
ஒரு நூலில் ஆடுகிறது
நாடகம்
கலக்கத்தின் முனை
இன்னும் கூர்மையடைகிறது
இரத்தத்தை ஊற்றிவிட்டு
பாத்திரத்தைக்கழுவுகிறான் கடைக்காரன்
இலையான்கள் தூங்கப்போய்விட்டன
நான் முழித்திருக்கிறேன்
நினைவில் வருகிறாள் லோத்தின் மனைவி
அழமுடியாமலிருக்கும் அக்மதோவா
யாரிடமும் பேசவில்லை
ரஞ்சகுமாரின் கோசலை
இன்னும் விம்மலை நிறுத்தவில்லை.
திரும்ப முடியாத திசையில்
சென்றுவிட்டது படகு
மலையுச்சிக்கு வா
கல்லிலும் மரம் நிற்கும் அதிசயத்தை
சொல்லும் உன் கண்கள்.
கடலின் ஆழத்தில்
தேங்கி நிற்கிறது இரத்தத்துளிகளும் கண்ணீரும்
கரைய முடியாததுயரமும்
அவர்கள் திட்டிய
வசையும்.
சாம்பல் மேட்டில்
காத்திருக்கிறான்
புலவன்
இரவு
அவனிடம் விடை பெற மறுக்கிறது
காலையைச்சந்திக்க அதனிடம்
எந்த வலிமையும் இல்லை
இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது
பிணத்தின் வாடை.
எங்கே அந்தக்காகங்கள்
கடற்கரையில்
பாடமறுத்த தேவனை
அவர்கள் சிலுவையிலறைந்தபோது
எழுந்த குரல்
அந்த மண்ணில் சுவறிவிட்டதாக
அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள்.
திடுமுட்டாக வந்த விருந்தாளியை
அழைத்துப்போய்
மாப்பிளையாக்கினாள் சிறுமியொருத்தி
பள்ளிக்குப் போக மறுத்த பிள்ளைகளை
கூட்டிச் செல்கிறான்
ஊராடி.
கண்ணீர்
பாம்பாக ஊர்கிறது
ஊரெங்கும்
00
No comments:
Post a Comment