Friday, January 6, 2012

மாயம்














இந்த நகரத்தில்
பெய்த கடைசி மழைத்துளியின்
ஓசையில் ஒலித்த பாடல்
உன் காலடியோசையா இதயத்தின் ஒலியா
எதுவென்றறியாமல்
பிரிந்து சென்றது மழை
தவிப்போடு.

அதிகாலையில்
தூக்கத்தின் மீது மிதந்து சென்ற கனவில்
ஒரு சிறகை
புன்னகையாகச் சொருகிய பெண்ணே
எங்கேயிருக்கிறாய் இந்த நிமிசத்தில் ?

விடைபெறக் காத்திருக்கும்
இந்தத் தெருவில் ஆயிரம் வலைகள்
ஆயிரம் வலைகளிலும் ஆயிரமாயிரம் கண்ணிகள்

நடந்து செல்லவும் பேசிச் சிரிக்கவும்
இந்தத் தெருவில் இல்லை
ஓரிடம்,
ஓரிடமும்.

சிறிய இடமொன்றிலேனும்
இருக்குமா ஒரு கூடு
மவுனமும் அன்பும் நிரம்பி ?

தன்னை அறியும் படியாய்
அகமலரும் ஒளிக் காட்சியில்
அவளறியட்டும் அவளை
அவள் அரசியென்பதை
அவளைச் சுற்றியிருக்கும் அன்பின் ஆழ்படர்கையை

இந்த நகரத்தில்
மிதக்கும் பறவை அவளின் நிழல்
நகர்ந்து கொண்டேயிருக்கும் அந்த நிழலில்
புக்களைச் சூடுகிறேன் ஒரு மழலையாய்...

நகரின் புராதனத்திலும் நவீனத்திலும் கலந்திருக்கும்
வாசனை
அவள்தானென்று சொல்லும் சரித்திரக் குறிப்புகளை
செதுக்கிக் கொண்டிருக்கிறான்
கல்வெட்டில் ஒரு வரலாற்றாசிரியன்.

பெருகும் புன்னகை
வழிந்தோடுகிறது நகரின் தெருக்களிலும்
மாடங்களிலும்
பயணிகளிலும்

00