Sunday, July 22, 2012

அறப்பிழை - பாட்டி சுட்ட வடை





























01
பாட்டி வடை சுட்டகதையை யார் முதலில் உருவாக்கினார்களோ தெரியாது. ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தக் கதை சொல்லப்படுகிறது.
அந்தக்கதையைக் கேட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுதும் அதை மறப்பதில்லை. அது வேடிக்கையும் சுவாரஷ்யமும் நிரம்பிய இளவயதுக் கதை. அறவிழிப்புக் கதைகளில் அது முக்கியமான ஒன்று. ஆனால், அறவிழிப்பைப் பிரதானப்படுத்தி யாரும் அந்தக் கதையைச் சொல்வதும் இல்லை. அப்படி அதைக் கேட்பதும் இல்லை.

இதற்கு மாறாக, நரியின் தந்திரத்தைப் பிரதானப்படுத்தி, அதனுடைய புத்திசாலித்தனத்தைக் குவியப்படுத்தியே இந்தக் கதை சொல்லப்படுகிறது.

பாட்டிக்கு ஏற்பட்ட பாதிப்பை விட காகத்திடமிருந்து வடையைப் பறித்துக் கொண்ட நரியின் தந்திரத்தையும் அதனுடைய கெட்டித்தனத்தையும் குறிப்பிட்டுக்காட்டுவதே கதை சொல்லிகளின் நோக்கம். ஆகவே, அவர்கள் அதைக் குறித்தே சிந்திக்கிறார்கள். என்பதால், இந்தக் கதையில் - கதையினுள்ளே நிகழ்ந்திருக்கும் - நிகழ்ந்து கொண்டிருக்கும் அற வீழ்ச்சியைப் பற்றி அவர்கள் சிந்திக்கத் தவறிவிடுகிறார்கள்.

எனவே இங்கே பாட்டி வடை சுட்ட கதை, அல்லது பாட்டியிடமிருந்து வடையைக் காகம் பறித்துச் சென்ற கதை, அல்லது காகத்திடமிருந்து தந்திரமாக நரி வடையைப் பறித்த கதை என்பது வெளிப்பார்வையில் நரியின் புத்திசாலித்தனத்தைச் சொல்லும் கதைதான்.

காட்டு விலங்குகளில் அதிபுத்திசாலித்தனமும் தந்திரமும் உடையது நரி என்பது பொதுவான அபிப்பிராயம். அதை மேலும் நிரூபிக்கும் நோக்கில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. புத்திசாலித்தனத்தின் வீரியத்தை இயம்புதலே இங்கே குவியம். புத்திசாலித்தனத்தின் மூலம் காரியங்களை வெற்றியாக்கலாம் என்ற சிந்தனையை – அந்த நோக்கை உருவாக்குதே இதன் அடிப்படை. வணிகமயமாகிய உலகில் வெற்றியே முதன்மையானதாகும். அதுவே அவசியமானது. ஆகையால் வெற்றிகளின் மூலமே வாழ்வை ஸ்தாபிக்கலாம்  என்பது பொதுநம்பிக்கையாகிறது. ஆனால், இந்த வெற்றிகள் எத்தகைய அடிப்படைகளைக் கொண்டவை என்பதைப் பலரும் அறிவதில்லை. தவறான அடித்தளங்களைக் கொண்ட எத்தகைய வெற்றியும் நீடித்திருப்பதில்லை. அவை அதிக பிரகாசத்தைக் காட்டும் மின்னல் போலத் தோற்றம் தரும் தற்காலிக வெற்றிகளே.

பாட்டியிடமிருந்து வடையை அபகரித்த காகம் முதலில் வெற்றியைப் பெறுகிறது. இப்போது காகத்திடம் வடையுண்டு. ஆனால், அது மின்னலைப்போலக் கணநேரத்திற்கு மட்டுமேயான வெற்றி. அடுத்த சில கணங்களில் அந்த வடை நரியிடம் போய்ச் சேருகிறது. பாட்டியிடமிருந்து வடையை எடுத்திருந்தாலும் அதைத் தனக்குரியதாக ஆக்கிக் கொள்ள காகத்தினால் முடியவில்லை. (ஆகவே இந்த வெற்றியென்பது நிரந்தரமானதல்ல என்பது புரிகிறதல்லவா!)

பாட்டியிடமிருந்து வடையைப் பறித்த காகத்தை தந்திரத்தின் மூலம் ஏமாற்றிவிடுகிறது நரி. இங்கே நரி தன்னுடைய மூளையின் உழைப்பைப் பயன்படுத்துகிறது. அதாவது தந்திரம் செய்கிறது@ புத்திசாலித்தனமாகச் செயற்படுகிறது. அதனால் அதனுடைய புத்திசாதுரியமே அதற்கு வடையைப் பெற்றுக் கொடுக்;கிறது.

ஆகவே, நரியின் புத்திசாலித்தனம் இங்கே மதிப்பைப் பெறுகிறது.

ஆனால், அது எத்தகைய அடிப்படையைக் கொண்டது, எத்தகைய அறத்தைச் சாரம்சமாகக் கொண்டது என்று கதையில் சொல்லப்படவில்லை. கதையைச் சேர்ந்தியங்குவோரின் மனதிலும் இது குறித்த கேள்விகள் உருவாக இல்லை. இது துயரமான ஒரு நிலையே.

தந்திரங்கள் நிறைந்த புத்திசாலித்தனம் லௌகீக வாழ்க்கையின் பிரதான அடிப்படைகளில் ஒன்று.  தந்திரங்கள் நிறைந்த புத்திசாலித்தனமே இந்த உலகத்தில் லௌகீக வாழ்க்கைக்கு உதவும் என்பது பொதுவெளியின் பெரு நம்பிக்கை. ஆகவே புத்திசாலித்தனத்தை மையப்படுத்தியவாறு இந்தக் கதையை அணுகுவதில் என்னதான் குற்றங்கள் உண்டு என்று பலரும் சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். இந்தத் தந்திரமே வளர்ந்து பிறகு அரசியலிலும் இராஜதந்திரமாகியிருக்கிறது போலும். இந்தத் தந்திரத்துக்கு ஒரு அற நியாயத்தை வழங்கும் முலாமே இராதந்திரம் என்ற வரைவிலக்கணமாகும். எனினும் அறத்தை விலகிய இராசதந்திரம் ஒரு போதுமே மனித குலத்தை ஈடேற்றுவதில்லை.

ஆனால், வாழ்க்கையின் ஓட்டம் எப்போதும் அறத்தின் அடிப்படையில், அந்த ஈரலிப்பிற்தான் வேர்கொண்டியங்குகிறது. இதை நாம் பல வேளைகளிலும் மறந்து விடுகிறோம். அல்லது அதை அப்படி உணரத்தவறி விடுகிறோம்.

ஆனால், இந்தக் கதையில் காகத்தின் தவறான செயலுக்குக் கிடைத்த ஏமாற்றம் அல்லது படிப்பினையே கதையின் சாரம் என்றுபடுகிறது. அறப்பிழை ஒன்று எவ்வாறாயினும் நீடித்த வெற்றியைத் தராது, முழுமையான வெற்றியாக அமையாது என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது.

02


உயிரினங்கள் ஒவ்வொன்றும் தத்தம் இருப்புக்காக புத்திசாலித்தனங்களையும் தந்திரங்களையும் கொண்டேயுள்ளன போலும். அதனால் அவற்றுக்கு தந்திரம் செய்வதென்பது ஒரு அடிப்படை விதியாக உள்ளது.. இந்த விதியை இழக்குந்தோறும் அந்த உயிரினங்கள் தங்களின் இருப்பை இழந்து போகின்றன.

எனவே தந்திரங்களின் மூலம் ஒன்றை ஒன்று வெல்கின்றன. அதற்காக ஒன்றை ஒன்று தந்திரம் செய்கின்றன.

(இந்தத் தந்திரமே வளர்ந்து பிறகு அரசியலிலும் இராஜதந்திரமாகியிருக்கிறது போலும்).

மனித வாழ்க்கை இந்த விதியிலிருந்து வேறுபட்டு விலகியுள்ளது. அது விழுமியங்களாலும் ஒழுங்கமைப்புகளாலும் நெறிப்படுத்தப்பட்டது. மனிதனுடைய வாழ்க்கை ஏனைய உயிரினங்களின் வாழ்க்கையை விட வேறுபட்டதாக இருப்பதே இதற்குக் காரணம். அது பிரத்தியேக அம்சங்களை அதிகமாகக் கொண்டதாக மாறியிருக்கிறது. பிரத்தியேகமானதாக மாறுந்தோறும் அதற்கான அடிப்படைகளும் தேவைகளும் வேறுபட்டே இருக்கும். ஆகவே அவற்றை அடைவதற்கும் அவற்றைப் பேணுவதற்கும் விழுமியங்களும் ஒழுங்கமைப்புகளும் தவிர்க்க முடியாதவை. விழுமியங்களையும் ஒழுங்கமைப்பையும் பேணுவதாயின் அங்கே அறம் என்பது தவிர்க்க முடியாத ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும். அறமற்ற நிலை என்பது பெரும் சிதைவுகளிலேயே எல்லாவற்றையும் கொண்டு சென்று சேர்க்கும். அறவீழ்ச்சி அல்லது அறப்பிழை நிகழும்போதே முரண்பாடுகளும் பிரச்சினைகளும் உருவாகின்றன. அறத்தின் அடிப்படையில் நின்றவாறே தன்முன்னே இருக்கின்ற தடைகளையும் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டும். அறத்தை விலகிய எத்தகைய எதிர்கொள்ளல்களும் தற்காலிக வெற்றிகளுக்கு அப்பால் நகர்வதில்லை.

விடுதலைப் போராட்;டங்கள் ஆரம்பத்தில் அறநியமங்களின் அடிப்படையிலேயே அவை ஆரம்பமாகின்றன. காலப்போக்கில் அதிகாரப் போட்டிகளும் ஏதேச்சாதிகாரமும் அறப்பிழைகளை உருவாக்கி, அவற்றை வேறு திசைகளை நோக்கித் திருப்பி விடுகின்றன.

பாட்டி வடை சுட்ட கதையில் பாட்டியின் வடையை அபகரித்த காகம் பாட்டிக்கு அறப்பிழையை இழைக்கிறது. அது பாட்டியிடமிருந்து எந்த நியாயமுமில்லாமல் வடையைக் களவாடிச் செல்கிறது@ அடாத்தாக எடுத்துச் செல்கிறது. பாட்டி எந்த விதமான நியாயமும் இல்லாமல் காகத்திடம் வடையைப் பறிகொடுக்கிறாள். பாட்டியின் உழைப்பைப் பொருட்படுத்தாமற் காகம் வடையை எடுத்துச் செல்கிறது.

ஆனால், அந்தத் தவறுக்காகவே அது அடுத்த கணத்தில் வடையை இழக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, மற்றவர்களுடையதை எடுப்பது தவறு. அது ஒரு போதும் நிலைக்காது என்பதை வலியுறுத்துகிறது கதை. அறப்பிழையொன்றை அது உணர்த்துகிறது. அதிகம் பேர் உணரத் தவறுகின்ற விசயம் இது.

எனவே, பிறருடைய உழைப்பை, உரிமையை அபகரிக்காதே என்பதே கதையின் சாரம். அப்படி அடாத்தாக எதையும் அபகரித்தால், அதைத் தட்டிச் செல்வதற்கு வெளியே யாராவது இருப்பர். அதுவே இங்கே நரியின் வடிவில் உணர்த்தப்படுகிறது.

இந்த உணர்கை ஏன் தவறவிடப்பட்டது என்பதே இங்கே கேள்வியாகும். ஆகவே இங்கே அறப்பிழையே பிரதான மையப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறப்பிழை கதையை எடுத்துரைப்போரிடம் கூர்மைப்படுத்தப்பட்டுக் காண்பிக்கப்படவில்லை. என்றாலும் நுண்ணிய முறையில் கதை கேட்கும் மனதுக்கு பாட்டியின் இழப்பும் துயரமும் அவளுக்கு நேர்கின்ற பாதிப்பும் புரியும். அந்த மனம் நரியின் தந்திரத்தையிட்டு வியப்படையாது. காகத்தின் கெட்டித்தனத்தையிட்டு அது ஆச்சரியப்படாது. பதிலாக அது அங்கே நிகழ்கின்ற அறப்பிழைகளையே கணக்கிடும்.


00


1 comment:

எஸ் சக்திவேல் said...

மொத்தத்தில் வடை இப்ப நரியின் கையில்!