Monday, April 9, 2012

படிகள்










இலங்கையில் இருந்து வெளிவரும் படிகள் என்ற இருமாத இலக்கிய ஏட்டின் 29 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் இரண்டு நேர்காணல்கள் உள்ளன. ஒன்று கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமாகிய சோ.பத்மநாதனினுடையது.

‘ஈழத்தில் இலக்கிய விமர்சனம் - மொழிபெயர்ப்பு விமர்சனம் உட்பட ஆரோக்கியமானதாக இல்லை. நாங்கள் ஒரு சிறுவட்டம். தமிழ நாட்டோடு ஒப்பிடுகையில் ஒரு சிறிய குழுவினர். மனிசில் படுவதை விமர்சகர்கள் எழுதத் தயங்குகின்றனர். எங்கே எழுத்தாளர்களை நோகச் செய்து விடுவோமோ என்று. பரந்த வட்டமாயின் இந்தச் சங்கடங்களில்லை. திருச்சியை அல்லது நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளனைப் பற்றி சென்னை விமர்சகன் துணிந்து எழுதலாம்.

மொழிபெயர்ப்பு என்ற வரும்போது அதை மதிப்பிடுபவனுக்கு இரு மொழிகளும் தெரிந்திருக்க வேணும். ஆனால், இரு மொழி – பன்மொழிப் புலமை வாய்ந்தவர்கள் கவலைப்படும் அளவுக்குக் குறைந்து விட்டது. இளம் எழுத்தாளர்கள் தாய்மொழியை விட மேலும் ஓரிர மொழிகளையாவது கற்றிருக்க வேண்டும்...’ என்று சொல்லும் சோ.பவின் இந்த நேர்காணல் முக்கியமானது.

சோ.பவின் இளமைக்காலம், இலக்கிய ஈடுபாடு மற்றும் அவருடைய கவிதை நோக்கு, மொழிபெயர்ப்பு முயற்சிகள், ஈழத்து விமர்சனச் சூழல் எனப் பல விசயங்களிலும் சுருக்கமான அளவில் உரையாடலை மேற்கொள்கிறது இந்த நேர்காணல்.

அடுத்த நேர்காணல், ஈழத்தின் குறிப்பிடத்தக்க புனைகதையாளர் அல். அஸ_மத்தினுடையது.

அல் அஸ_மத் சொல்கிறார் -

‘நல்ல படைப்புகள் பெருகுமானால் வாசிப்பும் கூடும். முதலில் நல்ல படைப்பகள் வெளிவர ஆவன செய்து விட்டுப் பாருங்கள்@ வாசிப்பு அதிகமாக இருப்பதை உணருவீர்கள்.

தனிமனித முயற்சிகளாற்தான் நம் நாட்டில் சஞ்சிகை வெளியிட வேண்டியுள்ளது. இத்கெனக் காத்திரமான அமைப்புகள் ஏற்பட வேண்டும்’ என்று.

அல் அஸ_மத் பல விசயங்களைக் குறித்தும் விரிவாக உரையாடுகிறார். குறிப்பாக, இன்றைய தமிழ் இலக்கியச் சூழல், இன்றைய ஈழத்து இலக்கிய இதழ்களைப் பற்றி, வாசிப்பின் இன்றைய நிலை, புதிய இலக்கிய முயற்சிகள், காவியங்களின் இன்றைய அவசியம், இலக்கிய மாநாடுளுக்காகத் தயாரிக்கப்படும் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள், போட்டிகள் - பரிசுகள், விருதுகள் பற்றிய சர்ச்சைகள் தொடர்பாக, இலங்கையின் தற்காலத் தமிழ் நாவல்கள் எனப் பல விசயங்களைக் குறித்தும் விரிவாக உரையாடியுள்ளார்.


இலங்கையின் தொன்மையான பட்டினங்களில் ஒன்றான அனுராதபுரத்திலிருந்து வெளிவரும் இந்த இதழின் ஆசிரியர் எல். வஸீம் அக்ரம். ஆசிரிய குழுவில் எம். சீ. நஜழமுதீன், நாச்சியாதீவு பர்வீன், ஜன்சி கபூர், ஞானச்சந்திரன் குருக்கள், றஹமத்துல்லாஹ், ஜமீல், ஏ.எச்.எம்.ஸப்ராஸ், பஸான் ஆகியோர் செயற்படுகிறார்கள். இணைப்பாளராக றிஷ்வி மஃறூப் உள்ளார்.

இந்த இதழில் வாசிப்புக்கேற்றவிதமாகப் பல விசயங்கள் இருந்தாலும் முக்கியமானதாக இருப்பது, பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு கிராமிய மட்டத்திலான கலந்துரையாடல்கள் என்ற பதிவுக் கட்டுரையே.

திருமணத்தில் பெண்களின் விருப்பத்தை அறிதல், பெண்கல்வி, பெண்கள் மீதான வன்முறைகள், இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம், சீதனம், பெண்களின் சமூக ஈடுபாடு, பெண் புத்திஜீவிகள் என்ற உப தலைப்புகளை மையப்படுத்திச் செறிவாக – ஆனால் சுருக்கமாக ஆராயப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையின் நோக்கு முக்கியமானது.

முஸ்லிம் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு முழுதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. ‘இந்தப் பெண்களுக்கு தம்முடைய பிரச்சினைகளை வெளியே எடுத்துக் கூறுவதற்கு எந்தவொரு தளமும் வழங்கப்படவில்லை. இந்தக் கலந்துரையாடலானது அவர்களுக்குத் தங்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கான தளமாக இருந்தது’ என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது உண்மையாது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களின் பிரச்சினைகளும் உணர்வுகளும் வெளியரங்கில் அறியப்படும்போது அவை புதியவையாகவும் கவனத்திற்குரியவையாகவும் உள்ளன. அதேவேளை பெரும்பாலான அனுபவங்கள் ஏனைய (இலங்கைப்) பெண்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளாகவுமே உள்ளன. முஸ்லிம்களின் பண்பாடு, மதம், சமூக அமைப்பு போன்ற காரணிகள் இந்தப் பெண்களுக்கு சில வேறுபட்ட பிரச்சினைகளையும் அனுபவங்களையும் ஏற்படுத்துகின்றனவே தவிர மற்றும்படி ஏனைய பிரச்சினைகளும் அனுபவங்களும் பொதுவானவையே.

கவனத்திற்குரிய பகுதிகளில் ஒன்று –

‘இலங்கை முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் சீதனம் மலிந்து காணப்படுகின்ற ஒரு பகுதியாக கிழக்கு மாகாணத்தைக் குறிப்பிடலாம். இங்கே ஆண்கள் அவர்களுடைய தொழிலுக்கும் அந்தஸ்த்துக்கும் ஏற்றவாறு பல்வேறு விதமான சீதனப் பக்கேஜூகளை விற்பனை செய்கிறார்கள். அங்கே சீதனத்தைப் பேரம்பேசுவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது’ என்ற வாய்மொழி வெளிப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை கவனத்தைக் கோருகிறது.

வடக்கே, யாழ்ப்பாணத்தில் சீதனக்கொடுமையின் தாக்கத்தை நாம் நன்றாக அறிவோம். கிழக்கில் - அதுவும் முஸ்லிம் சமூகத்தில் இப்படியான ஒரு நிலை இருக்கென்பது இவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்யப்படும்போதே நம்மால் அறியக் கூடியதாக உள்ளது.

பொதுவாக இந்தப் பதிவு மிகக் கவனத்திற்குரியது. இதைக் குறித்துப் பின்னர் தனியாக – விரிவாக எழுதவேணும்.

இந்தப் பதிவோடு இணைந்ததாக மேலும் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை தனியான கட்டுரைக்குரியவை. இங்கே சிறிய அறிமுக நிலையில் உள்ளன. 1. பெண்கள் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் சவால்கள். 2. கல்வி – பெண்ணை வலுவூட்டுகிறதா?

இவை இரண்டும் முக்கியமான சங்கதிகளே.

இதைவிட, கவிதைகள், புத்தக மதிப்புரைகள், சிறுகதைகள் என மேலும் பல விசயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சித்தாந்தன், கன்னி முத்து வெல்லபதியான், ஆனந்தி, தம்பு சிவா, அன்பு ஜவஹர்ஷா, மன்சூர், வேல் நந்தன், சப்ராஸ், ரிஸ்னா ரஸீன், அஷ்ரப் எம். மாபீர், அக்ரம் என்று பலரும் இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள்.


படிகள் என்ற பெயரில் முன்னர் தமிழவன் ஒரு இதழை வெளிக் கொண்டு வந்திருந்தார். அன்று அந்த இதழ் முக்கிய கவனத்தைப் பெற்றிருந்தது. இப்பொழுது இலங்கையில் அனுராதபுரத்திலிருந்து இன்னொரு படிகள்’ வந்து கொண்டிருக்கிறது. இலக்கிய வரலாற்றாசியர்களுக்கும் வாசர்களுக்கும் விமர்சகர்களுக்கும் இந்த மாதிரி ஒரே பெயரில் இதழ்கள் வெளிவருவது குழப்பத்தையும் குறிப்பிடுவதிலும் விளக்குவதிலும் சிரமங்களை ஏற்படுத:தும்.

ஆனால், 2003 ஆம் ஆண்டிலிருந்து 29 இதழ் வரையில் இதை வெளியிட்டுள்ளனர் இந்த ஆசிரியர் குழுவினர். இது அசாத்தியமான ஒரு முயற்சி. அதுவும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களிலிருந்து இதைச் செய்வது என்பது. பெங்களுரில் அல்லது டில்லியில் இலக்கிய முயற்சிகளைச் செய்வதற்கு ஒப்பான காரியம் இது.

பாராட்டவும் ஆதரவளிக்கவும் வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்.

யாராவது தொடர்பு கொள்ள விரும்பினால் -



Padihal Publication,
519/g/16, Jeyenthi Mw, Anuradhapura
Tp – 0783244255, 0713485060, 0718423459, 0771877876

padihal@yahoo.com
www.padikal.blogspot.com


000

No comments: