
விக்ரமாதித்யனின் கவிதையும் தமிழ்ச் சூழலும்
00
‘குமுதம் - தீராநதி’ 2012 மார்ச் இதழில் விக்ரமாதித்யன் நம்பியின் மூன்று கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. அவற்றிலொன்று, ‘காணாமல் போன புலிகள்’ என்ற தலைப்பிலானது. நம்பி, இந்தக் கவிதையில் எதை உணர்த்துகிறார், உணர்த்த விரும்புகிறார் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், இந்தக் கவிதை இன்றைய தமிழ்ச் சூழலில் கவனத்திற்கும் விவாதத்திற்கும் உரிய ஒன்று. என்றபோதும் ஏனோ இன்னும் இது பொதுப்பரப்பில் அதிக கவனத்தைப் பெறவில்லை.
சிலர் இந்தக் கவிதையைக் கண்டால் கொண்டாடுவார்கள். அவர்கள் நம்பியை (விடுதலைப்) புலிகளின் ஆதரவாளர், பிரபாகரனின் அபிமானி என்றெல்லாம் சொல்லி தங்களின் தரப்பிற் சேர்த்து விடக்கூடும். புலிகளின் இருப்பைப் பற்றிய சித்திரமொன்றை இவ்வளவு பூடகமாக, அழகாக விக்கிரமாதித்யன் சொல்லியிருக்கிறார் என்று அவர்கள் நம்பியைக்கொண்டாடவும் முயற்சிக்கலாம். தமிழகத்தில் இயங்குகின்ற ஈழ ஆதரவுச் சக்திகளிற் சில நம்பியைத் தங்களுடன் இணைத்துக்கொள்ளவும் முயற்சிக்கக் கூடும். சில ஈழ ஆதரவாளர்கள் புதிதாக இப்படி ஒரு முளை தங்களுக்குப் போட்டியாகக் கண்திறப்பதைக் கண்டு அச்சமடையவும் கூடும்.
இதேவேளை இந்தக் கவிதையைப் படிக்கும் இன்னொரு சாரார் நம்பிக்கு நிலவரம் விளங்கவில்லை என்று சொல்வார்கள். அவர்கள் தங்களின் தளத்திலிருந்து நம்பியை வாங்கு வாங்கென்று வாங்கக் கூடிய சூழலும் உண்டு.
இப்படியெல்லாம் நடக்கும் என்று நம்பி நினைத்தே இருக்கமாட்டார். நீங்கள்தான் அப்படியான ஒரு வம்பை உருவாக்கப்போகிறீர்கள் என்று என்னைக் குற்றம் சாட்டுகிறார் நண்பர் ஒருவர். ஏற்கனவே பலவகையான சிக்கல்களில், அதிரடியான அபிப்பிராயங்களால் நம்பி கடுமையான சர்ச்சைக்குள்ளாகியவர் ‘அண்ணாச்சி’. அவருக்கு இதில் என்ன புதிசாகப் பிரச்சினை வரப்போகிறது? தவிர, அச்சப்பிராந்தியத்துக்கு அப்பால், தமிழகத்தில் இருக்கிறார் நம்பி. சிலவேளை இந்தக் கவிதை ஒரு அழைப்பிதழாக மாறி, அவரைப் புலம்பெயர் தேசங்களுக்கு விருந்தாளியாக அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றேன் நான். குறைந்த பட்சம் இந்தக் கவிதை நம்பிக்கு ஒரு ரசிகர் மன்றத்தை உருவாக்கத்தான் போகிறது. அவர் இதை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இது நடக்கத்தான் போகிறது.
இதோ விக்ரமாதித்யன் நம்பியின் அந்தக் கவிதை.
காணாமல் போன புலிகள்
காணாமல் போனதாகவே
முடிவு கட்டிவிட்டார்கள்
காணவில்லையென்று
விளம்பரமும் கொடுத்து விட்டார்கள்
(காணாமல் போக
அவனென்ன ஆடா மாடா பாலுசார்)
சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம்
சும்மா இருந்தான்
நிலவரம் மோசமென
நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான்
சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று
சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான்
அதற்காக ஓய்ந்து விட்டானென்று
அர்த்தமில்லை
சரிந்து விட்டானென்று
கருதி விட முடியாது
அருகிப் போனாலும்
காணமற்போவதில்லை புலிகள்.
00
இந்தக் கவிதையை ஒரு ஈழக்கவி எழுதியிருந்தால் இப்போது பூமியின் திசைகள் தோறும் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டேயிருக்கும்.
நம்பியின் கிரக யோகத்தின்படி அவர் அபாயவலயத்துக்கு அப்பால்...
00
2 comments:
>
காணாமல் போன புலிகள்
காணாமல் போனதாகவே
முடிவு கட்டிவிட்டார்கள்
காணவில்லையென்று
விளம்பரமும் கொடுத்து விட்டார்கள்
(காணாமல் போக
அவனென்ன ஆடா மாடா பாலுசார்)
சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம்
சும்மா இருந்தான்
நிலவரம் மோசமென
நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான்
சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று
சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான்
அதற்காக ஓய்ந்து விட்டானென்று
அர்த்தமில்லை
சரிந்து விட்டானென்று
கருதி விட முடியாது
அருகிப் போனாலும்
காணமற்போவதில்லை புலிகள்
-----------
மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும். ஆனால் என்னவோ தெரியவில்லை. விக்ரமாதித்தன் நம்பி என்ன எழுதினாலும் அதில் ஒரு ஈர்ப்பு எனக்கு.
நிச்சயமாக. திருமாவளவனும் அப்படித்தான் சொல்கிறார். எனக்கும் நம்பியின் கவிதைகளில் ஈர்ப்புண்டு. பலருக்கும் இந்த ஈர்ப்புள்ளதைப் பார்த்திருக்கிறேன்.
Post a Comment