Thursday, October 11, 2012

தொலைந்த பின்னும் இருத்தல்

















அவர்கள் எங்கோ சென்றனர்
என்னவாகவோ ஆயினர்

சென்றபின்னும்
செல்லமுடியா நிழல் உறைந்துளது
இம் மண்ணடுக்கில்
அடுக்கடுக்காக
இரத்தச் சூட்டுடன்
ஆழத்தே.

ஒரு பெரும் மயான வெளி

எரிந்தழிந்த உடல்கள்
துப்பாக்கிகளால் எரிக்கப்பட்ட துப்பாக்கிகள்
எல்லாம் அவ்வெளியின் கோரமாகி
சாட்சியாகி
அவ்வெளியின் நினைவாகின

ஓலங்களின் படிகை
காயாத குருதியின் மணம்
அவ்வெளியின் அடியில்
ஆழ் மையம் வரையில்
நீரூற்று வரையில்
சென்றிறங்கி
ஆயிற்றொரு வரலாறு.

வரலாறென்பது அகாலமாயிற்று
வாழ்வென்பது ஓலமாயிற்று

செல்ல முடியாப் பயணத்துக்காக
அவர்கள் எல்லாச் சவாரிகளையும் நடத்தினர்
எல்லாச் சவாரிகளுக்காகவும் சவுக்குகளைச் சொடுக்கினர்
அத்தனை சவுக்குகளின் சொடுக்கும்
அழியவில்லைக் காற்றில்

போகாத பயணங்கள் காலடியில்
விசைகுன்றாச் சவுக்குகளின் சொடுக்குதல்கள்
ஒவ்வொரு சொடுக்குக்கும்
ஓராயிரம் ஓலக்குரல்

பலி கொள்ளப்பட்ட இதயத்துக்கு
அளிக்கப்பட்ட பரிசு
அவமானமும் கண்ணீரும்.

00

No comments: