Saturday, April 7, 2012

கவிதை - மற்றொரு பரிமாணத்தை நோக்கி






இன்று நாம் கேட்கின்ற சினிமாப் பாடல்களில் பெரும்பாலானவை நாட்டுப்புறப் பாடல்களின் மாற்று வடிவமே. பாடல் அடிகள் மட்டுமல்ல, பாடலின் இசை, இசைக்கான கருவிகள், அவற்றின் தொனி, பாடல் சுட்டும் பொருள் உட்பட.

இவற்றைச் சற்று வேறு படுத்தி ஒரு மாற்று வடிவம் தொனிக்கும்படியாக, புதுப்பிரதிபோல, புதுமை போன்ற பிரமையை ஏற்படுத்துகின்ற மாதிரியாக இன்றைய புதிய பாடல்கள் நமக்குத் தரப்படுகின்றன. உண்மையில் இந்தப் பாடலடிகளுக்குச் சிறந்த இசையும் பாடகர்களின் குரலும் ஒலிப்பதிவு முறையும் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன.

நமது மனம் இன்னும் நாட்டுப்புற இசையிலும் நாட்டுப்புறப் பாடல்களிலும் மையங்கொண்டிருக்கிறது. என்னதான் நகர்சார்ந்த வாழ்க்கைக்குப் போனாலும் கிராமிய வாழ்க்கையின் நினைவுகளை இந்தத் தலைமுறை வரையிலும் தமிழர்கள் கடந்து விடவில்லை. வேண்டுமானால் புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளின் மனதில் இந்தச் சேகரங்கள் இல்லாமலிருக்கலாம். மற்றும்படி எல்லோருடைய நினைவுகளிலும் கிராமியப் பதியங்கள் தாராளமாக உண்டு.

நாட்டுப்புற இசை எனும்போது நம்முடைய அத்தனை நரம்புகளும் சிலிர்த்து எழுந்து துள்ளத் தொடங்குகின்றன. இது தமிழில் மட்டும் நிகழும் விசயமல்ல. அரபு லகில், ஆபிரிக்க உலகில், சீன, யப்பானிய இசையுலகில் என எங்கும் இந்த அடிப்படையைக் காணலாம். எனவே உலகம் முழுவதிலுமிருக்கின்ற மனிதர்களின் மனவுலகம் நாட்டுப்புறப் பாடல்கள், கவிதைகள், இசை என்பவற்றினால்தான் நிறைந்து போயிருக்கின்றன. இது ஒரு அதிசயமான சங்கதிதான். நவீன உடை, தலைவாரல், பாவனைகள் என முழுமையான நவீ னத்துவத்தில் வாழ்ந்தாலும் மனம் கிராமிய ஒலிகளாலும் தொன்மையான சங்கதிகளாலும் ஈர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

தமிழ்ச் சூழலில் 1960களுக்குப் பின்னர் கவிதை பற்றித் தீவிர விவாதங்கள் நடந்திருக்கின்றன. இன்னும் இந்த விவாதங்களின் தொடர்ச்சியை அங்கங்கே காணலாம். இந்த விவாதங்களின் விளைவாக தமிழ்க் கவிதையில் பல புதிய பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், 1960 களுக்குப் பிந்திய கவிஞர்களில் சினிமாக் கவிஞர்களை அறிந்த அளவுக்கு ஏனைய கவிஞர்களை தமிழ்ப் பொதுப்பரப்பு அறிந்ததில்லை. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, வைரமுத்து, பா.விஜய், முத்துக்குமார் என்ற பரிச்சயங்களின் அள வுக்கு பிரமிள், பசுவய்யா, எஸ்.வைத்தீஸ்வரன், கல்யாண்ஜி, சுகுமாரன், பிரம்மராஜன், விக்ர மாதித்தன், மனுஷ்யபுத்திரன், சல்மா போன்றோரைத் தமிழ்ப் பெருங்குடிகள் அறிந்ததில்லை.

மொழியைத் தங்களின் பேரடையாளங்களில் ஒன்றாகக் கொண்டாடும் தமிழர்கள், அந்த மொழிக்கு அதிக செம்மையையும் புதுமையையும் வளத்தையும் கொடுக்கும் கவிஞர்களைக் காணாமல்விட்டது தற்செயலானதா? அல்லது தமிழ் வாழ்வின் சீரழிவா? அல்லது பொய் நடத்தைகளா காரணம்?

இது தகவல் யுகம். தொடர்வூடகங்களில் யார் அதிகம் உலவுகின்றார்களோ அவர்களே அதிகம் மக்களால் அறியப்படுகிறார்கள். எந்த விசயங்கள் தொடர்வூடகங்களில் கூடுதலாக இடம்பிடிக்கின்றனவோ அவையே மக்களுக்குப் பழக்கமாகின்றன. அவையே மக்களுக்கு அதிகமும் தெரிகின்றன. இது காலப்போக்கில் அவர்களுடைய தெரிவுகளாகவும் விருப்பங்களாகவும் மாறுகின்றன. சினிமாக் கவிஞர்களும் அவர்களுடைய பாடல்கள், கவிதைகள் அறிமுகமாகி, அவை பெருங்கொண்டாட்டமாகியமைக்கும் இதுவே காரணம்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயமும் உண்டு. சினிமா என்பது மிகப் பிரமாண்டமான ஒரு சாதனம். தமிழில் இது இன்னும் அதிக சக்தி வாய்ந்தது. சனங்களிடையே அது பெருஞ்செல்வாக்கைச் செலுத்துகின்றது. அதனால் அது தமிழின் எல்லா ஊடகங்களிலும் ஆதிக்கம் கொண்டுள்ளது. இதுவும் இந்தக் கவிஞர்களை அதிகம் சனங்களுக்குப் பரிச்சயமாக்கியது. தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இதில் கூடுதல் பொறுப்பு வகித்தன. அத்துடன், இந்தப் பாடல்கள் திரைகளில் காட்சியுடன் வரும்போது இன்னும் அதிக கவர்ச்சியையும் செல்வாக்கையும் பெற்றன. சினிமா என்பது மிகப் பெரிய வணிகப் பொருள் என்பதால், அதன் தயாரிப்புகள் மிகவும் உச்சநிலையில் கவனத்துடன் செய்யப்படுகின்றன. பாடல்களைப் பொறுத்துத் தரமான இசை கவனிக்கப்படுகிறது. தமிழின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாவில்தான் இணைந்திருந்தனர். சிறந்த உருவாக்கத்தில் இணைந்திருக்கின்றனர். ஆகவே ஒரு கவிதை அல்லது ஒரு பாடல் என்பது பல ஆளுமைகளின் கூட்டுழைப்பில், பல இசைக்கருவிகளின் சேர்மானங்களுடன் கலந்தே உருவாகிறது. அப்படி உருவாகும் பாடல் பின்னர் மக்களிடம் பெருஞ்செல்வாக்கைச் செலுத்தும் சினிமா, வானொலி, தொலைக்காட்சி என்ற தொடர்பூடகங்களின் வழியே பரவுகிறது. எனவே சினிமாக் கவிதைகளும் சினிமாக்கவிஞர்களும் பரந்த அறிமுகத்தைப் பெறக் கூடியதாக இருக்கிறது.

இதில் இன்னொரு விசயத்தையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருப்பதைப் போல, இந்தப் பாடல்களில் முக்கால்வாசிக்கும் மேலானவை நாட்டுப்புற மெட்டுக்களையும் அவற்றின் இசைக் கோலங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. ஒரு காலத்தில் கூத்துகளாக, நாட்டுப்புறப் பாடல்களாக தொழிற்பாடல்களாக, சடங்குப் பாடல்களாக இருந்தவை சற்று மாறுபாடுகளுடனும் சமகால விசயங்களுடனும் பழைய தொனிப்புடனும் அரங்குக்கு வருகின்றன. அப்படிப் பார்க்கும்போது இவற்றிலும் நிகழ்கவிதைக்கான கூறுகள் இருக்கின்றன.

ஆனால், அந்த வடிவமும் வகை மாதிரியும் விகிதமும் வேறுபடலாம். அல்லது கூடிக் குறையலாம். நிகழ்கவிதையில் அதன் துணை அம்சங்களான இசை, அசைவுகள், நாடகம், குரல் போன்றவையும் பிறிதொரு பரிமாணத்தை அளிக்கின்றன. அப்போது வெவ்வேறு ஒளி முகங்கள் கவிதைக்குக் கிடைக்கின்றன. இது ஒரு கதை எப்படி சினிமா நாடகமாக மாறுகின்றதோ அதைப் போன்றதே. ஆனால், சினிமாவிலும் நாடகத்திலும் ஏனைய அம்சங்களுக்கான மூலமாக இருப்பது கதையே. இங்கும் இசை, குரல், பாடும் தொனி, அளிக்கை முறைமை, அசைவு போன்றவற் றுக்கு ஆதாரமாக இருப்பது கவிதையே.

இன்று சினிமாவும் இசை அல்பங்களும் பெற்றிருக்கும் செல்வாக்கு மண்டலம் பெரியது. இதனால், இவற்றின் தரமும் கூடியே வருகின்றது. (சீரழிவுகள் பற்றிய விமர்சனம் வேறு. அதன் நோக்கு நிலையும் வேறே) இரசனை வட்டம் பெருகும்போது நுகர்வுப் பரப்பும் பெருகுகிறது. நுகர்ச்சி அதிகமாகும்போது அதன் மதிப்பும் கூடுகிறது. அப்போது குவிகின்ற வருமானமும் அதிகமாகிறது. இது உற்பத்தியில் தரத்தைப் பேண வைக்கிறது மட்டுமல்ல, வருமானம் குவியும்போது போட்டியும் உருவாகிறது. அது தொழிலாகிறது. தொழில் போட்டியாகிறது. இந்தப் போட்டி எப்போதும் தரம், புதுமை, அதிக நுட்பம் போன்றவற்றைக் கோருகின்றன. ஆக, கவிதையோ அதன் அளிக்கையோ இன்னுமின்னும் மேல் நோக்கியே செல்ல வேண்டும்.

சந்தை என்பது போட்டியின் களமே. எனவே இந்தப் போட்டிக்காக அதன் படைப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாகச் சிந்திக்க வேண்டும். புதுப்புது நுட்பங்களைக் கண்டறிய வேண்டும். இந்தப் போட்டியே நமக்குத் தரமான பாடல்களைத் தந்தது. பொதுவாகச் சந்தைப் போட்டியே எப்போதும் தரமான பண்டங்களுக்கான உற்பத்தியின் நிபந்தனையாக்கிகள். எனவே போட்டியே நல்ல இசையைத் தந்தது. நல்ல இசையமைப்பாளர்களைத் தந்தது. நல்ல பாடல்களைத் தந்தது. நல்ல பாடலாசிரியர்களையும் தந்தது. எல்லா வகையான விமர்சனங்களுக்கு அப்பாலும் சினிமா தந்துள்ள பல நூற்றுக்கணக்கான பாடல்கள் மிகத் தரமா னவை - சிறந்தவை என்பதை மறுக்க முடியுமா?

வெறுமனே எழுதப்படுகிற கதைகளுக்கும் கவிதைகளுக்கும் இருக்கும் மதிப்பைவிடவும், அவை சென்றடைகின்ற பரப்பைவிடவும் நாடகத்திலும் சினிமாவிலும் பிற வெகுஜன ஊடகங்களிலும் மையப்படுத்தப்படுகின்றவை கூடிய அறிமுகத்தைப் பெறுகின்றன. இன்று இலத்திரனியல் சாதனங்கள் அதிக செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. இது தொடர்பூடகங்களின் ஆதிக்கச் சூழல் என்ற வகையிலும் அதிலும் இலத்திரனியல் ஊடகங்களின் காலம் என்ற வகையிலும் அவற்றுடன் தொடர்புறுகின்ற கலை வெளிப்பாடுகளே அதிக செல்வாக்கைப் பெறுகின்றன. எனவே கவிதை, குறிப்பாக நிகழ்கவிதை இதைக் கருத்திற் கொண்டு தன்னைப் புதிய முறையில் ஒழுங்கமைக்க வேண்டியுள்ளது.

வரையறைகளுக்குட்பட்ட பழைமை என்பது மியூசியங்களுக்கேயுரியவை. பழைமையானது காலத் தேவை, காலச் சூழல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, தன்னை நெகிழ்த்தி, புதுமையாகும்போதே அதன் பெறுமதி அதிக மாகும். அதுவே மக்கள் மயப்படும். இதுதான் நாட்டார் இசை, நாட்டார் பாடல்கள் என்பவற்றில் ஏற்பட்டிருப்பது. மட்டுமல்ல கிராமிய இசைக் கருவிகள் புதிய வகையில், அதே ஆதாரத் தொனியுடன் இன்று நவீன இசையில் கையாளப் படுகின்றன. தமிழில் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் இதற்குச் சிறந்த உதாரணங்களாக உள்ளனர்.

நமது சினிமா மீதான கேள்விகளும் விமர்சனங்களும் வேறு. ஆனால், அது தந்துள்ள, அறிமுகப்படுத்தியுள்ள ஆளுமைகளும் இந்த மாதிரியான அம்சங்களும் சிறந்தவையே. ஆனால், இது தான் கவிதை, இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள்தான் கவிஞர்கள் என்ற மாயை உருவாக்கம்தான் தவறானது. தவிர, சினிமாவின் ஆட்சி, மற்றொரு கலைவடிவான நாடகத்தை விழுங்கிவிட்டது. கவிதையைக் குறிப்பாக நிகழ்கவிதையையும் தின்றுவிட்டது. ஆனால், நாடகமும் நிகழ்கவிதையும் இனிப் புது வகைப்புடன் உருவாக வேண்டும். எனவே நிகழ் கவிதை என்பதை வெறுமனே கவிதைப் பிரதியை மட்டும் ஆதாரமாகக் கொண்டிருக்காமல் அது இன்னும் பல பரிமாணங்களையுடைய மாற்று வடிவமாகப் பரிணமிக்க வேண்டும்.


குறிப்பாக அது நமது வேர்களை அறுத்துக் கொள்ளாத, சமூக உறவாடலின் வடிவமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பது அவசியம். முற்றிலும் விஞ்ஞானச் சாதனங்களைக் கொண்டியங்கும் ஆகப்பிந்திய வெளிப்பாட்டுச் சாதனமான சினிமாவே நாட்டுப்புற இசையையும் தொனியையும் கருவிகளையும் ஆதாரமாகக் கொண்டிருக்கும்போது நிகழ்கவிதை மட்டும் அதிலிருந்து எப்படி விலகியிருக்க முடியும்? ஆனால், நமது நிகழ்கவிதை என்பது பெரும் பாலும் வரையறுக்கப்பட்ட சட்டகங்களுக்குள்ளிருந்து இன்னும் விலகவில்லை. அத்துடன் அது அடுத்த கட்டத்துக்குப் பயணிக்கவும் இல்லை. மேலும் நமது கவிதைகள் வேறு பரிமாணங்களைத் தொட முடியாதவைகளாக அரை நூற்றாண்டுக்கும் மேலான காலம் அப்படியே இருக்கின்றன. இவற்றுக்கு எப்போது வண்ணங்கள் சேரும்? சிறகுகள் முளைக்கும்? எப்போது இவை தமது உறக்கத்தைக் கலைக்கும்? இவை என்றுதான் ஏராளம் ஏராளம் சனங்களின் மனங்களில் நிகழும்?

00

No comments: