Tuesday, January 3, 2012

சாதுர்யை












பூவரசம் மரநிழலின் கீழே
என்ன பேசுகின்றன புலுனிகள்
உன்னைப்பற்றியா
அல்லது தங்களைப் பற்றியா
அந்தக் காலையில் என்னைக் கண்டதும் அவை
வெட்கப்பட்டன
நிகழவிருக்கும்
அதிசய முகுhர்த்தத்தை எண்ணி

உனது முற்றத்தில்
தரையிறங்கும் சூரியனை வரவேற்க
காத்திருந்த தோழிகளாய்ப் பூத்திருந்த செடிகள்
என்னையும் வரவேற்றன.

மாமரத்தில்
உனது குழந்தைக் குதூகலத்தை
ஊஞ்சலாக்கியிருந்தாய்.
எதைப்பற்றிய பேச்சுகள்
எதைப்பற்றி ஞாபகங்கள்
எதைப்பற்றிய நினைவு மீட்டல்கள்
அல்லது எதைப்பற்றிய கனவுகள்...

ஆயிரம் விழிகளும் பேரிதயமும் கொண்ட ரசிகன்
வந்திருக்கிறான்
ஒரு நதி குதித் தோடுவதைக்காண
ஒரு தேர் மலராவதைப் பார்க்க
பேரழகு மயில்
ஏனின்னும் ஆடவில்லை
பேரழகு மயில் ஏனின்னும் ஆடவில்லை?

தாளமும் யதியும் சிந்திடச் சென்றாள்
என்னை அவ்வெளியிற் தனியே தவிக்க விட்டு
புயலென

பிறகவளைக் கண்டேன்
அவளுடைய அந்த நீண்ட மூக்கில்
தூக்கணாங்குருவிகள் கூடு கட்டியிருந்தன
அவளைப் பிரார்த்தித்தேன்
அவள் கோபமுற்றால்
அந்தக் கூடுகள் தீப்பிடித்து விடக் கூடாதென்று.

இன்னொரு சனிக்கிழமைக்காக
காத்திருக்கிறேன்.

No comments: