Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Wednesday, April 24, 2013

வெளிக்கிடடி விசுவமடுவுக்கு'


யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. விசுவமடுவிலுள்ள ஒரு சிறிய வீட்டையும் அதனோடிணைந்திருக்கும் பதுங்கு குழியையும் பார்ப்பதற்காக தினமும் ஏராளம் சனங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தென்பகுதியிலிருந்து வருவோரே அதிகம். இந்த வீடும் பதுங்கு குழியும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்பதே இந்தக் கவர்ச்சிக்குக் காரணம். தெற்கிலிருந்து இப்படிப் புலிகளின் கவர்ச்சி மையங்களை நோக்கி பலர் தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள். விடுமுறைக் காலங்கள் என்றால் வருவோரின் தொகை கூடியிருக்கும். தெற்கிலிருந்து வருகின்ற சிங்கள மக்கள் மட்டுமல்ல, புலம் பெயர் நாடுகளிலிருந்து வருகின்ற தமிழர்களும் உள்ளுரில் உள்ள தங்களின் சொந்தக்காரர்களை அழைத்துக் கொண்டு புலிகளின் கவர்ச்சி மையங்களை நோக்கிச் சுற்றுலாப்போகிறார்கள். இதற்கென்று பழக்கப்பட்ட, இடங்கள் தெரிந்த வண்டிச் சாரதிகளும் வழிகாட்டிகளும் கூட முளைத்து விட்டனர். யுத்தகால எச்சங்கள் பலவுண்டு. போரினால் பாதிக்கப்பட்ட, உடல் உறுப்புகளை இழந்த மனிதர்கள், இடிந்தும் அழிந்தும்போன வீடுகள்.... ஆனால் அவற்றை யாரும் பார்க்க வருவதில்லை. பதிலாக யுத்தத்தை நடத்துவதற்குக் காரணமாக இருந்த இப்படியான கவர்ச்சி மையங்களை நோக்கியே சனங்கள் வருகிறார்கள்.

விசுவமடுவில் உள்ள அந்தச் சிறிய வீட்டில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் விளையாடிய கார் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சியில் பாலச்சந்திரன் இறந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகிய பிறகு, இந்தக் காரின் மதிப்பும் சற்றுக் கூடித்தான் விட்டது. இந்த வீட்டுக்கு வருவோர் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த விளையாட்டுக்காரை அதிசயத்துடன் பார்க்கிறார்கள். சிங்களவர்கள் என்றால், அவர்களுக்கு அதைப் பற்றிய விளக்கத்தையும் கதையையும் அங்கே நிற்கின்ற படைச்சிப்பாய் சொல்கிறார். தமிழர்கள் தங்களக்குள் எதையோ கதைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தக் கார் கூடிய கவர்ச்சியையோ மதிப்பையோ கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தக் காரை யாராவது புலம்பெயர் நாடுகளான மேற்குலகிலோ அல்லது தமிழ்நாட்டிலே இந்தக் காரை ஏலத்தில் விட்டால் பல கோடிகள் புரளும்.

ஆனால், அப்படி எந்த விபரீதமும் நிகழாமல் அந்தக் கார் 'கைவிடப்பட்ட வரலாற்றின் காட்சிப் பொருளாக' ஒரு கற்குவியலின் மேல் வைக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் வீடு என்று சொல்லப்படும் இரண்டு அறைகளைக் கொண்ட அந்தச் சிறிய வீட்டில் வேறு எந்தப் பொருட்களும் இல்லை. அருகிலிருக்கும் பதுங்கு குழியில் பிரபாகரன் அணிந்ததாகச் சொல்லப்படும் சீருடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்தியதாக மேசை, ஒரு சிறிய அலுமாரி, கதிரை ஒன்று, அவருக்கு விருப்பமானதாக கூறப்படும் ஒரு சிறுத்தையின் மிகப் பெரிய (சிறுத்தையின் உருவத்தின் அளவு) பொம்மை என்பனவும் அந்தப் பதுங்குகுழியில் உண்டு. அதைப் பார்க்கும்போது மெய்யான சிறுத்தை ஒன்று படுத்திருப்பதைப்போலவே தோன்றும்.

அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. வழமையான கிணறுகளை விட மிகப் பெரியது. தென்னந்தோப்பொன்றின் மத்தியிலிருக்கும் அந்த வீட்டின் முன்னே புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்றின் சிதைந்த உதிரிப்பாகங்கள் சிலவும் உண்டு. புலிகள் இருந்தபோதே அந்த உலங்குவானூர்தியின் எச்சங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தனவா? அல்லது புலிகள் இல்லாத காலத்தில் படையினர் அவற்றை வேறு எங்கோ இருந்து எடுத்து வந்து அங்கே பார்வையாளரின் கவனத்துக்காக வைத்துள்ளனரா என்று தெரியவில்லை.

இந்த வீடும் பதுங்கு குழியும் இருக்கும் இடத்துக்கு அண்மையில்தான் நாங்கள் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தோம். அதற்கு முன்பு, அநேகமாக 2008 டிசெம்பரில் இடம்பெயர்ந்திருந்த எங்கள் நண்பர் ஒருவரின் குடும்பத்தைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்தோம். ஆட்கள் அதிகமில்லாத ஒரு பாதையின் வழியே வந்தபோது ஒரு சிறிய வெட்டைப்பகுதியில் குண்டு வீச்சு நடந்திருந்தது. அது ஒரு மாலை நேரம். மழை பெய்து ஈரம் காயாத நாள். செம்பாட்டு மண் இரண்டு பெருங்குவியலாக சிதறிக் கிடந்தது. இரண்டு பெரிய குழிகள். குண்டு வீச்சு விமானங்களின் இலக்கு முற்றாகவே தவறிவிட்டது. இலக்குத் தவறினால் மீண்டும் அந்த இலக்கைத் தாக்குவதற்கு மீண்டும் எந்த நேரத்திலும் விமானங்கள் வரலாம். நாங்கள் அந்த இடத்துக்கு வந்தபோது அங்கே மயான அமைதி. ஆள் நடமாட்டமே இல்லை. அந்த வாரத்திலோ அல்லது மிகக் கிட்டவான சில நாட்களின் முன்னரோதான் அந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடும். தொடர்ந்து அந்த வழியால் பயணிக்கலாம் போலத் தோன்றவில்லை. ஆனால், அந்தப் பக்கமாகச் சென்றால்தான் நாங்கள் தேடி வரும் நண்பரைப் பார்க்க முடியும் என்று வழிகேட்ட போது சொல்லியிருந்தார்கள். எனவே அங்கே நின்று அப்பால் செல்ல முடியுமா என்று ஆராய்ந்தோம்.

அதற்கிடையில் அந்தப் பகுதியிலிருந்து திடீரென ஒரு இயக்கப் போராளி வந்து, 'ஏன் நிக்கிறீங்கள்? எங்க போறீங்கள்? எங்கையிருந்து வாறீங்கள்?' என்று பல கேள்விகளைக் கேட்டார். நான் விவரத்தைச் சொன்னேன். அவர் எங்களைத் திரும்பிப் போகச் சொன்னார். அந்தப் பாதை தடுக்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து நாங்கள் அங்கே நிற்பது பாதுகாப்பானதல்ல என்றும் கூறினார். எங்களுடைய உள்ளுணர்வும் அப்படியே சொன்னது. எனவே நாங்கள் மேற்கொண்டு அங்கே தாமதிக்கவில்லை. வந்த வழியே திரும்பிச் சென்றோம்.

வழியில் எங்களுக்கு அறிமுகமான அந்த ஊர்வாசி ஒருவர் எதிர்ப்பட்டார். நாங்கள் வரும் வழியைப் பார்த்த அவருக்கு ஆச்சரியம். 'எங்கே இருந்து வாறீங்கள்? எங்க போறீங்கள்?' என்று கேட்டார்.

'நண்பர் ஒருவரின் குடும்பத்தைத் தேடுகிறம். கண்ணகை நகர்ப்பக்கமாகத்தான் அவர் இருக்கிறார்' என்றேன்.

'அதுக்கு ஏன் உதுக்குள்ளால் போனீங்கள்? அது இம்ரான் பாண்டியன் படையணியின்ரை பேஸ். (இந்தப் படையணியே பிரபாகரனின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நெருக்கமாக இருந்தது). அங்கால ஒருதரும் போறேல்ல. போகவும் விடமாட்டடினம். அதை இலக்கு வைச்சுத்தான் கிட்டடியிலயும் குண்டு வீச்சு நடந்தது' என்றார் நண்பர்.

நிலைமையின் தாற்பரியம் விளங்கியது. நாங்கள் வழியில் வந்த அந்த ஊர்வாசிக்கு நன்றியைச் சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றோம்.

அடுத்த சில வாரங்களில் நாங்களும் அந்தப் பகுதிக்கு – கண்ணகை நகருக்கு இடம்பெயர்ந்து வந்தோம். அதற்கு முன்னர் தருமபுரத்தில் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தோம். தருமபுரத்திலிருந்த போது 'நிஸா'ப் புயல் அடித்தது. இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டிக் கொண்டிருந்தது அடைமழை. நாங்களிருந்தது ஒரு தென்னங்தோப்பில். புயற்காலத்தில் எவன்தான் அப்படியொரு தென்னந்தோப்பில் குடியிருப்பான்? ஓயாத காற்று, விசர் பிடித்து உச்சத்தில் பேயாய் ஆடியது. தென்னைகள் படைகளை விட, எறிகணைகளை விடப் பயங்காட்டிக் கொண்டிருந்தன. பெய்த மழையினால் கல்மடுக்குளம் நிரம்பி, வாய்க்கால்களால், தெருக்களால், வீடுகளின் முற்றத்தால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. சனங்கள் ஆலாய்ப்பறந்தார்கள். எங்களின் தற்காலிகக் குடிசை மாளிகையும் மழையில் தெக்கித் தெம்பி விட்டது. கட்டில் மண்ணில் புதையுண்டதால் அதன் மேல் படுத்திருந்த மகன் வெள்ளத்துக்குள் வீழ்ந்தான். வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. நான் முடிந்த மட்டும் மண்ணினால் தடுத்துப் பார்த்தேன். முடியவில்லை. வெள்ளத்துக்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிந்தபோது, வந்தன எறிகணைகள்.

அது 2009 ஜனவரி 13 ஆம் திகதி. தைப்பொங்கலுக்கு முதல் நாள். நாங்கள் இருந்த அந்தத் தென்னந்தோப்புக்கு அண்மையில் - ஒரு 20 மீற்றர் தொலைவில் (மிக அருகில்) நான்கு எறிகணைகள் வந்து வெடித்தன. நான்கு பேர் அதில் கொல்லப்பட்டார்கள். வேறு சிலருக்குக் காயம். தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் மருத்துவமனை இருந்தது. சடலங்களையும் காயப்பட்டவர்களையும் அங்கே எடுத்துப் போனார்கள். மருத்துவமனை இருந்தால் என்ன விட்டால் என்ன எறிகணை வரும் என்ற மாதிரியான ஒரு சேதியை அந்தத் தாக்குதல் மேலும் சொன்னது – உணர்த்தியது.

அது நண்பகல் கழியும் நேரம். சனங்கள் அலறியடித்துக்கொண்டு சிதறியோடினார்கள். நான் ஒரு மணித்தியாலயத்துக்குப் பிறகே என்னுடைய மனைவியைக்கண்டு பிடித்தேன். வாய்க்காலுக்கு எதிர்ப் பக்கமாக இன்னொரு வளவில் நின்று கொண்டு, 'இஞ்சயிருந்து வெளிக்கிடுவம். இனிமேல் நிக்கேலாது. அவனுக்கு விசர் பிடிச்சிட்டுது.... இனியென்னவெல்லாம் நடக்கப்போகுதோ..' என்று புலம்பினாள்.

அன்று மாலையே அங்கிருந்து வெளியேறி கண்ணகை நகருக்குச் சென்றோம். கண்ணகை நகரில் இருந்தவர்களில் அநேகரை எங்களுக்குத் தெரியும். எப்படியாவது ஒரு வீடு அல்லது குறைந்த பட்சம் ஒதுங்கிக் கொள்வதற்கு சிறிய ஏற்பாடு அல்லது வசதிகள் ஏதாவது கிடைக்கும் என நம்பினேன். ஆனால், நாங்கள் போனபோது, அங்கே வளவுகள், வீடுகள் எல்லாமே நிரம்பி விட்டன. அந்தளவுக்கு நாலா திசையிலிருந்தும் ஏராளம் சனங்கள் வந்து குவிந்திருந்தார்கள். என்றாலும் எங்களுக்கும் இடம் கிடைத்தது. அதில் நாங்கள் தனியாக ஒரு சிறிய வீட்டினை அமைத்தோம். மழை பெய்து கொண்டிருந்தது. அந்தச் சிறிய வீட்டில் ஒரே ஒரு அறை. சமையல், படுக்கை, பொருட்களை வைப்பது, விருந்தினரை வரவேற்பது... இப்படி எல்லாமே அதற்குள்தான்.

வேலை ஒன்றும் கிடையாது. வெளியே போவதென்றால் பொருட்களை வாங்குவதற்கும் சொந்த பந்தங்களைத் தேடிப்பார்ப்பதற்கும் மட்டும்தான். கண்ணகை நகரில் இயக்கத்தினால் ஆட்சேர்க்கவும் முடியவில்லை. அவர்கள் கடவுளுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு பயல் பிடிபடவில்லை. அதனால் ஆட்பிடி தொடர்பான பதற்றம் பெரிய அளவில் அங்கில்லை.

சனங்கள் தொடர்ந்து வந்தபடியே இருந்தனர். வந்தவர்களில் பலர் வேறு இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். நாங்களும் அங்கிருப்பது நல்லதா அல்லது அங்கிருந்து வெளியேறிச் செல்வதா என்று குழம்பிக் கொண்டிருந்தோம். படைகள் முன்னகர்ந்து வந்தபடியே இருந்தன. தாக்குதல் உக்கிரமடைந்திருந்தது.

'விசுவமடுவிலிருந்தும் வெளிக்கிடுவதா?' என்று உள் மனம் கேட்டது. ஒரு காலத்தில் (அநேகமாக அது 1970 கள் 80 கள் என நினைக்கிறேன்) 'வெளிக்கிடடி விசுவமடுவுக்கு' என்றொரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது. விசுவமடு என்ற வளமான புதிய விவசாயக் குடியேற்றத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சனங்களை அழைத்துப் போகும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருந்த நாடகம் அது. பிறகு நாடகத்தையும் விடச் செழிப்பாகவும் பிரபலமாகவும் மாறியிருந்தது விசுவமடு. விசுவமடுவுக்கென்றே அச்சுவேலி, நெல்லியடி, பருத்தித்துறை, மூளாய், காரைநகர், குறிகட்டுவான் போன்ற இடங்களிலிருந்து பஸ்சும் தட்டிவான்களும் ஓடின. வாழைக்குலையும் செத்தல் மிளகாய்ச் சாக்குகளுமாக தட்டிவான்கள் சந்தைகளை நோக்கிப் பறந்தன. விசுவமடுவிலிருந்து கொழும்புக்கே லொறிகள் ஓடியதுமுண்டு. வெங்காயம், செத்தல் மிளகாய், வாழைக்குலை என பலதையும் வாங்குவதற்காக தென்பகுதியிலிருந்து சிங்களவர்கள் நேரிலே வந்தார்கள். ஆயிரக்கணக்கான மாடுகள் பெருகி, லொறிக்கணக்காக யாழ்ப்பாணத்துக்கு எருப்போனது. இப்பிடி எல்லாம் இருந்தால் ஊர் செழிப்பாகத்தானே இருக்கும்.

இயக்கங்களின் காலத்தில் விசுவமடுவில்தான் அதிகமான இயக்கபெடியள் சாப்பிடும் நல்ல சாப்பாட்டுக்கடை இருந்தது. 'வாணி விலாஸ்' என்று. இராணுவ முகாமுக்குத் தண்ணிகாட்டி ஆனையிறவுக்குப் பின்பக்கமாக உள்ள கடற்களப்பைக் கடந்து சுண்டிக்குளம் பகுதியால் வந்து விசுவமடுவில் ஏறினால், வாணி விலாஸ்தான் வரவேற்கும். நல்ல பசுப்பால் அல்லது பசுப்பால் ரீ தருவார்கள். பெரிய கப்பல் வாழைப்பழங்கள் மிக மலிவாகக் கிடைக்கும்.

புலிகளின் காலத்திலும் விசுவமடு செழிப்பாகத்தானிருந்தது. நல்லதொரு நூல்நிலையத்தை புலிகள் அங்கே வைத்திருந்தார்கள். சாரதி பயிற்சிக் கல்லூரி, பெரிய விவசாயப் பண்ணைகள், தமிழீழப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமைப் பணிமனை, லொறி (பாரவூர்தி) களின் தலைமையகம், வணிக மையங்கள், புலிகளின் சர்வதேச செயலகத்தின் மையம் எனப் பலவும் விசுவமடுவில்தான் இருந்தன. அந்த நாட்களில் சற்றுப் பெரிய திரையில் அமைக்கப்பட்டிருந்த தியேட்டர் ஒன்றும் கூட அங்கேதானிருந்தது. அதில் அநேகமாக எம்.ஜி. ஆரின் படங்களே ஓடும். இதெல்லாம் பழைய கதைகள் அல்ல. முன்னெப்போதோ நடந்தவையும் அல்ல. 1997, 98 தொடக்கம் 2009 வரையில் நடந்தவை. விசுவமடுவில் ஒரு துயிலுமில்லமும் இருந்தது. அதில் ஜெயசிக்குறு சமரில் பலியாகிய போராளிகளே அதிகமாக இடப்பட்டிருந்தார்கள். மட்டக்களப்பு, அம்பாறையைச் சேர்ந்தவர்களே அதிகம். மாவீரர்நாள் காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்தும் அம்பாறையிலிருந்தும் ஆயிரக்காணக்கான தாய்மாரும் தந்தையரும் வந்து கண்ணீர் மல்லக் கசிந்துருகுவார்கள்.

இன்று எல்லாமே மாறி விட்டன. இப்போதும் யாரோ சொல்லக் கூடும், “அபி யமு விசுவமடுவட“ ('வெளிக்கிடடி விசுவமடுவுக்கு') என. ஆனால் அது விசுவமடுவில் வாழ்வதற்கோ விவசாயம் செய்வதற்கோ அல்ல. பிரபாகரனின் பதுங்குகுழியையும் அவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அந்தச் சிறிய வீட்டையும் பார்ப்பதற்காகவே.

00

Wednesday, October 31, 2012

லெ. முருகபூபதி - மறக்க முடியாதவர்களின் இருப்பிடம்















நேகமாக கவனத்தைக் கோருவதும் குவிப்பதும் விலகல்களும்  வேறுபடல்களும் ஆச்சரியங்களுமே. குறிப்பாக எழுத்தாளர்கள் இந்த வகை விலகல்களாகவும் ஆச்சரியங்களாகவும் இருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனத்தைக் குவிப்பவர்களாகவும் அவர்களால் பல மையங்கள் கவனத்துக்குரியனவாகவும் அமைகின்றன.

கவனத்தைக் குவிக்கும் விலகல்களில் ஒருவராக லெ. முருகபூபதியும் இருக்கிறார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு, எழுத்து என்பவற்றுக்கு அப்பால், இலக்கியத்தின் வழியாக அவர் கொண்டிருக்கும் அக்கறைகளும் செயற்பாடுகளும் இந்த விலகலை அடர்த்தியாக்குகின்றன. எனவேதான் முருகபூபதி கூடிய கவனத்தைப் பெறுகிறார்.

தன்னுடைய அக்கறைகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் முருகபூபதி இயங்குகின்ற வேகமும் நுட்பமும் அசாதாரணமானது. துடிப்பும் ஒருங்கு குவிந்த கவனமும் அவரையும் அவருடைய செயற்பாடுகளையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர் சோர்வின்றி உழைக்கிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிறரையும் இயக்குகிறார். பிறரும் இயங்கத்தூண்டுகிறார். இதில் பெரும்பாலானவை பொதுப்பணிகள். உதவிப்பணிகள். ஊக்கப்பணிகள். மறு பக்கத்தில் “எழுதுங்கள் - செயற்படுங்கள்“ என்று ஊக்கப்படுத்தும் காரியங்கள்.

‘எவ்வளவு முரண்பாடு உள்ளவர்களும் பூபதியை முறித்துக் கொண்டு எதிர்நிலைக்குப் போக இயலாது. அவர் எப்பவும் எதையாவது செய்து கொண்டேயிருப்பார். மற்றவர்களையும் ஊக்குவிப்பார். அவருக்காகவே, அவருடைய முயற்சிகளுக்காகவே நாங்களும் எதையாவது செய்யத்தான் வேணும். தன்னுடைய சக்தியை எல்லாம் குவித்து அவர் செய்து வருகின்ற பணிகளை நினைத்தால் ஆச்சரியமே வரும்’ என்று பூபதியைப் பற்றி அவருடைய நண்பர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். கிருஷ்ணமூர்த்தியும் ஒரு எழுத்தாளரே. பூபதிக்கு அண்மையில் அவுஸ்ரேலியாவிற்தான் இருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி சொல்வதைப்போல பூபதி ஒரு அசாத்தியமான மனிதர்தான். தனியொருவராக நின்று நிறுவனம்போலச் செயற்படும் சில ஆளுமைகளில் அவரும் ஒருவர். அதுதான் அவருடைய பலமும் அடையாளமும் சிறப்பும்.

பூபதிக்கும் எல்லோரையும் போல இரண்டு கண்களே உள்ளன. ஒன்று இலக்கியமும் எழுத்தும். மற்றது உதவிப் பணியும் பின்தங்கிய நிலையிலிருப்போருக்கான தொண்டும்.

இந்த இரண்டாவது கண் விசயத்தில் பூபதி படைப்பாளிகளிடத்தில் ஒரு முன்னோடியே. வேறு சில படைப்பாளிகள் பூபதியைப் போலப் பொதுப்பணிகளைச் செய்து வந்தாலும் அவை ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட  விதத்தில் தொடர்ச்சியைக் கொண்டவையல்ல. நடேசன் பூபதியின் வழியில் “வானவில்“ என்றொரு உதவித்திட்டத்தை இப்போது ஆரம்பித்து நடத்தி வருகிறார். சாந்தி ரமேஸ் “நேசக்கரம்“ அமைப்பின் மூலமாக உதவி வருகிறார். சஞ்சயன் செல்வமாணிக்கம் பலரையும் உதவிக்கு தூண்டி அவர்களை நன்செய் பரப்பில் ஈடுபடுத்துகிறார். இதைவிட தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா என இன்னும் சிலர் உதவிப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படி இன்னும் சிலர் உண்டு. ஆனால், எல்லாவற்றுக்கும் சிகரம் பூபதியே. அவருடைய பணிகளே!!

கடந்த இருபது ஆண்டுக்கும் மேலாக தன்னோடு வேறு பல நண்பர்களையும் இணைத்துக்கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வறிய மாணவர்களுடைய கல்விக்காக அவர் உதவி வருகிறார். இதில் ஏறக்குறைய 600 க்கும் மேலான மாணவர்கள் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பயன்பெறுகிறார்கள்.

இலங்கையில் பிறந்து, அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முருகபூபதிக்கு உலகமெங்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் நண்பர்களைக் கொண்டாடும் விதம் அப்படி. அது அவருடைய நண்பர் வட்டத்தை பெருப்பித்துக் கொண்டேயிருக்கிறது. நண்பர்களை அவர் தேடிச் செல்கிறார். அவர்களுக்கிடையில் இருக்கும் பேதங்களைத் தவிர்த்து விட்டு நட்பைக் கொண்டாடுகிறார். அந்த நட்பைப் பராமரிக்கிறார். அந்த நட்பின் ஊடாக அந்த நண்பர்களையும் தன்னுடைய பொது வெளியை நோக்கி, அந்தப் பொது வெளியின் செயற்களத்தை நோக்கி, பணிப் பிராரந்தியத்தை நோக்கி அழைத்து வருகிறார். இது ஒரு வித்தியாசமான நடத்தை. நாம் கவனங்கொள்ள வேண்டிய நடத்தை. கவனத்திலெடுக்க வேண்டிய முன்மாதிரிகளில் ஒன்று.

முருகபூபதியினால் அப்படிப் பொது வெளிக்கும் பொதுச் செயற்களத்துக்கும் அழைத்து வரப்பட்ட பல நண்பர்களின் பங்களிப்பு இன்று இலங்கையில் பாதிக்கப்பட்ட பலருடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதி மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் பூபதியின் அக்கறைகளும் செயற்பாடுகளும் பெரும் பயன். நன்கு ஒழுங்கமைப்பட்ட திட்டமிடலில் இந்த உதவிகளும் உதவிகளின் மூலமான விருத்தியும் நடைபெறுகின்றன. கிளிநொச்சியில் என்னுடைய மகன் படிக்கின்ற பாடசாலைக்கும் பூபதியின் நண்பர்களுடைய உதவிகள் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணம் கொக்குவிலிலும் திருகோணமலையிலும் இப்படி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி மையங்கள் இயங்குகின்றன. கொக்குவிலில் இயங்குகின்ற மையத்துக்கு நான் போயிருக்கிறேன். சிறுவர் அபிவிருத்திக்கான நிலையம் என்ற பெயரில் அது இயங்குகிறது. (இப்பொழுது அது யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் அதை இடம் மாற்றியிருக்கிறார்கள்). அங்கே எந்தப் பிரமாண்டமான நிர்வாக நடவடிக்கைகளும் கிடையாது. அதிக வளங்களைக் குவித்து நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் தன்மை இல்லை. மிக மட்டான, அடிப்படை வசதிகளே குறைந்த நிலையில் அந்த உதவி மையம் இயங்குகின்றது. இரண்டு பணியாளர்களும் ஒரு கணினியும் ஒரு நிர்வாகியும் மட்டுமே அங்கே உண்டு. வழமையான, தொண்டு நிறுவனங்களின் நிர்வாக அமைப்பின்  செழிப்பை அங்கே காண முடியவில்லை. அங்கே இருக்கின்ற பாலதயானந்தன் என்பவர், தன்னைப் போல அந்த அலுவலகத்தையும் அமைதியாகவும் எளிமையாகவும் நல்ல முறையிலும் நிர்வகிக்கிறார்.

வெளியாரின் அல்லது புலம்பெயர்ந்த மக்களின் நிதிப் பங்களிப்பில் அல்லது அவர்களுடைய உதவியில் இயங்குகின்ற எந்த அமைப்பும் அல்லது நிறுவனமும் இப்படி மட்டுமட்டான வளங்களுடன் இருப்பதில்லை. அவற்றில் ஒரு மினுக்கமும் ஆடம்பரத்தன்மையும் இருக்கும். டொலர் ரூபாயாக ஆகும்போது ஏற்படுகின்ற மினுக்கம் அது. அல்லது பிராங்கோ மார்க்கோ நொஸ்க்கோ ரூபாயாகும்போது உருவாகின்ற வீக்கம். ஆனால், முருகபூபதியாலும் மற்றும் நண்பர்களாலும் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் இந்த அமைப்பு இதற்கு மாறாகவே இருக்கிறது. காசை வீணாக்காத கரிசனை. கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தை பெறுமதியாகச் செலவழிக்க வேணும் என்ற அக்கறை. அந்தச் செலவு உண்மையில் செலவே அல்ல. அது எதிர்கால மனிதர்களுக்கான பயன் என்ற புரிதலுடன் செய்யப்படும் எளிமையான முதலீடு.  இதுவும் இந்த விலகல்களில் - வேறுபடல்களில் ஒன்று.

பூபதியின் இந்த அமைப்பு பலருடைய கூட்டு முயற்சியின், பலருடைய சிந்தனையின் வடிவம் என்றாலும் அதை “பூபதியின் அமைப்பு“ என்றே அவருடைய நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு பூபதியின் நல்நோக்கத்தை அவர்கள் புரிந்திருக்கின்றனர். அவர்கள்,  பூபதியின் மீது மிகப் பெரிய மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். ஒரு நல்ல மனிதரில் நம்பிக்கை கொண்ட பலருடைய கூட்டுச் செயற்பாட்டின் வெற்றியாகவும் அடையாளமாகவுமே அதைப் பார்க்கிறேன்.

இப்பொழுது இந்த அமைப்பு தன்னுடைய சேவைப் பரப்பையும் ஆழத்தையும் மேலும் விரிவாக்கவே சிந்திக்கிறது. அதற்கே முனைகிறது. புலம்பெயர்ந்து வௌவேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற நண்பர்பகளை எப்படியோ ஒருங்கிணைத்து (அந்த ஒருங்கிணைப்பின் கதையை முருகபூபதிதான் சொல்ல வேண்டும்) போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுடைய கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொதுத்துறை சார்ந்தவர்களை இணைத்து தங்களுடைய சேவையை ஆற்றிவருகின்றனர் இந்த அமைப்பினர். இந்த அமைப்பின் ஆண்டு நிறைவொன்றையொட்டி முருகபூபதி 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் திரும்பும் புலம்பெயர்வாசிகள் இங்கே கோவில்கள், நண்பர் மற்றும் உறவினர் வீடுகள், அங்கே நடக்கும் கொண்டாட்டங்கள் என்றமாதிரியான ஒரு சுற்று வட்டத்தில்தான் தங்களுடைய நிகழ்ச்சி நிரலையும் நிகழ்ச்சிப் பரப்பையும் வைத்துக் கொள்வார்கள். சிலர் மட்டும் விலகலாக எங்காவது வயோதிபர் இல்லம், சிறுவர் இல்லங்கள் என்று இயங்குகின்ற நிறுவனங்களுக்குச் சென்று உதவுவார்கள். மற்றும்படி பொதுவாக தனிப்பட்ட பயணங்கள், கேளிக்கைகள், செலவுகள்தான். இன்னும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் காரைநகரில் இருக்கும் கசூரினா பீச்சுக்குப் போவார்கள். அல்லது “கள்“ அடிப்பார்கள்.

முருகபூபதி இதிலிருந்து வேறுபடுகிறார். அவருடைய “2010 ஜனவரி - யாழ்ப்பாணப் பயணம்“ பல விசயங்களை வேறுபடுத்திக் காட்டியது. நான் நினைக்கிறேன், நான்கு நாட்கள்தான் முருகபூபதி யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றிருப்பார் என்று. அந்த நான்கு நாட்களிலும் அவர் இந்த உதவும் அமைப்பின் செயற்பாடுகளை நேரில் கவனித்தார். இந்த அமைப்பின் மூலம் பயன்பெறும் பிள்ளைகளையும் பெற்றோரையும் சம்மந்தப்பட்ட அதிபர், ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தைப் பொங்கல் நாளன்று, ஒரு சந்திப்பை நடத்தினார். அந்தச் சந்திப்பில் இந்த அமைப்பின் மையவாளர்களான புலம்பெயர் நாடுகளின் பிரதிநிதிகளையும் இணைத்திருந்தார்.

அதற்கு முதல் யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் நடந்த போர்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கிலும் கலந்து கொண்டார். அந்த அரங்கில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விவாதத்துக்குரிய விசயங்களைப் பற்றி ஒரு படைப்பாளியும் சமூகச் செயற்பாட்டாளரும் என்ற வகையில் பூபதியும் தன்னுடைய கவனங்களைச் செலுத்தியிருக்கக்கூடும்.

இதேவேளை பம்பரமாகச் சுழன்ற அந்த நான்கு நாட்களுக்குள்ளும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் யாழ்ப்பாணத்தில் நடத்தினார். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தன், நோயல் நடேசன், சித்தாந்தன், இராஜேஸ்கண்ணா உட்பட வேறு சிலருடன் நானும் கலந்து கொண்டேன்.

இவற்றினூடே அவர் தன்னுடைய இலக்கிய நண்பர்களையும் சந்தித்தார். அதற்காக அவர் அதிக சிரமமெடுத்துக் கொண்டு தேடிச் சென்றமை  முக்கியமானது. குறிப்பாக சுதந்திராஜா, அ.யேசுராசா, சாந்தன்  போன்றவர்களிடம். தாயகம் குழுவினரையும் சந்திப்பதற்கு ஆர்வமாக இருந்தார். சட்டநாதனிடம் போக முயன்றபோதும் இறுதியில் ஏனோ பொருத்தமின்னை காரணமாக அது சாத்தியப்படவில்லை என்று கவலைப்பட்டார். அதிலும் மல்லிகையில் மிக நீண்டகாலம் பணியாற்றிய சந்திரசேகரத்தைத் தேடிக் கொண்டு அவருடைய வீடு இருக்கும் நீர்வேலிக்குப் போய் அவரைப் பார்த்துப் பேசியது முக்கியமான ஒன்று. பழகிய ஒருவரைத் தேடிப்போவதென்தில் என்ன புதினம் இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றலாம்.

இங்கே பூபதி தேடிச் சென்ற சந்திரசேகரம் ஒரு சாதாரண அச்சுக் கோர்ப்பாளர். இன்று அச்சுக்கோர்க்கும் தொழிலும் இல்லை. கலையும் இல்லை என்ற நிலை வந்து விட்டது. இன்றைய விளக்கத்தின் படி அன்றைய கணினி வடிவமைப்பாளர் என்று சந்திரசேகரத்தைச் சொல்லலாம். அவர் மல்லிகையின் அச்சுக் கோர்ப்பாளராக ஏறக்குறைய இருபது வருசத்துக்கு மேலாக வேலை செய்தவர்.

ஆனால் சந்திரசேகரம் மல்லிகையில் முக்கியமானவர். மல்லிகையின் வளர்ச்சியில் முக்கியமானவர். அவர் மல்லிகையின் அச்சுக் கோப்பாளராக மட்டும் இருக்கவில்லை. அதற்கப்பால், எங்கே எந்தப் படைப்பாளியைக் கண்டாலும் மல்லிகைக்காக எழுதும்படி கேட்கும் அளவுக்கு மல்லிகையுடன் தன்னை இணைத்துக் கொண்டவர்.  மல்லிகை அலுவலகத்துக்கு வருவோரை வரவேற்றுப் பேசுவதும் பதில் சொல்வதும் சந்திரசேகரமே. அவரே அனைத்தையும் பார்ப்பார். அனைத்தைப் பற்றியும் முடிவெடுப்பார். டொமினிக் ஜீவா இல்லாத வேளைகளில் சந்திரகேசரமே மல்லிகையின் “சீவ் எடிற்றர்“. ஏ.ஜே. கனகரட்ணா கூட சந்திரசேகரத்தையே “சீவ்எடிற்றர்  ஒவ் மல்லிகை“ என்று சொல்வார். எனவே அவரை ஒரு சாதாரண அச்சுக்கோப்பாளர் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அழகும் அல்ல. மல்லிகைக்காக சந்திரசேகரம் ஊழியம் செய்தார் என்றே சொல்லலாம்.

ஜீவா மல்லிகை அலுவலகத்தில் இருந்தாலென்ன இல்லாது விட்டாலென்ன மல்லிகை அலுவலகத்தில் சந்திரசேகரம் இருப்பார். வேலைகள் நடக்கும். ஆட்கள் வந்து போவார்கள். ஜீவாவுடன் பேசாதவர்கள், முரண்பாடு கொண்டவர்கள் கூட சந்திரசேகரத்துடன் நட்பைப் பாராட்டினார்கள். சந்திரசேகரத்துக்காகவே மல்லிகைக்கு வந்து போவோரும் உண்டு. அதனால், சந்திரசேகரத்துக்காகவே மல்லிகையில் எழுதிய பலர் இருக்கிறார்கள்.

இதனால் மல்லிகைக்குப் போகிற அத்தனை பேருடனும் சந்திரசேகரத்திற்கு நட்பு. சந்திரசேகரத்தை மல்லிகையின் எந்தப் படைப்பாளியும் மறக்க முடியாது. மல்லிகையுடன் நெருக்கமான வாசகர்களும் மறக்கேலாது.

ஆனால், இப்பொழுது யாரும்  சந்திரசேகரத்தைத் தேடிப் போய்ப்பார்ப்பது குறைவு. யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை அலுவலகத்தை ஜீவா, கொழும்புக்கு இடம் மாற்றிய பிறகு, சந்திரசேகரம் சில காலங்கள் ஒரு தொடர்புக்காக யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை அலுவலகத்திற்குப் போய் வந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாண அலுவலகத்துக்கு வரும் படைப்பாளிகளுடன் பேசுவதும் மல்லைகைக்கு படைப்புகளைச் சேகரிப்பதும் சந்திரசேகரத்தின் பணி. பின்னர் அதுவும் நின்று விட்டது. சந்திரசேகரமும் வீட்டோடு நின்று விட்டார். அப்படி இருந்த சந்திரசேகரம் இப்போது முதுமையில் தன்னுடைய ஊரோடு - நீர்வேலி, மாதுவனில் இருக்கிறார்.

ஒரு காலத்தில் சந்திரசேகரத்துடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் இப்போது அவரைச் சந்திப்பதோ விசாரிப்பதோ குறைவென்றாலும்  அவர், எல்லோரைப் பற்றியும் விசாரிப்பார். எவருடைய அன்பையும் அவர் மறக்கவில்லை.

பூபதி சந்திரகேசரத்தைப் பார்க்க விரும்பினார். ஆகையால் நீர்வேலிக்குப்   போனோம். முருகபூபதியைக் கண்டதும் சந்திரசேகரத்துக்கு பெருமகிழ்ச்சி. பெருங்கொண்டாட்டம். குழந்தைக் குதூகலத்தோடு வரவேற்றார். முருகுபூபதிக்கும் அந்தச் சந்திப்பு நிறைவான மகிழ்ச்சியே.



கடந்த காலத்தில் நடந்த பல விசயங்களை இருவரும் நினைவுகூர்ந்தார்கள். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. சீராகத் தொடர்பு கொண்டதுமி்ல்லை. ஆனால் இருவரும் ஆளையாள் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த நிலையில்  இப்போது சந்தித்துக் கொண்டதில் இருவருக்குமே பெரும் மகிழ்ச்சி.

கொழும்பிலிருந்து கொண்டு வந்த  மல்லிகை 45 ஆவது மலர் உட்பட சந்திரசேகரத்துக்கென்று எடுத்து வந்த பொருட்களைக் கொடுத்தார் பூபதி. எல்லோருமாகச் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டோம். சந்திரகேசரம் வீட்டிற் கிடைத்த மாலைத் தேனீரும் உபசரிப்பும் நன்றாகவே இருந்தன.

அப்படியே இரவு சுதுமலையில் உள்ள சாந்தனின் வீட்டுசக்குச் சென்றோம்.  “சுதந்திரராஜா நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அதைவிட அவர் தனிமையில் இருக்கிறார். உதவிகள் கிடையாது. திருமணம் செய்யவில்லை. இப்பொழுது முதுமையில், மனங்குழம்பிய நிலையில் இருக்கிறார்“ என்றார் சாந்தன். அவரை அடிக்கடி சென்று சாந்தன் பார்ப்பதால் அந்தத் தகவலை சாந்தனின் மூலமாக அறிந்த பூபதி என்னையும் அழைத்துக் கொண்டு மறுநாள் சுதந்திரராஜாவிடம் போனார். கூடவே அவுஸ்ரேலியாவில் இருந்து பூபதியுடன் வந்திருந்த நோயல் நடேசனும் வந்திருந்தார். நடேசனுடன் இந்த நாட்களில்தான் அறிமுகமாகினேன். அவர் சனங்களின் நிலைமையைப் பற்றி அறிவதிலேயே அக்கறையாக இருந்தார். சனங்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற சிந்தனையையே முதன்மைப்படுத்தினார்.

சுதந்திரராஜாவின் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றவர், பாலதயாளனின் உறவினரான ஒரு இளைஞர். இருண்டு,  பூஞ்சணவன் படர்ந்த வீட்டில் தனியாளாக இருந்தார் சுதந்திரராஜா. மிகச் சிரமப்பட்டு, இறுதியில் முருகபூபதியை அடையாளங் கண்டு கொண்டார். ஆனாலும் நினைவுகள் தெளிவாக இல்லை. சிந்தனையும் குழம்பி விட்டது. முடிந்த அளவுக்குத் தன்னுடைய நிலைமையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னார். தான் வெளியிட்டிருந்த சிறுகதைத் தொகுதியொன்றைக் கொடுத்தார்.

முருகபூபதி சுதந்திரராஜாவுக்கு காசும் சில பொருட்களும் கொடுத்தபோது அதை வாங்குவதற்கு சுதந்திரராஜா மறுத்து விட்டார். என்றபோதும் தன்னுடைய அன்பை முன்னிலைப்படுத்தி முருகபூபதி அவற்றை வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்திக் கேட்டபோது மறுப்புச் சொல்லாமல் சுதந்திரராஜா அவற்றை வாங்கிக் கொண்டார்.

இந்தப் பயணங்கள், சந்திப்புகளின் போது எங்கள் வீட்டுக்கு, சித்தாந்தன் வீட்டுக்கு என்று செல்லக்கூடிய இடங்களுக்கு அந்த அவவசரத்தினூடேயும் முருகபூபதி வந்து போனார். வன்னி நிலவரங்களைக் கேட்டார். அகதி வாழ்க்கை, அகதி நிலையின் துயரங்களைப் பற்றி எல்லாம் பேசினோம். “எல்லாவற்றுக்காகவும் கவலைப்படவேண்டிய ஒரு காலம் இது“ என்று  சொல்லித் துக்கப்பட்டார் பூபதி.

மேலும், இந்தப் பயணத்தின் போது இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய இலக்கிய முயற்சிகள் பற்றியும் கதைத்தோம். எனினும் நேர அவகாசம் இல்லாத காரணத்தால் அதுபற்றி எதையும் திட்டமிட முடியவில்லை. என்றாலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகத்தமிழ் மாநாட்டையொட்டி குறிப்பிடத்தக்க வெளியீடுகளைக் கொண்டுவந்தால் நல்லது என்று பேசினோம்.

இந்தப் பயணத்தின் நிறைவாக நல்லூர் கோவிலில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. செங்கை ஆழியான் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நோயல் நடேசன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், முருகபூபதி உள்ளிட்ட புலம் பெயர் எழுத்தாளர்களும் யாழ்ப்பாணத்தின் கவிஞர்கள், படைப்பாளிகளும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதரசிங்கும் கலந்து கொண்டனர்.

ஈழத்தமிழ் இலக்கியத்தின் போக்குகள், அதன் தாக்கங்களைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் அது. கோட்பாட்டு ரீதியான விவாதங்களாக மேற்கிளம்பாமல்  தணிந்த நிலையில், கடந்த கால நிகழ்ச்சிப் போக்குகளைத் தொட்டதாக நடந்தது. அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களும் இடம் பெற்றன. ஆனால், எதுவும் தெளிவான முன்வைப்புகளாக அமையவில்லை. என்றாலும் போருக்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியச் சந்திப்புகளில் இந்தக் கலந்துரையாடல் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் முருகபூபதி நின்ற நாட்களில் அவர் ஒரு கணமேனும் சும்மா இருந்ததில்லை. நான் நினைக்கிறேன், அவர் முன்னர் ஒரு பத்திரிகையாளனாக இருந்த படியால் ( வீரகேசரியில் ) அதே சுறுசுறுப்போடும் துணிச்சலோடும் இப்படி எங்கேயும் பஞ்சி அலுப்பென்று இல்லாமல், ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கக் கூடியதாக இருந்ததென்று.

தன்னுடைய உடல் நிலைமையைப் பாராமல், மருந்துக் குளிசைகளைப் போட்டுக் கொண்டும் ஓய்வின்றித் திரிந்த  பூபதி  அசாத்தியமானவர்தான். இருக்கும் சிறிய அவகாசங்களுக்குள் தன்னுடைய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளால் தானும் இயங்கிக் கொண்டேயிருப்பதென்பது ஒரு கெட்டித்தனந்தான்.

எப்படியோ பூபதியினுடைய யாழ்ப்பாண வருகை சலனங்களையும் அலைகளையும் எழுப்பியிருக்கிறது. அந்த அலையின் இயக்கம் பல்வேறு அசைவுகளைக் கொண்டிருக்கிறது.

எனவே முருகபூபதி ஒரு விலகல்தான். என்றபடியால்தான் இன்று அவருடைய உதவிகளால், நூற்றுக் கணக்கான பிள்ளைகள் தொடர்ந்து படிக்கிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு என செயற்பரப்பு விரிந்து கொண்டே போகிறது. அதுபோல இன்னும்பலவும். இவ்வளவுக்கும் பூபதி வடக்குக் கிழக்கில் பிறந்தவரல்ல. அதாவது தமிழீழப் பரப்பில் பிறந்து வளர்ந்தவரல்ல. அவர் பிறந்து வளர்ந்தது நீர்கொழும்பில். ஆனால், அவருடைய தாத்தா கார்த்திகேசு யாழ்ப்பாணத்தின் மாதகலைச் சேர்ந்தவர். பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்து பொலிஸ் சார்ஜன்ட். தொழில் நிமித்தமாக நீர்கொழும்புக்குச் சென்றிருந்த கார்த்திகேசு தையலம்மாவின் அழகில் மயங்கி அவரை மணந்தார். வடக்குக் கிழக்குப் பகுதிக்கு வெளியே பிறந்து வாழ்ந்திருந்தாலும் பூபதி யினுடைய எண்ணங்கள் வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைக் குறித்தனவாகவே உள்ளன.

நாங்கள் அகதியாக இருந்த போது அந்த நாட்களில் அவர் அன்போடு வாங்கித்தந்த சைக்கிள்தான் இப்பொழுது முற்றத்தில் நிற்கிறது என்று சொல்கிறான் எங்களுடைய இளைய மகன்.

பூபதி இதைப்போல இன்னும் யார் யாருக்காகவோ எல்லாவற்றையுமே  செய்வதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பார்? அதுதான் பூபதி. அதுதான் அவருடைய சிறப்பும் இயல்பும் அடையாளமும் மனமும்.

00


Thursday, October 25, 2012

பந்து

















ந்தைப் போல ஒரு கெட்ட பொருள் இந்த உலகத்தில் உண்டா, சொல்லுங்கள்? அது எவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது எப்போதும். சொன்னபடி எதையும் கேட்பதில்லை.  சும்மா தட்டி விட்டால் போதும், அப்படியே உருண்டுகொண்டு எங்காவது தன் போக்கில் போய்விடும். எங்கே போக வேண்டும் எங்கே போகக் கூடாது என்று அது யோசிப்பதே இல்லை. பார்ப்பதற்கு ஏதோ அப்பாவித்தனமாக இருக்கின்றதே தவிர, அது ஒன்றும் அப்படி அப்பாவியல்ல.

சில வேளைகளில் அது குழந்தைகளின் குதூகலத்தோடு துள்ளிக் குதிக்கிறது. சிலவேளை அது சோம்பேறித்தனமாக மெதுவாக உருண்டு, ஊர்ந்து போகிறது. சிலவேளை அப்படியே துள்ளிக் குதித்துக் கொண்டு  எங்கோ சென்று ஒளித்துக் கொள்கிறது. சிலபோதுகளில் அது போகக் கூடாத இடத்துக்கே போய் விடுகிறது.

கால்கள் இல்லாமல் அது செய்கிற கூத்து இருக்கிறதே அதுதான் எப்போதுமே பிரச்சினை. நாங்கள் அகதி முகாமில் இருந்தபோது இந்தப் பந்தும் அங்கே இருந்தது. அகதிப் பந்துக்குச் சுதந்திரம் இருக்கக் கூடாது. ஆனால் அது கேட்குமா?

நாங்கள் அகதிகள் என்றாலும் இன்னொரு வகையில் கைதிகள்தான். வன்னி அகதிகளுக்கு அப்படியொரு சிறப்பு ஏற்பாடு. போர்க்களத்தில் இருந்து வந்தவர்களல்லவா! எனவே ஆயுத வாடை இருந்தாலும் என்று தனியாகத் தள்ளி ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

சுற்றிவர முட்கம்பி வேலி. வேலியைக் கடந்து யாரும் எங்கேயும் போகமுடியாது. முடியாதென்பது மட்டுமல்ல போகவே கூடாது. சட்டம். கட்டுப்பாடு. விதி. ஆகவே, அந்த முட்கம்பிப் பிராந்தியத்துக்குள்தான் வாழ்க்கை. அதற்குள்தான் சாப்பாடு. அதற்குள்ளேயே படுக்கை. அதற்குள்ளேதான் மலங்கழித்தல். அங்கேயே குளிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, போக்க முடியாத பொழுதுகள், கவலைகள், துக்கங்கள், எதிர்காலம் பற்றிய யோசனைகள்... சண்டை சச்சரவு, வசை, களவு, பொய், கடந்த காலத்தின் மீதான கழிவிரக்கம், நோய் பிணி, துன்பம்... எனச் சகலதும் அங்கேயே.

அகதிப் பிள்ளைகள் விளையாடினார்கள். பந்து விளையாட்டு. அடித்த பந்து சும்மா இருக்குமா? அதுவும் விளாசி அடித்தால்! அடித்த அடியில் பந்து பறந்தது. காற்று வளத்தில் அது கட்டற்றுப் பறந்தது. காற்றோடு காற்றடைக்கப்பட்ட அந்தப் பந்துப் பை கலந்தபோது எழுந்த உற்சாகத்தில் அது பறந்தது. அது எங்களைப் போல அடங்கியிருக்க விரும்பவில்லைப் போலும். ‘அகதிப் பந்து’ என்றால் அடங்கியிருக்க வேண்டும் என்று அதற்குத் தெரியவில்லை. அது சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. தன்னுடைய இயல்பை விட்டு விடத் தெரியவில்லை.

அதற்குத் தெரிந்தததெல்லாம் மகிழ்ச்சியே. பிள்ளைகள் விளையாடுகிறார்கள். அந்தப் பிள்ளைகளுடன் அதுவும் ஒரு பிள்ளையாகிவிட்டது. அவர்களுடைய விளையாட்டில் அதுவும் சேர்ந்து விட்டது. விளையாடும்போது என்ன வரையறைகள்? கூடி மகிழ்ச்சியாக விளையாட வேண்டியதுதானே. அதனால் அது துள்ளிக் குதித்துக் கொண்டு வெளியே போய்விட்டது. அங்கே இருந்த முட்கம்பி அடுக்குகள் அதற்குப் பொருட்டல்ல. சுற்றியிருந்த படைவீரர்களைப் பற்றி அது அக்கறைப் படவில்லை. அவர்களுடைய துப்பாக்கிகளைப் பற்றி அது சிந்திக்கவேயில்லை. அதற்கு அவற்றைப் பற்றி என்ன கவலையுண்டு? அது அகதிகளுடன் விளையாடியது என்ற காரணத்தைத் தவிர.

வெளியே போன பந்து அங்கே இருந்து கொண்டு சிரித்து வேடிக்கை காட்டியது. வேண்டுமானால் வெளியே வந்து பாருங்கள் என்றது. முடிந்தால் என்னை வந்து அழைத்துப் போங்கள் என்று அது பிடிவாதம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருந்து கொண்டது. விளையாட்டில் எதற்கப்பா இந்தத் தயக்கங்களும் வரையறைகளும்? பேசாமல் வந்து என்னைக் கூட்டிப் போங்கள் மீண்டும் விளையாடலாம் என்று அழைத்தது.

ஆனால் யாராலும் அதனிடம் போகமுடியவில்லை. போகத்துடித்தவர்களும் எதுக்கு வீண் வம்பு என்பதால் தயங்கி நின்றார்கள். ஆனாலும் விளையாடும் வேகம் விடவில்லை. விளையாட்டில் வரும் வேகம் என்பது ஏறக்குறைய வேட்டையில் வரும் வேகத்துக்குச் சமம். வேட்டையின் வேகம்தான் விளையாட்டில் இன்னொரு நிறத்தில் இருக்கிறது. அடிப்படையில் வேட்டையும் விளையாட்டும் ஒன்றுதான்.

ஆகவே அந்த வேகம் விடவில்லை, விளையாடியவர்களை அது தூண்டியது. வெளியே எதற்காகப் போக வேணும்? வீழ்ந்திருக்கும் பந்தை எடுக்கத்தானே! அதை விட வேறு என்ன தகாத காரியமா பார்க்கப் போகிறோம்? வருவது வரட்டும் என்று விளையாடிய பிள்ளைகளில் ஒருவன் வெளியே பாய்ந்தான்.

அந்தக் கணத்தில் அதைக் கண்டு விட்டான் ஒரு சிப்பாய். அவ்வளவுதான். வந்தது வினை.

பதினாறு வரி முட்கம்பியைக் கடந்து போவதென்றால், அதைவிட இரவு பகலாக துப்பாக்கியோடு காத்துக்கொண்டும் சுற்றிக் கொண்டும் நிற்கும் அவர்களைஏ ஏய்த்துக் கொண்டு இப்படி வெளியே போக விடுவார்களா? வெளியே போனவiனைக் கண்ட சிப்பாய் பாய்ந்தடித்துக் கத்திக் கொண்டு ஓடிவந்தான்.

எல்லோருக்கும் கலவரம். இது எதிர்பார்த்ததுதான். ஆனால் இப்படி விழிப்பாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வந்த சிப்பாய் கத்தினான். எதற்கு வெளியே போனாய் என்று கத்தினான். வெளியே போனால் என்ன நடக்கும் தெரியுமா என்று கத்தினான். அவனைத் தொடர்ந்து இன்னொரு சிப்பாயும் அங்கே வந்து விட்டான். இது தொடர்ந்தால் முகாமின் பொறுப்பதிகாரி வருவான். அவன் வந்தால் பிரச்சினை பெரிதாகி விடும். விசாரணைகள் நடக்கும்.

மீண்டும் எல்லோரையும் வெட்டைக்கு அழைப்பார்கள். குளித்துக் கொண்டிருப்பவர்கள், சமைத்துக் கொண்டிருப்பவர்கள், மலசல கூடத்திலிருப்பவர்கள், பிள்ளையை நித்திரையாக்கிக் கொண்டிருப்பவர்கள், பாலூட்டடிக் கொண்டிருப்பவர்கள், நோயாளிகள், நடக்க முடியாதவர்கள் எல்லாம் வெட்டைக்கு வரவேணும். அங்கே கணக்கெடுப்பு நடக்கும். தலைகளை எண்ணுவார்கள். தலை எண்ணி முடியும் வரை எவரும் எங்கேயும் எதற்கும் போகமுடியாது. அதுவும் அந்த முகாமுக்குள்ளும் கூட.

ஆனால், இப்போது வந்த சிப்பாய்கள் நிலைமையை விளங்கிக் கொண்டார்கள். விளையாடும்போது கிறுக்குப் பந்து வெளியே போனதால்தான் அதை எடுப்பததற்கு வெளியேறியிருக்கிறான் ஒருவன் என்று. ஆனாலும் எச்சரித்தான். இது கடைசித்தடவையாக இருக்கட்டும் என்றார்கள். பந்து வெளியே போனால் தங்களிடம் சொல்லச் சொன்னார்கள். அப்படிச் சொன்னால் அதைத் தாங்கள் எடுத்துத் தருவதாக.

கடைசி மன்னிப்போடு திரும்பிய போது வந்தது வினை. வெளியே போனவன் பந்தோடு உள்ளே நுழையும்போது அதை எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக ஒரு  படை அதிகாரி கண்டு விட்டான். அந்தப் படை அதிகாரி முகாமுக்கு உரியவனல்ல. அதற்கும் மேல் அதிகாரி. எப்போதுமே மேலதிகாரிகள் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களுடைய பணியின் தேவையோ என்னவோ.

அந்தப் படை அதிகாரி  முகாம் நிலைமையைப் பார்க்க வந்திருக்கிறான். அப்போதுதான் இதைக் கண்டிருக்கிறான். படை அதிகாரி சிப்பாய்களை அழைத்தான். விசாரித்தான். அவர்கள் விவரம் சொன்னார்கள். பந்தைக் காட்டினார்கள். ஆனாலும் அன்று மாலை தொடங்கிய கணக்கெடுப்பு இரவு பதினொரு மணியாகியது முடிவடைய.

ஆனால், அந்தக் கணக்கெடுப்பில் அந்தப் பந்து சேர்த்துக் கொள்ளப்படவில்லை. விளையாடுவதற்கு மேலும் இரண்டு பந்துகளைப் படையினர் தந்தனர். நடந்த காரியத்துக்கு மன்னிப்புக் கோரினர். இந்த மாதிரி நிலைமைகளில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பெற வேண்டிய அனுமதிகளைப் பற்றி விளக்கினார்கள். இதையெல்லாம் ஏன் செய்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்களுக்குக் கூடத்தான்.

அங்கே பிரச்சினை பந்தல்ல. பந்தை விளையாடுவதே. அதை அவர்கள் புரிந்து கொண்டார்களா?

02

மீளக் குடியமர்ந்த பிறகு அவர்கள் தங்களுடைய வீட்டுக்கருகில் விளையாடினார்கள்.  .....துள்ளிக் குதித்துக் கொண்டோடிய பந்து அப்படியே ஒரு புதருக்கருகில் போய் நின்றது. திரும்பி வருவதற்கு அதற்குத் தெரியாது. அல்லது அதற்கு மறுத்தான் கொடுப்பதற்கு அங்கே எதுவும் இருக்கவில்லை.

விளையாடும் வேகம். பிரதாபன் பாய்ந்தோடிப்போய் பந்தை எடுத்தான். எடுத்த வேகத்தில் அவன் திரும்ப.... வெடித்தது மிதி வெடி.

தீ. புகை. புழுதி மண்டலம். குருதி. ஐயோ அம்மா என்ற கதறல். ஓலம்....

எல்லோரும் பதறினர். வீழ்ந்தவனைத் தூக்குவதற்கும் பயம். இன்னொரு மிதி வெடி அங்கே இருந்தால்....

பன்னிரண்டு வயதுப்பிள்ளை. இந்தப் பெரும் போருக்குள் சிக்கி, எத்தனையோ மரண கண்டங்களைக் கடந்து, மயிரிழையில் சாவின் வாயிலிருந்து தப்பி, அகதி முகாம் அவலங்களை எல்லாம் பட்டு, இப்போது வீட்டுக்கு வந்து இப்படியா காலை இழக்க வேண்டும்?

அவனுடைய வலது கால் முழங்காலுக்குக் கீழே சிதைந்து விட்டது.

தாய் கதறினாள். அவளுடைய ஒரு கை ஏற்கனவே உடையார்கட்டில் காயத்துக்குள்ளாகி இன்னும் சரியாக இயங்கவில்லை. இரண்டு கிலோ பாரம் கூடத் தூக்க மாட்டாள். ஆனால், இப்போது தன்னுடைய பிள்ளையை அவள் எப்படியோ அந்த அபாய வெளிக்குள்ளால் தூக்கிக் கொண்டாள்.

பிரதாபன் மயங்கிவிட்டான். அந்தப் பிஞ்சினால் என்னதான் செய்ய முடியும்?

அவளுடைய ஓலம் அந்த ஊரையே கலக்கியது.

எதையும் பற்றி எந்தப் பொருட்டும் இல்லாத மாதிரி, இரத்தத்தில் தோய்ந்தவாறு தனியே கிடந்தது காலில்லாத அந்தப் பந்து. அதற்கு மிதிவெடி பற்றிய எந்த அச்சமும் இல்லை. ‘ஒரு மீள்குடியேறியின் பந்து’ என்று அது உணர்வதே இல்லை. அப்படி உணர்ந்திருந்தால் ஒரு வேளை பிரதாபனின் கால் தப்பியிருக்கலாம்.

கால்களில்லாத பந்து செய்கின்ற கூத்துகள் கொஞ்சமல்ல. உண்மையில், எந்த அச்சமுமில்லாமல்,  பந்து விளையாடும் காலம் ஒன்று எங்களுக்கில்லை என்பதே உண்மை.

அந்தக் காலம் எப்போது?

00

Sunday, October 21, 2012

கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?







நேரில் காணும்போதும் தொலைபேசியில் உரையாடும் போதும் அநேகமான வெளியூர் நண்பர்கள் முதலில் கேட்பது கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்குது? என்ற மாதிரியான கேள்விகளையே. இந்த மாதிரியான கேள்விகளை அவர்கள் இன்று நேற்று மட்டும் கேட்கவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த எழுபதுகளில் கிளிநொச்சி ஒரு நகரமாக வளரத்தொடங்கியபோது இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது காடாக இருந்த கிளிநொச்சி மெல்ல மெல்ல ஊர்களாக, சிறு பட்டினமாக வளரத் தொடங்கியிருந்தது. பாம்புகளோடும் பன்றிகளோடும் போராடிக் கொண்டிருந்த குடியேறிகள் மெல்ல மெல்ல ஊர்களிலிருந்து தங்களுடைய பட்டினத்தை, தங்களுக்கான பட்டினத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிப் பகுதிகளுக்குக் குடியேறப் போனவர்களின் நிலையைப் பற்றி அறிவதற்காக முதல்தலைமுறைக் கேள்விகள் எழுந்தன. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது? 

பிறகு, வன்செயல்களின் காரணமாக கிளிநொச்சிக்கு தெற்கிலிருந்து குறிப்பாக மலையகப் பகுதிகளிலிருந்து அகதிகள் வந்தனர். வந்தவர்கள் அத்தனைபேரும் விவசாயக் கூலிகளானார்கள். அவர்களுக்கு விவசாய நிலங்கள் கிடைக்கவில்லை. அதை யாரும் வழங்கவும் இல்லை. அப்படி அகதிகளாக வந்த சனங்கள் என்ன செய்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்று அறிவதற்காக கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது? என்ற இரண்டாம் தலைமுறைக் கேள்விகள் எழுந்தன. என்றபோதும் அந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கவில்லை.

ஆனால், எல்லாச் சனங்களையும் தன்னுள் வைத்துக் கொண்டு கிளிநொச்சி மெல்ல மெல்ல ஒரு பட்டினமாகியது. அப்படியே அது வடக்கின் முக்கிய தொடர்பாடல் களமாக, ஒரு வணிக மையமாக வளர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது தெற்கிலே ‘தம்புள்ள மாக்கெற்’ என்ற பெரும் விவசாயச் சந்தை இருக்கிறதைப் போல அப்பொழுது கிளிநொச்சி மாறியது. 


வடக்கின் உற்பத்திப் பொருட்களையெல்லாம் தெற்கிலுள்ளவர்கள் கிளிநொச்சிக்கு வந்தே வாங்கினார்கள். தெற்கின் பொருட்களை அவர்கள் கிளிநொச்சியில் வைத்தே வடக்கிற்கு விற்றார்கள். யாழ்ப்பாணக்குடாநாடும் வன்னியும் கிளிநொச்சியில் கூடியது. இப்படியொரு சந்தை கூடினால் அது சும்மா இருக்குமா? கொண்டாட்டமும் கலகப்பும் களைகட்டியது. அந்த நாட்களில் (1970 களில்) கிளிநொச்சிக்கு புகழ்பெற்ற சினிமாக்காரர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தார்கள். கொழும்பிலிருந்து நாடகக்காரர் வந்தனர். அன்று நட்சத்திர அந்தஸ்தில் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களாக இருந்த கே.எஸ். ராஜாவும் யோக்கின் பெர்ணாண்டோவும் வந்தார்கள். ரி.எம். சவுந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் எல்லோரும் றொட்ரிக்கோ மைதானத்தில் பாடினர். ட்ரம்ஸ் மணி (சிவமணி) தன்னுடைய கைவண்ணத்தால் சனங்களைப் பித்துப் பிடித்து ஆட வைத்தார். இப்பொழுது சர்வதேச விளையாட்டு மைதானமாக மாறிக் கொண்டிருக்கும் மைதானமே அன்று றொட்ரிக்கோ மைதானமாக இருந்தது. காலம் மாறும்போது இப்படிப் பெயர்களும் வடிவங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த றொட்ரிக்கோ மைதானத்தில்தான்  மரைக்கார் ராமதாசும் அப்புக்குட்டி ராஜகோபாலும் உபாலி செல்வசேகரனும் ‘கோமாளிகளா’கிக் கலக்கினார்கள். 

மைதானம் நிறையக் கூட்டம். நாலு திக்கிலும் இருந்து அள்ளு கொள்ளையாகச் சனம் திரண்டு வந்தது. வெளியூர் ஆட்களுக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆக முப்பது ஆண்டுகால வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு இடத்தில் எப்படி இந்தளவுக்கு முன்னேற்றமும் கலகலப்பும் என்று. இருக்காதா பின்னே. கிளிநொச்சி 1910 க்குப்; பிறகே உருவானது. 50 க்குப் பிறகே எழுச்சியடைந்தது. 50 இலிருந்து 70 களுக்குள்ளான இருபது ஆண்டுகளுக்குள் அது புகழடைந்தது. எல்லாம் 1902 இல் இரணைமடுக்குளம் கட்டப்பட்டதிலிருந்தே ஆரம்பம். எனவே அவர்கள் தங்களுடைய மூன்றாம் தலைமுறைக் கேள்விகளைக் கேட்டார்கள், கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?

விளையாட்டு நிகழ்சிகள், பொங்கல் விழாக்கள், நாடக அரங்குகள், இசை நிகழ்ச்சிகள், காணிவெல், கவியரங்கு என்று ஏதாவது அங்கே நடந்து கொண்டேயிருந்தது. போதாக்குறைக்கு நகர்ப்பகுதியில் இருந்தது கந்தசாமி கோவில். அதற்குப் பக்கத்தில் (முன்பு ஆஸ்பத்திரி இருந்த இடத்திற்கு அருகில்) மாதா தேவாலயம். சற்றுத் தொலைவில் இரணைமடுக்குளத்திற்குப் பக்கத்தில் கனகாம்பிகை அம்மன் கோவில். இங்கெல்லாம் திருவிழாக்கள் நடந்தன. கொண்டாட்டங்களுக்குக் குறைவேயில்லை. 

குளங்கள் நிரம்பின. வாய்க்கால் நீளம் தண்ணீர் பாய்ந்தது. வெளியிலும் வீடுகளைச் சுற்றியும் பயிரும் பச்சையும். பொன்னாய் அள்ளிக் கொட்டியது புதிய மண். கடையும் தெருவும் பொலிந்தன. நகரும் கிசுகிசுவென்று வளர்ந்தது. கூலிகள் உழைத்துத் தள்ளினர். முதலாளிகள் வளர்ந்தனர். முதலாளிகள் வளர்ந்தால் என்னதான் நடக்காது? அவர்களுக்கு ஏக்கர்கணக்காக நிலம் இருந்தது. நூற்றுக்கணக்காகக் கூலிகளும் இருந்தனர். கூலிகள் எல்லாவற்றுக்காகவும் உழைத்துத் தள்ளினார்கள். 

இன்னொரு பக்கத்தில் அருவி என்றும் களனி என்றும் இதழ்கள் வெளிவந்தன. கவியரங்குகள் முழங்கின. ‘வடக்கின் நெற்களஞ்சியம் கிளிநொச்சி’ என்று யாரோ புகழைச் சூடினார்கள். அப்படிச் சொன்னதற்கு ஏற்றமாதிரி விசுவாசமாக கிளிநொச்சியின் வயல்களும்  விளைந்து தள்ளின. நெல்லைக் குற்றி அரிசியாக்கும் ஆலைகள் எங்கும் முளைத்தன. எங்கும் எங்குமே நெல்வாசனை பூத்துப் பொலிந்தது. 

நகரில் இருந்தன மூன்று தியேட்டர்கள். அங்கே யாருடைய படங்கள் வந்தாலும் கூடுதலாக எம்.ஜி.ஆர் படங்களே வெற்றிவாகை சூடின. நான்கூட எம்.ஜி.ஆர் படங்களைத்தான் கூடுதலாகப் பார்த்துக் களித்தேன். இரண்டு போக வேளாண்மையிலும் உழைத்த காசை சனங்கள் என்னதான் செய்வது? வயலில் இருந்து வெளிக்கிட்டு ட்ரக்ரரில் ஏறினால், தியேட்டருக்கு வருவார்கள். அல்லது சந்தைப் பக்கம் போவார்கள். தங்களுடைய இளைய பட்டினத்தில் அவர்கள் இப்படித்தான் ஆடியும் பாடியும் களித்தார்கள். நகரத்துக்கு அப்பால் சிறு வீடுகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்து தொலைத்தார்கள். 

இப்படிக் களித்துக் கொண்டிருந்தபோதே வந்தது யுத்தம். 

யுத்தத்தை அங்கே யார் அழைத்து வந்தது, யார் அனுமதித்தது என்று தெரியவில்லை. ஆனால், அன்று படையினரும் திரிந்தனர். இயக்கப்பெடியளும் திரிந்தார்கள். இரண்டு பகையாளிகள் ஒரு மையத்தில் சந்தித்தால் என்ன நடக்குமோ அது நடந்தது. விரும்பத்தகாத எல்லாம் நடந்தன. எதிர்பார்க்காத எல்லாம் நடந்தன. தமிழ்ப்பகுதிகள் எங்கும் நடந்ததைப் போல, இலங்கை முழுவதிலும் நடந்ததைப்போல, வரலாற்றில் நடந்ததைப் போல, ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயன்றனர். ஒருவரை ஒருவர் வெல்ல முயற்சித்தனர். இந்த அமளிக்குள் சிக்கிச் சிதறியது நகரம். நகரம் மட்டுமல்ல ஊர்களுந்தான். ‘யானைகள் மோதும்போது செடிகளுக்கே நாசம்’ என்பார்கள். நகரம் சிக்கி, நகரத்துக்கு அண்மித்திருந்த கிராமங்களும் சிக்கியபோது எல்லாமே நாசமாகியது. சனங்களும் நாசமாகினர். அவர்களுடைய வாழ்க்கையும் நாசமாகியது.

புதுப்பொலிவோடு எழுந்து வந்த சின்னஞ்சிறிய பச்சை நகரம், மிக இளைய பட்டினம் அப்படியே பாழடைந்து போனது. பாழடைந்த நகரத்தில் புற்களும் காய்ந்துதான் இருந்தன. அல்லது கருகிக்கிடந்தன. காடு மண்டிப் புதர் வளர்ந்து, வயலெல்லாம் பிணங்கள் மலியத் தொடங்கியபோது சனங்கள் கிளிநொச்சியை விட்டு நீங்கி அயற்கிராமங்களில் பதுங்கினர். 

யுத்தம் எல்லாவற்றையும் தீண்டியது. ஒரு பென்னாம் பெரிய விசப்பாம்பு தீண்டியதைப் போல புதிசாக முளைத்த நகரம் செத்து மடிந்தது. நாலு நாட்கள் இறைக்காமல் விட்ட கீரையைப் போல அது வாடிச் சோர்ந்தது. அப்போதும் கேட்டார்கள் கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்குது? என்று. இது நான்காம் தலைமுறைக் கேள்விகள்.

பிறகு இதுதான் தொடர்கதை. இடையில் மழைக்குத் துளிர்க்கும் காட்டுச் செடிகளைப் போல யுத்த ஓய்வு காலங்களில் அல்லது அரசியல் மாற்றம், அரசியல் விளைவுகளுக்கு ஏற்ற மாதிரி கிளிநொச்சி காய்வதும் துளிர்ப்பதுமாக இருந்தது. 

அப்பொழுதும் இப்படித்தான் யாராவது கேட்பார்கள் கிளிநொச்சி எப்பிடி இருக்கு? அங்க என்ன நடக்குது? என்று. தலைமுறைக் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. 

தொடர்ந்து ஒவ்வொரு போதிலும் ஒவ்வொரு தரப்பின் கைகள் மேலோங்கும். முன்பு சொன்னதைப்போல ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயற்சிக்கும்போது யாரோ ஒருவரின் கைகள் மேலோங்கின. அழிவதும் துளிர்ப்பதுமாக இருந்த நகரம் பொலிவை இழந்து இறுதியில் அப்படியே தன்னுடைய முழுப்பொலிவையும் இழந்து விட்டது. 

என்றாலும் அதனுடைய உயிர்ப்பு மறையவில்லை. அறுகம்புல்லைப்போல அது வெளியே அழிந்ததாகத் தோற்றம் காட்டினாலும் ஒரு துளி ஈரத்தைக் கண்டதும் சட்டெனத் துளிர்க்கத் தொடங்கி விடும். ஒரு கட்ட யுத்தத்தின் பின்பு அது சடுதியாக எழும். பிறகு அடுத்த கட்ட யுத்தத்தில் அவ்வளவும் பாழாகிவிடும். மாரியும் கோடையும்போலத்தான் கிளிநொச்சியின் வரலாறும் ஆயிற்று.

இதைப் பார்ப்போருக்கு வேடிக்கையாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த ஆச்சரியத்திலிருந்தே அவர்களிடம் கேள்விகள் பிறக்கின்றன. கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்கிறது?

பாரம்பரியமெதையும் வலுவாகக் கொண்டிராத கிளிநொச்சியில் எப்படித்தான் வேர்கள் பாதிப்படையாமல் இருக்கின்றன என சிலர் கேட்டதுமுண்டு. நான் நினைக்கிறேன், கிளிநொச்சிக்கு வாய்த்த நீர், நிலம் போன்ற வளங்களும் உழைக்கக் கூடிய சனங்களின் திரட்சியும்தான் அதை உயிர்ப்போடு வைத்திருந்தன என்று. அதுதான் அதனுடைய பாராம்பரியமாகியது. அதைத்தவிர அதற்கு வேறு வழியுமில்லை. 

யுத்த அரங்கு மூடப்படாத, யுத்தத்தின் கொதிநிலை மாறாத ஒரு மையமாக கிளிநொச்சி தொடர்ந்தும் இருந்தது. ஒரு பக்கம் ஆனையிறவு என்ற இராணுவக் கேந்திரம். இன்னொரு பக்கத்தில் கொக்காவில் என்ற இணைக் கேந்திரம். இடையில் நகரத்துக்கென உருவான பரந்தன், கிளிநொச்சி மத்தி என்ற துணைக்கேந்திரங்கள். இதெல்லாம் கிளிநொச்சியை யுத்தவலயமாக்கின.

எனவே, அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அழிவுகள் எல்லாவற்றுக்குள்ளும் அது சிக்கிச் சிதறியது. தொடர்ந்து காயங்களும் வடுக்களும் வலிகளும் நிரம்பிய நகரமாக அது மாறியது. 

இன்றும் கூடக் கிளிநொச்சி யுத்த வடுக்களின், யுத்த வலிகளின், யுத்தக் காயங்களின் காட்சிக்கூடமாகவே உள்ளது. கிளிநொச்சிக்கு வருவோரிற் பலரும் கிளிநொச்சியின் காயங்களையும் வடுக்களையும் காணவே வருகிறார்கள். சிலர் துக்கத்தோடு பார்க்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். 
இதைப் பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ வந்து பார்த்துச் செல்கிறார்கள். சடங்கைப் போலச் சம்பிரதாயமாக எல்லாவற்றையும் படமெடுத்துச் செல்கிறார்கள். அந்தப் படங்களை வைத்துக் கொண்டாடுகிறார்களா, குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் படங்கள் மட்டும் தாரளமாக எடுக்கப்படுகின்றன. 

சிலருக்கு யுத்த அழிவும் காட்சிப் பொருள்தான். யுத்த வெற்றியும் காட்சிப் பொருள்தான். யுத்தத்தின் பின்னரான நிலைமைகளும், முன்னேற்றங்களும் முன்னேற்றமின்மைகளும் காட்சிப் பொருட்களேதான். சனங்களின் கண்ணீரும் துயரமும் காட்சிப் பண்டங்களே. 

என்ன செய்வது உலகம் அப்படி மாறிவிட்டது. கண்ணீரையும் இரத்தத்தையும் மலிவாகவே விற்பதற்குத் துணிந்த பிறகு எதைப் பற்றித்தான் என்ன கூச்சம் வேண்டியிருக்கு? கெட்டிக்காரன் எதையும் விற்றுச் சரக்காக்கி விடுகிறான். வியாபார உலகத்தில் நீதியும் நியாயமும் மனச்சாட்சியும் மதிப்பிழந்து போகின்றன. அல்லது மௌனத்திற் குடிகொள்கின்றன. 

போகட்டும் இது. நாம் மீதியைச் சொல்லிச் செல்வோம். 

போரில் சிக்கியிருந்த போதும் கிளிநொச்சியில் பலவும் நடந்தன. தியேட்டர்களும் படங்களும் படுத்தாலும் வயல்களில் ஆட்கள் நின்றார்கள். றொட்ரிக்கோ மைதானத்தில் ஆட்களுக்குப்பதிலாக துப்பாக்கிகள் முளைத்திருந்தபோதும் தெருக்களில் சனங்கள் போய் வந்தார்கள். அப்படிப் போய் வரமுடியாத போது அவர்கள் சற்றுத் தள்ளியிருந்து கொண்டு அங்கே சிறிய சிறிய பட்டினங்களைக் கட்டினார்கள். மைதானத்தில் மாடுகள் படுத்துறங்கின. சந்தைக்கு வடக்கிலிருந்தும் ஆட்கள் வருவதில்லை. தெற்கிலிருந்தும் ஆட்கள் வருவதில்லை. வெளியாட்கள் வருவதற்கான வாசல்கள் மூடப்பட்டது. சிலபோது அங்கே உள்ளுர்ச்சனங்கள் கூடினர். பட்டினம் இடம்பெயர்ந்த போதெல்லாம் சனங்கள் தங்களோடு கடைகளையும் சந்தையையும் கூடக் காவிச் சென்றார்கள். 

அப்போதும் கேட்டார்கள், கிளிநொச்சியில் என்ன நடக்கிறது? அது எப்படியிருக்கிறது? என்று. இது ஆறாம் தலைமுறைக் கேள்விகள்.

இதற்கிடையில் நான் இன்னொன்றையும் சொல்ல வேணும்.

கிளிநொச்சிக்கு என்று சில காலங்களைச் சொல்வார்கள். இரணைமடுக் குளம் கட்டிய காலம், கிளிநொச்சியின் குடியேற்ற காலம், அதனுடைய எழுச்சிக் காலம், கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, அதைத் தனி மாவட்டமாக்குவதற்காகப் பாடுபட்ட ஆனந்தசங்கரியின் காலம், கிளிநொச்சியை வளப்படுத்த முயற்சித்த குமாரசூரியர் காலம், பிறகு இலங்கை இராணுவத்தின் காலம், இந்திய இராணுவக் காலம், புலிகளின் காலம், இப்ப போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றக் காலம் என இந்தக் காலப்பட்டியல் நீளும்.

இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுச்சியும் வீழ்ச்சியும் தன்னியல்பாகவும் அந்தந்தத் தரப்பின் செயற்பாடுகளுக்கு அமையவும் ஏற்பட்டுள்ளன. 

இதில் முக்கியமான காலகட்டங்கள் 80 களுக்கு முந்திய காலமும் புலிகளின் காலமும் தற்போதைய யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டமுமே. 

கிளிநொச்சியின் பொற்காலம் என்பது 70 களுக்கும் எண்பதுகளுக்கும் இடைப்பட்ட காலம்தான். இந்தக் காலத்தில்தான் கிளிநொச்சி என்ற ஒரு மையத்தின் அடையாளம் துலங்கத் தொடங்கியது. கலையும் கல்வியும் பொருளாதார அடிப்படைகளும் இதையெல்லாம் இணைத்த வாழ்க்கையும் இந்தக் காலத்திலிருந்துதான் கிளிநொச்சிக்கென உருவாகின. ‘மண்ணின் மைந்தர்களும்’ இந்தக் காலத்தில்தான் முளைத்தார்கள். 

இதெல்லாம் இணைந்தும் கலந்தும் விளைந்த கிளிநொச்சியின் இரண்டாவது சிறப்பான காலகட்டம் 2000 க்குப் பின்னரானது. 

2002 இல் புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது கிளிநொச்சிக்கான நல்லதொரு முகூர்த்தமாகவே, வாய்ப்பாகவே அமைந்தது. இதையடுத்து கிளிநொச்சி மிகப் பெரிய அளவுக்கு எழுச்சியடைந்தது. உலகத்தின் நான்கு திசைகளும் நான்கென்ன எட்டுத்திசைகளும் கிளிநொச்சியில் கூடின. இலங்கையில் இரண்டு தீர்மான மையங்கள் என்று சொல்லும் அளவுக்கு கிளிநொச்சி மாறியது. ஒன்று கொழும்பு. மற்றது கிளிநொச்சி என்று இதை ஆய்வாளர்களே குறிப்பிட்டார்கள். வெள்ளையர்களும் வெளியாட்களும் உதவிப் பணிகளுக்கும் அரசியல் விவகாரங்களுக்குமாக வந்திறங்கியிருந்தனர். வெளியேற்றப்பட்டிருந்த முஸ்லிம்களின் தரபபிலிருந்து ஹக்கீமும்அவருடைய தோழர்களும் கூட வந்தனர்.

அந்த நாட்களில் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாகப் பறந்தன வானூர்திகளும் வெளிநாட்டு ராஜதந்திரிகளின் வாகனங்களும். பல திசைகளில் இருந்தும் தலைவர்களும் ராஜதந்திரிகளும் கிளிநொச்சிக்கு வந்து சென்றார்கள். புலம்பெயர்ந்து போயிருந்த தூரதேசத்துப் பறவைகள் எல்லாம் கிளிநொச்சிக்கு வந்தன. இரணைமடுக்குளம் தண்ணீரால் நிரம்பியதோ இல்லையோ கிளிநொச்சி சனங்களாலும் விருந்தாளிகளாலும் நிரம்பியது. கண்ணாடி மாளிகைகள் எங்கும் முளைத்தன. எல்லோருக்கும் ஆச்சரித்திலும் ஆச்சரியம். இந்த ஆச்சரியம் எழுப்பியது மீண்டும் கேள்விகளை. ஏழாந்தலைமுறைக் கேள்விகளை. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்குது? 


கிளிநொச்சியைப் புலிகளின் தலைநகரம் என்றும் சமாதான முயற்சிகளுக்கான நகரம் என்றும் குறிப்பிட்டனர் விமர்சகர்கள். யார் யாரெல்லாமோ வந்தார்கள். தினமும் கை குலுக்கல்கள் நடந்தன. றொட்ரிக்கோ மைதானம் கிளிநொச்சி மத்திய மைதானம் என்று அழைக்கப்பட்டது. அந்த மைதானத்தில் விளையாட்டுக்குப் பதிலாக, ஹெலிகொப்ரர்களே வந்திறங்கின. முன்னர் மலேசியா வாசுதேவனையும் ரி.எம். சவுந்தரராஜனையும் எல்.ஆர்.ஈஸ்வரியையும் கண்டு களித்த சனங்கள் பெயர்களை உச்சரிக்கக் கடினமான விருந்தாளிகளைப் பார்த்துக் கையசைத்தனர். இறுதியில் மரைக்கார் ராமதாஸின் கோமாளிகளையும் விட தாங்களே கோமாளிகள் என அவர்கள் உணர்ந்தபோது யுத்தம் அவர்களுடைய தலைக்கு மேலும் காலடியிலும் வந்திறங்கியிருந்தது. 

பிறகென்ன? 

மறுபடியும் யானைகளின் மோதல். செடிகள் துவம்சம். நகரத்தின் வேர்களைக் கிழப்பிக்கொண்டே அல்லது பிடுங்கிக் கொண்டே சனங்கள் பெயர்ந்தனர். பெயர்ந்தவர்கள் அயல் ஊர்களை நோக்கி, காடுகளை நோக்கிச் சென்றனர். காடுகளில் வாழ்க்கை என்பது எப்படியிருக்கும்? அது காட்டுத்தன்மையை ஒத்ததாகவே இருக்கும். அப்படித்தான் இருந்தது. 

எல்லா யுத்தத்திற்கும் முடிவாக அந்த யுத்தம் இருந்தது. அது பெரும் யுத்தம். என்பதால், அது எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போனது. மிஞ்சியவற்றை அடித்துச் சிதைத்தது. சிதைத்து நொறுக்கியது. 

அதற்குள் நாங்கள் கூரைகளையும் கழற்றிக் கொண்டு வேறிடங்களை நோக்கிச் சென்றோம். இறுதியில் காடுகளை, கடலை நோக்கிச் சென்றோம். போகும்போது கூரையை மட்டுமா கழற்றினோம். நட்ட பயிர்களைத் தவிர்த்து, வளர்த்த பிராணிகளை, சேர்த்த பொருட்களை, வாங்கிய பண்டங்களை என எல்லாவற்றையும் எடுத்துச் சென்றோம். எங்களுக்கு முன்னும் பின்னும் எங்களோடு சேர்ந்தும் சிந்தச் சிந்த ஒரு அரசைப் புலிகளும் காவிக் கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் உருவாக்கிய அரசே அவர்களுக்குப் பாரமாகியது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? எல்லாவற்றையும் அவர்களும் சுமந்து கொண்டே சென்றனர். நாங்களே எங்களின் வீட்டுக் கூரையைக் கழற்றிச் சென்றோம் என்றால், அதன் நிலையை எப்படிச் சொல்வது? சரியோ பிழையோ அதைத் தவிர எங்களுக்கு வேறு தெரிவுகளிருக்கவில்லை.  

விதி வேறு முகத்தோடு வந்து பல்லை இளித்துக் கொண்டு முன்னே நிற்கிறதே. 

முழுக் கிளிநொச்சி நகரமுமே பெயர்க்கப்பட்டு இப்படிக் கொண்டு செல்லப்பட்டது. கொண்டு செல்லப்பட்ட நகரம் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டது. அப்படி வைத்து, வைத்துக் காவிச் செல்லப்பட்ட நகரம் இறுதியில் கரைந்து காணாமலே போய்விட்டது. அந்த நாட்களில் ஒரு விமானமும் கிளிநொச்சியில் தரையிறங்கவில்லை. தரையிறங்காத விமானங்கள் தலைகளின் மேலே சுற்றின. குண்டுகளையே இறக்கின. 

அப்போதும் கேட்டார்கள் கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்கிறது? எட்டாந்தலைமுறைக்கேள்விகள் இவை. 

‘அங்கே ஒரு நாய் மட்டும் நின்றது’ என்று யாரோ ஒரு பத்திரிகையாளன் ஒரு தடவை எழுதியிருந்தான். ஆட்களற்றிருந்த 1996 இன் கிளிநொச்சியைப் பற்றிய சித்திரம் அது. அதையே நானும் திருப்பிச்சொன்னேன்.

பிறகு மீள்குடியேற்றக்காலம். அகதிகளாகச் சென்ற சனங்கள் மீள்குடியேறிகளாகி வந்தனர். வந்தவர்கள் கூரையில்லாத தங்களுடைய நகரத்தைக் கண்டனர். தெருக்களில்லாத ஊர்கள். ஆட்களில்லாத வளவுகள். பாழடைந்;த நகரத்தை மீண்டும் அவர்கள் கட்டியெழுப்பத் தொடங்கினர். வாழ்வென்பதை எங்கிருந்து, எதிலிருந்து, எப்படித் தொடங்குவது என்று தெரியாமலிருந்தது எல்லோருக்கும். 

அப்போதும் கேள்விகள் கேட்கப்பட்டன. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது? ஒன்பதாம் தலைமுறைக் கேள்விகள் இவை. 

நான் சொன்னேன். 

ஒரு இடிந்த சுவருக்கு நான்காவது தடவையாகவும் கூரைகளைப் போடும் மனிதர்கள் இருக்கிறார்கள் இந்த நகரத்தில். கால்கள் இல்லாவர்களின்  நகரமாக. பிள்ளைகளைத் தொலைத்தோரின் நகரமாக. பிள்ளைகளைத் தேடுவோரின் நகரமாக. என்றைக்கோ ஒரு நாள் உங்கள் அப்பா வருவார். அது வரை காத்திருங்கள் என்று தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பெண்களின் நகரமாக... கால்களே இல்லாமல் ஊர்ந்து செல்வோரின் நகரமாக, கண்களை இழந்த பின்னும் வாழவேண்டுமே என்ற தவிப்போடு அலைவோரின் நகரமாக, பெற்றோரைப் போரில் இழந்த பிள்ளைகளின் நகரமாக, வீடுமில்லை வாழ்வுமில்லை என்று அந்தரிப்போரின் நகரமாக, பள்ளிக்கூடங்களும் கோவில்களும் கூடச் சிதைந்து போன நகரமாக, காணுமிடமெல்லாம் பாதுகாப்புத் தரப்பினரின் அடையாளங்களே தெரியும் நகரமாக, கடனாளிகளின் நகரமாக கிளிநொச்சி இருக்கிறது என்று. இதுதான் கிளிநொச்சி. இப்படித்தான் கிளிநொச்சி இருக்கிறது என்று. 

பிறகு மெல்ல மெல்லக் கிளிநொச்சி துளிர்க்கத் தொடங்கியது. யுத்தம் ஓய்ந்த இடங்களில் வழமையாக வந்து சேரும் அனைத்தும் கிளிநொச்சிக்கும் வந்தன. தொண்டு நிறுவனங்களோடு தொண்டுப் பணியாளர்கள் வந்திறங்கினர். வங்கிகள் வந்தன. லீஸிங் கம்பனிகள் வந்திறங்கின. கடன் வழங்கப்பட்டது. அதுவும் தாரளமாக. கேட்கக் கேட்கக் கொடுத்தன எல்லா நிதி நிறுவனங்களும். கடன் வழங்கப்பட்டது என்பதை விட கடன்பட்டனர் சனங்கள் என்று சொல்வதே சரி. கையிலே காசில்லாதவர்கள், வேறு என்னதான் செய்ய முடியும்? காசில்லாதவரின் நிலையைப் பயன்படுத்தின ஏராளம் வட்டி வசூலிக்கும் நிறுவனங்கள். நகரில் ஏனைய கடைகளை விட நிதி நிறுவனங்களே அதிகமாக முளைத்தன. நகரம் கிசு கிசு என்று வளரத் தொடங்கியது. அரச பிரதிநிதிகள் வந்தனர். அமைச்சர்கள் வந்தனர். ஜனாதிபதி வந்தார். அமைச்சரவை கூடியது. திட்டங்கள் வந்தன. கொடிகள் பறந்தன. புழுதியும் பறந்தது.  

சனங்கள் மீள்குடியேறிகளாக இருந்தபோதும் அகதி நிலையில் இருந்து மாறுவதற்கு காலம் தாமதித்தது. இன்னும் அந்தத் தாமதம் உண்டு. படைகள் குறைந்தாலும் அமைதி வளர்ந்தாலும் யுத்தக் காயங்கள் இன்னும் ஆறவில்லை. நெருப்புத் தணிந்தாலும் சூடு ஆறவில்லை என்பார்களே அதுமாதிரித்தான் இன்னும் நிலைமை. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கள் காணிகளுக்குப் பாதுகாப்பாக இதுவரை வைத்திருந்த சனங்களை வெளியே தூக்கிப் போடுகிறார்கள். அல்லது  வெளியே போக மறப்போரை பொலிசில் கதைத்து உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். அநேகமாக இப்படிப் பாதிக்கப்படுவோர் இந்திய வம்சவழியினராகவே (மலையகத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தவர்களாகவே) உள்ளனர். அவர்கள் போரின்போதும் சமாதானத்தின் போதும் இந்தக் காணிகளுக்குக் காவல் இருந்தார்கள். காடுகளை அழித்துப் பயிர்களை வளர்த்திருந்தார்கள். மூன்று நான்கு தலைமுறைக் காலத்தை இந்தக் காணிகளைக் கழித்திருந்தார்கள். என்றாலும் என்ன? சட்டமும் பணமும் ஆவணமும் இவர்களுக்குச் சார்பாக இல்லையே! 

வயல்கள் விளைகின்றன. வாய்க்காலில் நீரும் ஓடுகிறது. குளங்களைத் திருத்திக் கட்டுகிறார்கள். வீதிகள் செம்மையாகின்றன. நகரத்தை ஊடறுத்துப் போகும் ஏ 9 என்ற கண்டி – யாழ்ப்பாணம் பழைய ராசதானிகளுக்கான வீதி பிரமாண்டமாக அகலிக்கப்பட்டுள்ளது. வீடுகளிற் பலவும் புதிதாய் முளைத்துள்ளன. தெருவிலும் விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளது. போதாக்குறைக்கு நகரத்தில் ‘சுப்பர் மாக்கற்’ மற்றும் தேசியக் கொம்பனிகள், பல்தேசியக் கொம்பனிகள் எல்லாம் நிறைந்து கொண்டிருக்கிறது. நியான் விளக்குகளின் ஒளி கண்ணையும் கருத்தையும் பறிக்கிறது. வண்டிகள் குறுக்கும் மறுக்குமாக விரைந்து பறக்கின்றன. எல்லாமே மாயமாக இருக்கிறது. இரண்டு வருசத்துக்கு முன்பு இங்கேதான் யுத்தம் நடந்தது என்று நகரத்தைப் பார்த்தால் யாருமே நம்பமாட்டார்கள். சத்தியம் செய்தாலும் நம்பக்கடினம்தான். 

மீண்டும் கிளிநொச்சியில் ஹெலிகொப்ரர்கள் வந்திறங்குகின்றன. வெள்ளை, கறுப்பு, செம்மஞ்சள் என்று பல வர்ணங்களில் மனிதர்கள் வந்து போகிறார்கள். ஆனால், சனங்கள் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. றொட்ரிக்கோ மைதானம், சர்வதேச மைதானமாக மாறிக்கொண்டிருக்கிறது. சனங்கள் உள்ளுரில் வயலோடும் வாய்க்காலோடும் கிடந்த மாய்கிறார்கள். பலருக்கு வீடும் இல்லை. வயலும் இல்லை. வாய்க்காலும் இல்லை. இதையெல்லாம் வழங்கி மக்களை ஈடேற்றுவதற்காக யாரோ சிலர் இரவும் ஓடிக்கொண்டும் உழைத்துக் கொண்டும்தானிருக்கிறார்கள். வரலாறு என்பது எல்லாவற்றினதும் கலவை என்பது சரியாகத்தான் உள்ளது. 
என்றபோதும் எல்லாவற்றையும் கூர்மையாக அவதானிக்கின்ற, வங்கியொன்றின் தலைமை அதிகாரியாக இருக்கும் ஒரு நண்பர் கேட்கிறார், கிளிநொச்சி எப்படி இருக்கிறது? அங்கே என்ன நடக்கிறது? என்று. இவை பத்தாம் தலைமுறைக் கேள்விகள். ஆனால், புத்தம் புதிய கேள்விகள். 

இலங்கையின் மிக இளைய பட்டினங்களில் ஒன்று கிளிநொச்சி. ஆனால், மற்றைய இளைய பட்டினங்களையும் விட, புகழ்வாய்ந்த மூத்த பட்டினங்களையும் விடக் கிளிநொச்சிக்கு மதிப்புண்டு@ புகழுண்டு. போரிலும் அதற்குப் புகழுண்டு. சமாதான முயற்சிகளிலும் அதற்குப் புகழிருக்கு. போருக்குப் பிறகும் அது எழுச்சியாகவே உள்ளது.  

எல்லாத் துயரங்களின் பின்னும் எப்படியோ ஒளியை வற்ற விடாமல் அது இருக்கிறது. அல்லது எப்படியோ சடுதியாக எழுந்து விடுகிறது. கிளிநொச்சியின்   தாயூற்றாக இருக்கிற இரணைமடுக்குளம் கோடையில் வற்றி மாரியில் பொங்கிப் பிரவாகித்துப் பாய்வதைப் போல கிளிநொச்சியும் ஒரு போது அழிந்து இன்னொரு போதில் எழுந்து விடும் இயல்பைக் கொண்டது என்று சொன்னேன். 

ஆனால், உண்மையில் எனக்கும் தெரியவில்லை, அவருக்கும் தெரியவில்லை, கிளிநொச்சியில் என்னதான் நடக்கிறது என்று. 

நன்றி - எதுவரை

00

Sunday, October 7, 2012

உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை






















நேற்று நாங்கள் வலைஞர்மடத்துக்குப் போயிருந்தோம். அங்கேதான் இறுதிப் போர்க்காலத்தில் தானா விஷ்ணு இருந்தார். அப்படியே வலைஞர்மடம் கடற்கரைக்கும் போனோம். அந்தக் கடலின் வழியாகத்தான் விஷ்ணு தப்பிச் செல்ல முற்பட்டார். யுத்த்தின் இறுதி நாட்களில் தப்பிச் செல்வதைத் தவிர, வேறு வழியில்லாத ஒரு நிலையில், வேறு தெரிவுகளுக்கிடமில்லாத நிலையில், குடும்பத்தோடு விஷ்ணு தப்பிச் செல்ல முயன்றார். இப்பொழுதும் இந்தக் கடலின் வழியாகத் தப்பிச் செல்கின்றனர் பலர். ஆனால், இந்தத் தப்பிப் பிழைத்தல்களும் இவற்றின் நோக்கங்களும் இந்தப் பயணங்களும் வேறு நோக்கம் கொண்டவை. இவை அந்நிய நாட்டுக்கு உழைப்பைத் தேடிய பயணங்கள். கடல்வழியான அவுஸ்ரேலியப் பயணங்கள். 

அன்றைய தப்பிச் செல்லல்கள் வேறானவை. உயிருக்காக, உயிரைக் கையிற் பிடித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தல் என்பது எந்த நிலையிலும் உத்தரவாதமில்லாதது. ஆனால், வேறு வழியில்லை. விஷ்ணு தப்பிச் சென்றார். கைக்குழந்தை நிலையில் இருந்த தன்னுடைய மகளுடன், அபாயங்கள் நிறைந்த கடல்வழியே ரகசியமாகத் தப்ப முயற்சித்த ரகசியப் பயணம் அது. அப்படித் தப்பிச் சென்றவர் தப்பி விடவில்லை. மீண்டும் அபாயத்தில் சிக்கினார். முன்னரையும் விடக் கடினமான அபாயத்தில். விளைவாக விஷ்ணு புலிகளிடத்தில் கைதியானார். பிறகு அகதியாகி முகாம்வரை சென்று மீண்டார். ஆனாலும் இன்னும் விஷ்ணு அகதியே. பால்யபருவத்தில் தன்னுடைய சொந்த ஊரை விட்டுப் பெயர்ந்த விஷ்ணு இன்னும் தன்னுடைய ஊருக்கப் போகமுடியாமலே உள்ளார். 

யுத்தம் விஷ்ணுவைப் பாதித்தது. அவருடைய வாழ்வை, மனதை, இருப்பை எல்லாவற்றையும் பாதித்தது. எல்லாவற்றையும் அது காயப்படுத்தியது. அதனால், அவர் தன்னுடைய சொந்த அனுபவங்களை எழுதுகிறார். தான் சந்தித்த நெருக்கடிகளை, தனக்கு நேர்ந்த அபாய நிலைகளை, கொடுமைகளை, தான் பட்ட துயரத்தை எல்லாவற்றையும் எழுதுகிறார். இது விஷ்ணுவுக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. இது உண்மையின் எழுத்து. நடந்தவற்றின் பதிவு. இவற்றை எழுதுவதன் மூலம் விஷ்ணு வரலாற்றுக்குச் சாட்சியாகின்றார். அல்லது வரலாற்றைச் சாட்சி பூர்வமாக நமக்குத் தருகிறார். இதை விட வேறு என்னதான் செய்ய முடியும் விஷ்ணுவினால்?

இதை யாரும் மறுக்க முடியாது. இதை எதிர்கொள்ளச் சிலருக்குக் கடினமாக இருக்கலாம். இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாதிருக்கலாம். ஆனால், என்ன செய்ய முடியும்? உண்மை அப்படித்தான் உள்ளது. கடினமானதாக. ஏற்றுக்கொள்ள முடியாததாக. சுடக்கூடியதா. இதுதான் அவலம். இதுதான் இன்றைய தமிழ்ச் சூழலின் கொடுமை. உண்மையை மூடி மாபெரும் திரைகள் விரிக்கப்படுகின்றன. மிகக் கடினமான, கெட்டி தட்டிய திரைகள். இந்தத் திரையில் அவரவர் விரும்பியமாதிரி வர்ணங்களைத் தீட்டுகிறார்கள். தாங்கள் விரும்பியமாதிரி எதையோவெல்லாம் வரைகிறார்கள். வரைந்து விட்டு இதுவே உண்மை என்று தோற்றம் காட்டுகிறார்கள். 

இதைக் கடந்து நாம் உண்மைகளைப் பேச முடியாது. யாரும் உண்மைகளைச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், அது அரசியல். அது தவறான அரசியல் என்கிறார்கள். இது எவ்வளவு கொடுமையானது? எவ்வளவு தவறானது? 

வலைஞர்மடத்தில் இன்னும் அவலப்பரப்பு முடியவில்லை. யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. இந்த மூன்றாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருக்கிறது. ஆனால், வலைஞர்மடத்தில், மாத்தளனில், பொக்கணையில், முள்ளிவாய்க்காலில், இரட்டை வாய்க்காலில் எல்லாம் சனங்கள் வாழும் வாழ்க்கையை நீங்கள் போய்ப்பார்க்க வேணும். அவர்கள் அவலத்தின் மத்தியில்தான் வாழ்கின்றனர். 

நேற்றும் நாங்கள் அதைப் பார்த்தோம். இங்கே எங்களோடு ‘அடையாளம்’ சாதிக் அமர்ந்துள்ளார். அவரைக் கேட்டுப்பாருங்கள், அந்தச் சனங்கள் என்ன சொல்கிறார்கள் என்று. 

அழிவின் சின்னங்கள் எதுவும் மறையவில்லை. யுத்த வடுக்கள் எதுவும் நீங்கவில்லை. எல்லாம் அப்படியே உள்ளன. அந்த அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட சடலங்கள் உக்கிவிடாத நிலப்பரப்பில், அந்தப் புதைகுழிகளுக்கருகில் அவர்கள் தங்களின் குடிசைகளை அமைக்கிறார்கள். தாங்கள் புதைத்து விட்டுச் சென்ற உடமைகளை மீட்டெடுக்கிறார்கள். பழைய பொருட்கள் நிறைந்திருக்கும் அந்த நிலப்பரப்பில் யுத்தநாட்களில் இருந்ததைப் போலவே பற்றாக்குறைகளோடு வாழ்க்கிறார்கள். இருள் நிரம்பிய இரவுகளில் பாம்புகளோடும் எலும்புக்கூடுகளோடும் சிதிலமாகிய சூழலோடும் அவர்கள் படுத்துறங்குகிறார்கள். இப்படியான ஒரு சூழலில்தான் அங்கிருக்கும் குழந்தைகள் விளையாடுகின்றன. அவர்களுக்கு இன்னும் பள்ளிக்கூடம் திறக்கவில்லை. பாதைகள் கூடச் சரியாகத்திறக்கப்படவில்லை.  இன்னும் ஒரு தற்காலிக் கூடாரத்தைக் கூட யாரும் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கவில்லை. அரசாங்கமோ, இந்த உலகமோ அவர்களுக்கு அதை இதுவரையில் அமைக்கவில்லை. இப்படியான ஒரு அவலப்பரப்பே அந்தப் பகுதியில் உள்ளது. இதுதான் உண்மை.

இதைச் சொல்வதோ வெளிப்படுத்துவதோ மட்டுமே நாம் செய்யும் பணி அல்ல. அதற்கப்பால் நாம் இயங்க வேண்டியுள்ளது. ஆனால், நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எங்களுடைய தேசிய உணர்வு எப்படி உள்ளது? நமக்குப் பக்கத்தில், தொட்டுவிடக்கூடிய தொலைவில் இப்படியான ஒரு அவலப்பரப்பை வைத்துக் கொண்டு நாங்கள் கொண்டாடுகிறோம். நாங்கள் ஆடிப்பாடுகிறோம். 

கடந்த நல்லூர்த்திருவிழாவின் போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் வந்ததாகப் பத்திரிகைகளில் படித்தேன். இது எப்படி வந்தது? திருவிழாவின்போது நடந்த வியாபாரத்தின் மூலமாகவே இந்த வருமானம் வந்தது? ஆனால், அங்கே?

இதைப் பற்றி எத்தனைபேர் அறிய விரும்புகிறார்கள்? இதைப் பற்றி எத்தனைபேருக்கு அறிய விருப்பம் உள்ளது? நமது தேசிய உணர்வின் சிறப்பும் சீத்துவமும் இப்படித்தான் உள்ளது. நான் யாரையும் தனிப்பட்ட ரீதியில் குற்றம் சுமத்தவில்லை. நான் இங்கே அரசியலைப் பேசவில்லை. ஆனால், நான் இப்படிச் சொன்னால் அது அரசியல் என்கிறார்கள்.

நண்பர் சாதிக் வலைஞர்மடம், பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் என்று எல்லா இடங்களிலும் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்குச் சாதிக்கை யார் என்று தெரியாது. சாதிக்கைப் பற்றி எதுவும் தெரியாது. சாதிக்குக்கும் அவர்கள் யார் என்று தெரியாது. அவர்கள் அகதிகளாக இருந்தவர்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு அப்பால். ஆனால், அவர்கள் தங்களின் கதைகளைச் சாதிக்குக்குச் சொன்னார்கள். தங்களுடைய மன உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தார்கள். வயதில் மூப்பு, இளமை, ஆண், பெண் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அவர்கள் தங்களைத் திறந்து கொட்டினார்கள். 

சாதிக் சொன்னார், ‘கருணாகரன், இதையெல்லாம், இவர்கள் சொல்வதையெல்லாம் நான் வெளியே போய்ச் சொல்ல முடியாது. கண்டிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ள வெகுஜன ஊடகங்களில் இதையெல்லாம் பேசவோ எழுதவோ முடியாது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால், உண்மை இப்படித்தான் இருக்கு. நான் இதைப் புரிஞ்சுக்கிறேன். இதை நீங்க எழுதுங்க. நாம புத்தகமாகக் கொண்டு வரலாம். அதுக்கு வாற எதிர்ப்பையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. உண்மையை நாம் எப்படியோ, எந்த மாதிரியாகவாவது கொண்டு வரத்தான் வேணும்’ என்று. 
சாதிக்குக்கு உண்மை தெரிகிறது. ஆனால், அதை வெளியே சொல்ல முடியாது. அதற்கு அனுமதி கிடையாது. ஆனால், சாதிக் உண்மையை மறைக்க விரும்பவில்லை. வெளிச் சூழலின் நிலைமை இதற்கு எதிர்மாறானது. இதுதான் கொடுமை. இதைத்தான் அவலம் என்பேன். 

சாதிக்கை அழைத்துக்கொண்டு கூடவே வந்த எழுத்தாளர் டானியலின் மகன் சாம் குடும்பத்தினருக்கும் நேற்றுப் பல உண்மைகள் தெரிந்தன. அவர்கள் வன்னிக்கு வரும்போது, வேறு விதமான எண்ணங்களோடு இருந்தனர். ஆனால், வன்னியில் பயணித்து வலைஞர் மடம், மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நேரிற் போய்ப் பார்த்து, அந்தச் சனங்களோடு கதைத்த பிறகு பல விசயங்கள் புரிந்தன. இதை நான் அவதானித்தேன். உண்மைகளை எங்களுடைய ஊடகங்கள் மறைக்கின்றன. மறைத்துப் பெரிய திரைகளை விரிக்கின்றன. தாங்கள் உருவாக்குகின்ற புனைவுகளே உண்மைகள் என்று நிரூபிக்கப்படுகின்றன. பகுதி உண்மைகள் முழுமையான உண்மைகள் ஆக்கப்படுகின்றன. 

சனங்கள் இரண்டு தரப்பையும்தான் கண்டிக்கிறார்கள். அவர்கள் உண்மையைச் சொல்ல முற்படுகிறார்கள். அதையே அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையைச் சொல்லும்போது அது அப்படித்தான் இருக்கும்.  

இன்று சனங்களுக்குத் தேவையானது முதலுதவி. இதை நாம் செய்ய வேணும். இதையே நான் வலியுறுத்துகிறேன். இதையே நான் செய்ய விரும்புகிறேன். இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லட்டும். நான் அதைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை. 

அண்மையில் இதே புத்தகத்திற்கான வெளியீட்டு நிகழ்வில் பேசிய நண்பர் நிலாந்தன் மாற்றங்களைப் பற்றி விரிவாகச் சொன்னார். சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அமைப்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், வரலாற்றில் ஏற்படுகின்ற மாற்றங்கள், மனிதர்களிடத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என எல்லாவற்றையும் தர்க்க பூர்வமாக, வரலாற்று ஆதாரங்களோடு முன்வைத்தார். நாம் எதையும் மாற்றமடைய விரும்பவில்லையா? தோல்விகளை வெற்றியாக்குவதற்கு, அவலங்களை விட்டு நீங்குவதற்கு, நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு எல்லாம் நாம் விரும்பவில்லையா? அப்படியென்றால் தொடர்ந்தும் அவலப்பரப்பிற்தான் இருக்கப்போகிறோமா? 

இதை நான் ஏற்கவில்லை. நாம் பலவற்றிலும் மாற்றங்களைக் காணவேண்டும். மாற்றங்களைச் செய்ய வேணும். 

விஷ்ணுவின் கவிதைகள் உண்மைகளைச் சொல்லி, நடந்தவைகளைச் சொல்லிப் புதிய எல்லைகளை நோக்கி, புதிய சிந்தனைகளை நோக்கி எம்மை நகர்த்தக் கோருகின்றன.  

இரண்டு தீவிரத் தேசிய மனநிலைகளில் சிக்கிச் சிதைந்த சனங்களில் ஒருவரே விஷ்ணு. அப்படிச் சிக்கிய பலியாடுகளில் ஒருவரே விஷ்ணு. அந்தப் பலியாடு தப்பிப் பிழைத்துத் தன்னுடைய கதைகளை இங்கே சொல்கிறது. 

யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. இந்த மூன்றாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருக்கிறது. எவ்வளவோ பேர் வந்து போகிறார்கள். பாதைகள் திறந்துள்ளன. பயணங்கள் நடக்கின்றன. திருவிழாக்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் போட்டிபோட்டுக்கொண்டு கல்யாண மண்டபங்கள் கட்டப்படுகின்றன.  இவையெல்லாம் வேண்டும்தான். ஆனால், இது ஒரு பக்கத்தில் நடக்கும்போது யுத்தம் நடந்த, யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் துடைக்கப்படாமல், அது அவலப்பரப்பாக விடப்படுவதும் வியாபாரமாக்கப்படுவதும்தான் கண்டிக்க வேண்டியது என்கிறேன்.

இந்த மாதிரியான ஒரு சூழல் நம்மைச் சுற்றியிருக்கும்போது, நிச்சயமாக இந்தப் புத்தகத்துக்கும் சரியான விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. விஷ்ணுவின் கவிதைகளை எந்தத் தமிழ் ஊடகமும் துணிச்சலோடு விமர்சிக்கும் என நான் நம்பவில்லை. அப்படி விமர்ச்சிக்க வந்தால் அது இந்த உண்மைகளை எதிர்கொண்டேயாக வேண்டும். அதற்கு யார் தயார்? எந்தத் தரப்பு முன்வரும்? ஆகவே நிச்சயமாகச் சொல்வேன், இந்தக் கவிதைகளுக்கான விமர்சனங்கள் வரவே வராது. உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை. 

00

தானா. விஷ்ணுவின் ‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’ என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வில் கருணாகரன் ஆற்றிய அறிமுகவுரையின

புலிகளும் காலச்சுவடும்


















சில ஆண்டுகளுக்கு முன்பு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் மூலமாக பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ என்ற நாவல் வெளிவருகிறது என்ற அறிவிப்பைப் பார்த்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்போது உள்ளுரச் சிரிப்பே வந்தது. ‘புலி’ என்ற பெயரைச் சம்மந்தப்படுத்தி காலச்சுவடு ஒரு புத்தகத்தை வெளியிடுகிறதே. புலிகளின் ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை எப்படி அனுமதிக்கப்போகிறார்கள்? நிச்சயமாக தேவையில்லாத ஒரு வம்பிலே போய் காலச்சுவடு மாட்டிக் கொள்ளப்போகிறது என்று. ஆனால், அந்த மாதிரியான வம்போ அபாயமோ நிகழவில்லை. இது ஆச்சரியந்தான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற தமிழ் உளவியற் சூழலில் ‘புலி நகக்கொன்றை’ தப்பியது அபூர்வமே.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், காலச்சுவடுவுக்கும் புலிகளின் அபிமானிகளுக்கும் இடையில் ஒரு பனிப்போர் அல்லது உளவியற்போர் நீண்டகாலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலம் வன்னியிலேயே காலச்சுவடுவைப் பற்றி சொல்லப்பட்ட கதைகளும் உருவாக்கப்பட்ட அபிப்பிராயங்களும் இதற்கு ஆதாரம். ஒரு கட்டத்தில் காலச்சுவடுவுக்கு வன்னியில் தடைகூட விதிக்கப்பட்டது. என்ன செய்வது, காலத்தின் கோலம் அப்படி. இன்று கூட நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. இலங்கைக்கு வரும் இந்திய இதழ்களில் இலங்கை தொடர்பான விசயங்கள் இருப்பதில்லை. காலச்சுவட்டிலும் கூட. அவற்றை இங்குள்ள விநியோகஸ்தர்கள் கிழித்தெடுத்து விடுகிறார்கள். யுத்தகாலத்தின்போது  பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் திரு. ஸ்ரீதரசிங் இலங்கை அரசியல் தொடர்பாக எழுதப்பட்டிருந்த ஒரு இந்திய இதழை தருவித்ததற்காக கொழும்பில் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு எல்லோரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்கின்றனர். ‘இன்னும் அந்த நிலைதான் உள்ளதா?’ என்று கேட்டால், ‘யார் உத்தரவாதம் தரமுடியும்? எதுக்கய்யா வீண் வம்பெல்லாம்?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள். ஏற்கனவே நடந்த ‘கசப்பு’களை நினைவு கூருகிறார்கள்.

ஆனால், ஒரு காலம் காலச்சுவடுவுக்கு வன்னியில் வாசகர் வட்டங்களே இருந்தன. அதுவும் நெருக்கடிக் காலத்தில். யுத்தகாலத்தில். இது நம்புவதற்குக் கடினமான ஒன்றாகிவிட்டது இன்று.

யாழ்ப்பாணத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு, 1996, 97, 98, 99 காலப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் வன்னியைக் கைப்பற்றுவதற்காகப் போரிட்டுக் கொண்டிருந்தது. சந்திரிகா குமாரதுங்கவின் மாமனாரான அனுருத்த ரத்வத்த துணைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொண்டு முழுஅளவிலான யுத்தத்தை உக்கரமாக முன்னெடுத்தார். ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆரம்பித்து வைத்த சனங்களின் மீதான படையெடுப்புக் கலாச்சாரத்தை அனுருத் ரத்வத்த தொடர்ந்தார்.

‘ஜெயசிக்குறு’ என்ற பெரும் படைநடவடிக்கை வன்னியை ஊடறுத்து நடந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை அது. சனங்களில் பெரும்பாலானவர்கள் அகதிகளாகவே மாறிவிட்டிருந்தனர். அது மிக நெருக்கடியான ஒரு காலகட்டம். பொருளாதாரத் தடை, தொடர்பாடற் தடை, போக்குவரத்துத் தடை, இராணுவ அழுத்தம் என்று உச்சநெருக்கடிகள் அமூலில் இருந்தன. கடிதங்களைத் தவிர, வேறு தொடர்பாடல் வசதிகளுக்கு இடமில்லை. ஆனால், கடிதங்களுக்கும் சோதனை. வன்னியில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் அத்தனையும் கிழித்துப் பரிசோதிக்கப்பட்டே வெளியில் அனுப்பப்பட்டன. அவ்வாறே வன்னிக்கு வரும் கடிதங்களும் பொதிகளும் பிரித்து மேயப்பட்டிருக்கும். இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையால் சிலவேளைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாகும் ஒரு கடிதம் அல்லது ஒரு பொதி வந்து சேர்வதற்கு. வவுனியா, திருகோணமலை, கொழும்பு என்ற இடங்களில் இருந்த தபால் நிலையங்களில் கடிதப்பொதிகள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் உறங்கின. நிர்வாக நடவடிக்கைகள், சட்டம் எல்லாமே யுத்தத்திற்குச் சேவகம் செய்தன.

இந்த நிலையில்தான் காலச்சுவடு இதழும் வன்னிக்கு வந்தது. காலச்சுவடுவுக்கான கடிதங்களும் வன்னியில் இருந்து சென்றன. இத்தகைய ஒரு தொடர்பாடல் நிலையிற்தான் ‘காலச்சுவடுவின் வாசகர் வட்டமும்’ வன்னியில் இயங்கியது.

1996 யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னிக்கு வந்திருந்த அ.யேசுராசா (அலை இதழின் ஆசிரியர்) சில மாதங்களின் பிறகு படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றிருந்தார். அங்கே அவர் மண்டபம் முகாமில் இருந்து கொண்டு ‘காலச்சுவடு ‘இதழை வாங்கி வன்னியில் இருந்த எமக்கு அனுப்பியிருந்தார். வன்னிக்கு வந்த அந்த ஒரேயொரு இதழை வன்னியில் இருந்த பலரும் மாறிமாறி வாசித்தோம். அந்த இதழில், ஈழத்திலிருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சென்றிருந்த ஒரு சிறுவனின் கடிதமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது மு.புஸ்பராஜனின் மகன் எழுதிய கடிதம் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அந்தக் கடிதத்தில் அன்றைய ஈழநிலைமை பதியப்பட்டிருந்தது.

ஈழநிலைமையைப் பற்றி அதிகமாக வெளியே தெரியாத அல்லது அதிகம் பேசப்படாத நிலையில் ‘காலச்சுவடு’ வெளியிட்டிருந்த இந்தக் கடிதம் வன்னியிலிருந்த பலருக்கும் ஆச்சரியத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து காலச்சுவடு இதழ்களை யேசுராசா அனுப்பி வந்தார். தாமதமாகி வந்தாலும் பலராலும் அவை வாசிக்கப்பட்டன. வந்த இதழ்களில் சிவசேகரம், எம்.ஏ.நுஃமான், சேரன் போன்றோருடைய நேர்காணல்கள் மேலும் கவனத்தை ஏற்படுத்தின. கூடவே ஈழக்கடிதங்கள், கவிதைகள் போன்றவையும். நெருக்கடிக்குள் சிக்கியிருந்த ஈழத்தின் குரல்களைக் கவனமெடுத்திருந்தது காலச்சுவடு. அந்த உணர்கையுடன் பல விசயங்கள் பிரசுரமாகின. முக்கியமாக அப்போது பிரசுரமாகியிருந்த ‘பத்மவியூகம்’ என்ற ஜெயமோகனின் குறுநாவல் கூடுதல் கவனிப்பையும் கூடுதல் வாசிப்பையும் பெற்றிருந்தது. இந்தக் கதை மகாபாரதக் கதையின் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் அப்படியே ஈழநிலவரத்துடன், ஈழயுத்தத்துடன் பொருந்தியது. ஆகவே, அநேகமாக எல்லாவற்றிலும் ஈழநிலவரமே பேசப்பட்டது.

அந்த நாட்களில் ‘வெரித்தாஸ் தமிழ்ப்பணி’ என்ற பிலிப்பைன்ஸைத் தளமாகக் கொண்ட வானொலியும் ஈழ நிலைமைகளில் கூடிய கவனத்தைச் செலுத்தியமை குறிப்பிடக் கூடிய ஒன்று. அப்பொழுது அந்த வானொலியின் இயக்குநராக ஜெகத் கஸ்பார் பணியாற்றினார். வன்னிச் சனங்கள் வெரித்தாஸ_க்கும் காலச்சுவடுவுக்கும் கடிதங்களை எழுதினர். காலச்சுவடுவை வாசிப்போர் தங்களுடைய அபிப்பிராயங்களை விமர்சனமாகவும் விவாதங்களாகவும் கோரிக்கைகளாகவும் எழுதினர். குறிப்பாக அன்று வன்னியில் இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் இயங்கியோர்.

இதன் அடுத்த கட்டமாக, காலச்சுவடுவை தொடர்ந்து வாசிக்கவும் அதனுடைய கவனத்தை ஈழ நிலைமைகளின் மீது குவித்து வைத்திருப்பதற்காகவும் அதற்கு வாசகர் வட்டங்களை உருவாக்கலாம் என்று சிந்திக்கப்பட்டது. இதே காலப்பகுதியில் தமிழகத்திலும் காலச்சுவடுவுக்கான வாசகர் வட்டங்கள் உருவாகியிருந்தன. இது ஈழத்தில் வாசகர் வட்டங்கள் உருவாகுவதற்கான ஒரு எண்ணக்கருவை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி காலச்சுவடுவுக்கான வாசகர் வட்டக் கூட்டம் வன்னியில் - அக்கராயனுக்கு அண்மித்துள்ள ஸ்கந்தபுரம் என்ற இடத்தில் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் வீட்டில் நடந்தது. அப்பொழுது வீடு என்று சொல்லக்கூடியமாதிரி வசதியான அளவில் யாருக்கும் இருப்பிடங்கள் இருக்கவில்லை. தாமரைச்செல்வியும் எங்களைப் போல இடம்பெயர்ந்து ஒரு தற்காலிக கொட்டகையை அமைத்திருந்தார். அந்தக் கொட்டகையின் முன்னிருந்த மாமரநிழலில் இந்த வாசகர் வட்டக்கூட்டம் நடந்தது. பிறகு நடந்த சந்திப்புகளும் பெரும்பாலும் தாமரைச் செல்வியின் முற்றத்தில்தான்.

இந்தக் கூட்டங்களுக்கு அமரதாஸ், பெருமாள் கணேசன், ப.தயாளன், நா.யோகேந்திரநாதன், தாமரைச்செல்வி, கந்தசாமி, குமரவேள் (புவனசிங்காரன்), தி.தவபாலன், அன்ரன் அன்பழகன், அநாமிகன், கிஸ்கார்ட், சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) விஜயசேகரன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். காலச்சுவடுவில் வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல்கள், கதைகள், கவிதைகள், காலச்சுவடுவின் ஆசிரிய தலையங்கள் பற்றிய அபிப்பிராயங்கள் எல்லாம் இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன. சிலர் காலச்சுவடுவுக்குக் கடிதங்கள் கூட எழுதினர். இந்த வாசகர் வட்டத்தின் பதிவுகளும் அந்த நாட்களில் காலச்சுவடுவில் பிரசுரமாகியது.

இதைத் தொடர்ந்து காலச்சுவடுவின் கூடுதல் பிரதிகளைப் பெறும் முயற்சிகள் நடந்தன. கூடவே காலச்சுவடு வெளியீட்டு நூல்களையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்றைய சூழலில் வாசிப்பதற்கான புத்தகங்களோ, இதழ்களோ இல்லை அல்லது மிகக் குறைவு என்ற நிலையே வன்னியில் இருந்தது. வானொலி தவிர்ந்த பிற ஊடகங்கள் எதுவும் கிடையாது. வானொலியை இயக்குவதற்கான மின்கலங்களுக்கும் பெரும் பிரச்சினை. அதனால் சைக்கிளில் இயங்கும் மின்னுற்பத்திச் சாதனத்தைப் பயன்படுத்தியே பலரும் வானொலியைக் கேட்டனர். கொழும்பிலிருந்து வரும் வீரகேசரி வாராந்தப் பத்திரிகைகூட ஒரு வாரம் அல்லது  சில வாரங்கள் பிந்தியே வந்து சேரும். இந்த நிலையில் காலச்சுவடுவும் அதனுடைய வெளியீடுகளும் பெரிய கொடையாக இருந்தன.

காலச்சுவடு நிறுவனம் பணத்தை முக்கியப்படுத்தாமல் - பணத்தையே பெற்றுக்கொள்ளாமல் பிரதிகளை அனுப்பியது. ‘சந்தர்ப்பம் கிடைக்கும்போது பணத்தைத் தாருங்கள்’ என்ற எண்ணப்பாட்டுடன் காலச்சுவடுவின் நிர்வாக ஆசிரியர் கண்ணன் தொடர்ந்து வெளியீடுகளை அனுப்பிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கிளிநொச்சி - திருவையாறு முகவரிக்கு வந்த பொதிகள், பின்னர் அக்கராயன்குளம் முகவரிக்கு வந்தன. அந்தப் பிரதிகளை நாம் நண்பர்களுக்கும் வாசிப்பில் ஆர்வமுள்ள போராளிகளுக்கும் கொடுத்தோம். பெரும்பாலும் பெண்போராளிகளே புத்தகங்களை அதிகமாக விரும்பி வாங்குவர். தற்போது புனர்வாழ்வு முகாமிலிருக்கும் தமிழினி, காலச்சுவடுவின் வாசகரில் முக்கியமானவர். இன்னொருவர் மருதம். இவர் பெண் போராளிகளின் சார்பான வெளியீட்டு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். மற்றவர் சுதாமதி. இவரும் பெண்களின் சார்பாக வெளியிடப்படும் இதழொன்றின் ஆசிரியப்பொறுப்பில் இருந்தவர். இன்னொருவர் மலைமகள். பெண்போராளிகளில் இவர் முதன்மையான எழுத்தாளர். இப்படிப் பலர் இருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு ‘பத்தவியூகம்’ பிடித்திருந்தது. அன்றைய சூழலில் மிகக் கூடுதலான ஈழ வாசகர்களை ‘பத்மவியூகம்’ ஈர்த்தது.

காலச்சுவடுவின் இந்தப் பரவலாக்கம் ஆச்சரியமளிக்கும் வகையில் பெருகிக்கொண்டேயிருந்தது. இதழ்களைப் பெறுவதிலும் இதழ்கள் தொடர்பான அபிப்பிராயங்களை ஆசிரியபீடத்துக்குத் தெரிவிப்பதிலும் தாமதங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் கவனத்தில் எடுத்து, நிலைமையை விளங்கிக்கொண்டு கண்ணன் செயற்பட்டார். அந்த நாட்களில் மனுஷ்யபுத்திரன் ஆசிரியராகப் பணியாற்றினார் என நினைக்கிறேன். அவரும் எனக்குக் காலச்சுவடுவின் சார்பாகக் கடிதங்கள் எழுதியிருந்தார்.

காலச்சுவடுவின் இந்த விரிவாக்கம் வன்னியில் இருந்த சிலருக்கு விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்கவில்லை. இலக்கியக்குழு ஒன்றின் பெயரோடு  அவர்கள் வன்னியில் இயங்கினர். அவர்கள் காலச்சுவடுவைப் பற்றி சந்தேகம் கிளப்பினார்கள். ‘காலச்சுவட்டின் அரசியல், அதனுடைய நோக்கம் எல்லாம் சந்தேகிக்கப்படவேண்டியது, கவனிக்கப்பட வேண்டியது, கண்காணிக்கப்பட வேண்டியது...’ என்று அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையினருக்கும் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கும் சுட்டிக் காட்டிக் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக ‘காலச்சுவடுவை புலிகளின் முன்னணிப்போராளிகளே வாங்கிப் படிக்கிறார்கள். கூட்டங்களிலும் மேடைகளிலும் அதை முன்னுதாரணப்படுத்துகிறார்கள். காலச்சுவடுவில் வருகின்ற சில விசயங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடும்?’ என்று இவர்கள் கேள்வி எழுப்பி எச்சரித்தனர்.

இதேவேளை காலச்சுவடுவில் வெளியாகிக்கொண்டிருந்த வன்னிக் கடிதங்களும் பதிவுகளும் தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோருக்கும் கசப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் ஈழ நிலைவரத்தைப் பற்றி முழுமையான தகவல்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தனர். (இப்போதும் அவர்களுக்குப் பகுதித் தகவல்களே கிடைக்கின்றன) ஈழநிலைமையைக் குறித்து உரிய முறையில் செயற்படுவதற்கான வழிமுறைகளின்றியும் இருந்தனர். அத்துடன், தங்களையும் மீறி களத்திலிருந்து (ஈழத்திலிருந்து) சுடச்சுட பதிவுகளும் குரல்களும் காலச்சுவடுவில் வருகின்றன. இதெல்லாம் அவர்களுடைய ‘செயற்கை அடையாள’த்துக்கும் அவ்வாறான அரசியலுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆகவே, அவர்கள் காலச்சுவடுவைப் பற்றி புலிகளின் புலம்பெயர் மையங்களுக்கும் ஈழத்தில் இருந்த தலைமைக்கும் எச்சரிக்கை நோட்டிஸை விடுத்தனர். ஏற்கனவே அவர்களுக்கும் காலச்சுவடுவுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளும் அபிப்பிராய பேதங்களும் அடிப்படையாக அமைந்தது இன்னொரு காரணம். அவர்கள் புலிகளிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள், ‘காலச்சுவடு ஒரு பிராமணியப் பத்திரிகை. அது ஈழப்போராட்டத்துக்கு எதிரான சக்திகளின் இதழ். ஈழப்பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை எடுக்காதவர்கள் காலச்சுவடுவை ஈழத்திற்குள் அனுப்பிக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்காக ஈழத்தில் நுழைந்து தகவல்களை எடுத்து தமிழகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இவர்கள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குபவர்கள். தமிழகத்தில் செயற்படும் ஈழஆதரவுச் சக்திகளை மதிக்காதவர்கள். இப்படியானவர்களின் இதழை எந்தக் காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது. காலச்சுவடுவுக்கு வன்னியில் - புலிகளின் கோட்டையில் இப்படியான ஒரு ஆதரவுத்தளம் இருப்பது என்பது ஈழப்போராட்டத்துக்குத் தோண்டும் புதைகுழியே’ என்பது வரையில் பேசினார்கள்.

இந்தத் தகவலை அப்பொழுது தமிழகத்தில் தங்கியிருந்த ஈழத்தைச் சேர்ந்தவர்கள் வன்னிக்கு அனுப்பித் தங்களுடைய ‘தேசியப் பணி’யை ஆற்றினர்.

இந்த மாதிரி பல திசைகளிலும் இருந்து எழுந்த எதிர்ப்பலைகளால் புலிகளின் தலைமை குழம்பிப்போனது. எனவே அது காலச்சுவடுவைக் குறித்து அவதானிக்கத் தொடங்கியது. இதனையடுத்து, உடனடியாகவே புலிகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால், அதைப் பகிரங்கப்படுத்தவில்லை. அந்த நிலைப்பாட்டின்படி காலச்சுவடுவைப் பகிரங்கமாக எதிர்க்காமல், ரகசியமான முறையில், அமைதியாக அதை நிராகரிப்பது அல்லது வன்னியில் அதனுடைய செல்வாக்கைத் தணிப்பது என்பது. இந்த நிலைப்பாட்டின்படி அவர்கள் காலச்சுவடு எப்படி வன்னிக்கு வருகிறது? யார் அதனுடைய ஏற்பாட்டாளர்கள்? அதன் தொடர்பாடல் முறை என்ன? என்றெல்லாம் அறிய முற்பட்டனர். பொதுவாகவே எந்த விசயத்திலும் கூரிய - கூடிய கவனத்தை வைத்திருக்கும் புலிகளுக்கு இதெல்லாம் மிகச் சாதாரணமான சங்கதி. அவர்கள் வழியை சுலபமாகக் கண்டு பிடித்தனர்.

வன்னியில் காலச்சுவடு தனிப்பட்ட ரீதியாகவும் தொகையாகவும் வந்து கொண்டிருந்தது. தொகையாக வருவது எனக்கே. ஏறக்குறைய இருபத்தைந்து இதழ்களுக்கு மேல். அத்துடன் வாசகர் வட்டக் கூட்டத்தையும் நாங்களே நடத்தியிருந்தோம். இதெல்லாம் வெளிப்படையான நடவடிக்கைகள்தான். ஆனால், சந்தேகம் என்று வந்து விட்டால் எல்லாமே புதிர்த்தன்மையைப் பெற்றுவிடும். என்னையும் காலச்சுவடுவுடன் நெருக்கமாக அல்லது தொடர்ச்சியாக இருப்போரைப் பற்றியும் அவர்கள் தகவலைத் திரட்டினர். இப்படித் தகவலைத் திரட்டியபோது எவரின் மீதும் உடனடியாகவோ, வெளிப்படையாகவோ நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர்களுக்குப் புரிந்திருக்க வேணும். எனவே இதழ்களை விநியோகிக்கும் என்னைக் கட்டுப்படுத்த வேணும் என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள். இதற்கும் அவர்கள் ஒரு வழியை அல்லது உபாயத்தைக் கண்டு பிடித்தனர். ஆனால், இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வழமையைப்போல செயற்பட்டுக்கொண்டிருந்தோம்.

ஒருநாள் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னிடம் சொன்னார், ‘கருணா, காலச்சுவடுவுக்கும் உனக்குமுள்ள தொடர்பைப் பற்றி என்னட்டை வந்து பொட்டம்மானின் ஆட்கள் விசாரிச்சாங்கள். காலச்சுவடுவைப் பற்றியும் கேட்கிறாங்கள். அது இஞ்ச (ஈழத்துக்கு) எப்பிடி வருகிது? யார் அதை இஞ்ச எடுத்துக்குடுக்கிறது? எண்டு கேட்டாங்கள். தேவையில்லாமல் உன்ரை பேரும் அடிபடுது. உனக்கேன் தேவையில்லாத பிரச்சினை?’ என்று.

இதைக் கேட்டபோது எனக்கு உடனே சிரிப்பு வந்தது. பிறகு கோபம். இறுதியில் பயம். இதென்ன கொடுமை? என்று நினைத்தேன். காலச்சுவடுவின் மூலமாக கணிசமான அளவுக்கு ஈழநிலவரமும் சனங்களின் உணர்வும் வெளிப்படுத்தப்படுகிறது. இதை விளங்கிக்கொள்ளாமல் வேறுவிதமாகச் சிந்திக்கிறார்களே! என்ற கவலை வந்தது. ஆனால், எதுவும் செய்ய முடியாது. விளக்க முற்படலாம். விசயத்தைத் தெளிவாக்கலாம். ஆனால், அது மேலும் சந்தேகங்களைக் கிளப்பும். இறுதில் அதுவே தேவையில்லாத நெருக்கடியில் கொண்டு போய்விடும்.

உண்மையில் காலச்சுவடுவுடனான உறவும் தொடர்பும் பகிரங்கமானது. அதை விநியோகிக்கும் நடவடிக்கையும் இதழ் வருவதும் கூட வெளிப்படையானது. இதழில் நாங்கள் விவாதித்த, பதிவிட்ட விசயங்கள் கூட புலிகளுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாதவை. மறுவளத்தில் அவை அவர்களுக்குச் சாதமானவைகூட. மட்டுமல்ல, மூடுண்ட நிலையில் இருந்த ஈழநிலவரத்தைப் பற்றி நாங்கள் வெளிச்சூழலுக்கு சொல்லியிருக்கிறோம். வன்னியின் அவலத்தையும் மனித உரிமைகள் மீறப்படும் நிலையையும் பதிவிட்டிருக்கிறோம். காலச்சுவடுவில் முன்வைக்கப்படும் வெளிச் சூழலில் உள்ளோரின்  அபிப்பிராயங்கள், அவர்களுடைய செயற்பாடுகள் ஏற்படுத்துகின்ற பாதிப்புகளைப் பற்றியும் எழுதியிருக்கிறோம். சில கடிதங்களை எங்களுடைய நிலைமை மற்றும் பாதுகாப்புக் கருதி காலச்சுவடு வெளிப்படுத்தவில்லை. ஆனால், அவற்றிற் குறிப்பிட்ட விசயங்களை அது கவனத்திற்கொண்டது. அதைப்போல பலருடைய பெயர்களை அது தவிர்த்திருந்தது. ஈழ நிரவரம் பொறுத்து ஏறக்குறைய ஒருவகையில் காலச்சுவடுவை நாம் நெறிப்படுத்தினோம் எனலாம். ஆனால், வன்னியில் இருந்த யாரும் புலிகளைப் பற்றித் தவறாக – முரண்பாடுகளோ, மாற்று அபிப்பிராயங்களோ இருந்தபோதும் - எழுதியதாக நான் அறியவில்லை. அப்படி நடந்திருக்காது என்பதே என்னுடைய நம்பிக்கை. (இந்த நம்பிக்கை இன்றுவரை தளர்ந்ததில்லை).

ஆனால், இதையெல்லாம் அவர்களுக்கு எப்படிச் சொல்வது? அல்லது இதைச் சொல்லித்தான் புரிய வைக்க வேணுமா? எனவே நான் எந்தப் பதிலுமே சொல்லவில்லை. நிலைமையை விளங்கிக் கொண்டு தணிந்தேன். காலச்சுவடுவுக்கோ கண்ணனுக்கோ இதைப்பற்றி எதுவும் கூறவும் இல்லை. தொடர்பாடற்பிரச்சினைகள் அதிகமாக உள்ள நிலையில் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சிக்கலுக்குரிய விசயங்களைப் பற்றிக் கதைப்பதை விட கதைக்காமல் விடுவதே சிறந்தது. எனவே நான் சிறந்த முடிவையே எடுத்தேன். இந்த முடிவு வெளியே இருந்து பார்ப்போருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்திருந்தேன். குறிப்பாகக் கண்ணனுக்கு. ஆனாலும் என்ன செய்ய முடியும்? நிலைமையைக் கண்ணன் விளங்கிக்கொள்ளக்கூடும் என்ற ஒரு நம்பிக்கையோடு இருப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. பொதுவாக – வழமையான சில கடிதங்களோடு காலச்சுவடுவுடனான தொடர்புகளைக் குறைத்து நிறுத்தினேன். அப்படியே மௌனக்காலம் உருவாகியது.

காலச்சுவடுவுடனான உறவு தணிந்து விட்டது. சில காலங்களின் பிறகு கண்ணனும் காலச்சுவடு இதழ்களை அனுப்புவதை நிறுத்திவிட்டார். அவருக்கு வேறு தெரிவுகள், வேறு வழிகள் உடனடியாக இல்லாதிருந்திருக்கலாம். அல்லது நிலைமையைப் புரிந்திருக்கலாம். என்றபோதும் வன்னிக்குக் காலச்சுவடு வந்தது. ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும். முக்கியமாக புலனாய்வுத்துறையினருக்கு. சிறி, புகழேந்தி, தூயமணி, மாதவன் மாஸ்ரர், நாவலன் என்போருக்கு. ஆனால், அவர்கள் வேறு ஆட்களின் முகவரி வழியாக அவற்றைப் பெற்றனர். அதில் ஒரு முகவரி முல்லைக்கோணேஸினுடையது.  மாதாந்தம் ஒரு இதழ் முல்லைக்கோணேஸ_க்கு வரும். அவர் அந்த இதழை முதலில் படித்து விடுவார். கூடவே நானும் படித்து விடுவேன். ஆனால், அதைப் பற்றி நாம் வெளியே காட்டிக் கொள்வதில்லை. இதழைப் பக்குவமாக உரியதரப்பிடம் கோணேஸ் சேர்த்து விடுவார்.

காலச்சுவடுவில் வெளியாகும் சில கட்டுரைகளையும் அதனுடைய ஆசிரியர் தலையங்கங்களையும் போட்டோப் பிரதி எடுத்து புலிகள் உட்சுற்றில் விட்டனர். இந்த உட்சுற்று பெரும்பாலும் போராளிகளுக்கானது. அதிலும் பொறுப்பாளர்களுக்குரியது. அப்படி வந்த உட்சுற்றொன்றை எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் நானும் பார்த்தேன். அப்போதும் எனக்குச் சிரிப்பே வந்தது. ஒரு இதழைப் பகிரங்கமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால், அந்த இதழின் உள்ளடக்கங்களை உட்சுற்றில் விட்டு ரகசியமாகப் படிக்கிறார்கள். இது என்ன மாயமோ!

காலச்சுவடு பற்றிய அபிப்பிராயங்கள் பகிரங்கமாகவே பேசப்பட்டன. வன்னியில் காலச்சுவட்டை எதிர்த்த அணி, அதற்கு விதிக்கப்பட்டிருந்த அறிவிக்கப்படாத தடையின் மூலமாக அகமகிழ்ந்தது. அவர்கள் என்னையும் காலச்சுவடுவின் வாசகர் வட்டத்தில் தொடர்பானவர்களையும் காலச்சுவடுவுடன் தொடர்பு படுத்தி ‘ஒரு மாதிரி’யாகப் பேசும் பட்டியலில் இணைத்தனர். அவர்கள் ஒரு போதும் உண்மையை நோக்கி வரப்போவதில்லை. உண்மைகளுக்கும் நன்மைகளுக்கும் எதிர்த்திசையில் சிந்தித்துக்கொண்டிருப்போரால் எப்படி யதார்த்தத்துக்கு நகரமுடியும்? பதிலாக எம்மை நிர்ப்பந்தித்துத் தங்களின் காலடியிற் பணிய நிந்தித்தனர்.

காலச்சுவடு தடைசெய்யப்பட்டது பெரிய விசயம் என்றும் இதன்மூலம் ஒரு பெரிய ஆபத்திலிருந்து ஈழப்போராட்டத்தைத் தாம் காப்பாற்றி விட்டதாகவும் அவர்கள் பாவனை பண்ணினர். ‘காலச்சுவடுவுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை இயக்கம் கவனிக்கிறது’ என்ற கதையையும் பரப்பினர். இதன்மூலம் எங்களுடன் நட்பாக இருந்த பலர் மெல்ல ஒதுங்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இப்படி இருந்த நிலையில் திடீரென ஒரு மாற்றம். 2002 ரணில் - பிரபாகரன் உடன்படிக்கை ஏற்பட்டபோது நம்புவதற்கே கடினமான பல மாற்றங்கள் ஏற்பட்டன. வெளியே நின்றவர்கள் உள்ளே வந்தனர். உள்ளே நின்றவர்கள் வெளியே போனார்கள்.  பாதைகள் திறந்தன. பயணங்கள் நடந்தன. தடைகள் மென்தடைகளாகின. மென்தடைகள் காணாமற்போயின. காலச்சுவடு மீண்டும் வன்னிக்கு வந்தது. வன்னியெங்கும் புலிகள் நடத்திய ‘அறிவு அமுது’ என்ற புத்தகக்கடைகளில் காலச்சுவடு பகிரங்கமாக விற்கப்பட்டது. ஏறக்குறைய நூறு இதழ்களுக்கு மேல் ‘அறிவு அமுது’ வுக்கு வருகிறது என்றும் அவ்வளவுமே விற்று முடிகின்றன என்றும் அதன் விற்பனையாளர்கள் சொன்னார்கள். முன்பதிவு செய்து பலரும் காலச்சுவடுவை வாங்கினர். இந்த முன்பதிவாளர்களில் காலச்சுவடுவை வன்னியில் அனுமதிக்கக்கூடாது என்று சொன்ன தரப்பும் அடக்கம். இதையெல்லாம் பார்த்தபோது மீண்டும் எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது. அது ஒருபோதும் நன்மையைத் தராது. தீமையை, ஆபத்தையே தரும். உண்மையையும் நன்மையையும் தீமையாக, எதிர்ப்பாகக் காட்டிக்கொள்வதற்குத் தேர்ச்சியடைந்தவர்கள் இருக்கும் சூழலில் மௌனமே சிறந்த வழி. இப்போதும் நான் இந்தச் சிறந்த வழியையே தேர்ந்தேன்.

‘அறிவு அமுது’வில் ‘காலச்சுவடு’ மட்டும் அப்படிப் பகிரங்கமாக விற்பனையாகவில்லை. ‘காலச்சுவடு பதிப்பக’த்தின் புத்தகங்கள் தொடக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே தடைசெய்யப்பட்டிருந்த ‘சரிநிகர்’, ‘தினமுரசு’, ‘எக்ஸில்’, ‘உயிர் நிழல்’ எனப்பல இதழ்களும் விற்பனைசெய்யப்பட்டன. போததாக்குறைக்கு சேரன், ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, திருக்கோவில் கவியுவன், ஓட்டமாவடி அறபாத், சிவரமணி, செல்வி, கோவிந்தன் (புதியதோர் உலகம்) எனப்பலருடைய புத்தகங்களும் விற்கப்பட்டன.

இதையெல்லாம் பார்க்கும்போது சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால், சிரிக்க முடியாது. ஆனாலும் ஒன்று, இப்போது நாங்கள் காலச்சுவடுவையோ பிற ஏடுகளையோ புத்தகங்களையோ துணிச்சலாக வாங்கிச் செல்ல முடியும். இது ஒரு வகையில் பெரிய வாய்ப்பு. வன்னியிலே புத்தகங்களோ சஞ்சிகைகளோ வாங்க முடியாத நிலையில் இருந்த எங்களுக்கு இந்த மாதிரி எங்கள் ஊர்களிலேயே இவற்றையெல்லாம் வாங்க முடிகிறது என்றால் சும்மாவா! பலரும் தங்கள் வசதிக்குத் தக்கபடி புத்தகங்களை வாங்கி அடுக்கினார்கள். சிலர் ஓடர் கொடுத்து வாங்கினார்கள். இப்படி வாங்கிக் கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் ஒரு நண்பர் ஒரு குண்டைத் தூக்கித் தலையில் போட்டார் - இல்லை இதயத்திற் போட்டார்.

‘...இப்படி எல்லாத்தையும் புலிகள் திறந்திருக்கிறார்களே! ஏன் தெரியுமா?’ என்று கேட்டார் அந்த நண்பர். ‘புதிய சூழல் உருவாகியிருக்கு. அதனால் எல்லாத்திலயும் மாற்றம் வந்திருக்கு. புத்தகங்களும் அப்படி, அந்த மாற்றத்தோடதான் வந்திருக்கு’ என்றேன்.

அவர் சிரித்தார். ‘உனக்கு விசயம் விளங்கேல்ல. அவர்கள் (புலிகள்) எல்லாத்தையும் கண்காணிக்கிறாங்கள். முழுசாகத் திறந்து விட்டிட்டு என்ன நடக்குது? யார்யாரெல்லாம் என்னவெல்லாம் செய்யினம் எண்டு பாக்கிறாங்கள். அறிவு அமுது கடையில வந்து ஆர் ஆர் என்னென்ன புத்தகங்களை வாங்கிறது எண்டு பார்த்து விவரம் எடுக்கிறாங்கள்’ என்றார் நண்பர். எனக்கு இப்போதும் சிரிப்பு வந்தது. ஆனால், சிரிப்பையும் மீறிக் கடுமையான யோசினை வந்தது. இந்த நண்பர் சொல்வது உண்மையாக இருக்குமா? அல்லது இது ஒரு புனைவா? திட்டமிட்ட புனைவா? இல்லையென்றால் தேவையற்ற சந்தேகமா? எப்படி இந்தக் கதை முளைத்தது? ஏன் முளைத்தது? ஒரு நோயைப் போல எல்லாவற்றுக்கும் அதீதமான காரணங்களையே சொல்லிக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கிறோமா என்று எண்ணினேன். ஆனால் இதை நண்பருடன் விவாதிக்கவில்லை. அவருடைய கூற்றை நிராகரிக்கவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இரண்டுக்கும் சாத்தியங்கள் இருந்தன. பகிரங்கமாக எதையும் பேச, விவாதிக்க முடியாத நிலையில் அச்சமே தலைதூக்கியிருக்கும். மௌனமே கோலோச்சும். அவையே இங்கும் தலையைத் தூக்கிக்கோலோச்சின.

இப்படி இருக்கும்போது தமிழகத்தில் இருந்து ஈழ ஆதரவாளர் என்போர் ஒவ்வொருவராக வன்னிக்கு வந்தனர். வந்தவர்கள் என்னையும் சந்தித்தனர். அறிவு அமுதுவுக்கும் சென்றனர். அறிவு அமுதுவில் அவர்களை ஆகர்ஷிக்கும் விதமாக முன்னரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் எழுத்துகளைக் கொண்ட பலநூறு வகையான புத்தகங்கள். மேலும் விடியல், கிழக்கு பதிப்பக நூல்களும். அப்படியே கடையினுள் உலாத்திக் கொண்டு வந்தால், காலச்சுவடு, உயிர்நிழல், எக்ஸில் அது இது என்று எல்லாவகையிலுமான பல வெளியீடுகள். இதையெல்லாம் பார்த்த ஈழ ஆதரவாளர்களுக்கு தலைசுற்றியது. என்ன நடக்கிறது? என்று பதறியடித்துக்கொண்டு தங்களின் தொடர்பு வழிகளால், புலிகளின் மேலிடங்களுக்கு முறையிட்டார்கள். ஆனால், மேலிடம் இதையெல்லாம் பொருட்படுத்தியமாதிரி இல்லை. ‘எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே, கண்காணித்துக்கொண்டே செய்கிறோம். உங்களுக்கிருக்கும் விழிப்பும் எச்சரிக்கையும் எங்களுக்கும் இருக்கிறது’ என்று சொல்லாமல் உணர்த்தினர் புலிகள். அதாவது, அவர்கள் இதையெல்லாம் விற்பனை செய்வதை நிறுத்தவேயில்லை. இது ஈழஆதரவாளர்களுக்குச் சற்று ஏமாற்றத்தைத் தந்தது.

எனக்கு இப்பொழுதும் சிரிப்பு வந்தது. ஆனால், இந்தத்தடவை நான் சிரித்தேன். சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவர்கள் என்னுடன் சண்டைக்கு வந்துவிட்டார்கள். காலச்சுவடுவை இங்கே – வன்னியில் - அறிமுகப்படுத்தி, அதற்குக் களம் அமைத்துக்கொடுத்து எல்லாவற்றையும் பாழாக்கி விட்டேன் என்றும் தமிழகத்தில் வந்து பாருங்கள், அந்த இதழுக்கிருக்கும் எதிர்ப்பை என்றும் சொன்னார்கள். ஏறக்குறைய என்மீது உச்சக்கோபம் அவர்களுக்கு. நான் அவர்களுக்கு உண்மை நிலைமையை விளக்கினேன். ‘காலச்சுவடு ஈழ நிலைமையை வெளியே கொண்டு வந்தது. அதனிடம் விமர்சனத்துக்குரிய பகுதிகள் இருந்தாலும் இந்தப் பங்களிப்பையும் கவனம் செலுத்துகையையும் நாம் மறுக்க முடியாது. வேண்டுமானால் காலச்சுவடுவுடன் நாம் மேலும் பேசலாம். அதனுடைய குறைபாடுகளை நீக்க முயற்சிக்கலாம். பகிரங்கமாக அதனுடைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை முன்வைத்து, அதனுடைய பதிலை வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கலாம். இந்த மாதிரிச் செயற்படுவதை விடுத்து. எப்படி ஒரு இதழை நிந்திக்க முடியும்? நிராகரிக்க முடியும்’ என்று கேட்டேன்.

இதையெல்லாம் அவர்கள் கேட்டுக்கொள்ளவேயில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. வந்தவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த வன்னி அரசு, ஓவியர் புகழேந்தி போன்றவர்கள் ஓரளவு யதார்த்தமாகச் சிந்தித்தனர். நிலைமைகளை யதார்த்;தத் தளத்தில் வைத்துப் புரிய முற்பட்டனர். பா. செயப்பிரகாசத்துக்கு என்னுடைய பதிலில் திருப்தியில்லையென்றாலும் அவர் வலிமையாக மறுக்கவில்லை. ஓவியர் மருது குழப்பங்கள் இல்லாதவர். அவர் எல்லாவற்றையும் நிதானமாகவே புரிந்து கொண்டார். விவாதிப்பதற்குப் பதிலாக அறிவதிலேயே அவர் ஆர்வமாக இருந்தார். அதிலேயே அக்கறை காட்டினார். நீண்டகாலம் இருந்த உதிப்பூக்கள் மகேந்திரனும் தேவையில்லாமல் அதீதமான உரையாடல்களைச் செய்ததில்லை. மருதுவைப்போல இடங்களை அறிவதிலும் சனங்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதிலும்தான் மகேந்திரனும் அதிக அக்கறையைச் செலுத்தினார். ‘நாலும் வரட்டும். மக்கள் நல்லதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது’ என்பார் மகேந்திரன். அவர் எல்லா இதழ்களையும் வாங்கி எடுப்பார்.

வந்தவர்களிலேயே உச்சத்தொனியில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லிக் கட்டளை பிறப்பித்தவர் சீமான். சீமான் பல குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்தார். தமிழகத்தில் ஈழப்போராட்டத்துக்கு எந்த மாதிரியான சக்திகள் எல்லாம் எதிர்ப்பாக இருக்கின்றன என்று அவர் பெரிய பாடமே நடத்தினார். அதில் காலச்சுவடுவும் கறுப்புப் புள்ளியைப் பெற்ற ஒன்று. சீமானுடன் விவாதிப்பதில் பயனேதுமில்லை என்று ஒதுங்கிக்கொண்டேன். போலிகளின் காவலன் அவர் என்பதை அவருடைய அதீதப் பேச்சிலும் கருத்துகளிலும் புரிந்து கொண்டோம்.

இந்தச் சூழலில் 1983 ஜூலை வன்முறை நினைவுகளின் 25 ஆவது ஆண்டு நினைவைக் கூரும்வகையில் காலச்சுவடு ஒரு வலிமையான பதிவைச் செய்யவுள்ளது என்று சேரனும் கண்ணனும் சொன்னார்கள். இந்தப் பதிவுக்கு என்னையும் எழுதமுடியுமா என்று சேரன் கேட்டார். நான் சம்மதித்தேன். ‘காயங்களில் இருந்து பிறந்த ஒளி’ என்ற கட்டுரையை எழுதினேன். இந்தக் கட்டுரை வந்ததைப் பார்த்தவர்கள் மீண்டும் கொதித்தெழுந்தார்கள். பிறகென்ன, வசையும் புரளியும் கிளப்பப்பட்டன. தமிழகத்தில் இருந்து வந்தவர்களும் இந்தக் கொதிப்போடு இணைந்து கொண்டனர். காலச்சுவடு தந்திரோபாயமாக ஈழப்போராட்டத்தைப் பற்றிப்பேசுவதாகக் காட்டிக் கொண்டு உள்நுழைவை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று குற்றப்பத்திரிகையைத் தயாரித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், அறிவு அமுதுவில் எல்லாப் புத்தகங்களும் இருந்து கொண்டேயிருந்தன. யுத்தம் கிளிநொச்சிக்கு வரும் வரையில், அது விசுவமடுவில் உள்ள ‘அறிவு அமுது’ வின் கிளையை மூடும் வரையில் எல்லாம் இருந்தன. என்ன மாயமோ எல்லாவற்றுக்கும் இடமிருந்தன. இதேவேளை, இன்னொரு பக்கத்தில் அந்த ஜூலைச் சிறப்பிதழ் பல பிரதிகள் வாங்கப்பட்டு உட்சுற்றில் உலாத்திக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு படியெடுத்தும் கொடுக்கப்பட்டது.

இந்தக் கூத்தெல்லாம் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கிளிநொச்சியில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் தேவிபுரம் என்ற இடத்தில் தங்கியிருந்தோம். அங்கே எங்களின் கூடாரத்துக்கு அண்மையில் போராளி குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. அவர்களில் ஒரு பெண், அநேகமாக அவருக்கு முப்பது வயதிருக்கலாம். அந்தச் சூழலிலும் காலச்சுவடுவை வைத்து வாசித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். சனங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். வெடிசத்தங்களும் சனங்களின் இரைச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன.

எனக்கு அப்போதும் சிரிப்பு வந்தது. ஆனால், சிரிக்கும் நிலையில் நான் இருக்கவில்லை.

00

நன்றி - காலச்சுவடு (154)