிலவேளை கத்தியையும் வைக்கின்றனர்.

எனவே ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிரான இலக்கிய சாட்சியமளித்தல் என்பது மிகமிகக் கடினமானது. இங்கே கர்ணன் மிகக் கடினமான வாழ்க்கையொன்றை வாழ்ந்து கடந்து கொண்டிருப்பதுடன், இந்தச் சாட்சியமளித்தலின் மூலமாக மேலும் கடினமான பரப்பொன்றிலும் பயணிக்க வேண்டியவராகிறார். இது மிக நெருக்கடிக்குரியது. என்றாலும் இதை அவராற் புறக்கணிக்க முடியவில்லை. ஏனெனில், இத்தகைய அனுபவப் பரப்பொன்றை விட்டு நீங்கிப் புறநிலையில் நின்று சத்தியத்துக்கு மாறாக, தன் மனம் அறிந்தும் உணர்ந்தும் இருக்கின்றவற்றுக்கு மாறாக அவரால் இயங்க முடியவில்லை. அதனால், நெருக்கடிகளை எதிர்கொண்டவாறே தன்னுடைய எழுத்தியக்கத்தில் அவர் இயங்குகிறார். ஆகவே இன்றைய தமிழ்ச் சூழலின் பொது உளவியலுக்கு மாறாகவே கர்ணன் தெரிகிறார்.

இன்றைய தமிழ்ச் சூழல் ஈழப்போரின் வீழ்ச்சியோடு மிகச் சிதைந்த உளநிலையிற் காணப்படுகிறது. அதனால் அது பெரும் பதற்றத்துக்குள்ளாகியுள்ளது. குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த ஒரு பரப்பாக அது நீண்டிருக்கிறது. போராட்;டத்தின் தோல்வியும் போராட்டத்தின் பால் செய்யப்பட்ட தியாகங்களும் செயலிழக்கப்பட்ட வீரமும் சிதைந்த நம்பிக்கையும் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுமே இந்தக் குழப்பங்களுக்கும் பதற்றத்துக்கும் காரணம். துக்கத்தையும் தோல்வியையும் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தமிழ்ப் பொதுவெளி உள்ளது. இந்த நிலையில் கர்ணன் தோல்விகளுக்கும் துக்கத்துக்கும் காரணமான விசயங்களை மையப்படுத்தி, வரலாற்றுப் பாத்திரங்களை விசாரணைசெய்யும் கதைகளை எழுதியிருப்பதென்பது கடுமையான சர்ச்சைகளையே உருவாக்கும். இதுவே நடந்து கொண்டுமிருக்கிறது.

ஆனால், எல்லாவற்றையும் எதிர்கொண்டவாறு பயணம் செய்கிறார் கர்ணன். இதேவேளை கர்ணனால் இன்னும் முழுதாக அபாயவெளியைக் கடக்க முடியவில்லை. யுத்தம் முடிந்த பின்னரும், திரும்பி வந்தவனாக இருக்கின்றபோதும் அவரால் இன்னும் இயல்புச் சூழலுக்கு வரமுடியாமல் தளநிலை இறுகியே உள்ளது. இதில் அவர் ஒரு குறியீடு மட்டுமே. ஈழச் சூழலின் நிலவரம் இதுதான். ஆகவே இந்தக் கதைகளும் இந்த இறுகிய தளச் சூழலிலேயே முன்வைக்கப்பட வேண்டியனவாகின்றன. ஏனெனில், இன்னும் இலங்கையின் அரசியற் சூழல் இருண்மையானதாகவே உள்ளது. போர் முடிந்த பிறகும் ஜனநாயகத்தின் நரம்புகளில் இன்னும் ரத்தோட்டம் சீர்ப்படவில்லை. யுத்தகாலத்தில் நிலவியதை ஒத்த அச்ச நிழல் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே பகிரங்கமாக எல்லாவற்றையும் பேச முனையும் கர்ணனைப் போன்ற ஒருவர் அபாயவெளியை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளார். இதனால் தலைமறைவுக்கொப்பான நிலையில் இருந்தே உண்மையைப் பேச வேண்டியுள்ளது. பகிரங்கத்திற்கு வரும்போது ஒன்றில் கடுமையாகச் சிந்திக்க வேண்டும். அல்லது வசையை ஏற்க வேண்டும். இதையெல்லாம் எதிர்கொண்டவாறே கர்ணனும் இயங்குகிறார்.

இதுவே  கவனத்திற்குரியது@ வரலாற்றின் பதிவுக்குரியது.

000

Friday, July 13, 2012

கருணாகரனின் கவிதைகள் ஒரு பார்வை







- கந்தையா ஸ்ரீகணேசன்








ஒரு சமூகத்தின் இருப்புக்கமைய அதன் இலக்கிய ஊடகம் அமையும் என்பது இலக்கிய அறிஞர்கள் கண்ட உண்மையாகும். நவீன மனிதன் தன் இருப்பை உள்ளும் புறமும் தேடிக்கொண்டிருப்பான். அவனது வாழ்வு உலகில் இயங்கும் பல சக்திகளால் கேள்விக்குறியாக்கப்படும்போது அவனால் இலக்கண வரம்புகளை, இலக்கிய விதிகளை (மரபு ரீதியான) கற்றுணர்ந்து கொள்ளும் வரை பொறுத்திருக்கமுடியாது. தன் அவலத்தை தன் உணர்வை அவன் தனக்குள் கைவரும் எக்கலை ஊடகத்தாலும் வெளிக்கொணரும் சக்தியை சூழல் அவனுக்கு வழங்குகின்றது. அத்தோடு அவனது அசைவியக்கத்தில் அவனுள் காணப்படும் கவி ஊற்றும் அதற்கு வழி சமைக்கின்றது. இப்பின்னணியிலேயே கருணாகரனது கவிதைகளை நாம் இனங்காண வேண்டும்.

ஈழத்தமிழிலக்கியப் பரப்பில் கவிதையினது வளர்ச்சி, பொதுவாக தமிழிலக்கியத்துக்கே ஒரு முன்னோடியாக உள்ளது. மரபுக்கவிதைகளில் மஹாகவி, நீலவண்ணன், முருகையன், நுஃமான், சோ.பத்மநாதன் ஆகியோரும் புதுக்கவிதையில் வ.ஜ.ச.ஜெயபாலன், சேரன், அ.யேசுராசா, தா.இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், வாசுதேவன் ஆகியோரும் சமகால மக்களின் வாழ்வியலைத் தாக்கமான முறையில் சமூக அரசியல் வழிப்புணர்வோடு கவித்துவ, சொற்சிக்கன குறியீட்டு படிமச்சிறப்புக்களோடு எழுதிவருகின்றனர். இந்த வரிசையில் கருணாகரனது கவிதைகளும் இன்னொரு பரிநாமத்தை எமக்கு உணர்த்தி நிற்கின்றன.


அமைதியான, அடக்கமான ஆனால் தன் மக்கள் துயர் கண்டு துடிக்கும் மனிதனாய் விளங்கும் இளைஞன் கருணாகரனை, உண்மை வாழ்வை நேசிப்பவனாகவும், நல்லவை செய்து அல்லவை போக்க முயல்பவனாகவும், புதிய உலகைப்படைக்க விளையும் அவாவுடன் இயங்குபவனாகவும், அவனது சமகால கவிதைகள் (திசை, மல்லிகை, உள்ளம், தாயகம் ஆகியவற்றில் வெளிவந்த தனிக்கவிதைகள்) இனங்காட்டி நிற்கின்றன.

‘சிதைக்கப்பட்ட நகரம்’ நாம் வாழுங்கால யாழ்ப்பாண நகர் பற்றியும் அதன் அவலத்தையும் கூறுகின்றது.


“துயில் கலைந்த இரவுகளில் 
இருள் சுமக்கும் யாழ்ப்பாணம்” 
எனத் தொடங்கி 


“துயில் மறுக்கும் குருவிகள் அச்சம் 
மனதில் எச்சமிடும்” 

என்று மக்கள் மனோநிலையைப் படம் பிடிக்கின்றது.


“முற்றத்துப்பூமரம் கூட 
தென்றலுடன் சிநேகிதிக்க மறந்து 
 பயத்தில் நிறைந்திருக்கும்”

ஆனால் கவிஞர் நம்பிக்கை ஒளியை வாசகரிடத்துத் தொற்ற வைக்கின்றார்.

‘மரணத்தை நிச்சயப்படுத்தும் செய்திகளுடன் 
பத்திரிகை அலுவலகங்கள் சுறுசுறுக்கும் 
 புதிய வாழ்வில்’

சமகால மனிதனது உரிமை மறுப்பும் அதை அவன் எதிர்கொள்ளும் விதமும், குறியீடு, படிமச் சிறப்புக்களுடன் வெளிப்படுத்துகின்றது.

“காற்று” எனுங் கவிதையில்


‘காற்று ஒரு காலம் 
திண்மமாக அல்லது திரவமாக 
மாறி விட்டல் மூச்சு எப்படியிருக்கும்’ 
எனக் கேள்வி எழுப்பி, 
‘சுவாசப்பையும் அதற்கேற்றபடியே இருக்கும்’ 

என இயற்கைச் சமநிலை கூறுகின்றார்.

ஆனால் அத் திரவமோ திண்மமோ பிறர் கையில் கிடைத்துவிட்டால் இம்மனிதன் இரவல் கேட்கவேண்டிவரும் என நவீன மனிதன் அகப்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலை உணர்த்துகிறார்.

‘கோடைவெளியில்’ இறுக்கமான குறியீடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

‘பனிமூடும் புகையிருளில் 
முகம் நனைந்த பசிய மரங்கள்  
கடுமுனைப்பின் பண்பொழுக்கில் சிறு புள்ளினக் குடியிருப்பு 
செந்நாக்கு அனற்பிளம்பாய் 
அலகிரண்டுகள், சுதந்திர கீதமும் 
வைகறையின் காலமதில் நிதமாய்'

கவிதையின் முடிவில் கவிஞரது ஓலம் ஓங்கி ஒலிக்கின்றது.

‘கொளுத்தட்டும் ஆக்கினைகள் 
கொடூரமாய் நிகழட்டும் 
குஞ்சினைக்கொத்தி கலைக்கட்டும் குருவியும் 
தேடலில் நாமெல்லாம் கூடிப்புணர்ந்து  
செந்தணற் சூட்டினுள்ளும் செம்மையாய் வாழ்விசைக்க  
யுகம் மூடுவோம் மானிட ஓலமாய்’

தனிமனிதனது உரிமைப் பிரச்சினைகளை (பசி, வறுமை) வாழ்வுப்பிரச்சினைகளை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் காட்டக்கூடிய பரிமானத்துடன் விளங்கும் கருணாகரனது கவிதைகள் நம்பிக்கை ஒன்றை எக்கணத்தும் கைவிடாது வாழ்வின் பிடிப்பை மொழிகின்றன.

‘வாழ்வின் பனிமலர்ச்சாகரங்கள் ஒரு சுமையாய்’ என ஆரம்பிக்கும் ‘முனைப்பு’ எனும் கவிதையில்


‘காடும் புதரும் மண்டிய  
நம் கிராமத்துப் பசுமைகளில்  
உழைப்பினைச் சுமக்கிறார் மக்கள்’

என தன் சமூகத்தை எழுத்தில் வடிக்கும் கவிஞர் அவர்கள், உறுப்பிணியை தொடர்ந்து கூறுகையில்,


‘பசியின் கொடுமை  
வறுமையின் தோள்களில்  
தோழமையுடன்  குடிசையும் குப்பிவிளக்கும் 
உரிமை சொல்லும் விழிகளில் ஈரம் ஊற்றெடுத்து 
மனதின் துயராய் அழும்’
இவ்வாறு “துயரம்” 

என்பதை படிமமாக்குகிறார்.

‘இலைகளை உதிர்த்து  
முள்பரப்பி நிற்கிறது வாழ்வின் பொருள் மறைக்கும்  கொடுந்துயரம்’ 

‘இருப்பின் தேவை’ எனும் கவிதையும் மானுட அவலத்தைக் கூறி நிற்பினும் அதில் மானுட வெற்றியை பூடகமாக்கிக்காட்டுகிறார்.


‘வாழ்வு அர்த்தமற்றதாய் என நினைவுகளில் தெறிக்கிறது  
எனினும் உயிர்ப்பின் ரகசியம்  
உள்மனம் அறியும்.’

சாதி மற்றும் அடக்குமுறை வடிவங்களை இயல்புடன் எடுத்துக்காட்டி அவற்றைச் சாடி நிற்பதையும் அவரது “சுவடி” எனும் கவிதை இயம்புகிறது.

‘துயரம் முட்டிய பூத வயிற்றுடன்
மறுபடியும் அங்கு அலைந்தது காற்று’

என மனிதன் அகப்பட்டுள்ள சூழலை சுட்டிக் காட்டி, ‘சாதியின் சுவர்களை மோதிச்சரித்தது’ எனப் பாடுகிறார் கவிஞர். ‘எனினும் தளிர்ப்பின் ரகசியம் அடிவேர்கள் அறியும்’ என அவர் நம்பிக்கை ஓங்கி ஒலிக்கிறது.

செவிப்புல கலை வடிவமாகிய கவிதை, இன்று கட்புலவடிவமாக பரிமாணம் பெற்று வளர்கின்றபோது அவர் வாசகர்களிடத்துக்  கிளர்த்தும் அனுபவங்கள், அவனைச் சிந்திக்கவைப்பதாக அமைவதோடு கலைத்துவ பிரக்ஞை உடையதாகவும் இருக்க வேண்டும். குறியீடு, படிமம், மற்றும் உவமான உவமேயத் தொடர்களில் எளிமையான சொற்களுடன் தன் அனுபவச் செழுமையை கற்பனை உணர்வோடு கலந்து, கவித்துவத்துடன் வெளிப்படுத்தும் சொற்சிக்கனமான கவிதைகளே, கவிதை ரசிகர்களை பிணித்து நிற்பன. இத்தன்மைதான் கவிதைகள் சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்படும்போது அவை வரலாற்றின் சுவடுகளாகும் என்பது வெள்ளிடைமலை.

கருணாகரனது கவிதைகளும் அந்த வகையில் இடம் பெறக்கூடியன என்று சொல்வது மிகையல்ல. அவை மானுடத்தின் உயிர்ப்பை உணர்த்தி நிற்கின்றன.  

திசை (யாழ்ப்பாணம்)
29.12.1989

Saturday, July 7, 2012

ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்







- கே.விஸ்வநாதன் 

இலங்கையின் ஓயாத போர்ச்சூழலில் நடுவே இருந்து எழுதப்பட்ட கவிதைகள் இவை. கருணாகரன் “வெளிச்சம்” என்ற கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். போராட்ட இயக்கங்களுடன் ஆழமான தொடர்பு உடையவர்.

ஆனால் இக்கவிதைகள் போராட்ட நியாயங்களை பறையறிவிக்கும் பிரச்சார கவிதைகள் அல்ல. போராட்ட அவலங்களையும் அழிவுகளையும் பிரலாபிக்கும் மனமுறிவுக் கவிதைகளும் அல்ல. சொல்லப்போனால் அமைதியான புலம்பெயர்வுச் சூழலை அடைந்த பிறகுதான் கவிதைகளின் குரல் உரக்க எழுகிறது; அதற்குக் காரணம் அச்சூழலிலேயே தாங்கள் இழந்தவற்றின் பிரமாண்டம் அவர்களுக்குத் தெரியவருகிறது.

கருணாகரனின் கவிதைகள் நுட்பமான இறுக்கமான, பூடகமான மொழியில் எழுதப்பட்டவையாக உள்ளன. கவிமொழியில் ஒரு அக இசையின் ஒழுங்கு தொடர்ந்து ஊடுருவியபடி உள்ளது .

பெருநடை மனிதரின் அகதிமுகம்
நிழலின் கீழே சரணடையும்

என்பது போன்ற வரிகளில் யாப்பில் புழங்கிய தமிழின் இறந்த காலத்தின் அழகின் சாயல் உள்ளது. நேரடியான கூக்குரலாக கவிதையை முன்வைக்க எப்போதுமே கருணாகரன் முயலவில்லை.

புதை குழிகள் மீது 
குந்தியிருக்கிறது காகம்


துயரத்தோடு அல்லது வன்மத்தோடு 
புதைக்கப்படும் பிணங்கள் 
தனிமையில்
கிடந்தழிகின்றன.

என்று ஆழமான படிமத் தன்மையுடனும் செறிவான இறுக்கமான மொழியுடனும்தான் தன் மனத் தீவிரத்தை அவர் வெளிக்காட்டுகிறார். ஆயினும்

வனத்தின் ஆழத்தில் 
புலியின் கண்கள் மின்னுகின்றன
கெமுனுவே எச்சரிக்கை!

என்று அறை கூவும் வேகமும் அபூர்பமாக காணக்கிடைக்கிறது. கருணாகரன் கவிதைகளில் காணப்படும் முக்கியமான அம்சம் அவற்றில்; உள்ள நம்பிக்கையின் கீற்றுதான். நிகழ்காலத்தின் உதிரம் மணக்கும் சித்திரங்களால் நிரம்புள்ள தொகுதி இது.

சாம்பலைக் கழுவி 
இரத்தமாய் ஓடும் வெள்ளத்தில் 
மூழ்கிப் போயிற்று என் முற்றம்

அத்துடன் இறந்தகாலம் குறித்த மனம் கசியும் ஏக்கம் கனக்கும் வரிகள்

எல்லா ஞாபகங்களிலும் 
பசுமையால் நிறைந்தபடிக்கு 
மலர்கின்ற மரங்கள் 

ஆயினும் அவற்றின் ஒட்டுமொத்தமாக மனிதம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஒளிகொண்ட கனவுகளும் எழுகின்றன. சுய ஏமாற்றமாகவோ பாசாங்காகவோ இல்லாமல் முழு ஆத்மாவையும் தழுவி எழும் நம்பிக்கையாக.

எனக்கான திசைவெளியில்
இலைகள் துளிர்கின்றன மரத்தில் 

கவிதை அதன் மிக எதிர்மறையான சூழலில் கூட தன்னை புதுப்பித்து மீண்டபடி உயிர் கொள்வதை இங்கு காண்கிறோம். எதிர்மறைச் சூழலில் பிற கலைகள் அனைத்தும் அழியும் போது கவிதை மட்டும் பெருகி மண்டும் விந்தையையும் காண்கிறோம்.

(நன்றி - சொல்புதிது)

Wednesday, July 4, 2012

என்கடன் - அனுபவங்களின் அசைபோடல்





















‘கோப்புகளோடும் மேசைகளோடும் அலுத்துச் சுழலும் மின்விசிறிகளோடும் சோம்பி ஒழுகும் மின்னொளியோடும் நிகழ்ந்தேறுகின்ற காரியாலயப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு மனிதனை ‘என்கடன்’ எம் முன் கொண்டு வருகிறது’ என ந.சத்தியபாலன், வே. ஐ. வரதராஜனின் கவிதைத் தொகுதிக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘...கோவைகள் 
ஒவ்வொன்றாய்ச் சரிதம் சொல்லும்.
கோரிக்கைகளாய் வேண்டுதலாய்
விடய ஏடுகள் புரளும்.
கோவைகளின் உயிர் மூச்சில்
உழன்று சோம்பிய முகங்கள்...’ 

(என் கடன்)

காரியாலயமொன்றினைக் கண் முன் கொண்டு வரும் சித்திரமாய் விளக்குகிறது ‘என்கடன்’.

‘அனுபவங்களின் அசைபோடல்களில் 
ஆனந்தமும் சோகங்களும்
கற்ற கணிதமும் விஞ்ஞானமும்
அந்நியமாய்த் தோன்றும்
பேரேடுகளும் காசோலைகளும்
பிறிதொரு பாடமாய் மாறும்
அதிகாரியின் பணிப்புகளில்
இறுக்கங்கள் சூழ்ந்திருக்கும்
பெற்ற பட்டங்கள்
நூலிழையிற் தொங்கும்
தன்வயமிழந்து வெற்ற மனிதனாய்...

என அவரது (வ. ஐ. வரதராஜனது) ‘ஓய்வின் அசைபோடல்களில்...’ யதார்த்தமான பணியிட அனுபவங்களையும் ஈரமற்ற சூழலையும் எமக்கு உணர்த்துகிறார்’ எனச் சத்தியபாலன், வரதராஜனின் கவிதைகளையே மேற்கோளிட்டு உணர்த்துகிறார்.

‘முப்பத்தேழு வருடங்களாக அரச பணியில் ஈடுபட்டிருந்த வரதராஜன், தனது பணி ஓய்வு பெற்ற பிறகு, தன் முதலாவது தொகுப்பைத் தந்துள்ளார்’ என மேலும் இதை மிகச் சரியாகவே கணித்திருக்கிறார் சத்தியபாலன்.

வே. ஐ. வரதராஜனின் கவிதைகள் பெரும்பாலும் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள், அவர் வாழ்ந்த சூழல், அவருடைய கால நிகழ்ச்சிகள், அவருடைய பணி, பணியிடம், அவருடைய இயல்பு என்ற அமைவுளைக் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக வரதராஜனின் பணிக்கால  வாழ்க்கையையும் அதன்போதும் அதன் நிமித்தமாகவும் சந்தித்த அனுபவங்களையும் மனிதர்களையும் அவர்களுடைய நடத்தைகளையுமே பேசுகின்றன. பிரச்சினைகளிலிருந்த ஒதுங்கி் கொள்ளல் அல்லது அவற்றிற் சிக்காதிருத்தல் அல்லது அவற்றை அனுசரித்துப் போதல் என்ற வகையில் அலலாமல் தன்னுள் குமுறிக்  கொள்ளும் ஒருவராகத் தன்னுணர்வை எழுதியிருக்கிறார் கவிதைகளாக. முக்கியமாக வரதராஜன் வாழ்ந்த காலச் சூழலும் இடச் சூழலும் கொந்தளிப்பான அரசியலைக் கொண்டது. ஆனால், வரதராஜன் அவை பற்றி எத்தகைய நிலையையும் காட்டவில்லை. பதிலாகத் தான் பணியாற்றிய இடத்து நெருக்கடிகளையே எழுத்தாக்கியுள்ளார். அவற்றையே பேசவும் முனைந்துள்ளார்.

இந்த மாதிரியான அரச பணி அல்லது அலுவலகப் பணி வாழ்க்கையைப் பற்றி ஏராளம் சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் ஏராளம் தொடர்கதைகளின் மையக் களம் அலுவலகங்களையும் அங்குள்ள மனிதர்களைப் பற்றியவையுமே. இப்படி எழுதப்படுகின்றவற்றில் சில தேறியிருக்கின்றன. பலதும் வெறுமனே களிப்பூட்டும் வாசிப்புக்கே தீனியாகின்றன. இப்போது தமிழில் உள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகளின் நாடகங்களில் அலுவலகங்களும் அங்குள்ள மனித நடத்தைகளும் பிரச்சினைகளும்தான் மையப்படுத்திக் காண்பிக்கப்படுகின்றன. இவையும் சுவாரஷ்யப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டவையே.

ஆனால், வரதராஜன் இந்த அலுவலக வாழ்க்கையையும் அங்குள்ள யதார்த்தத்தையும் அதிகம் பேசாமல் தன்னுணர்வின் வழியாக வெளிப்படுத்துவதற்கு எத்தனிக்கிறார். சுவாரஷ்யமூட்டல் என்பதை விட இதை அவர் பகிர வேண்டும் என்றே உணர்கிறார்.

அலுவலக வாழ்க்கை என்பது பெரும்பாலும் கசப்பூட்டும் அனுபவத்தையுடையது. அது இயந்திரமயமாக அவர்களை விரைவில் மாற்றிவிடுகிறது. ஓடியோடித் தேயும் இயந்திரத்தைப் போன்றே அங்கே வேலைசெய்கிற மனிதர்களையும் மாற்றி விடுகிறது. எல்லா ஊழியர்களும் களைத்துச் சோர்ந்தே தினமும் வீடு திரும்புகிறார்கள். காலையில் புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் பணிமனையின் படிகளில் ஏறும் ஊழியர்கள் மாலையில் வாடித் தளர்ந்து படியிறங்குகிறார்கள்.

இறுதியில் களைத்துச் சோர்ந்த நிலையிலேயே ஓய்வுபெறுகிறார்கள்.

இந்த ஓய்வு பெறுதல் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு விடுதலையே. ஆனால் அதற்குள் அலுவலம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய அவலப்பரப்பே. அது அவர்களைச் சாறாகப் பிழித்து சக்கையாக்கி விடுகிறது. அதிலும் அதிகாரிகளும் அவர்களுடைய அதிகாரமும் மனச் சாட்சியுள்ள – சமூக அக்கறையுடைய ஒரு பணியாளரைச் சிதைத்துக் கிழடுதட்ட வைத்துவிடுகின்றன.

சேவைக்குப் பதிலாக, சேவையளித்தலை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, சேவையாளனின் உரிமைகள், பொறுப்புகள் என்பவற்றைப் பேணுவதற்கு அப்பால் அதிகாரிகள் கையில் எடுத்து நிலைநாட்டும் அதிகாரம் அலுவலகத்தின் – பணியின் அடிப்படைகளுக்கே எதிரானது.

ஆனாலும் ஒரு சராசரியான பணியாளனால் இந்த அதிகார நடத்தைக்கு முன்னே எளிதாக இசைந்து கொள்ளவும் முடியாது@ எதிர்க்கவும் முடியாது. ஆகவே அவருக்கு இது ஒரு சித்திரவதையே. ‘நாற்காலி அதிகாரம்’ என்ற குறியீட்டை நாம் இந்த வகையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். எந்த அதிகாரமும் சித்திரவதைக்குள்ளாகும் உளநிலையையே உற்பத்தி செய்கிறது. இந்த அதிகார நிலையை இங்கே வே. ஐ. வரதராஜனும் தன்னுடைய வாழ்விலும் கவிதைகளிலும் உணர்ந்துள்ளார்.

ஆகவே அவர் தான் தினமும் சந்தித்த அல்லது தன் வாழ்நாளில் பெரும்பகுதியும் சந்தித்த நெருக்கடிப் பிராந்தியத்தை எழுத, வெளிப்படுத்த முனைந்துள்ளார். என்பதால், வரதராஜனின் பெரும்பாலான கவிதைகள் அவருடைய பணி மற்றும் பணியிடம் பற்றியவையாகி விட்டன. நிறைவேறாத விருப்பங்கள், தேவைகள் போன்றவற்றை அவர் சொல்கிறார்,


‘இந்தச் சேவல் ஆங்காரத்துடன்
எப்போதும் கூவும்
செம்பழுப்பு இறகுகளை அடித்து
சிவப்பான கொண்டயை அசைத்து
அதிகாரத் தொனியுடன்,
குரலெடுப்பும்...’

(சேவல்)

‘எப்போதும் தேவைப்படுவது
இல்லாத ஒன்றுதான்...


...... வேண்டுதல்கள் யாவும்,
மனக் கதவினுள்ளே 
இறுகப் பூட்டியிருக்கும்..’

(பூட்டிய கதவுகள்)

‘நான் நானாக இல்லை
என் சுயமிழக்க 
துரத்தப்படுகிறேன்
கதிரையில் உறங்கும் 
அதிகாரங்கள் 
கண் மூடியபடியே 
ஏவிக் கொண்டிருக்கும்...’

(வேலியும் பயிரும்)

‘.... மேலாதிக்க முனைப்புகளும்
அதிகாரத் தளைகளும்
திறமைகளை நசுக்கி ஆளும்
நிறைவேற்ற முடியாத 
தேவைகள் முடிவிலியாய்
பூஜ்ஜியத்துள் உறையும். 

(பூஜ்ஜியம்)

இத தவிர, வாழ்வின் பிற அனுபவங்கள், பிற அக்கறைகளைக் குறித்து வரதராஜனின் உணர்கையும் கவனத்திற்குரியது. மனிதாபிமான நிலைப்பட்டு நின்று மனித நடத்தைகளின் பொய்த்தன்மைகளை வரதராஜன் வெளிப்படுத்துகிறார் (குரூரத்தின் சாட்சிகள், புதிய முகமூடிகள்....). சமகால வாழ்வில் தொலைந்து போன கிராமங்களையும் அவற்றின் அடையாளங்களையும் சிதைந்த வாழ்வையுமிட்டுத் துக்கங்கொள்கிறார் (தொலைந்த கிராமங்கள்). முதிர்கன்னியரின் நிலை கண்டு துயருறுகிறார் (படுநிலம்). இப்படிப் பல.

ஆனால், இந்தத் தொகுதியில் முக்கியமான கவிதைகளாக – செம்மையும் அழகும் கூடிய கவிதைகளாக இருப்பது ‘அப்பாவின் கார்’ ‘பல்லி’, ‘யதார்த்தமும் மாய யதார்த்தமும்’ ‘படுநிலம்’என்ற கவிதைகள். இதேவேளை பொதுவாகவே வரதராஜனின் கவிதைகள் எல்லாவற்றிலும் அவருடைய இயல்பினைப்போல ஒரு மென்தன்மையுடைய உரைப்பொலியே உண்டு.

இதேவேளை இங்கே கவனிக்கவேண்டிய இன்னொரு விசயம், இந்தக் கவிதைகள் பொதுவான அல்லது வழமையான ஈழத்துக் கவிதைகள் பேசும் உக்கிர அரசியற் பரப்பிற்கு வெளியே நிற்கின்றன என்பது.தன் வாழ்வனுபவத்தின் ஒரு பகுதியைப் பேசிய வரதராஜன் மறு பகுதியை எவ்வாறு உணர்ந்தார்? என்பது.

ஆனால், அப்படி உக்கிரமாக அரசியலைப் பேசத்தான் வேணுமா என்ற கேள்வியை அவரோ அல்லது பிறரோ எழுப்பலாம். அதிலும் நியாயமுண்டு. ஆனால், உக்கிரமான சுவாலையின் வெக்கையின் மத்தியில் இருக்கும் ஒருவர் அந்தச் சுவாலையின் தீண்டலைக் குறித்து எதுவும் பேசாதிருப்பது குறித்த கேள்விகளும் எழுமல்லவா! இதேவேளை  இந்தப் பழி அரசியலைப் பேசித்தான் ஆகப்போவதென்ன என்ற பதிலும் ஒரு பக்கத்திலுண்டு. ஆகவே, தன்னியல்பின்படி சிக்கல்களுக்குள் சிக்கிக்கொள்ளாத நிலையில் தன் வாழ்வின் இன்னொரு பகுதியாகிய - சொந்தவாழ்வனுபவத்தைப் பெரிதும் சாரம்சப்படுத்திய எண்ணங்களையும் அனுபவங்களையும் கவியாக்கியுள்ளார் வரதராஜன்.

 ‘என் கடன்’ என்ற தலைப்பில் ‘ஜீவநதி’யின் 17 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் வே. ஐ. வரதராஜனின் இந்த நூல் இவருடைய முப்பதாண்டுகால எழுத்தின் முதற்தொகுதி.

00

Thursday, June 21, 2012

எழுதக் கடினமான முன்னுரை - 02


யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் பிறந்த புஷ்பராணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்ட வரலாறில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற இரு பெண் போராளிகளில் ஒருவர்.


புஷ்பராணி எழுதி எதிர்வரும்-30-06-2012 (சனி) - மாலை 5 மணிக்கு-47, Shernhall, Walthamstow, E17 3EY இல் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கும் 
அகாலம் : ஈழப் போராட்ட நினைவுக்குறிப்புகள் 
நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரைக்கு முன்னரான குறிப்பு. 


இவ்வாறு எழுதப்பட்ட முதற்கட்டுரை முன்னர் வெளியிடப்பட்டது.


இது இரண்டாவது கட்டுரை.


உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’’

‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’. இந்த வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. இது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியதாகத்தோடிருக்கும் ஒரு ஈழ விடுதலைப்பேராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும், எவ்வளவோ தியாகச்செல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின்  முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்கமுடியும்?

இந்த நிலை, போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத்தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப்பெருங்காடாகியுள்ளது. ஆனால், இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகிறது.

என்னை விட மூத்தவர்கள், முதல் தலைமுறையினர், என் சமகாலத்தவர்கள், எங்களுக்குப் பிந்தியவர்கள் என ஈழப்போராட்டத்தில் பங்கேற்று, சனங்களுக்காகவே தங்களைக் கரைத்த அத்தனை பேரின் இதயங்களிலும் கடந்து செல்ல முடியாத துக்கங்களும் அவற்றின் நிழலான நினைவுகளும் அலைமோதிக்கொண்டேயிருக்கின்றன. இந்தத் துக்கமென்பது சீர்ப்படுத்தவே முடியாத அளவுக்குச் சிதைந்து கொண்டிருந்த ஈழப்போராட்டத்தைப் பற்றியது. கூடவே, இன்று முழுச் சிதைவுக்குள்ளான போராட்டத்தையும் சனங்களைப் பற்றியதும்.

இங்கே எங்களின் முதல் தலைமுறையினரில் ஒருத்தி, எங்களுக்கு முன்னோடியாக இருந்த ஒருத்தி, போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் காயங்களையும் வலியையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருத்தி, ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற தன்னுடைய அந்தக் கடந்த காலத்தின் துக்கப் பரப்பைக் கடக்க முடியாமற் திணறிக்கொண்டிருக்கிறாள். தன்னுடைய இனம் அனுபவித்து வரும் அதனுடைய துயரங்களையும் பாடுகளையும் கடந்து விடவேண்டும் என்பதற்காக அவள் தாங்கவே முடியாத அத்தனை சிரமங்களையும் பாடுகளையும் ஏற்றுக்கொண்டு தன்னாலியன்றவரை விடுதலைக்காக உழைத்தவள். ஆனால் அவளால் வெற்றியைப் பெற முடியவில்லை. மகிழ்ச்சியை எட்ட முடியவில்லை. ஆறுதலையும் நிம்மதியையும் அடையமுடியவில்லை. பதிலாக எல்லா நிலைமைகளும் மேலும் மோசமாகியே விட்டன. எதிர்நிலைகள் பெருகி எல்லா வாசல்களையும் அடைத்துள்ளன.

இதனால் அவளுடைய துயரநினைவுகள் அவளை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்த வரலாற்றைக்குறித்தும் சனங்களைக்குறித்தும், அவர்களுடைய எதிர்காலத்தைக்குறித்தும் அவள் இன்னமும் துக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறாள். இந்தத் துக்கமானது தனியே கடந்த காலத்தின் துக்கம் மட்டுமல்ல. நிகழ்காலத்தினதும் துக்கந்தான். ஏன் எதிர்காலத்தின் துக்கமும் கூட என்றே சொல்லவேண்டும்.

ஈழத்தமிழர்களின் கடந்த காலம் என்பது தவறுகளினாலும் குற்றங்களினாலும் அவற்றின் விளைவுகளால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும் தோல்விகளினாலும் ஆகியிருப்பதால், அது - கடந்த காலத்தின், நிகழ்காலத்தின், எதிர்காலத்தின்  என முக்காலத்தின் தோல்வியாகவும் அவற்றின் துக்கமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் இந்தப் பெண்ணின் - இந்தச் சகோதரியின், இந்தத் தோழியின், இந்தச் சகபயணியின், இந்த முன்னோடியின், இந்தப் புகழுக்குரிய போராளியின் துக்கம் பொதுத் துக்கமாக ஆகிறது. இவளின் அனுபவங்கள் எல்லோருக்குமான பொது அனுபவங்களாகின்றன.

எனவேதான் புஸ்பராணி (அக்கா) தன்னுடைய இந்த வரலாற்று ஆவணத்தை எழுத ஆரம்பிக்கும்போது,


மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். 
தமிழீழத்தை நோக்கிய போராட்டப் பாதையில் நெடிய நாற்பது வருடங்கள் கழிந்துவிட்டன..... மமம


எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.....


தமிழர்களின் நிலப் பகுதியெங்கும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே சிவில் நிர்வாகம் நடந்துகொண்டிருக்கிறது. நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பசியும் பிணியும் வேலையின்மையும் பெருகிக் குழந்தைகள் அகதி முகாம்களிலே பாலுக்குக் கையேந்தி நிற்பதாக வரும் செய்திகளைப் படிக்கையில் ஒரு தாயாக நான் உடைந்து போய்விடுகிறேன்.....


எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது...


என்று குறிப்பிட வேண்டியேற்பட்டுள்ளது.

இது யதார்த்தத்தின் வெளிப்பாடு. உண்மையின் உரைப்பு. ஈழப்  போராட்டப்பாதையைக்குறித்த விமர்சனம். போராட்ட வரலாற்றின் இறுதி விளைவைப் பற்றிய சித்திரம். மேலும் இது இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் துக்கம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் மதிப்பீடு@ மேலும் தாங்கிக் கொள்ளவே முடியாத உள்ளக் குமுறல். ஆனால், இது பொதுத் துக்கமாகவும் பொது மதிப்பீடாகவும் பொதுநிலைப்பட்ட குமுறலாகவும் உள்ளது.

ஆகவே, ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஸ்பராணி (அக்கா) அவர்களின் ‘அகாலம்’ - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள் என்ற இந்த வரலாற்றுப் பதிவு, பல நிலைகளில் முக்கியம் பெறுகிறது. இது ஒரு வரலாற்றுப்  பதிவாக மட்டுமல்லாமல், கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ அரசியற் போக்குகளின் மீதான விமர்சனமாகவும் இந்தப் போராட்ட காலத்திற் செயற்பட்ட முன்னோடிகளைப் பற்றிய சித்திரங்களாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தின்போது தன்னுடன் இணைந்து சகபயணிகளாகச் செயற்பட்டவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் பதிவாக்கியுள்ளார் புஸ்பராணி. இவ்வாறு பதியப்பெறும்பொழுது, இந்தக் காலகட்டத்தின் அரசியல் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் தலைமைப்பொறுப்புகளிலிருந்தோரைப்பற்றியும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், அணுகுமுறைகள், அவர்களுடைய ஆளுமை, தனிப்பட்ட குணவியல்புகள் போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றியும் கவனப்படுத்துகிறார். அதேவேளை அன்றைய சமூக அதிகார அடுக்குமுறை, இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் நிலவிய அசமத்தும், சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இலங்கை அரசினதும் அதனுடைய பொலிஸ், சிறைச்சாலை போன்ற அதிகார அடுக்குகள் செயற்பட்ட விதங்களைப் பற்றியும் இந்தப்பதிவில் வெளிப்படுத்துகிறார்.

அச்சமற்ற வாழ்வை, விடுதலையை, சுமைகளற்ற நாட்களை, மகிழ்ச்சியை, இவற்றுக்கான வெற்றியைத் தருமென நம்பப்பட்ட ஈழப்போராட்டம் அழிவை நோக்கிச் சிதைந்ததன் விளைவு, ‘வாக்களிக்கப்பட்ட பூமி இப்போது சாம்பல் மேடாகியிருக்கிறது’. இதைக் குறித்து நாம் அதிகம் இங்கே பேசத்தேவையில்லை. ஏனெனில் இந்த விசயம் இன்று மிகப் பகிரங்கமானது. எல்லோருக்குமே தெரிந்தது. இதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கலாம். அல்லது இதற்கான பழிகளை ஒவ்வொருவரும் மற்றவர்களின் மீதும் பிற தரப்புகளின் மீதும் சுமத்தலாம். சிலர் தங்களையும் இதற்கான பொறுப்புக்குள்ளாக்கிப்; பேசலாம். ஆனால், ‘வாக்களிக்கப்பட்ட பூமி சாம்பல் மேடாகியதற்கு....’ மிதவாதப் போக்கில் வெறுப்புற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களாகத் திரண்டபோது இயக்கங்களை ஆதரித்து தமிழ் மக்கள் அவர்களுடன் நின்றார்கள். விடுதலை இயக்கங்கள்  வெகு விரைவிலேயே அதிகார மையங்களாக மாறுவார்கள் என்றும் சொந்த மக்களையே கொன்று குவிப்பார்களென்றும் அப்போது யாரும் கருதியிருக்கவில்லை. இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். என மிக எளிய வார்த்தைகளில் மிகச் சுருக்கமாக உண்மை நிலைமையை, யதார்த்த நிலையை, தன்னுடைய பார்வையை விளக்குகிறார் புஸ்பராணி.

வரலாற்றையும் நிகழ்ச்சிகளையும் கூர்மையாக அவதானித்து மதிப்பிடும் ஒருவருக்குத் தடுமாற்றங்கள் ஏற்படாது. “இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்க மாட்டார்கள்“ என்று சொல்வது மிகச் சரியான உண்மையான கூற்று. இதை நான் என்வாழ்விலேயே நேரிற் கண்டிருக்கிறேன். எந்தப் போராளியும் அடுத்த இயக்கத்தை அழிப்பதற்காகவோ பொதுமக்களின் மீது துப்பாக்கியை நீட்டுவதற்காகவோ போராட்டத்தில் இணையவில்லை. ஆனால் விடுதலை இயக்கங்கள் அதிகார மையங்களாக மாறியமையே பின்வந்த விளைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் துக்கத்துக்கும் காரணமாகின. இதற்கான காரணங்களை இயக்கத்தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு மிகத் தெளிவான பார்வையுடனும் வரலாற்றறிவுடனும் தன்னுடைய மதிப்பீடுகளை முன்வைக்கும் புஸ்பராணியின் இந்த ‘அகாலம் – ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள்’ நூல் இன்று மீளாய்வுகளும் அனுபவப் பதிவுகளும் அதிகமாக நடைபெறும் சூழலில் மிக முக்கியத்துவத்தைப் பெற்று வெளியாகின்றது.

இது மீள்பார்வைகளின் காலம், போராட்ட அனுபவங்களை எழுதும் காலம்... ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் தங்களுடைய அனுபவங்களை, மீளாய்வு நோக்கில் எழுதுகின்றனர். பல்வேறு இயக்கங்களினதும் வெளியீடுகள் என்பதற்கப்பால், கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ என்ற புதினத்தைத் தொடர்ந்து புனைவிலக்கியப் பதிவுகள் ஏராளமாக வந்துள்ளன. ஆனால், இந்தஅகாலம் - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள்’ போன்று மெய்வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவானவையே. ஆனால், இப்போது இந்தப் பதிவுகள் அதிகமாக எழுதப்படத்தொடங்கியுள்ளமை கவனத்திற்குரியது.

தோற்றுப்போன போராட்டம் ஏற்படுத்தும் துக்கநிலையில் நின்று பெரும்பாலான அனுபவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், இவை கழிவிரக்கத்தின் பாற்பட்டவையல்ல. மேலும் இந்தத் துயரநிலை தொடரக்கூடாது என்ற விருப்பத்தினடிப்படையில் இந்த வரலாற்றைப் பலரும் எழுதுகின்றனர். செழியன், ஐயர், நேசன், சி.புஸ்பராஜா, மணியம், குருபரன் என்று பலருடைய அனுபவங்கள் இந்தவகையில் வாசிப்புக்குரியனவாகியுள்ளன. சிலர் தம்மை மையப்படுத்தி ஒளிவட்டங்களை உருவாக்க முயற்சிப்பதும் நாமறியாததல்ல.

00
வரலாற்றைப் பதிவு செய்வதொன்றும் எளிமையான காரியமல்ல. அதிலும் தான் வாழ்ந்த காலத்தை, தான் பங்காற்றிய அரசியல் இயக்கங்களின் வரலாற்றை, தான் பங்களித்த முறைமையின் வரலாற்றைப் பதிவு செய்வது என்பது மிகக் கடினமான காரியம். தன்னை அல்லது தம்மையே முதன்மைப்படுத்தி அல்லது தாம் சார்ந்தியங்கிய போக்கினை மையப்படுத்திச் சிந்திக்கும் ஒரு தடித்த மரபுடைய நமது சூழலில் அதிலிருந்து விலகி நேர்மைத்தன்மையுடன் - தன்னைப் பொது நிலையில் வைத்து, தன்னையும் வரலாற்றுச் சூழலையும் மதிப்பிடுவதும் பதிவு செய்வதும் முக்கியமானது. புஸ்பராணி இங்கே தன்னை, தன்னுடைய செயற்பாடுகளை, தான் சார்ந்தியங்கிய அமைப்புகளின் தன்மைகளை, தன்னுடைய தவறுகளை, தன்னுடைய பலங்களை, பலவீனங்களை, சேர்ந்தியங்கியவர்களின் மாண்பை, அவர்களிற் சிலரின் குழிபறிப்புகளை, விட்டோடல்களை எல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார். ஒளிவு மறைவற்ற வெளிப்படுத்தலில் இவை பேசப்படுகின்றன. முக்கியமாக இயல்பாகவே அவரிடம் கூடியுள்ள ஓர்மத்தை அவர் வெளிக்காட்டிப் பேசுகிறார். இத்தகைய ஓர்மம் அவருடைய குடும்பத்திலிருந்து உருவாகியது என்றே கருதுகிறேன். தான் சார்ந்த சாதிப்பிரிவிலிருந்து, தன்னுடைய குடும்ப நிலைமை, தன்னுடைய திருமண வாழ்க்கை எனச் சகலதைப் பற்றியும் அவர் வெளிவெளியாகவே பேசுகிறார். எதற்கும் அவர் கூச்சப்படவில்லை. எதையிட்டும் அவர் தயக்கங்களைக் காட்ட விரும்பவில்லை. எதையும் மறைக்க வேண்டும் என்று அவர் உணரவில்லை. திறக்கப்பட்ட புத்தகமாகவே தன்னுடைய அனுபவங்களை அவர் விரித்து வைக்கிறார். இவ்வாறு அவர் பகிரங்கமாக அந்தக் காலத்தை விரித்து வைக்கும்போது பல பிம்பங்கள் சிதைகின்றன. (காசி ஆனந்தன், மங்கையற்கரசி, மாவை சேனாதிராஜா போன்றோர்). சில இருட்பரப்புகள் ஒளிபெறுகின்றன. (பத்மநாபா..... போன்றோர்).

ஆனால் இதைக்குறித்து புஸ்பராணி தெளிவாகச் சொல்வதையும் நாம் கவனிக்க வேணும்.

இங்கே நான் பல்வேறு தரப்புகளின் தவறுகளை மனம் வெந்து சுட்டிக்காட்டுவது அவர்களைப் பழிக்கும் நடவடிக்கையோ அல்லது அவர்களை அவதூறுகள் செய்யும் முயற்சியோ அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது வெறுமனே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கும் வேலையுமல்ல. இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தவறுகளை நாங்கள் எங்களிடமிருந்து வேரோடு களைய வேண்டியிருக்கிறது. இனி ஒரு துப்பாக்கிக் குண்டு துப்பாக்கியின் குழலிலிருந்தல்ல நமது எண்ணங்களிலிருந்து கூடப் புறப்படக் கூடாது. ஆயுதப் போராட்டத்திற்கான எண்ணக் கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்ற வகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப் போராட்டத்தில் நல்ல போராட்டம்இ மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே. அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறான்றிற்கும் அது பயன்படாது.


என்று அவர் கூறுவதும்

எனது இயக்க வாழ்க்கையில் ஏமாற்றத்தையும் வதைகளையும் நான் அனுபவித்தது ஒருபுறமிருக்க எனது இயக்க வாழ்வு எனது மனதுக்கு நெருக்கமான பல தோழர்களை எனக்கு ஏற்படுத்தியும் தந்திருக்கிறது. இவர்களில் சிலர் இப்போது உயிரோடு இல்லை. சிலர் அரசியலில் இல்லை. சிலர் இன்னும் அரசியலில் ஈடுபாட்டோடு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலருடன் எனக்கு இப்போது ஆழமான முரண்களும் மனக் கசப்புகளுமுள்ளன. சிலர் எங்கே இருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. எனினும் அந்தத் தோழர்கள் ஒரு காலத்தில் ஈழவிடுதலைக்காக அர்ப்பணிப்போடும் வீரத்தோடும் இயங்கியவர்கள். என்னோடு கரம் கோர்த்துக் கிராமம் கிராமமாகவும் சிறைச்சாலைகளிலும் பயணித்தவர்கள். முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும் அவர்களது நினைவுகளை என்னில் அழியாது பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

என்றும் உரைக்கும் புஸ்பராணியின் வாக்குமூலம் முக்கியமானது.

தம்மைப் பற்றிய பிம்ப உருவாக்கங்களுக்காகப் புனிதங்களை உற்பத்தி செய்கின்ற சமூகத்தில் இது மாறுதலான நிகழ்ச்சி. தவறுகளையும் தோல்விகளையும் திரைகளுக்குப் பின்னே இழுத்து மறைக்கின்றவர்களிடையே புஸ்பராணி விலகித் தனித்துத் தெரிகிறார்.

இதேவேளை வரலாற்றைப் படிப்பதிலும் வேறுபாடுகள் உண்டு. எழுதப்படும் வரலாறானது வாசிப்பவரின் வாழ்வையும் அவர்களுடைய காலத்தையும் மையப்படுத்தியிருக்குமானால் அதன் கவர்ச்சியும் முக்கியத்துவமும் வேறு. இரத்தமும் தசையும் நிரம்பிய உயிருள்ள ஜீவனாக இந்த வரலாறு அமையும். அதை வாசிக்கும் உணர்வும் வேறானது. அதற்கப்பால் வாசிக்கப்படும் வரலாறு வெறும் தகவல்களாகவும் நிகழ்ச்சிகளின் பதிவாகவும் விவரிப்பாகவும் சுருங்கிவிடுகிறது. புஸ்பராணியின் வரலாற்றுக் காலத்திற் பயணித்தவர்களுக்கு இது பொக்கிஸமே.

00

யாரும் தங்களுடைய நிகழ்காலத்தை எளிதாகக் கடந்து விடலாம். அல்லது அதைச் சற்றுக் கடினமான நிலையில் எதிர்கொண்டு கடந்து விடலாம். ஆனால், இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றில் இருந்து அவர்கள் தங்களை, தங்களுடைய கடந்த காலத்தை அவ்வாறு கடந்து விட முடியாது. அது மிகக் கடினமானது. இந்த நிலைமையானது இரண்டு நிலையில் இரண்டு தரப்பினரைச் சுற்றிய ஒரு பாம்பாக உள்ளது. ஒன்று, கடினமான கடந்த கால நினைவுகளைக் கடந்து செல்ல முடியாமற் தத்தளிக்கும் புஸ்பராணியைப் போன்றவர்களின் நிலை. மற்றது, அதிகாரங்களாலும் குற்றங்களாலும் நிரப்பப்பட்ட நிகழ்காலத்தைக் உருவாக்கியவர்களும் அதிகார அமைப்புகளும் இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றிலிருந்து தம்மை மறைத்து விட முடியாது. அதை எளிதிற் கடந்து விடவும் முடியாது. புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவில் நாம் இந்த இரண்டையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

புஸ்பராணியின் இந்தப் பதிவில் கடந்த நாற்பது ஆண்டுகால நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தரப்புகள் வெளிக்காட்டப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மகளிர் பேரவை போன்றவற்றின் செயற்பாடுகளையும் அவற்றோடு புஸ்பராணிக்கிருந்த உறவும் முரணும் இங்கே கூறப்படுகின்றன. தவிர, இந்த ஈழ விடுதலை வரலாற்றுப் போக்கில் யார் எல்லாம் மனித விதிக்கு மாறான குற்றச் செயல்களுக்குக் காரணமானார்கள், எவரெவர் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் பொது ஒழுங்குக்கும் மாறாக எவ்வாறெல்லாம் செயற்பட்டனர் என்பதையும் புஸ்பராணி பதிவு செய்கிறார். இப்படி எல்லாம் பதியும்போது அவர்களால் இந்தக் கடந்த காலத்தைக் கடந்து விட முடியவில்லை. அதேவேளை மனித நேசிப்பைத் தமது ஆதர சக்தியாகவும் வழிமுறையாகவும் கொண்டியங்கிய வரலாற்றின் நாயகர்கள் மேலும் இங்கே ஒளியூட்டப்படுகின்றனர். இதுதான் வரலாற்றை நோக்கும் நோக்குநிலையில் நம் கவனத்தைக் கோருவது. எத்தகைய நோக்குநிலையிலும் இந்த அடிப்படையைத் தவிர்க்க முடியாது.

இந்த வரலாற்றுப் பதிவு நூலில் விவரிக்கப்படும் கால நிகழ்ச்சிகளை இங்கே படிக்கும்பொழுது மீளவும் அந்தக் காலம் மனதில் விரிகிறது. சில நிகழ்ச்சிகளை அந்தக் காலகட்டத்திலேயே அறிந்தவனாகவும், சிலவற்றில் பங்கேற்றவனாக நானும் இருந்திருப்பதால், இந்த அனுவங்களிற் பலவும் என்னுடைய அனுபவங்களையும் ஒத்திருக்கின்றன. எனக்கும் புஸ்பராணி (அக்கா) க்கும் இடையில் ஏறக்குறைய பன்னிரண்டு வயது வித்தியாசங்கள். என்றாலும் 1975க்குப் பிந்திய நிகழ்ச்சிகள் மெல்லமெல்ல ஒளிகூடியவையாக என்மனதில் இன்னும் இருக்கின்றன. உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்... அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றுகூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.

அதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும். வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன்...

முக்கியமாக வே. பாலகுமாரனைப் பற்றிய கூறல்...
பாலகுமாரன் அதீத சுகாதார உணர்வுள்ளவர். அவர் எப்போதும் துடைப்பமும் தண்ணீருமாகக் கழிவறையைச் சுத்தம் செய்தவாறேயிருந்தார். எனினும் அது அவரது சக்திக்கு மீறிய காரியமாகவேயிருந்தது

இறுதி வரை அவர் இப்படித் தான் இருந்தார். எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன். ஆனால்?

00

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் தமிம் பேசும் மக்களின் நிலை மிக மோசமானது. இலங்கை அரசு சிங்கள அரசாக, இனவாத அரசாக வெளிப்படையாகவே செயற்படத்தொடங்கியதை அடுத்துச் சிறுபான்மை இனங்கள் மிக நெருக்கடிக்குள்ளாகின. பின்னாட்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இதில் மேலும் உச்ச நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தனர். இந்த நிலையில், 1950 இல் இலங்கையில் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவொன்றிற் பிறந்த பெண்ஒருவர் எத்தகைய நெருக்கடிகளுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியிருப்பார்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான ஒருவர் சாதாரணமாகவே, இனரீதியாகவும், சாதி ரீதியாகவும் பெண்ணென்ற நிலையிலும் பலமுனைகளில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டும். அதிலும் ஒடுக்குமுறைக்கெதிரான - ஆதிக்க சக்திகளுக்கு எதிரான அரசியல் ஈடுபாட்டைக்கொண்ட பெண் என்றால் இந்த நெருக்கடிகளைச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு அவை எல்லை மீறியவை. இத்தகைய நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தவரே புஸ்பராணி. புஸ்பராணியின் இளமைக்காலச் சூழலைப் பற்றி இந்தப் பதிவில் அவர் சொல்கிறார்.

யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் சிதம்பரி - சின்னம்மா இணையருக்கு நான்காவது குழந்தையாகவும் மூத்த பெண்பிள்ளையாகவும் பிறந்தேன். ..... 


எனது கிராமத்தில் கரையார் சாதியினரே ஆதிக்க சாதியினராகயிருந்தார்கள். யாழ்ப்பாணச் சாதியமைப்பில் வெள்ளாளர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள ஆதிக்க சாதியினர் கரையார்களே. நான் வளர்ந்துவந்த காலத்தில் கரையார்கள் முற்றாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள். கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் இவர்களுக்கு மத்தியில் எங்களது கிராமத்தில் நாங்கள் ஒரேயொரு நளவர் சாதிக் குடும்பமேயிருந்தோம்.


என் இளமைப் பருவத்தில் எல்லாவிதமான தீண்டாமைகளும் எங்கள் கிராமத்தில் நிலவின. தேநீர்க் கடைகள், ஆலயங்கள் போன்றவற்றுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆதிக்க சாதியினரின் தேநீர்க் கடைகளுக்குப் போய் சிரட்டையிலோ போத்தலிலோ தேநீர் குடிக்கவும் கோயிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிடவும் நாங்களும் தயாரில்லை. குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் மிகுந்த ஒற்றுமையாக இருப்போம். அரசியல் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ உரையாட வேண்டியிருந்தாலும் எங்களுக்குள்ளேயே உரையாடுவோம். வழி தெருவில், பாடசாலையில் ஆதிக்க சாதியினரின் கிண்டல்களுக்கோ பழிப்புகளுக்கோ நாங்கள் ஆளாகும்போது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம். 

இதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். புஸ்பராணியின் போர்க்குணம், அவருடைய போராட்டக் குணம் எல்லாம் அவருடைய குடும்பத்திற்குள்ளிருந்தே கிளம்புகிறது. அவருடைய தந்தை திரு. சிதம்பரி ஒரு முக்கியமான ஆளுமையாக இருந்திருக்கிறார். தாய் சின்னம்மா இதற்கு உறுதுணையாக நின்றவர். இந்தப் புத்தகத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களுக்குத் தனியாக அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லையாயினும் புஸ்பராணி மற்றும் அவருடைய சகோதரர் திரு.சி.புஸ்பராஜா ஆகியோரின் ஆளுமை உருவாக்கத்திலும் அரசியல் ஈடுபாட்டிலும் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. அதனால், அந்தக் குடும்பம் அக்காலத்தில் பெரும் இன்னலுக்கும் துயரத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. ஆனாலும் அவர்கள் இறுதிவரையில் பின்னகர்ந்து விடவில்லை. இதோ, இப்போதும் வரலாற்றில் முன்னிலைச் செய்பாட்டுக்குரிய அடித்தளத்துடனேயே இருக்கின்றனர்.

புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவு, மற்றும் திரு.சி.புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற பதிவு இரண்டும் இந்த ஓர்மமான அடித்தளத்திற்கு நல்ல ஆதாரம்.

புஸ்பராணி (அக்கா) அவர்களின் அரசியல் ஈடுபாட்டுக்கும் போராட்ட வாழ்க்கைக்கும் காரணமாக இருந்தவர் முக்கியமாக திரு. சி. புஸ்பராஜாதான். அதிக வசதியும் குடும்பப் பெருமையும் இல்லாத ஒரு அடிநிலைப் பெண்ணாக அரசியற் பொதுவெளியிற் பிரவேசித்த புஸ்பராணி, மற்றும் திரு.சி.புஸ்பராஜா ஆகியோர் அந்தக் காலத்திலேயே பொதுத் தளத்தில் தவிர்க்கப்பட முடியாத பாத்திரங்களைக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம், இவர்கள் பின்பற்றிய அரசியல் மட்டுமல்ல, அந்த அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் ஆற்றிய முன்னிலைச் செயற்பாடும் அதற்கான உழைப்பையும் துணிச்சலையும் ஓர்மத்தையும் கொண்டிருந்தமையே. இந்த ஓர்மந்தான் இவர்களுடைய அடையாளம். இதுதான் இவர்களை இன்னும் நின்றியக்கி வருகிறது.

இந்த ஓர்மத்தில் நின்றே புஸ்பராணி இன்றைய அரசியற் சூழலையும் மதிப்பிடுகிறார். அதிலிருந்தே தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கிறார். ஆயுதங்களால் அல்லாமல் அரசியற் பிரச்சாரத்தால் மக்களைத் தங்களின் பின்னே திரட்டிக்காட்டும் வல்லமை தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு இருந்தது. அந்த வல்லமையை அவர்கள் சரியாகப் பயன்படுத்தாமல் இரட்டை அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து ஆயுத இயக்கங்களின் சிபாரிசுக்காரர்களாக அவர்கள் மாறிப்போனது வரலாற்றின் துரதிர்ஷ்டம். ஆயுதப் போராட்ட அரசியலின் முன்னே தாங்கள் இழந்துகொண்டிருந்த செல்வாக்கைக் குறுக்குவழிகளில் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் முயன்றிருக்கக் கூடாது. 

இது ஓர்மத்தின் பாற்பட்ட கடுமையான விமர்சனமாகும். இன்றைய தமிழ் மிதவாதிகளின் நிலைமையைப் பகிரங்கமாகத் துணிச்சலுடன் புஸ்பராணி முன்வைப்பது இன்றைய தலைமைகளின் ஆளுமைக்குறைவையும் நோக்கச் சிதைவையும் மனதில் நிறுத்தியே. ஆகவே, அவர் கடந்த காலத்தின் மீது மட்டும் ஒளியை வீசி விமர்சனங்களை முன்வைக்கவில்லை. சமகாலத்தின் மீதும் தன்னுடைய பார்வைகளைக் கொண்டிருக்கிறார்.

இதற்கு இன்னொரு ஆதாரம்:
தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசிய தமிழ் இளைஞர் பேரவை இளைஞர்கள் தமிழர் கூட்டணியினரின் மிதவாதப் போக்கைக் கண்டித்தும் பேசினர். இதனால் கோபம் கொண்ட மங்கையற்கரசி  "எங்களது மேடையில் எங்களையே திட்டுகிறீர்களே" என்று சினந்தார். ஆத்திரங்கொண்ட கிளிநொச்சி திருஞானம் "உழைப்பது நாங்கள்இ பிழைப்பது நீங்கள்" என்ற தொனியில் மங்கையற்கரசியோடு வாக்குவாதப்பட்டதும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. இது ஆரம்பச் சுழியே. இப்படியான கருத்து மோதல்கள் பின்னர் பலதளங்களிலும் தொடர்ந்து சென்றன.

கூட்டமைப்பின் மீது தற்போது முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் கவனிப்போருக்கு இது எளிதிற் புரியும்.

எப்போதும் இயங்கும் மனதுடைய ஒருவருக்கு இத்தகைய தொடர்பார்வை இருந்தே தீரும். களத்திலிருந்து இவர்கள் இறுதிவரையில் விலகுவதேயில்லை.

00

பொதுவாகவே, போராட்டத்திலும் யுத்தத்திலும் முதலிற் பாதிக்கப்படுவது பெண்களே. மிக உச்சபாதிப்பைச் சந்திப்பதும் பெண்களே. இந்த உலகம் பெண்களுக்கே துக்கத்தையும் காயங்களையும் வலிகளையும் அதிகமாகக் கொடுத்துள்ளது. உலகம் முழுதுமுள்ள பொது நிலை இது. இந்த நிலைக்கு எந்தச் சமூகமும் எந்தக் காலமும்  விலக்கில்லை. எப்போதும் வன்முறையில்  இலக்கு வைக்கப்படும், வன்முறைக்குப் பலியாகும் முதல் மனித உயிர் பெண்ணே.

அதிலும் அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பொதுவெளியில் எழுச்சியடையும் பெண் - இயங்கும் பெண், ஆதிக்கத்தரப்பினால் மிக மோசமான முறையில் ஒடுக்கப்படுவாள். தெலுங்கானாப் போராட்டத்தில், எரித்திரியாவில், எல்சல்வடோரில், சிலியில், காஸ்மீரில் என எல்லாத்திசைகளிலும் பெண் அவலத்திற்குள் வீழ்த்தப்பட்டுள்ளாள். இரண்டாம் உலகப்போரின்போது மிகமோசமான முறையில் ஜேர்மனியில் சிதைக்கப்பட்டது பெண்களே. ஹிட்லர் இருந்தபோது யூதப்பெண்களும் ஹிட்லர் இறந்தபின்னர் நாஜிப்பெண்களும் சிதைக்கப்பட்டனர். மேலும் மலேசியாவில், கேரளாவில், தென்னாபிரிக்காவில் என்று இந்தப் பட்டியல் நீளும்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் அத்தகைய நிலையைச் சந்திக்கிறார் புஸ்பராணி. (இன்று ஏராளம் பெண்போராளிகள் இத்தகைய நிலைக்குள்ளாகியுள்ளனர்). ஒரு கட்டத்தில் பொலிஸ் தரப்பினரால் கைது செய்யப்படும் புஸ்பராணியும் சகதோழியான கல்யாணியும் படுகின்ற வதைகள், மிகப் பயங்கரமானவை. மிகக் கொடுமையானவை. மாதவிலக்கின்போது பயன்படுத்தப்படுவதற்குச் சாதாரண துணியொன்றைக்கூடப் பெறமுடியாத நிலை. இந்த நிலையைப் புஸ்பராணி இங்கே விவரிக்கும்போது எம்மால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதிருக்கிறது. துக்கத்தின் பெரும்பரப்பொன்றில் நகர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பதிவாக இது இருந்தாலும் இந்த மாதிரியான மனிதனின் முழு நாகரீகத்திற்கும் இழுக்கான மனித நிலையைக் குறித்து சொல்லும்போது அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், இந்தக் கொடுமை இன்னும் நீங்கிவிடவில்லை என்பதை, இந்த ஒடுக்குமுறை நிலை மாறவேயில்லை என்பதை ‘நான்பட்ட சித்திரவதைகளால் பத்து நாட்களிற்குப் பிறகு வரவேண்டிய மாதவிலக்கு முன்கூட்டியே வந்துவிட்டது. வழக்கத்தைவிட உதிரப் பெருக்கு அதிகமாயிருந்தது. டம்பா என........... கடுமையான அழுக்காயிருந்த, ஒரு கந்தலான சாரத் துணியைக் கொண்டுவந்து கொடுத்தான். உதிரப் பெருக்கை நிறுத்துவதற்காக நான் அந்தத் துணியை இடையில் கட்டிக்கொள்வதற்கு கல்யாணி உதவினார். அப்போது கல்யாணி "அக்கா இந்தத் துணியை வீசிவிடாதீர்கள். எனது முறை வரும்போது எனக்குக் கட்டுவதற்கு ஏதுமில்லை, இதை துவைத்து வைத்துக்கொள்வோம்" என்றார்.

நான் கட்டிக் கழுவி வைத்திருந்த துணியையே கல்யாணியும் பின்பு உபயோகிக்க வேண்டியிருந்தது. இப்போது இராணுவத்தின் சிறைகளிலிருக்கும் புலிப் போராளிப் பெண்களின் நிலை இதை விடக் கேவலமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எதிர்காலத்தில் அவர்களில் ஒருவருக்குத் தனது சிறைக் குறிப்புகளை எழுதி வெளியிடும் நாள் வாய்க்கும்போது இந்த நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியத்தான் போகின்றது.

என்று புஸ்பராணி சொல்வதினூடாக அவரும் அவரைப் போன்ற பிற பெண்களும் சந்திக்க வேண்டிய கொடுமைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில் புஸ்பராணி, அவருடைய தோழி கல்யாணி, புஸ்பராணியின் தங்கை போன்றோர் தங்கியிருந்த வெலிக்கடச் சிறைச்சாலையில் தென்னிலங்கையில் நடைபெற்ற ஜே.வி.பி கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட பின்னர்,  அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்று சிங்களப் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒடுக்குமுறை செய்யும் அதிகாரத் தரப்பிற்கு இனமதமொழிபிரதேச வேறுபாடுகள் இல்லை. அது தன்னுடைய அதிகாரத்துக்கு எதிரான யாரையும் கைது செய்யும். தண்டனையை வழங்கும். இங்கே ஜே.வி.பி பெண்களும் புஸ்பராணி, கல்யாணி போன்றோரை ஒத்த நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

ஜே.வி.பியினரின் போராட்ட அணுகுமுறை, அரசியற்பார்வை போன்றவை வேறாகவும் புஸ்பராணி, கல்யாணி போன்றோருடைய அரசியற் பார்வை, போராட்ட அணுகுமுறை போன்றவை வேறாக இருந்தாலும் ஒடுக்குமுறையை எதிர்கொள்வது என்பதிலும் ஒடுக்குமுறைக்குள்ளாவது என்பதிலும் இருக்கின்ற பொதுத் தன்மைகளை புஸ்பராணி இனங்கண்டுள்ளார். மட்டுமல்ல, கேரள நக்ஸலைட் போராளியாக இருந்த அஜிதா என்ற பெண்ணின் அனுபவங்களுக்கூடாக உலகு தழுவிய பெண்ணின் பாத்திரத்தையும் உணர்கிறார்.

எனதும் அஜிதாவினதும் போராட்டக் களமும் போராட்ட இலக்கும் போராட்ட வழிமுறைகளும் முற்றிலும் வேறாயிருந்தபோதிலும் வேறு சில விடயங்களில் எனக்கும் அஜிதாவுக்கும் சில ஒற்றுமைகளிருந்தன. இருவருமே ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தோம். இருவருமே இளம் வயதிலேயே காவற்துறையின் சித்திரவதைகளை எதிர்கொண்டு சிறைகளில் அடைபட்டுக்கிடந்தோம். இருவரது குடும்பங்களுமே போராட்டத்தில் தங்களை முழுவதுமாக இணைத்துக்கொண்டிருந்தார்கள். அஜிதா தனது பெற்றோர்களோடு சிறையிலடைக்கப்பட்டார். நான் எனது தம்பி தங்கைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டேன். சமூகத்தில் இருவருக்குமே கொள்ளைக்காரிகள் என்ற பெயருமிருந்தது.

என அஜிதாவைப் பற்றி விவரிப்பதினுடாக பெண்களுக்கெதிரான இந்தப் பொதுமைத் தன்மையை உணர்த்துகிறார் புஸ்பராணி. இந்த மாதிரியான நிலைமையில், உடல் ரீதியான வதைகள் ஒருபுறமென்றால், உளரீதியான வதைகள் இன்னொரு புறமாக இரட்டை வதையைச் சந்திக்க வேண்டியிருக்கிறாள் பெண்.

சிறையை விட்டு, அந்தத் தண்டனைக் களத்தை விட்டு வெளியே வந்தாலும் சமூகம் இந்தப் பெண்களை வரவேற்கும் விதம்? அது அதைவிடக் கொடுமையானது. ‘வாய்க்கு வந்தபடி கதைப்பது’ என்பார்களே அதை இந்தப் பெண்கள் விசயத்தில் மிக உச்சமாகச் செய்கிறது சமூகம். கொள்ளைக்காரி, கெடுக்கப்பட்டவள், ஒத்தோடியவள் என்றமாதிரியான வசைகளை எந்தக் கூச்சமுமில்லாமல் இந்தப் பெண்களின் மீது பொழிகிறது சமூகம்.

இவ்வளவுக்கும் இந்தப் பெண்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வின் சுகங்களுக்கப்பால், எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், பொதுத்தளத்தில் அனைத்துத்தரப்பினருக்காகவும் போராடியவர்கள். ஆனால், இதையெல்லாம் மறந்தே சமூகம் வசைப் பரப்பை மிகக் கேவலமாக இவர்களை நோக்கி விரிக்கிறது. இங்கே புஸ்பராணியும் இதே வசைப்பரப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதேவேளை, பொலிஸின் சிறையில் விசாரணைக்குட்படுத்தப்படும்போது, பிறரை விட புஸ்பராணியைப்போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலதிகமாக இன்னொரு தண்டனையையும் பெறவேண்டியுள்ளது. அதிலும் தமிழ்ப் பொலிஸ்காரர்களிடம். ஏனெனில் தமிழ்ச் சமூகத்தின் அதிகாரச் சாதியினராக இவர்கள் இருப்பதால், அதே மனநிலையில் கைதிகளையும் விசாரணையையும் அணுகுகிறார்கள். இது சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பானது. இதை மிக நுட்பமாக அதேவேளை தெளிவாகவே வெளிப்படுத்துகிறார் புஸ்பராணி.

"நளத்தியும் பள்ளியும் நாடகம் போடுகிறீர்களா? எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக வதைபடுவீர்கள்"  

அன்று புகழ்பெற்ற பொலிஸ் அதிகாரியாகக் கலக்கத்தை ஏற்படுத்தித் திரிந்த பத்மநாதன் கூறிய வார்த்தைகள் இவை. இவற்றை பொன்னெழுத்துகளால் பொறிப்பதா இன்று? தமிழ்ச் சூழலின் அவலம் பிற தரப்புகளை விட மிகக் கொடுமையானது.

இதனாற்தான்,


இரு பக்கங்களும் கூர்கொண்ட 'கருக்கு'ப் போன்று, தலித் பெண்களுக்கு சாதியாலும் ஆணாதிக்கத்தாலும் இரண்டு பக்கமும் ஆபத்திருக்கின்றது என்பாரே எழுத்தாளர் பாமா, எனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் கருக்காவேயிருந்தது.

என்று குமுறுகிறார் புஸ்பராணி. இந்த வலியும் வேதனையும் சாதாரணமானதல்ல. இதைப்போல குற்றம்சாட்டப்பட்ட – சேர்ந்தியங்கிய பிற போராளிகள் அல்லது கைதிகள் தங்களின் வசதியாலும் உயர்வர்க்க அடையாளத்தினாலும் மிக இலகுவாக தண்டனைப் பரப்பிலிருந்து வெளியேறிச் செல்கின்றனர்.

இதையும் புஸ்பராணி விவரிக்கிறார்.

வர்க்கபேதமும், சாதிபேதமும் எப்படியெல்லாம் எங்கெல்லாம் புகுந்து எளியோரை நசுக்கிவிடுகின்றன என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.
என்று.

மேலும் பெண்களைக் குறித்த புஸ்பராணியின் பார்வை விடுதலை நோக்கியது. மாற்றுப் பார்வையையுடையது. இத்தகைய புரிதல் அந்த நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டுள்ளது என்பது கவனத்திற்குரியது.

வெலிக்கடைச் சிறையில் நான் சந்தித்த ஒவ்வொரு பெண்களும் முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின்பும் கூட என் ஞாபக அடுக்குகளில் அழியாச் சித்திரங்களாக இருக்கிறார்கள். அங்கு மோசமான அனுபவம் என்று எதுவுமே அவர்களால் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இனிய அனுபவங்களையும் அன்பையும் தோழமையையும் ஆறுதலையும் அந்தத் தோழிகள் எனக்கு அள்ளி அள்ளித் தந்திருக்கிறார்கள். பயங்கரவாதி, கொலைகாரி, கொள்ளைக்காரி, பாலியல் தொழிலாளி, திருடி, சாராயம் விற்பவள், ஏமாற்றுக்காரி என்ற பல்வேறு பெயர்களில் அரசாங்கத்தாலும் நீதியாலும் நாங்கள் வகைப்படுத்தப்பட்டாலும் நாங்கள் கைதிகள் என்ற உணர்வு எங்களை இணைத்தே வைத்திருந்தது. அந்த இணைவிலிருந்து அன்பைத் தவிர வேறெதுவுமே சுரக்கவில்லை.

அன்றைய காலத்தில் கொலைவழக்கொன்றிற் குற்றம் சாட்டப்பட்டிருந்த கோகிலாம்பாளைப் பற்றியும் மலையகத்துப் பெண் லூர்துவைப் பற்றியும் புஸ்பராணி பார்க்கின்ற பார்வை....

கோகிலாம்பாளை துரோகத்தின் சின்னம் என்பதா அல்லது காதலின் பரிதாபத்துக்குரிய அடையாளம் எனச் சொல்லவா!
எனவும்இ கணவனின் கொடுமையைத் தாங்கமுடியாமல் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொன்ற லூர்துவைப் பற்றிச் சொல்லும்போது….


அவளது கணக்கற்ற துன்பங்கள் ஆத்திரமாகத் திரண்ட கணத்தில் அது நிகழ்ந்திருக்கிறது. அது துயரம் செய்த கொலையல்லவா

எனவும் பொதுவான சமூகப் பார்வைக்கும் நீதி அணுகுமுறைக்கும் அப்பால் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில், பெண்சார்ந்த அனுபவ நோக்குநிலையில் இவர்களின் செயல்களை நோக்குகிறார்.

இத்தகைய புரிதல் வாழ்வின் ஆழத்தை அதன் பன்முகத்தன்மையை மனித மனத்தின் உணர்ச்சிச் சுழிப்புகளை உணர்ந்துள்ள ஒருவராற்தான் முடியும். சாதாரண குடும்பப் பெண்ணாக அவர் இருந்திருந்தால், நிச்சயமாக அவருக்கு இத்தகைய உலகு தழுவிய, வரலாறு தழுவிய, வாழ்க்கையின் அடியாழத்தத்தைத் தழுவிய புரிதல்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது. அவர் பொதுவெளிக்கு வந்ததால், பாடுகளைச் சுமந்த அளவுக்கு அவருடைய உலகு தழுவிய விரிந்த பார்வையும் அனுபவங்களும் ஆற்றல் மிகுதியும் ஏற்பட்டுள்ளன. அவர் ஒரு நகரும் பெண்ணாக, இலக்கியவாதியாக,போராளியாகத் தன்னை வடிவமைத்துள்ளார். இது அவர் தன்னுடைய செயற்பாடுகளினால் பெற்றுக்கொண்ட பேறு.

இல்லையென்றால், 1969 இலேயே யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட பெண்ணொருவர் லண்டன் முரசில் தன்னுடைய கருத்துகளை முன்வைக்கவும் உலகத்தின் பல திசைகளிலுள்ளவர்களோடும் தொடர்புகளைக் கொள்ளவும் வாய்த்திருக்குமா ? ஆகவே, புஸ்பராணியின் இத்தகைய புரிதல்களையும் உணர்தல்களையும் தமிழ்ச் சமூகம் தன் அகத்திலெடுக்க வேண்டியது அவசியமாகும். விடுதலை நோக்கிய தாகத்தோடிருக்கும் ஒரு சமூகம் தன்னுள்ளே ஒளியைப் பாய்ச்சவில்லை என்றால், தன்னுள்ளிருக்கும் கசப்பான பிராந்தியங்களை நீக்கவில்லை எனில் அதனால் ஒருபோதுமே முன்னோக்கி நகர முடியாது.

இன்று தமிழ் இணைய வெளியை ஆக்கிரமித்து அதை எச்சிற் பரப்பாக நிரப்பிக் கொண்டிருப்போர் - குறிப்பாக சில பெண்கள் புஸ்பராணியின் இந்த வரலாற்றுப் பதிவை வாசிக்க வேண்டும். புஸ்பராணியின் அரசியற் தெரிகை, அவர் தேர்ந்தெடுத்த பாதை, அவருடைய செயற்பாடுகள், அவருடைய நம்பிக்கைகளில் மாற்றுப்பார்வைகள் இருக்கலாம். ஆனால், தான் தேர்ந்தெடுத்த, தான் நம்பிக்கை கொண்ட அரசியற் கொள்கைக்காகத் தன்னை அர்;ப்பணித்த நேர்மை, அதற்காக பட்டுக்கொண்ட வாதைகள், அதற்காகத் தன்னுடைய இளைமைக்காலத்தை இழந்த ஓர்மத்தை அவர்கள் புரிந்து கொள்ளலாம். நியாயவெளியில் உரையாடலை நடத்துவதற்கான அடிப்படைத்தகுதியை ஒருவர் எப்படிப் பெறுவது என்பதையும் அவர்கள் அப்போது உணர்ந்து கொள்ளலாம்.

மட்டுமல்ல இதே காலப்பகுதியில் அரசியற் பணிகளில் ஈடுபட்ட மங்கையற்கரசி புஸ்பராணி போன்றவர்கள் செய்த பணியில் பாதியைக்கூடச் செய்ததில்லை. புஸ்பராணி போன்றவர்கள் பட்ட வதையிற் பத்திலொரு பங்கைக்கூடப் பட்டதில்லை. ஆனால், புகழிலும் பொதுப் பார்வை கொண்ட வரலாற்றிலும் புஸ்பராணியை விட மங்கையற்கரசியே தலைவியாகத் தெரிகிறார். அவரே வசதிகளையும் வாய்ப்புகளையும் அதிகமாகப் பெற்றவர்.  இது எப்படியிருக்கிறது?

00

சி.புஸ்பராஜா, புஸ்பராணி ஆகியோர் மற்றவர்களை விடவும் முதற்காலத்துக்குரியவர்கள் என்றவகையிலும் தொடர்ச்சியையுடையவர்கள் என்ற வகையிலும் பிறருடைய பதிவுகளை விடவும் இவர்கள் வேறுபட்ட பதிவுகளைத் தருகின்றனர். இங்கே புஸ்பராணியின் பதிவுகள் அவருடைய சகோதரரான புஸ்பராஜாவின் பதிவுகளைப் பல இடங்களிலும் ஒத்திருக்கிறது.

இருவரும் ஒரு குடும்பத்திலிருந்து, ஒத்த அரசியற் பார்வையுடன், ஒரே காலத்தில், ஒரே சூழலில் அரசியற்போராட்டத்திலீடுபட்டதன் விளைவாக இப்படியான ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், புஸ்பராணியின் வெளிப்பாடு வேறானது. புஸ்பராணியின் எழுத்தில் மனிதநேயத்தின் ஊற்றுக்கண்கள் பொங்கிப் பிரவாகிக்கின்றன. செழிப்பான வாசிப்பும் வாழ்க்கை நோக்கும் அனுபவத்தைக் கலையாக்கும் திறனும் வரலாற்றுப் பிரக்ஞையும் இந்த எழுத்துகளை ஈர்ப்புக்குரியனவாக்குகின்றன. அதற்காகப் புஸ்பராஜாவின் எழுத்துகள் குறைவானவை என்று அர்த்தமல்ல.

புஸ்பராணி மிகச் சுருக்கி எழுதியிருக்கும் இந்த வரலாற்றுப் பதிவில், தலித் மக்களின் நிலை, 1960 களில் பெண்களின் அரசியல் ஈடுபாடும், பங்கேற்பும் பொது வாழ்வும், அதன்பால் ஏற்பட்ட வெளியுலகத் தொடர்பு... வாசிப்பு, பிற போராளிகளின் அறிமுகங்கள், கூடி விவாதித்தல், செயலாற்றுதல்சிறை, சிறைவாழ்க்கை, போன்ற விசயங்கள் மிக விரிவாகப் பேசப்படுகின்றன. கூடவே, ஜே.வி.பி, தமிழரசுக்கட்சி... கூட்டணி.... வதைகளையும் துயரத்தையும் சந்தித்த குடும்பங்களும் போராளிகளும் எனப் பலவும் கூட.

00

தீவிர இடதுசாரியப் பார்வையைக் கொண்டவர்கள் புஸ்பராணியின் இந்த வரலாற்று ஆவணத்தை நிராகரிக்கலாம். தமிழ்த்தேசிய அரசியற்பார்வையின் குறைபாடுகளே இத்தகைய அவலத்திற்கும் இன்றைய அவலத்திற்கும் பிரதான காரணம் என அவர்கள் வாதிடலாம். ஆகவே, இதிலே புதிதாக என்ன இருக்கப்போகிறது? என்ற தொனியில் அவர்கள் கேள்விகளை எழுப்பலாம். அத்தகைய பார்வைக்கும் கேள்விக்கும் இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதையும் விட முக்கியமானது, நான் முன்னரே குறிப்பிட்டவாறு, புஸ்பராணி தன்னை, தன்னுடைய பாதைகளை இங்கே வெளிப்படையாகவே பேசுகிறார். அதற்காகத் தன்னை, தன்னுடைய வாழ்க்கையை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.

என்னுடைய வாசிப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடுகொண்டிருந்த எனது குடும்பச் சூழல் போன்றவை என்னை மெதுமெதுவாக அரசியலை நோக்கி நகர்த்தின. எனது அரசியல் ஆர்வத்திற்கு எனது தம்பி புஸ்பராஜா உற்ற துணையாக இருந்தார். தமிழரசுக் கட்சியினரது கூட்டங்களிலும் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நான் ஈடுபாட்டோடு கலந்துகொள்ளத் தொடங்கினேன். 

என.

ஆனால், பின்னாளில் இதிலிருந்து அவர் பாடங்களையும் கற்றுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அடையப் போகும் தமிழீழத்தில் சாதி வேற்றுமைகள் இருக்கக் கூடாது என்று விரும்பினோமே தவிரஇ சாதி தமிழீழத்தில் இருக்காது என்று நாங்கள் முழங்கினோமே தவிர சாதியின் தோற்றம்இ அதனது வரலாற்றுப் பாத்திரம்இ இந்து மத்திற்கும் அதற்குமுள்ள தொடர்பு குறித்தெல்லாம் நாங்கள் எந்தத் தெளிவுமற்றே இருந்தோம். அமையப் போகும் தமிழீழத்தில் இறுக்கமான சட்டங்களைப் போட்டுச் சாதியை ஒழித்துவிடலாம் என்றளவில்தான் எங்களது அரசியல் புரிதலிருந்தது.


விடிய விடியத் தூங்காதிருந்து பேசிக்கொண்டிருப்போம். எப்போதும் சுதந்திரம் என்பதே பேச்சு. அமையப் போகும் தமிழ் ஈழம் எவ்வாறு இருக்க வேண்டும். சாதி சமய பேதமற்றதாகஇ சுதந்திரம் பெற்ற இனமாக எம்மினம் நிம்மதியாக வாழ்வதற்கு நாம் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்றெல்லாம் பேசுவோம். எம்மால் எதையும் சாதிக்க முடியும், விரைவில் எமது கனவு நனவாகும் என்று எல்லையில்லாத நம்மிக்கைகளில் நாங்கள் திளைத்தோம். எமது பேச்சுகள் நுணுக்கமான அரசியல் விவாதங்களாக இல்லாமல் உணர்சிவசப்பட்ட இலட்சியவாதப் பேச்சுகளாகவே இருந்ததை என்னால் இப்போது நிதானிக்க முடிகிறது. காலமும் அந்தப் பாடத்தை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

இந்தப் பாடங்கள் அவரை மட்டுமல்ல எம்மையும் வரலாற்றின் புதிய திசைகளை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறு என்பது பெயர்கள், இடங்கள், காலம் மற்றும் சம்பவங்களின் பதிவாக அமைவதில்லை. அது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. வாழ்க்கையைத் தீர்மானிப்பது. சமகால வாழ்க்கையையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்மாணிப்பது அது. எனவேதான் ஒவ்வொரு வரலாற்றுத்துளியிலும் மனிதர்களின் இரத்தத்தையும் கண்ணீரையும் அதில் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் மகிழ்ச்சிக்கான விதைகளும் உள்ளன. துக்கத்துக்கான விதைகளும் உள்ளன. வரலாற்றில் சக்தி மிக்க பாத்திரத்தை வகிப்போர் ஆற்றுகின்ற பங்கும் அவர்கள் கொண்டிருக்கின்ற பொறுப்புணர்வும் அவர்களுடைய சிந்தனையும் ஆளுமையும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

இறுதியாக அவருடைய பதிவுகளிலிருந்தே மேலும் சில பகுதிகளை இங்கே எடுத்தாள்வதன்மூலமாக என்னுடைய இந்த முன்னீட்டை நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன். புஸ்பராணி அக்காவின் இந்த இந்தப் பதிவு சொல்லும் சேதிகளின் முன்னே, உண்மைகளின் முன்னே, இது முன்வைக்கும் உணர்ச்சிகளின் முன்னே நாம் எடுத்துரைக்கும் வார்த்தைகள் போதாமைகளையே கொண்டுள்ளன. எனவேதான் அவருடைய பதிவிலிருந்தே சில முக்கியமான பகுதிகளை இந்த முன்னீட்டில் எடுத்தாள்வது பொருத்தமானது, முக்கியமானது எனக் கருதினேன். அந்த வகையில் இந்தப் பகுதிகளையும் நீங்கள் வாசிப்பது பொருத்தமாகும்.


எங்களில் சிலர் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தலைவர்களானார்கள், சிலர் நாடாளுமன்ற அரசியல்வாதிகளானார்கள், சிலர் அர்ப்பணிப்புள்ள ஆயுதப் போராளிகளானார்கள், சிலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்தார்கள, சிலர் கல்விமான்கள் ஆனார்கள், சிலர் வறுமையில் சீரழிந்தார்கள், சிலர் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள், சிலர் புலிகளால் கொல்லப்பட்டார்கள், சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள், சிலர் உச்சக் கட்ட ஏமாற்றத்தோடு இயக்க அரசியல்களிலிருந்தே முற்றாக ஒதுங்கிக்கொண்டார்கள். இவற்றில் நானும் கல்யாணியும் கடைசி வகையைச் சேர்ந்தவர்கள். - என ஈழப்போராட்டத்தின் சூழலைப் பற்றியும் தன்னைப் பற்றியும் மிக எளிமையாக விளக்கமளிக்கிறார் புஸ்பராணி.

மேலும் -

தமிழின விடுதலை மீதான நேசிப்பு என்னைப் போராட்டத்துக்கு அழைத்து வந்தது. ஆனால் என்னைப் போராட்டத்தை விட்டு ஒதுங்க வைத்தது சிறைக் கொடுமைகளோ அல்லது இலங்கை அரசின் கொடுமைகளோ அல்ல. நமது சொந்தப் போராளிகளிற்குள் உருவாகிய சர்வாதிகாரப் போக்குகளும் அராஜகங்களுமே என்னைப் போராட்டத்திலிருந்து துரத்திவிட்டிருந்தன. 


....நிலத்தில் பின்னாட்களில் நாளொன்றுக்கு நூறு கொலைகள் விழுந்தன, அவை சட்டபூர்வமான கொலைகள் அல்லது புரட்சிகரமான கொலைகள் என்று சொல்லப்பட்டு நியாயப்படுத்தப்பட்டனஇ அந்தக் கொலைகள் செய்தித்தாளின் ஒரு மூலையில் பிரசுரிக்கப்பட்டு அதேநாளில் மறக்கப்பட்டன.  

இப்படிப் பலவுண்டு. இதைவிட இந்த வரலாற்றுப் பதிவை புஸ்பராணி அக்கா வெறுமனே தகவற் திரட்டாக அல்லாமல், வாழ்வின் ருஸிமிக்க நிகழ்ச்சிகளின் உணர்வுக் கலவையாக - கலைத்துவம் மிக்க படைப்பாகத் தருகிறார். இதற்கு உதாரணமாக இன்னும் சில இடங்களை இங்கே சுட்டலாம். காலச்சூழலைச் சுட்டும்பொழுது, அப்போது லிபியாவின் இளம் அதிபர் கேணல் கடாபி ஒரு கதாநாயகனைப் போல இலங்கையின் செய்திப் பத்திரிகைகளில் சித்திரிக்கப்பட்டிருந்தார்என்கிறார்.

வரலாற்றில் எவ்வளவோ தூரம் நகர்ந்து வந்து விட்டோம். இன்று முதுமையான கடாபி அமெரிக்காவினால் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால், அந்தக் காலத்தை விவரிக்கும்போது லிபியாவின் இளம் அதிபர் கேணல் கடாபி ஒரு கதாநாயகனைப் போல இலங்கையின் செய்திப் பத்திரிகைகளில் சித்திரிக்கப்பட்டிருந்தார் என எங்களை அந்தச் சூழலுக்கு அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல், வரலாற்றின் முரண்நகையை உணரவும் செய்கிறார்.

சிறையிலிருக்கும்போது, அறையொன்றில் ஒருவர் தங்கமுடியும் அல்லது மூவர் தங்குவதற்கே அங்கே அனுமதி என்ற விதிமுறையைப் பார்த்தவர், சிறைச்சாலையில் ஒரு நூதனமான விதி இருந்தது. ஒரு சிறைக் கூண்டில் ஒருவரை அடைத்துவைப்பார்கள் அல்லது மூவரை அடைத்து வைப்பார்கள். இருவரை ஒரு சிறைக் கூண்டினிள் அடைத்து வைத்திருப்பதைச் சிறைச்சாலை விதிகள் அனுமதிப்பதில்லை. இருவருக்கு இடையில் எது நடந்தாலும் அதற்கொரு சாட்சியும் இருக்க வேண்டும் என்பது சட்டத்தின் பிடிவாதம்.

என எள்ளல் செய்கிறார். மேலும்,

ஒரு சிறிய அழகிய மலர் போல ரோஸ்மேரி எங்களது சிறையை அலங்கரித்துக்கொண்டிருந்தார்.

எனஅந்தத் துயர நிலையிலும் அவருடைய அழகுணர்ச்சி எப்படித் தொழிற்பட்டுள்ளது என்பதைக் காணமுடிகிறது.  

சிறையில் எதற்கு அழுகை வருகிறது, எதற்கு மகிழ்வு வருகிறது, எதற்கு சிலசமயங்களில் இரண்டும் சேர்ந்தே வருகின்றன என்பதற்கான காரணங்களையெல்லாம் வழமையான தருக்கங்களால் ஆராய்ந்து சொல்லிவிட முடியாது. அது வேறு உலகம், வெவ்வேறு தருக்கங்கள்.


அது சிறையாயிருந்த அதே நேரத்தில் இன்னொரு வகையில் சுதந்திர உலகாகவும் இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

என்று அந்த நிலையை ஆழ் அனுபவத்திற் கொள்கிறார்.

இதைப்போல, சாதியத்தின் பேராலான ஒதுக்கல்களை – புறக்கணிப்புகளை உணர்ந்த சிறுவயதிலேயே புஸ்பராணியின் மனதில் ஒரு சித்திரம் விழுகிறது.

கன்னியர் மடத்திலும் நான் சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன். அங்கிருந்த ஓரிரு கன்னியாஸ்திரிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சாதிய உணர்வுடனேயே நடந்துகொண்டார்கள். ஆனானப்பட்ட இயேசுநாதரே அங்கு படிக்க வந்திருந்தால் கூட தச்சனின் மகனென்று சாதிப் பாகுபாட்டிற்கு உள்ளாகியிருப்பார்.

இப்படி இந்தப் பதிவு நெடுகிலும் ஏராளம் சுவாரஷ்யமான, ஆனால் கடந்து செல்லக் கடினமான அனுபவங்கள் உள்ளன. அனுபவங்கள் என்பவை என்ன? உண்மைகள்தானே. அந்த உண்மைகள் உங்களை நோக்கிப் புன்னகைக்கின்றன. ஆனால், அவற்றை நீங்கள் கூர்ந்து நோக்கினால், அவற்றினுள்ளே ஆறாத காயங்கள் இன்னும் சிவந்தபடியே இருப்பதைக் காணலாம்.

00

இது ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவலங்களைச் சந்தித்த ஒரு பெண்ணின் வரலாறு. ஒரு குடும்பத்தின் வரலாறு. ஒரு சமூகத்தின் வரலாறு. ஒரு இனத்தின் வரலாறு எனப் பலவிதமாக உணரப்படவேண்டியது.

ஆனால், இந்த வரலாற்றில் சிதம்பரியின் குடும்பம் பெற்ற நன்மைகள் என்ன? இந்த அரசியலால் அது பெற்ற அனுகூலங்கள் என்ன? இந்த மாதிரிக் குடும்பங்களின் அர்ப்பணிப்புகளைத் தமது அரசியல் அடித்தளங்களுக்குப் பயன்படுத்திய இயக்கங்களின், பாராளுமன்ற அரசியல்வாதிகளின் லாபங்கள்.... எப்படியிருந்தன? என்பதெல்லாம் இன்று கேட்கப்படவேண்டிய கேள்விகள்.

மயிலிட்டிக் கிராமத்தில் என்னுடைய இளமைப் பிராயமும் 1980 களில் இருந்திருக்கிறது. அந்த அழகிய கடற்கரையும் அந்தச் சூழலும் அங்கே வாழ்ந்த சனங்களும் இன்று சிதைந்த நிலையிலேயே இருப்பதைக் காணலாம். இன்னும் அந்தக் கிராமத்துக்குப் போகமுடியாத துக்கத்தோடு ஆயிரக்கணக்கான சனங்கள் முதுமையடைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வயதினால் ஏற்படும் முதுமையையும் விட அவர்களுடைய துக்கத்தினால் ஏற்படுகின்ற முதுமையே கொடியது.

புஸ்பராஜாவின் நூலுக்கு ஏற்பட்ட வரவேற்பையும் விமர்சனத்தையும்போல இந்தப் புத்தகத்துக்கும் வரவேற்பும் விமர்சனமும் கிடைக்கும். வரலாறு எழுதப்படும்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் சாத்தியம். கோணங்களுக்கு ஏற்ப வரலாறும் வேறுபடும். அவைகளில் இதுவும் ஒன்று" என புஸ்பராஜாவின் நூலைக்குறித்து அ.மாக்ஸ் எழுதியதையே இங்கே நாமும் சுட்டலாம்.

இது கலைக்க முடியாத் துயரம். துரத்திட முடியா அவலம். ஆனால் என்ன செய்வது? - இதற்குள்தானே நாம் வாழவேண்டியுள்ளது. இதற்கெதிராக நாங்கள் இன்னும் போராட வேண்டியிருக்கிறது.

வணங்குகிறேன் உங்களின் முன்னும் உங்களின் குடும்பத்தின் முன்னும். அவர்களைப் போல இந்த மண்ணிலே வாழ்ந்த ஆயிரமாயிரம் மனிதர்களின் முன்னும். இந்த வரலாற்றின் முன்னும்.

00

- கருணாரகரன்
23.03.2012 கிளிநொச்சி

00