Sunday, June 8, 2008

பதுங்குகுழி நாட்கள்:பா.அகிலன் கவிதைகள்


எழுதியவர்___________________________
--------------------------கருணாகரன்

அப்போது யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளாகியிருந்தது. (இப்போதும் அதுமுற்றுகையிடப்பட்டேயிருக்கிறது). முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆட்கள் காணாமற் போனார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். காணாமற்போவோர் பற்றிய துயரம் சாதாரணமானதல்ல. ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று முடிவு தெரியாத நிலை அது. அது அவ்வளவு சாதாரணமானதல்ல. இந்த நிலையைப்பற்றிய பிறவி என்ற மலையாளப்படம் இப்போது உங்களின் ஞாபகத்துக்கு வரலாம். தினமும் காணாமற்போவோரின் செய்திகளோடுதான் யாழ்ப்பாணத்தின் காலைகள் விடிந்தன.

பயங்கரங்களின் ஆழ்கிடங்கில் தள்ளப்பட்டிருந்தது யாழ்ப்பாணம். எங்கும் பீதி. எப்போதும் பயங்கரம். எல்லோரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் எவையும் இல்லை. சுற்றியிருக்கும் கடல் மிகவும் பயங்கரமாக இருந்தது. அது எந்த வழிகளையும் காட்ட மறுத்தது. ஒரு காலம் பாய்மரக்கப்பல்களில் அமெரிக்காவரை போய்வந்த யாழ்ப்பாணம் இப்பொழுது அருகிலிருக்கும் சிறு தீவுகளுக்கே பயணஞ்செய்ய விதியற்றுச் சிறைகிடந்தது. கடல் வலயச் சட்டத்தில் அது சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த உலகத்தில் கோடானுகோடி பாதைகளிருக்கின்றன. ஆனால் வரலாற்றுச் சிறப்புடைய இந்த நகரத்துக்கு இப்போது பாதையில்லை. முற்றுகையிடப்பட்ட நகரத்துக்கு எப்படிப் பாதைகள் இருக்கும். பாதையில்லாமல், பயணமில்லாமல் சிறைப்பட்டிருந்தார்கள் சனங்கள்.

அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து மிகப்பிந்தி எப்போதாவது ஒரு கடிதம் வரும். அப்படி வரும் கடிதத்திலும் எந்தச் சேதிகளும் தெளிவாக இருக்காது. அது தணிக்கைகளின் காலம். ஒவ்வொரு கடிதமும் படையினரால் மோப்பம் பிடிக்கப்படும் என்ற அச்சத்தில் சனங்கள் எல்லாவற்றையும் சுய தணிக்கைக்குட்படுத்தினார்கள்.

அவ்வாறிருந்த சூழலில் எதிர்பாராமல் சில கவிதைகள் யாழ்ப்பாணத்திலிருந்து எப்படியோ அந்த முற்றுகையின் தீராத வலிகளைச் சுமந்து, காயங்களோடு வந்தன. அவற்றில் பா.அகிலன், இயல்வாணன் ஆகியோருடைய கவிதைகள் முக்கியமானவை. இவ்வாறு வந்த சில நல்ல கவிதைகள் அந்த நாட்களில் கையெழுத்துப்பிரதியில் வாசிக்கப்பட்டன. அவற்றை உடனடியாகப் பிரசுரிக்கும் ஆர்வம் இருந்தபோதும் அவற்றை எழுதியோரின் பாதுகாப்புக் கருதி அது தவிர்க்கப்பட்டது. ஆனால் கையெழுத்துப்பிரதியாக இருந்த நிலையிலேயே அவை உள்ளக வாசிப்பில் மிகவும் அதிகமான அளவுக்கு வாசிக்கப்பட்டன.

நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்த அந்தக்கவிதைகளே அன்றைய யாழ்ப்பாணத்தின் ஆன்மா. ஏறக்குறைய பத்தாண்டுகள் கழிந்த பின்னர், இப்போதும் இதுதான் அங்கே நிலைமை. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் தொடர்ந்தும் இருக்கிறது. அந்த மக்கள் முன்னரை விடவும் மிக மோசமான அவலத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள். இது பொதுவாகவே ஈழத்தமிழர்களுக்கான தண்டனைக்காலமா என்று ஒருவர் கேட்டதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அகிலனின் கவிதைகளும் கடிதங்களும் நிலாந்தனுக்கு வந்தன. தமிழர்கள் ஒவ்வொரு பிரதேசமாக இராணுவ வலயங்களால் பிரித்துத் தடுக்கப்பட்டிருந்தார்கள். அதற்குள் பெரும் படையெடுப்புகள். தொடர் இராணுவ நடவடிக்கைகள். அப்போதுதான் நிலாந்தன் யாழ்ப்பாண முற்றுகையை மையமாக வைத்து, அந்த இருண்ட நாட்களை யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே என்ற நீண்ட கவிதையாக எழுதினார். அகிலனுடைய கடிதங்களும் கவிதைகளும் எழுப்பிய தூண்டல்தான் நிலாந்தனை அப்படி அந்த நெடுங்கவிதையை எழுதவைத்ததோ என்று தோன்றுகிறது.

நிலாந்தன் எழுதுகிறார்,

யாழ்ப்பாணம் அல்லது அமைதி நகரம்
1996 ஏப்ரில் மாதம் சனங்கள் வீடு திரும்பிய பிறகு யாழ்பாணத்திலிருந்து வந்த கடிதங்கள் சில-

1.24.06.996
யாழ்ப்பாணம்

இம்முறை மிக நீண்ட கோடை
ஒரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று
இரவு
ஊழையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட்ரக்குகளுக்குமுரியது
பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களுக்கு
இடையில் வரும் பொழுது
தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது
இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றி வளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு
...........
..........

2. 21.08.1996
யாழ்ப்பாணம்

மின்சாரம் வந்து விட்டது
பஸ் ஓடுகிறது
மினி சினிமா கொகோ கோலா
புளு பிலிம் எல்லாம் கிடைக்கிறது
...........
..........
காணாமற் போனவர்களைப் புதைத்த
வெளிகளில்
உப்பு விளைகிறது
ஊரி சேர்கிறது
3. 23.10.1996
யாழ்ப்பாணம்

உன்னுடைய பெரிய ஓவியங்கள் பத்திரமாயுள்ளன. ஆனால் திருநெல்வேலியில் வைக்கப்பட்டிருந்த சிறிய சைஸ் ஓவியங்களைக்காணவில்லை. மாற்குவின் ஓவியங்களும் அதிகம் தொநை;து போய் விட்டன. மிஞ்சியிருப்பவற்றைப் போய் எடுக்கலாமா என்று யோகன் கேட்டான். ஆனால் பயமாயிருக்கிறது. கைலாசநாதனுடைய ஓவியங்கள் முழுதும் தொலைந்து விட்டன. அ. இராசையாவின் ஓவியங்களும் அநேகமாக மிஞ்சவில்லை.

எல்லாவற்றையும் திரும்பவும் முதலிலிருந்தே வரைய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே...
யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே) என்று.

இதுதான் அங்கிருந்த நிலைமை. இப்போது அகிலனின் கவிதைகள் பற்றிய இந்தக்குறிப்பை எழுதும் இந்த இரவிலும் இதுதான் தொடரும் கதை. எனவே இந்தப்பின்னணியோடு நாம் இப்போது பா. அகிலனின் கவிதைகளைப் பார்க்கலாம்.

அகிலனின் கவிதைகள் தனியே யாழ்ப்பாண முற்றுகையோடு மட்டுப்பட்டவையல்ல. அல்லது அரசியலை மட்டும் பேசுவனவுமல்ல. சமகாலம் என்ற நிகழ்காலப் பரப்பிற்குள் அடைபடுவனவுமல்ல. காலம் இடம் என்ற எல்லைகளைக்கடந்து பிரபஞ்சத்தில் ஊடுருவி முன்னும் பின்னுமான வெளியில் சஞ்சரிப்பவை. எல்லைகளற்ற வெளிநோக்கியவை. தம் படைப்பின் அடிப்படைகளாலும் அவற்றின் தகுதிகளாலும் நிரந்தரத் தன்மையைக் கொண்டிருக்க எத்தனிப்பவை. அந்த எத்தனத்தில் வெற்றியடைந்தவையும் கூட.

2
போர்க்காலத்தின் மீது படிந்திருக்கும் பயங்கரம், துயரம், அவலம், அழிவின் ஓலம், குருதி, அதன் தீராத நெடி, தீ, புகை, இருள் பெருகிய நாட்களின் வாசனை எல்லாவற்றையும் அகிலன் கவிதைகள் தம்முள் நிரப்பி வைத்திருக்க்pன்றன. துயர் உருகிப் பரவும் வெளியாக இந்தக்கவிதைகள் உள்ளன.

போரை எந்த நிலையிலும் விரும்பாத போதும் போர் தொடர் வியூகங்களில் சிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. அதனிடமிருந்து தப்பவே வழியில்லை. அது முடிவில்லாமல் துரத்துகிறது. துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு பகல் என்ற கால பேதங்கள், ஓய்வொழிச்சல் இல்லாமல் போதை நிரம்பிய வன்மத்தோடு அது துரத்துகிறது. எதற்காக அவ்வாறு துரத்துகிறது என்று தெரியாது. யாருக்கும் அது தெரியாது. கேள்விகள் இல்லை. விளக்கங்கள் இல்லை. நியாயங்கள் இல்லை. எல்லாவற்றின் மீதும் அது முழு ஆதிக்கத்தோடு முழு வலிமையோடு தன் வன்முறையைக் பிரயோகிக்கிறது. அதற்கு எந்தத்தடையுமில்லை. எல்லாவற்றையும் அது தன் காலடியில் போட்டு நசிக்கிறது. போரை விரும்பாதபோதும் அதை நாம் விட்டு வில முனைகிறபோதும் அதற்கு அது இடமளிக்கவில்லை. இந்த வலியும் நீதியின்மையும் அதன் வன்முறையும் தாங்கமுடியாத அளவுக்கு உயிரை வதைக்கிறது. அகிலன் இவற்றை, இந்த நிலையை மிக நுட்பமான மொழியில், உக்கிரமான தொனியில் வலிமையாக மொழிகிறார். அவருடைய இந்த மொழிவுக்கு தமிழ் மரபும் பிற இலக்கியப் பரிச்சயங்களும் உதவுகின்றன. இவற்றின் வேர்களிலிருந்தே அகிலனின் கவிதைகள் பிறக்கின்றன.

வேகமும் அதிர்வும் தரும் மொழியில் இந்தக்கவிதைகளிருக்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு வரியிலும் புதிய கணங்களையும் வௌ;வேறு நிலை அனுபவங்களையும் எழுப்பும் ஆற்றல் இங்கே குவிக்கப்பட்டுள்ளது. சில கவிதைகள் ஓவியத்தைப்போல காட்சியை விரிக்கிறது. சில நாடக அசைவை காட்டுகின்றன. பதுங்குகுழி நாட்கள்-3 என்ற கவிதையில் வரும் இறுதி அடிகள் இதற்கு நல்ல சான்று.

கரைக்கு வந்தோம்
அலை மட்டும் திரும்பிப் போயிற்று
சூரியன் கடலுள் வீழ்ந்த போது
மண்டியிட்டழுதோம்
ஒரு கரீய ஊழை எழுந்து
இரவென ஆயிற்று
தொலைவில்
மயான வெளியில் ஒற்றைப்பிணமென
எரிந்து கொண்டிருந்தது எங்க@ர்

பெரிய அரங்கொன்றில் நிகழும் காட்சி அவற்றுக்கான ஒளிமாற்றங்களோடு புலனேறுகிறது. ஆனால் இவ்வாறு வரும் கவிதையின் முடிவு வரி இந்தநிலையை மாற்றி வேறொரு நிலைக்கு கொண்டு போகிறது. இதனால் நமது மனதில் பல நேர்நிலை எதிர்நிலைச் சித்திரங்கள் உருவாகின்றன.

பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்

முதல் வரியிலேயே கவிதையை சடுதியாக வேகமெடுக்க வைக்கும் பண்பை அகிலன் கொண்டிருக்கிறார். அந்த வேகம் ஒரு போதும் தணிவதில்லை. கவிதை முடிந்த பிறகும் அதன் விசை குறைவதில்லை. எவ்விதம் கவிதை தொடங்கியதோ அதேபோல அதே வேகத்தோடு அது முடிகிறது. முடிவற்றுத் தொடந்து கொண்டேயிருக்கிறது அதிர்வு. பின்னரும் நான் வந்தேன்,எனக்குத் தெரியாது, வாவிகள் நிரம்பிவிட்டன, இங்கேதான் இவ்வாறு தொடங்கும் வரிகள் உடனடியாகவே ஏவு ஏவுகணையைப்போல வேகம் கொள்கின்றன.

3
தொண்ணூறுகளுக்குப்பின்னான ஈழக்கவிதைகள் பெரும்பாலும் போர் மயப்பட்டவையே. போரை அவை எந்த நிலையில் எந்தக்கோணத்தில் அணுகியிருந்தாலும் அவை போர் பற்றியவையாகவே இருந்தன. எண்பதுகளில் உருத்திரண்ட அரச பயங்கரவாதம் தொண்ணூறுகளில் பெரும் போராக விரிந்தது. உள்நாட்டுப் போராக இருந்த போதும் அது இரண்டு இராணுவங்கள் மோதிய பெரும் போர்.

அதனால் எண்பதுகளில் அரசபயங்கரவாதத்தை எதிர்த்தும் விமர்சித்தும் வந்த கவிதைப்போக்கு இப்போது போரை எதிர்ப்பதாகவும் விமர்சிப்பதாகவும் அல்லது அதை வெற்றியை நோக்கி திருப்புவதாகவும் அமைந்தது.

அகிலனுடைய கவிதைகள் போரை விமர்சிக்கின்றன. அதை உள்@ர எதிர்க்கின்றன. அதனால் ஏற்படும் வலிப்பெருக்கை நெகிழ்ந்து ததும்பும் மொழியில் சொல்பவை. போரின் வலி எப்படி பிற சமூகங்களின் ஆன்மாவையும் வாழ்வையும் பாதித்திருக்கின்றன என்று அவர் அறிந்திருக்கிறார். குறிப்பாக அவரே சொல்வதைப்போல ரஷ்யாவின் இருண்ட கால அனுபவங்களை அவர் அன்னா அக்மதோவாவினூடாக பெற்றிருக்கிறார். அதைப்போல இன்னும் எல்லாத் திசைகளிலிருந்தும் எல்லாக்காலங்களிலிருந்தும் போர் ஏற்படுத்திய அழிவுகளையும் அதன் வலியையும் காயங்களையும் தெரிந்திருக்கிறார். அவருடைய அறிதல் முறை இதைச் சாத்தியமாக்கியுள்ளது.

போர்க்காலத்தின் புலம்பல்களை மகா பாரதத்திலிருந்தும் ராமாயணத்திலிருந்தும் வேதாகமத்திலிருந்தும் அகிலன் கேட்கிறார். இப்போது தன்னிலத்திலிருந்து அவை குருதியொழுக ஒழுக அவருடைய புலன்களில் ஏறுகின்றன. அகிலன் பதற்றமடைகிறார். என்ன செய்ய முடியும். அவர் விரும்பாத போர். அவர் சம்மந்தப்படாத போர். ஆனால் அது அவரை உள்ளே இழுக்கிறது. இழுத்துப்புரட்டுகிறது. புரட்டிப்புரட்டி அது பழிவாங்குகிறது. என்ன செய்ய முடியும். கடவுளே... கடவுளே...

சனங்கள் எதுவுஞ்செய்ய முடியாமல், எங்கேயும் போக முடியாமல் அந்தரிக்கிறார்கள். உயிர் எல்லாவற்றையும் விடப்பாரமாகிவிட்டது. எதுவும் இப்போது பெரிதில்லை, உயிரைத்தவிர. உயிர்தான் இப்போது சுமையானது. அதுவும் பெருஞ்சுமையாக இருக்கிறது. சிலபோது உயிரும் பெரிதாக தோன்றாமற் போகிறது. நிலைமை அப்படி.

வீடு பாதுகாப்பற்ற வெளியாகிவிட்டது. வீட்டைவிடவும் பதுங்குழிதான் பாதுகாப்பானது என்ற நிலை. இதுவே யதார்த்தம். ஆனால் பதுங்குகுழியோ இருண்டது. உண்மையில் இருண்ட காலம் இது. நிலாந்தன் சொல்வதைப்போல இப்போது ஈழத்தமிழர்கள் ஈருடக வாசிகளாகி விட்டனர். பதுங்கு குழிக்கும் வீட்டுக்கும் இடையிலான வாழ்க்கையில் அவர்கள் கிடந்து அல்லாடுகின்றார்கள். தவளையைப்போல மனிதப்பிராணி ஆகிவிட்டது.

4
அகிலனின் குரல் சனங்களின் குரல். அது பொதுக்குரல்;. அதுவும் யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளான காலத்தின் குரல். அந்த முற்றுகைக்குள்தான் கிறிஸ்து பாலன் பிறக்கிறார். அந்த முற்றுகைக்குள்தான் தேவலயத்தின் மணிகள் ஒலிக்காமல் அடங்கிப்போயிருக்கின்றன. கூரையில்லாத தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனை முற்றுகைக்குள்ளான யாழ்ப்பாண நிலவரத்துக்கு அசலான படிமம்.

ஸ்தோத்திரம் சுவாமி
கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து
எனது இராக்காலப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும்
இவ்வருடம் நீர் பிறந்தபோது
அடைக்கப்பட்டிருந்தன தேவாலயங்கள்
கைது செய்யப்பட்டிருந்தது
நள்ளிவு மணியோசை
.........
.........
ஊரடங்கிய இரவில்
பிதாவே, நீர் பிறந்தபோது
அன்னியராய் இருந்தோம்
எங்கள் நகரில்,
மந்தைகளாக நடத்தப்பட்டோம்
எங்கள் முற்றங்களில்
........
........

பிதாவே,
சிதறிப் போனார்கள்
குரல்கள் கைப்பற்றப்பட்;ட சனங்களெல்லாம்
வெறிச்சோடியுள்ளன வீடுகள்
தேவாலயத்தின் வழிகளெல்லாம்
உதாசீனம் செய்யப்பட்ட அவர்களின் துயரங்கள்
.........
.........
யாழ்ப்பாணம் 1996-நத்தார்)

இந்தக்கவிதை வந்தபோது நான் வன்னியிலிருந்தேன். அப்போது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை அரசாங்கம் தன்னுடைய ஒடுக்கு முறைக்கேற்றமாதிரி துண்டு துண்டாகப் பிரித்து வைத்திருந்தது. அப்படிப் பிரித்துத் தனிமைப்படுத்தப்பட்டு முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் அகிலன் இருந்தார். நாங்கள் வன்னியில் போர் வியூகத்துள் சிக்கியிருந்தோம். வலியுமம் துயரமும் நம்மீது கவிந்திருந்த காலம் அது.

அகிலன் துயருற்ற யாழ்ப்பாணத்து மனிதனின் குரலாய்ப் பேசினார். இந்திரா காந்தியின் நெருக்கடிகாலத்தை ஆத்மாநாம் கவிதைகள் விமர்சிப்பதைப்N;பால. ஸ்டாலின் காலத்தின் இருண்ட நாட்களை அன்னா அக்மதோவாவின் கவிதைகளை இன்றைக்கும் நமக்குக் காட்டுவதைப்போல முற்றுகைக்கும் போருக்கும் உள்ளான யாழ்ப்பாணத்தை அகிலன் கவிதைகள் காட்டின.

வாழும் காலத்தின் நெருக்கடிகள் தவிர்க்க முடியாமல் ஏதோவகையில் எந்தக்கவிஞரையும் பேசவைக்கின்றன. ஒரு கவி அந்தக்காலத்தினது சாட்சி. கவிதையும் அந்தக்காலத்தின் சாட்சியே.

ஆனால், இதிலும் சில முரண்களிருக்கின்றன. வாழும் காலத்தில் நான்கு முக்கிய வகை இயல்புடைய கவிகளை வரலாறு எப்போதும் கொண்டிருக்கிறது. ஒன்று ஒடுக்குமுறை அல்லது அதிகாரத்துக்கு ஒத்துப் போகும் கவிகள். அல்லது அதனைச் சார்ந்திருக்கும் கவிகள். இரண்டாவது, ஒடுக்குமுறையையும் அதிகாரத்தையும் எதிர்ப்போர். இவர்களில் புரட்சிகரமான போராட்டத்துக்கு ஆதரவான கவிகளும் உண்டு. ஆனால் இந்தக்கவிகளும் சார்பு நிலைப்பட்டவர்களே. இவர்கள் விமர்சன ரீதியாகவும் அறச் சார்போடும் ஒரு எல்லைக்கப்பால் நகர்வதில்லை. மூன்றாவது வகையினர், என்ன நடந்தாலும் அவற்றில் எந்த நிலையிலும் எந்த வகையிலும் சம்மந்தப்படாது விலகியிருப்பவர்கள். தட்டாமல் முட்டாமல் நடந்து கொள்பவர்கள் இவர்கள் என்ற சொல்லலாம். அடுத்தது நான்காவது வகையினர். இவர்கள் அறத்தைப் பிரதானமாகக் கொண்டவர்கள். எந்த நிலையிலும் சனங்களின் துயரத்தையும் பாதிப்பையும் முதன்மையாகக் கொண்டவர்கள். இவர்கள் சாட்சிகள். அன்னா அக்மத்தோவா ஒரு சாட்சி. ஆத்மாநாம் ஒரு சாட்சி. அடோனிஷ் இன்னொரு சாட்சி. நமது சூழலிலும் இத்தகைய சாட்சிகள் உண்டு. அதில் ஒருவர் அகிலன்.

ஒரு கவியில் இரண்டு நிலை அம்சங்களைப்பிரதானமாக அவதானிக்கலாம். ஒன்று அவர் கொள்ளும் பொருட்பரப்பு. அதாவது அவருடைய புலன் கொள்ளும் கவனத்தின் பரப்பு. அடுத்தது அவர் தன் கவிதைகளை வெளிப்படுத்தும் இயல்பு. அவருடைய மொழிதல். அதற்குப்பயன்படுத்தும் மொழி. அதற்கான சொற்கள். அந்தச் சொற்களை இணைக்கும் அல்லது அமைக்கும் தன்மை.

இவை இரண்டிலுமே ஒரு கவியின் ஆளுமையும் தனித்துவமும் இருக்கின்றன. இவைதான் ஒரு கவியின் முக்கியமான அடையாளத்தைத்; தீர்மானிக்கும் பிரதான காரணிகள். இவையே அந்தக்கவியை காலத்தின் மீது ஊன்றுவதும் காலத்திலிருந்து விலக்குவதும்.

பொதுவாக நெருக்கடி காலக்கவிகள் எப்போதும் அந்த நெருக்கடியை சனங்களின் நிலையில் நின்று காலத்தின் முன்னும் பின்னுமாகச் சஞ்சரித்து நிகழ்காலத்தை மதிப்பிடுவர். ஆனால் அவர்கள் ஒரு போதும் நிகழ்காலத்தின் சலனங்களுக்குள் நிற்பதில்லை. உள்ளடங்கி விpடுவதுமில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அத்தகைய மதிப்பீடு என்பது கவியின் முக்காலத்தையும் ஊடுருவும் பார்வைத்திறனாகும். வரலாற்றின் அனுபவத்தொகுதியும் எதிர்காலம் குறித்த அறத்தோடிணைந்த கனவும் நிகழ்கால உண்மையும் கவியின் இந்தப் பார்வையை உருவாக்குகிறது.

இந்த அடிப்படையைக் கொண்டே யாழ்பாண முற்றுகை எப்படி இருந்தது என்பதை அகிலன் கவிதைகள் காட்டுகின்றன. இது சனங்களின் நிலை நின்று நோக்கப்படும் உணரப்படும் அடையாளம். இந்த முற்றுகையை ஒரு படைத்துறை ஆய்வாளர் வேறு விதமாகவே சித்திரிப்பார். முற்றுகையிடும் தரப்பின் ஊடகக்காரர் இன்னொரு விதமாக இதை நோக்குவார். முற்றுகையை எதிர்க்கும் அல்லது எதிர்த்துப் போரிடும் தரப்பைச் சேர்ந்த கவிஞர் இதை வேறொருவிதமாக வெளிப்படுத்துவார். ஒரு என். ஜீ. ஓ ஆள் இதை வேறுவிதமாக உணருவார். ஆக வௌ;வேறு நோக்குநிலைகள் கொண்ட ஒரு விவகாரம் அவையெல்லாவற்றையும் கடந்து பொதுத்தளத்தில் கவிப் பெறுமமானத்தை அடைகிறது என்றால் அது எவ்வாறு என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

இந்தக்கேள்விக்கான பதிலை நாம் அகிலனின் கவிதைகளில் காணலாம். முற்றுகையின் நிலை மாறாலாம். அது நிச்சயம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாறிவிடும். அது தவிர்க்க முடியாத விதி. அப்போது அந்த முற்றுகையின் பெறமானமும் மாறிவிடும். வரலாற்றில் இதுமாதிரியான விசயங்களுக்கு எப்போதும் பெறுமதி இல்லை. நிகழ்காலத்தின் பெறுமதி மட்டுமே இவற்றுக்கு உண்டு. ஆக அப்போது சனங்களின் நிலைநின்று சாட்சி பூர்வமாக எழுதப்படும் கவிதைகளுக்கு மட்டுமே பெறுமதியிருக்கும். மற்றதெல்லாம் அந்தக்காலத்தோடு பெறுமதியற்றுப் போய்விடுகின்றன. தேவைகளுக்காக செய்யப்படும் காரியங்கள் எப்போதும் அந்தத் தேவைகள் முடிந்த கையோடு அவற்றின் பெறுமதியை இழக்கின்றன. ஆனால் அந்தத் தேவைகள் இருக்கும் போது அவற்றுக்கான பெறுமதி மிக அதிகமாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு தேவையும்தானே வரலாற்றை நிர்ணயிக்கும் காரணிகளாகின்றன என்று வாதிடுவோரையும் இங்கே நாம் கவனத்திற் கொள்ளுதல் அவசியம். ஆனால் அவற்றின் நிரந்தரத்தன்மை அவை கொண்டிருக்கும் உண்மையிலும் அதற்கான அறிவிலுமே தங்கியிருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மனித அடிப்படை விதிகளையும் தேவைகளையும் நலன்களையும் வைத்தே பொது விதிகள் உருவாகின்றன. அந்த விதிமுறைகளை பேணாத எந்த நோக்கமும் மனவெளிப்பாடும் நிரந்தரமானதல்ல. பொதுவானதுமல்ல. எனவே அவற்றுக்கான ஆயுட்காலமும் பெரிதாக இருக்க முடியாது.

5
ஒரு கவிதை எதன் அடிப்படையில் முக்கியத்துவமடைகிறது. எப்படி காலங்களைக் கடந்து செல்கிறது. எப்படி அது பிரதேசங்களைக்கடந்து, மொழியைக்கடந்து, பண்பாட்டைக்கடந்து, பிற சமூகங்களிலும் பிற காலங்களிலும் ஊடுருவுகிறது. எவ்வாறு அது மற்றச் சமூகங்களில் அறிமுகத்தையும் செல்வாக்கையும் செலுத்துகிறது. இந்தக் கேள்விகள் முக்கியமானவை.

இங்கே கவிதையின் பொருட்புலமும் வெளிப்பாட்டம்சமுமே இந்தப்பயணத்தை நிகழ்த்துகின்றன. இவை இரண்டும் இணைந்த நிலையில்தான் இந்தச் சாத்தியம் நிகழ்கிறது. தொன்மையான மொழியை அது நவீனப்படுத்துகிறது. நவீன வாழ்வை அது தொன்மை அம்சங்களோடு கலந்து நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமாக உருவாக்க எத்தனிக்கிறது. மனதின் எல்லா அறைகளிலும் கலாச்சாரத்தின் அத்தனை அடுக்குகளிலும் இருந்து அது தன் திரவியங்களைத் தேடிக்கொள்கிறது.

கவிதை கலாச்சார வெளியில் கொண்டிருக்கும் இடம் மிகப்பெரியது. பொறியாகக் கனலும் அதன் இயல்பு இன்னொரு நிலையில் ஒரு துளி நீராகவும் இருக்கிறது. பொறி பெருந்தீயை உருவாக்கக்கூடியது. நீரோ கடலை, சமுத்திரத்தைத் தன்னுள் கொண்டிருப்பது. இவ்வாறு அது பல நிலைகளில் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இந்தத்தன்மைகள் எல்லாம் கவிதைக்கு நிரந்தரத்தன்மையை அளிக்கின்றன.

எப்போதும் மொழியில் உருகிக் கொண்டிருக்கும் வடிவம் அது. உள்ளீடும் அதுதான். மொழியில் நிகழும் அசாத்தியங்கள் கவிதையைப் போல வேறு எந்த மொழிவழி அடைவுகளிலும் உருவாகுவதில்லை. எனவேதான் அது எப்போதும் எல்லாச் சமூகத்திலும் மிகச் சுலபமாகவே ஊடுருவுகிறது. தொன்மையும் அதி நவீனமும் இணைந்த இந்தக்கலவை இயற்கை அம்சத்தை உருவாக்குகிறது. இயற்கை எப்போதும் மிகப்பிரமாண்டமானது. வியப்பூட்டுவது. நிரந்தரமானது. கவிதையும் அப்படித்தான். இந்த அம்சங்களோடு, இந்த வகையில் தமிழ்;க்கவிதையிலும் பிற மொழிவழிக்கவிதைகள் பழக்கமாகியுள்ளன.

கடந்த முப்பதாண்டுகளில் பலஸ்தீனக் கவிதைகள், குர்திஸ் கவிதைகள், ஆபிரிக்கக்கவிதைகள், லத்தீன் அமெரிக்கக்கவிதைகள், வியட்நாமியக்கவிதைகள், கறுப்பினக்கவிதைகள், ரஷ்யக்கவிதைகள், மூன்றாமுலகக் கவிதைகள், சீனக்கவிதைகள் ஈழக்கவிதைப்பரப்பில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. இந்தளவுக்கு தமிழகக் கவிதைகள் கூட ஈழத்தில் அறிமுகத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவற்றைப்பற்றிய அவதானிப்பும் அறிமுகமும் இருந்தது. ஆனாலும் அந்த அறிமுகம் மேலே சொல்லப்பட்ட கவிதைகள் செலுத்திய செல்வாக்கை இவை பெறவில்லை. குறிப்பாக லாங்ஸ்டன் கியூஸ், மர்முட் தர்விஷ், அடோனிஷ், அன்னா அக்மதோவா, பெரோல்ட் பிரெக்ட், பெய்ஸ் அகமத் பெய்ஸ் போன்றோர் ஈழக்கவிதைப்பரப்பில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினர். ஈழக்கவிஞர்களைப்போலவே இவர்கள் உணரப்பட்டனர். இதற்கு பிரதான அடிப்படைக்காரணம் இந்தப் பரப்புகளின் கொந்தளிக்கும் வாழ்நிலையே. ஒத்த வாழ்க்கை நிலைமையும் அனுபவங்களும் இந்தப்பரஸ்பரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேவேளை தனியே இந்த நிலைமைகள் மட்டும் இந்த நெருக்கத்தைக் கொடுக்கவில்லை. அதற்கப்பால் அவை எட்டிய கவித்துவ எல்லைகள் ஏற்படுத்திய ஈர்ப்பும் முக்கிய காரணம்.

இதிலும் அவரவர் தத்தம் வழி நின்றும் அனுபவத்தின் வழியாகவும் அவரவர் பண்பாட்டு நிலைப்பட்டும் தங்கள் கவிதையை நிகழ்த்தியிருக்கின்றனர். இங்கே கவிதை இவர்களிடையே ஒரு நிகழ்வெளிப்பாடாகவே, உரையாடலாகவே அமைந்திருக்கின்றது. எதிர்ப்புக் குரலாகவும் விடுதலை வெளியாகவும் அமைந்த இந்தக்கவிதைகள் சமூக கலாச்சார இயக்கத்தில் பிரதான அசைவைக் கொண்டன.

அகிலனிடத்தில் அன்னா அக்மதோவாவின் பாதிப்பு அதிகமுண்டு. இதை அவரே சொல்கிறார். கூடவே சுகுமாரனின் பாதிப்பையும்.

என்னுள் வெடிகுண்டு போல வந்து மோதி வெடித்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரின் காயவார்த்தைகளும் அன்னா அக்மத்தோவாவின் மென்னுணர்வும், துயரமும் கவிந்த வார்த்தைகளும் பெரும் பாதிப்பை என்னிடம் உண்டாக்கின. என் கவிதைகளை உற்று நோக்கும் எவரும் அன்னாவின் நோவா நதியை, சுகுமாரனின் சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனையை அவற்றில் காணவே செய்வர்.

அநாதிப்புகையிரதம், கடதாசிப்படகின் மரணம்-2, யாத்திரை-1, யாத்திரை-2, தலைப்பிடாத காதல்கவிதை போன்றவை நேரடியாகவே சுகுமாரனின் பாதிப்பையுடையவை. ஆனால் இவர்;களைக் கடந்து அகிலன் தனக்கான திசையில் பயணிக்கிறார். அதுவே இந்தக்கவிதைகளை முதனிலைப்படுத்துகின்றன. ஐதீகங்கள், தொன்மங்களை அகிலன் புதிய நிலைகளில் இணைக்கிறார். அதிகம் எழுதாமல் மிகக் குறைவாகவே எழுதியுள்ள அகிலனின் இந்தக்கவிதைகளில் எதுவும் ஒன்றிலிருந்து ஒன்று இறங்கிக் கொள்ளவில்லை. ஒரு சீரான நிலையை குலையாமல் அகிலன் பேணுகிறார்.

தொண்ணூறுகளில் ஈழக்கவிதைப்பரப்புக்கு வந்த முக்கியமான கவிஞர்களில் அஸ்வகோஸையும் எஸ்போஸையும் பா.அகிலனையுமே நான் அதிக தடவைகள் வாசித்திருக்கிறேன். இன்னும் அந்தத்தவனம் தீரவில்லை.

இந்தத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை 1994,95 காலப்பகுதியில் நான் வெளிச்சம் இதழ்களில் பிரசுரித்திருக்கின்றேன். அவற்றை பிரசுரத்துக்கு முன்னர் பார்த்தபோது மலைகளின் ஆழ்மன ஓட்டத்தையும் கடலின் தீராத அசைவையும் உணர்ந்தேன். ஒரு தீவிர வஸீகரம் அவற்றில் இருந்தது. அந்த வஸீகரம் இப்போது இந்தக்கவிதைகளை வாசிக்கும்போதும் இருக்கிறது. எப்போதும் எந்த வாசகனுக்கும் அது இருக்கும். என்றும் அது தீர்ந்து விடாது.
---------------------------------------------------------------------------------

Friday, May 2, 2008

சுஜாதா:அஞ்சலி


எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------------------

நான்கு தலைமுறையினரிடையே சமனிலை குறையாமல் செல்வாக்கோடு பயணிப்பதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. தமிழில் இதுவொரு அபூர்வ நிகழ்ச்சி. அதிலும் சீரியஸான விசயங்களையும் தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு இயங்கும் ஒருவர் இவ்வளவுக்கு அறிமுகத்தையும் செல்வாக்கையும் பெறுவதென்பது தமிழ்ச்சூழலில் மிக அதிசயமானது.

சுஜாதாவைப்பற்றிய அறிதல் பல நிலைப்பட்டது என்றபோதும் அவர் ஒரு எழுத்தாளராகவே அதிகமாக தெரியப்படுகிறார். கல்வி, தொழில் போன்றவற்றில் சுஜாதா ஒரு பொறியியாளர். ஆனால் அந்தத்துறையில் அவர் பெற்ற அறிமுகத்தையும் செல்வாக்கையும் விடவும் எழுத்துத்துறை மூலம் அவர்பெற்ற செல்வாக்கே அதிகம். அதுவே சுஜாதா என்ற அடையாளம்.

ரங்கராஜன் என்ற பெயரையும் விட சுஜாதா என்ற பெயர் பெற்றிருக்கும் அடையாளத்தில் அதிகம் விமர்சனங்களிருந்தாலும் அதுவே இப்பொழுது மிஞ்சியுள்ளது. அதுவே இப்போது இந்தக்குறிப்பை எழுதும்படியான தகுதியையும் நிலையையும் உருவாக்கியுள்ளது.

சுஜாதா ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து எழுதுவது, அதிகமாக எழுதுவது என்பது தமிழில் மிகக் குறைவு. ஒரு காலத்தில் அதிகமாக ஜெயகாந்தன் எழுதினார். ஆனால் அவர் பின்னாளில் எழுதுவதையே நிறுத்திக் கொண்டார். சுந்தர ராமசாமி போன்றோர் இநுதி வரையும் எழுதியிருந்தாலும் இடையில் குறிப்பிட்டகாலம் எழுதுவதை நிறுத்தியிருந்தவர்கள். நகுலன் போன்றோர் இதில் சற்று விதிவிலக்கு. ஆனால் அவர்கள் எப்போதும் வெகுசனத்தளத்துக்கு வராதவர்கள். அதில் அக்கறையுமற்றவர்கள். இவ்வாறான நிலையில் சுஜாதா முக்கியமானவர்.

சுஜாதாவின் எழுத்துகள் முற்றிலும் சீரியஸானவை என்று சொல்லிவிட முடியாது. பொதுவாக அவரை எந்தச்சிற்றிதழும் தங்களுடைய எழுத்தாளராக ஏற்றுக் கொண்டதில்லை. சிற்றிதழ்ப்பண்பாட்டிலுள்ள எதிர்ப்புக்குணம் இதற்குப்பிரதான காரணம் என்கிறார் ஜெயமோகன். ஆனால் சுஜாதாவின் கணிசமான கதைகளும் அவருடைய எழுத்தின் விளைவான பல விசயங்களும் தமிழ்ப்பரப்பில் முக்கியமான இடத்துக்குரியது.

மிகச் சிறந்த தமிழ்ச்சிறுகதைகளில் சுஜாதாவின் சிறுகதைகள் சிலவற்றுக்கு நிச்சயம் முக்கியமான இடமுண்டு. அதைப்போல அறிவியற் கதைகளிலும் சுஜாதாவே தமிழில் முன்னோடியாக உள்ளார். அவர் நூற்றுக்கணக்கான அறிவியற் கதைகளை எழுதியிருந்தாலும் அவற்றிற் பல அறிவியல் விதிகளுக்கு பொருந்தாத மிகு கற்பனைக்கதைகள் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னதான் இருந்தாலும் சுஜாதாவே தமிழில் அறிவியற் கதைகளின் முன்னோடியாக நமக்கு உள்ளார். அதைப்போல அறிவியல் விசயங்களை இலகு படுத்தி பெருவாரியான தமிழர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர் அவர்தான். இதற்கு அவர் எப்போதும் பெரும் ஊடகங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதுதான் காரணம். வணிக ஊடகங்களில் அதிகம் எழுதியதால் வியாபார ரீதியான குறியே எப்போதும் அவருடையது என்று ஆதாரப்படுத்துவோரும் உண்டு. இந்தக்குற்றச்சாட்டில் நியாயமுமுண்டு.

ஆனால் வணிக இதழ்களினூடாக அவர் பல விசயங்களையும் பெருவாரியான மக்களுக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார் என்பதையும் மறுத்து விட முடியாது. புதுமைப்பித்தன், அழகிரிசாமி, நகுலன், பிரமிள், அம்பை போன்ற தமிழின் முக்கிய படைப்பாளிகளைப்பற்றி பெருவாரியான சனங்கள் அறியக்கூடிய அறிமுகங்களை அவர் தன்னுடைய எழுத்தின் மூலம் செய்திருக்கிறார். அதைப்போல அவர் இலங்கை நிலவரங்களையும் ஈழப்படைப்புகளையும் தெரியப்படுத்தி வந்திருக்கிகறார்.

குறிப்பாக யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதையொட்டிய பதிவாக ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையை எழுதி லட்சக்கணக்கான தமிழர்களிடம் அந்தக் கொடுமையான துன்பியல் நிகழ்வை தெரியப்படத்தினார். அவ்வாறு பின்னர் வெளிவந்து கொண்டிருந்த ஈழத்தின் முக்கிய மான புத்தகங்கள் படைப்புகளை எல்லாம் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் ஈழப்போராட்டம் பற்றிய எந்த விதமமான அபிப்பிராயத்தையும் அவர் எப்போதும் நெரடியாகச் சொன்னதில்லை என்ற வொல்வோரும் உண்டு.

ஈழப்போராட்டம் பற்றி மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய பிரச்சினைகள் எதனைப்பற்றியும் எந்தவிதமான முடிந்த முடிவுகளையும் சொல்லும் இயல்பை அவர் ஒரு போதும் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தின் தலித் விவகாரங்களைப்பற்றிய பார்வைகளையோ பெரியாரியம் பற்றிய கரத்துகளையோ தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்த பகுத்தறிவுவாதத்தைப்பற்றியோ சுஜாதா எப்போதுமே எதுவும் கூறியதில்லை.

அவர் தன்னுடைய பயணப்பாதையை வேறொரு வகையில் வைத்துக் கொண்டார். எல்லாவற்றைப்பற்றியும் பேசுவார். ஆனால் எதிலும் சிக்குப்படாமல் பேசும் ஒரு உத்தியை அவர் பின்பற்றினார். அவருடைய இந்தக்குணம் பற்றி பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தபோதும் அவர் அவற்றின் வலைகளில் வீழவில்லை.

தமிழகத்தின் அரசியலும் பண்பாட்டு நடவடிக்கைகளும் கேளிக்கை மயப்பட்டுக் கொண்டு போவதை தன்னுடைய எழுத்துகளில் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் தெரிவித்துவந்தாரே யொழிய அவற்றுக்கெதிரான விமர்சனங்களை அவர் வெளிப்படையாக வைத்ததில்லை. இதற்கான காரணம் அவர் வெகுசனத்தளத்திலான வணிக ஊடகங்களில் இயங்கியது. அடுத்தது அவர் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளின் உருவாக்கிகளான அதே ஊடகங்களில் சிறபை;பட்டிருந்தது. அல்லது அவற்றில் அவர் தங்கியிருந்தது.

குறிப்பாக சுஜாதா இயங்கிய சினிமா என்பது இதற்க நல்ல உதாரணம். 1977 காலப்பகுதியில் கமலஹாசன் ரஜனிகாந்த நடித்த கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் என்ற படத்திற்கு திரைக்கதை வசனத்தை எழுதியதிலிருந்து இதுவரையில் ஏறக்குறைய முப்பதுக்கு மேலான படங்களுக்கு திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார் சுஜாதா. இறுதியில் ரஜனிகாந்தின் சிவாஜி படத்திற்கான திரைக்கதையை எழுதியிருந்தார். இப்போது சங்கரின் ரோபோ என்ற புதிய படத்துக்கும் அவரே திiரைக்கதை வசனத்தை எழுதுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. தன்னுடைய திரைக்கதை வசனம் எழுதும் அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர் திரைக்கதை என்றால் என்ன என்ற ஒரு புத்தகத்தையே எழுதியுமிருந்தார்.

இதைப்போல சுஜாதா கைவைக்காத துறைகளே எழுத்தில் இல்லை. மாணவர்கள், இளைஞர்களை மையமாக வைத்து அவர் பல அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் பிரசுரமாக வெளிவந்த ஏன், எதற்கு எப்படி என்ற புத்தகம் இதில் முக்கியமானது. கேள்வி பதில் மூலம் அறிவியல் ரீதியாக பல விசயங்களை இதில் அவர் பேசியிருக்கிறார். அவருடைய பகுத்தறிவுப்பார்வை என்பது எதையும் அறிவியல் விளக்கத்துக்கு உட்படுத்தும் கல்வி சார்ந்த நடவடிக்கையாக அமைந்தது. இது தவிர பல நாவல்கள் துப்பறியும் நாவல்களாகவும் அறிவியல் கதைகளாகவும் நகைச்சுவைக்கதைகளாகவும் அமைந்தவை.

இந்த எழுத்துகள் அதிகம் ஆழமான வாசிப்புக்குரியவை இல்லை என்ற போதும் இவற்றில் சசில முக்கியமானவை. குறிப்பாக சிறிரங்கத்துக் கதைகள், சுஜாதாவின் தேர்ந்த சிறுகதைகள் மற்றும் அறிவியற் கதைகள் என்பவை இதில் உண்டு.

பொதுவாக சுஜாதா எப்போதும் தன்னை தமிழின் அதிகார, வெகுஜன, பிரபல சக்திகளுடன் தெளிவாக அடையாளம் காட்டிக் கொண்டதுதான் அவரை ஆழமான படைப்பாளியாக உணர முடியாமற் போய்விட்டதாக இன்னொரு இடத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். படைப்பாளிக்குரிய கலகத்தனத்துக்கு இந்த அதிகார வெகுஜன பிரபலத்தளம் ஒரு போதும் விட்டுக் கொடாது. சுஜாதா நல்ல எழுத்துகளை, நல்ல இசையை, தரமான ஓவியங்களை, நல்ல சினிமாவை, நல்ல இலக்கியத்தை அடையாளம் கண்டவர். அவற்றை தெரிந்தவர். அவற்றை நோக்கி தமிழ்ச்சமூகம் நகரவேண்டும் என்று விரும்பியவர். ஆனால் நடைமுறையில் முடிவில்லாத சமரசங்களுக்கு உட்பட்டவர். எல்லாவற்றுக்கும் ஏதொ வகையில் ஒத்தோடியவர்.

அவருடைய இந்த இயல்பு அவரை வணிகத்துக்கும் சீரியஸ_க்குமிடையில் முடிவில்லாத அளவில் அலைத்துக் கொண்டிருந்தது. அவர் இதிலா அதிலா என்று அடையாளம் காண்பது வரையில் இந்தநிலை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

சுஜாதா கணையாழியில் எழுதியிருக்கிறார். அவருடைய நூல்கள் உயிர்மை பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. அவர் கடந்த காலங்களில் நவீன இலக்கிய நூல் வெளியீடுகளில் பங்கேற்றிருக்கிறார். இளைய தலைமுறைப் படைப்பாளிகளிடத்தில் நட்பையும் அறிமுகத்தையும் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துநடை தமிழில் ஏற்படுத்திய தாக்கமே. எளிமையான புதிய சாதாரண சொற்கiயும் தெறித்துச் செல்லும் வேகமுடைய எழுத்து நடை சுஜாதாவினுடையது. இந்த நடை அவருக்குப்பின் வந்த பெரும்பாலான படைப்பாளிகளிடததில் அதிக செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது.

இது அவரை புதிய தலைமுறைப்படைப்பாளிகளுடன் இணைவு கொள்ள வைத்தது. அத்துடன் அவர் உலகின் எந்த விவகாரத்தையம் தமிழுக்கு உடனே கொண்டு வந்து விடும் விரைவைக் கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். சுஜாதாவுக்கு நவீன இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டளவக்கு சங்க இலக்கியத்திலும் பரிச்சயமும் ஈடுபாடும் இருந்தது. அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் சங்கப்பாடல்கள் எனப்பலவற்றை எளிமையாக விளங்கிக் கொள்வதற்கான உரைகளையும் மொழிதலையும் செய்திருக்கிறார்.

இவ்வாறு எல்லா நிலையிலும் ஒரு வினோதமான கலவையாக உருவாகியிருந்த சுஜாதா தன்னுடைய எழுபத்தோராவது வயதில் காலமாகிவிட்டார். அவருடைய மறைவுக்குப்பிறகு அவரைப்பற்றி எழுதாத பத்திரிகைகளோ செய்தி வெளியிடாத ஊடகங்களோ தமிழில் இருக்கவில்லை.

அவருடைய இறுதி நிகழ்வில் குழு, கட்சி பேதங்களில்லாமல் எல்லாத்தரப்பினரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்ததையும் சிவாஜி பட வெற்றி விழாவின்போது அவர் மேடையில் தனக்கு அந்த விழாவில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப்போல வெறித்தபடி இருந்த காட்சியும் இப்போதும் நினைவில் நிற்கின்றன. அவை சொல்லும் சேதிகளும் ஏராளம்.

-----------------------------------------------------------------

Wednesday, April 16, 2008

வாசுதேவன் கவிதைகள் "தொலைவில்"


எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------------------


வீன ஈழத்தமிழ் வாழ்க்கையை அல்லது சமகால ஈழத்தமிழர்களின் நிலையை வாசுதேவன் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன. குறிப்பாக கடந்த நூற்றாண்டின் அரைப்பகுதியிலிருந்து அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிற ஈழத்தமிழர் அவல வாழ்வின் உக்கிர நிலையே வாசுதேவன் கவிதைகள். அவற்றை அவர் தன்னனுபவங்களின் வழியிலும் தன்னுடைய தரிசனங்களின் வழியாகவும் கவிதையில். முன்வைக்கிறார். அதிலும் புலம்பெயர்தலின் கசப்பான பிராந்தியத்தை அவர் தன் கவிதைகளில் நிரப்புகிறார். ஆனால் அது புலம்பலாக இல்லை. பகிர்தலான முறையில்.



இதன்படி எல்லா ஈழத்தமிழ்க்கவிஞர்களைப் போலவும் வாசுதேவனும் அரசியற் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார். அதை விட்டு விலக அவரால் முடியவில்லை. அரசியல் ஈழத்தமிழர்களை மிக ஆழமாகப் பாதித்துள்ளது. இன்னும் அது அவர்களைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நேரடிப்பாதிப்பு. அவலமும் வலியும் வேதனையும் நிரம்பிய பாதிப்பு அது. சொந்த நிலத்திலும் அவர்களின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாதுகாப்புக் கருதி வேறு நிலத்துக்கு சென்றாலும் அங்கேயும் அவலமும் துயரமும் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பண்பாட்டாலும் திணைகளாலும் ஒத்த இயல்புடைய தமிழகத்துக்கு பெரும் நம்பிக்கையோடு ஆறுதல் தேடிச் சென்றால் அங்கேயும் அவர்களை வரவேற்க அவலம் காத்திருக்கிறது.



புலம்பெயர்ந்து வேறு திணைக்கு விலகிச் சென்றாலும் அங்கும் நிழலாகவும் நிஜமாகவும் தொடருகின்ற அவலம் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கும் கொடுமையான யதார்த்தம். இது தனியாக விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய விசயம். அதற்கு இங்கே சாத்தியமில்லை. ஆனால் எந்த ஈழத்தமிழ்க்கவிஞரைப்பற்றியும் எழுதும் போது இந்த அரசியல் விளக்கத்தை முன்னோட்டமாக சிறு குறிப்பாகவேனும் எழுதவே வேண்டியிருக்கிறது. அதிலும் பலம்பெயர் கவிஞர்களாயின் கட்டாயம் இது தவிர்க்க முடியாதது.



ஈழத்தமிழர் வாழ்க்கை இன்று சந்தித்திருக்கிற நெருக்கடியே அவர்களின் எல்லாப்படைப்புகளிலும் முதன்மைப்படுகின்றன. அதனால்தான் அவர்களுடைய படைப்புகள் அரசியல் முதன்மையுடனிருக்கின்றன. படைப்புகளின் கூறுகளைச் சிதைக்காமல் இந்த மையத்தில் ஈழத்தமிழ்ப்படைப்புகள் இருப்பது ஆறுதல். இதற்கு சில பொதுவான அனுபவத்தை ஈழப்படைப்பாளிகள் பெற்றிருக்கிறார்கள். அதுவே அவர்களைச் சரிய விடாது முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.



ஒடுக்கப்படுகின்ற இனங்களின், சமூகங்களின், நாடுகளின் படைப்புகள் தவிர்க்க முடியாமல் அவர்கள் சந்திக்கின்ற நெருக்கடிகளையே மையத்திற் கொள்கின்றன. படைப்பை தமது அரசியல் வழிமுறையின் ஒரு பகுதியாகவும் அவர்கள் கொள்கின்றனர். ஏன் சிலபோது சில இடங்களில் படைப்பே பிரதான அரசியற்பாதையாகவும் இருந்திருக்கிறது. படைப்பெனும்போது தனியே இலக்கியம் மட்டுமல்ல. சகல கலைகளும் அதில் அடங்கும். ஒளிப்படம் சினிமா எனச்சகலதும். ஆனால் தமிழில் இது விளங்கப்பட்ட முறையோ வேறு. அரசியற் படைப்பு என்று அது தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் நிலை இன்னும் மோசமானது. தட்டையான, பொய்க்கூறுகளும் புனைவுகளும் நிரம்பி வெறும் பிரச்சார நெடி வீசும் விதமாகவே இது இருக்கிறது. பொதுவாக அரசியல் அமைப்புகளோடும் தரப்புகளோடும் அடையாளம் காட்டி நிற்போர் அரசியல் படைப்புகள் என்ற பெயரில் அதிகாரத்தரப்புக்கு அல்லது அதிகாரத்தை நோக்கிய தரப்புக்கு ஏற்ப தமது மொழியையும் வெளிப்பாட்டையும் உருவாக்குகின்றனர். அதனால் அவர்களின் படைப்புகளில் உண்மை இல்லாமற் போய்விடுகிறது. சார்பு நிலையில் உண்மைக்கு இடமில்லை. அங்கே உண்மை பல சந்தர்ப்பங்களிலும் திரையிடப்படுகிறது. உண்மையற்ற படைப்பு பாவனை நிரம்பிய வெற்று மொழியினால் அலங்காரமாக்கப்பட்டு உண்மைபோல முன்வைக்கப்படுகிறது. பித்தளைக்கு பொன்பூசும் தொழில் இது. அதைத் தவிர வேறு வழியில்லை. பொய்யான கனவும் மயக்கமும் நிரம்பிய குரல் அது.



ஆனால் வாசுதேவனைப் போல எழுதும் ஈழத்தமிழ்ப்படைப்பாளர்கள் பலரும் இதிலிருந்து விலகியே நிற்கின்றனர். பாவனையற்ற முறையில் வாழ்வை நெருங்கும் படைப்பு முறையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் அரசியலை மையப்படுத்தி கவிதையின் இயக்கம் நிகழ்வதால் எளிமை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த எளிமை இன்று நவீன கவிதையில் வளர்ச்சி பெற்று வருகிறது



தமிழகத்தில் இதற்கு சிறந்த உதாரணம் ஆத்மாநாம். தவிர மு.சுயம்புலிங்கம் தொடக்கம் மனுஷ்ய புத்திரன், மாலதி மைத்திரி, சல்மா என்றொரு நீட்சி உண்டு. அண்மைக்காலத்தில் தமிழகத்தில் இந்தப் போக்கு இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது. தங்கள் காலம் இடம் மற்றும் நிகழ்வுகள் குறித்த புறப்பிரக்ஞை படைப்புகளில் மையப்படுத்தப்படுகின்றன.



பொதுவாக ஈழத்திலக்கியம் தொடர்ச்சியாக அரசியலில் மையங்கொண்டது என்பதால் பாவனைகளிலிருந்தும் பிரச்சார உத்திகளிலிருந்தும் விலகி அது தன்னுள் செழுமையடைய வேண்டிய நிலைக்கானது. இதற்கு இனவொடுக்குமுறையைச் சந்தித்த சமூகங்களின் குரலையும் படைப்புகளையும் அது முன்னனுபவமாகக் கொண்டது. இங்கே எம்.ஏ.நுகமான் மொழிபெயர்த்து தொகுத்த பலஸ்தீனக்கவிதைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது. ஈழத்துக்கும் பலஸ்தீனத்துக்கும் பொதுவான அம்சங்கள் ஒருமித்திருந்ததால் அந்தக் கவிதைகள் மிக நெருக்கமாக உணரப்பட்டன. ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் உந்துதலுக்கான ஊக்கவிசையை அப்போது பலஸ்தீனக்கவிதைகள் தந்தன. அதைப்போல ஒடுக்குமுறைக்குள்ளாகும் சனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டம், அரச பயங்கரவாதம் போன்றவற்றை முன்வைக்கவும் கூடியமாதிரிகளை பலஸ்தீனக்கவிதைகள் உருவாக்கின. சர்வதேச ரீதியான அறிமுகத்தையும் கவனத்தையும் கொண்டிருந்த அத்தகைய படைப்புகளின் அறிமுகமும் பரிச்சயமும் தவிர்க்க முடியாமல் ஈழத்தின் அரசியற் படைப்புகளில் செல்வாக்குச் செலுத்தி செழுமையை ஏற்படுத்தின.



தொடர்ந்து ஆபிரிக்கக் கவிதைகள், தென்னமெரிக்கக் கவிதைகள் என்று அந்தச் செழுமை அரசியல் ரீதியான ஈழத்திலக்கியத்தின் அடையாளத்துக்கு உதவியிருக்கின்றன. ஆனால் ஈழத்திலக்கியத்திலும் பாவனைக்குரலும் பொய்மொழியும் இல்லாமலில்லை. அதிலும் இனஒடுக்குமுறை, ஆயதப்போராட்டம் என்ற வகையில் அது பல இடங்களில் பலவிதங்களில் உண்டு. அவை பற்றி இங்கே இப்போது விவாதிக்கப்படவில்லை. இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் வேறிடத்தில் பார்க்கலாம்.



அரசியல் நேரடியாக வலுவான முறையில் வாழ்வை பாதிக்கும்போது அதை எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தம் தவிர்க்க முடியாதது. ஈழ வாழ்வு இன்று இத்தகைய நிலையையே எதிர்கொள்கிறது. சொந்த நிலத்தில் அரச பயங்கரவாதம் தமிழ், ஆயதக்குழுக்களின் பயங்கரவாதம், தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயர்ந்து பிற தேசங்களுக்குப் போனால் அங்கே வேரிழந்த நிலை. அடிமை வாழ்க்கை அல்லது இரண்டாம் மூன்றாம் நிலையில் வைத்து அந்த மக்களால் பார்க்கப்படும் அவலம். ஆக சொந்த நிலத்திலும் அவலம். பெயர்ந்த நிலங்களிலும் அவலம். அவலத்தில் உழலும் கொடுவிதி இன்று ஈழத்தமிரின் வாழ்வும் கதையுமாகியுள்ளது.



இத்தகைய பின்புலத்தில்தான் வாசுதேவனின் கவிதைகள் உள்ளன. இந்த அடிப்படையில் வைத்தே அவருடைய கவிதைகளை நாம் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அல்லது அவருடைய கவிதைகளைப்படிக்கும் போது இந்த விசயங்கள் நமது மனதில் இந்த வாழ்வின் துயர்நிறைச்சித்திரமாகின்றன.



வாழ் களத்தினதும் வாழ் காலத்தினதும் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியத்தை புறக்கணிக்க முடியாத நிலையின் வெளிப்பாடு இது. இதுவே வாசுதேவனிடத்தில் கவிதைகளாகியிருக்கின்றன. பொதுவாக வுhசுதேவனின் இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை புலம்பெயர்வாழ்வைப்பற்றியவை. தாய் நிலத்தை இழந்த அந்தரிப்பின் வலி இவற்றில் முக்கியமடைந்துள்ளன. இதற்கு இந்தத் தொகையிலுள்ள பல கவிதைகள் ஆதாரம்.



கறுப்புப் பெட்டி பற்றி



எனக்குத் தெரியும்

யாரும் எதிர்பாராத

ஒரு கணத்தில்

எந்த ராடருக்கும்

அகப்படாத

ஒரு புனைவு வெளியில்

நான் உடைந்து நொறுங்கி

வீழ்ந்த பின்னர்

நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து

எனது கறுப்புப்

பெட்டிகளைத் தேடுவீர்கள்



அராலி வெளியில்

தாளம்பூப்பற்றைக்குள்

அவற்றை நான் கழற்றி எறிந்து

பல வருடங்களாகி விட்டன என்பதை

இப்போதே

சொல்லி விடுகின்றேன்



நேரத்தை விரயம் செய்யாது

பாதையைப் பார்த்து

பயணம் செய்யுங்கள்.



மிகச் சாதாரண வார்த்தைகளின் மூலம் அதிர்வுகளை ஏற்படுத்தி தன்னிலையை முன்வைத்து புலம்பெயரிகளின் பொது உளவியலை காட்டுகிறார் வாசுதேவன். இதுவே அவருடைய கவிதைகளின் பொதுக்குணம். அதேவேளை இதை அவர் எளிமையாகச் சொல்லி ஆழமமாக உணர வைக்கிறார். இந்த எளிமை அசாதாரணமானது. நேரடித்தன்மை கொண்ட வார்த்தைகள், வரிகளின் மூலம் கவித்துவத்தை உருவாக்கி தன்னுடைய கவிதையை நிறுவுகிறார் வாசு. வாசுதேவனின் இந்த எளிமையை நாம் தா. இராமலிங்கத்திடமும் காணலாம். சாதாரண சொற்களின் மூலம் கவிதையை கட்டியெழுப்பும் ஆற்றல் இது. இதில் வெற்றி பெற்றவர் தா.இராமலிங்கம். இப்போது இதில் வெற்றியடைந்திருக்கிறார் வாசுதேவன்.



இந்த எளிமை என்பது வெளிப்பார்வையில் மிகச் சாதாரணம் போலத் தோன்றுவது. நம்மால் இந்தமாதிரி பல விசயங்களை மிகச் சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று தென்படுவது. ஆனால் அதில் ஈடுபடும்போது அது அவ்வளவு சுலபமாக இல்லை என்பது அப்போதுதான் தெரியவரும். இதில் வேடிக்கை என்னவென்றால், எளிமை என்பது இப்போது நடைமுறையில் மிகக்கடினமானதாகிவிட்டது. அதைப்பின்பற்றுவது சிரமமாகவுளன்ளது. இது சுவாரஷ்யமான முரண். காந்தியின் எளிமை இப்போது எவ்வளவு கடினமானதாக ஒவ்வொருவராலும் உணரப்படுகிறது. சேயின் எளிமையை எளிதில் எந்தப்புரட்சிவாதியாலும் அணுகமுடியாதிருக்கிறது. இதுதான் இன்றைய அவலமும் அபத்தமும். இதுதான் மொழியிலும் மொழிதலிலும் நிகழ்கிறது.



தா. இராமலிங்கம் எளிமையின் மூலம் தன் கவிதைகளைக் கட்டமைத்தவர். மிகச் சாதாரண சொற்கள். நாம் அறிந்து புழங்கிய சொற்கள். மிக எளிய வரிகள். ஆனால் அவை கொள்ளும் உணர்வொழுங்கினால் கவி வடிவத்தை அடைந்தவை. அதைப்போல வாசுதேவன் இப்போது தன்னுடைய கவிதைகளை இன்னொரு வகையில் எளிமையாக்கித்தருக்pறார். இரு எளிமைகளும் வேறு வேறானவை.



இந்த எளிமைக்கு உதாரணமாக எவ்விடம் எவ்விடம், யாதும் ஊரே யாவரும் கேளீர், மனமெனும் மரங்கொத்தி, இசை மூலம், பூனை ஞபகங்கள், வெள்ளத்தில், கொரூரம், பிரிந்துபோன ஆடுகள், அரிசிப்போராட்;டம், மேடை, ஆதியிலே தனிமையிருந்தது, அறிவுப்புற்று நோய், அவ்வளவேதான் நான், கனவுகளைத்தேடி, மீளவரல், ஓவியம், காணவல்லாயோ, தீதோ நீ சொல் தீயே, நாளையின் நேற்றை நாள், தரகர்கள் வேண்டாத என் கடவுள்கள், இல்லாமலிருத்தல், இலக்கியம், ஒத்த கருத்து, எல்லாமே தயாராகி விட்டது, வேரெரிப்பு, உலகம் உனக்காக, இறுதிப்பதில், கறுப்புப் பெட்டிபற்றி, போய்வருகிறேன் ஆகிய கவிதைகள் உள்ளன.



வாசுதேவனின் கவிதைகள் இந்தத் தொகையில் இரண்டு வகையானவையாக இருக்கின்றன. ஒன்று எளிமை என்றால் அடுத்தவை அதனிலிருந்து சற்று மாறுதலானவையாக உள்ளன. இதற்கு முன்றாவது துளை, தொலைவில், கோடோ வரும் வரையும், தத்துவத்தின் தோல்வி அல்லது தோல்வியின் தத்துவம், கற்றதை (அ)கற்றலில், பலஸ்தீனப்பாதை, துளிக்குள் ஒரு தியான வெளி, அவ்வவாறுரைத்தான் ஸாரத்துஸ்த்ரா, அபத்தங்கள், பொய்கூறி விழும் ப+, துணையற்ற பயணங்கள், காஞ்சாவிற்குப்பின் ஆகிய கவிதைகளைக் காணலாம். இவையும் எளிமையின் தடத்தில்தான் பயணிக்கின்றன. ஆனால் இவற்றின் வெறிப்பாடு சற்று வேறானது. பொருளுணர்த்து முறையில் இவை சற்று மாறுபடுதலைக் கொண்டிருக்கின்றன.



வாசுதேவன் கவிதைகளின் பொது அம்சம் புலம்பெயர்தலின் வலியே. இது பொதுவாகவே புலம் பெயர்ந்த எல்லா ஈழத்தமிழ்க்கவிஞர்களிடமும் உள்ள பொதுவான அம்சம்தான். ஆனால் அதற்குமப்பால் மற்றவர்களை விட வாசுதேவன் இன்னும் விரிவு கொண்டு பயணித்துள்ளார். அந்தப்பயணம்தான் அவரை கவனிக்கத் தூண்டுகிறது.



இவற்றை நாம் தொகுத்துப்பார்க்க வேண்டும். புலம் பெயர் ஈழக்கவிஞர்கள் பல தேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்வதால் எல்லாப்புலம் பெயரிகளின் பிரச்சினையும் உணர்வுகளும் ஒரே விதமானவையல்ல. சில அம்சங்களில் அவர்களுடைய உணர்வுகளில் பொதுத்தன்மை இருந்தாலும் வௌ;வேறு தேசங்களில் வௌ;வேறு அரசியல், புவியியல், பண்பாடுகள் கொண்ட சமூகங்களுடன் அவர்கள் கொள்கின்ற உறவாடல் அல்லது கொள்ள வேண்டிய உறவு நிலை அவர்களுக்கிடையிலான முரண்களையும் அவற்றின் விளைவான பிரச்சினைகள் அனுபவங்களையும் வேறுவேறாகவே தருகின்றன.



தமிழ்க்கவிதையில் இதுவொரு புதிய அம்சம். புதிய திணைப்பரப்பை புலம்பெயர் இலக்கியம் தருகிறது. அதிலும் நாம் பொதுவாக இதுவரையிலும் அறிந்த புலம்பெயரிலக்கியத்தின் அடையாளப்பரப்பை விட்டு வாசுதேவன் விலகியிருக்கிறார்.



கடந்த இருபது ஆண்டுக்கும் மேலான புலம் பெயர் இலக்கிய அறிமுகத்தில் தாய்நிலத்தை இழந்த துயரமே அதிகம் தூக்கலாக இருந்திருக்கிறது. அதைத்தவிர இன்னும் பல பரப்புகளில் அது நிலைகொண்டிருந்தாலும் பொதுவாக இவ்வாறு அந்நிய நிலத்தில் போய் விழுந்த அவலநிலை, வேரிழந்த துயரமே இந்தத்திணைக்குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் விலகல்களை பத்மநாப ஐயர் தொகுத்த இன்னொரு காலடி, யுகம் மாறும் போன்ற தொகுப்புகளில் இடம்பெற்ற சில படைப்புகளும் அப்பால் தமிழ் வெளியீடுகளும் எக்ஸில், ஊடறு மற்றும் பிற படைப்பாளிகளின் பல தனித் தொகுதிகளும் படைப்புகளும் கொண்டிருக்கின்றன.





வாசுதேவனும் இந்த விலகல்களில்தானிருக்கிறார். தாய் நிலத்தை விட்டுப்பிரிந்த துயரத்தைக்கூட அவர் தன்னடையாளம் துலங்கும் விதமாகவே எழுதுகிறார்.



இதற்கு ஆதாரமாக அவ்வாறுரைத்தான் ஸாரத்துஸ்த்ரா, மூன்றாவது துளை, காஞ்சாவிற்குப்பின், மீளவரல், தொலைவில், பலஸ்த்தீனப்பாதை, இசைமூலம், புளியடி புளியடி, கறுப்புப்பெட்டி ஆகிய கவிதைகளை கவனிக்கலாம்.



இதில் அவ்வாறுள்ளான் ஸாரத்துஸ்த்ரா என்ற கவிதை முக்கியமானது. தொகையிலேயே நெடிய கவிதை இது. இது வாசுதேவனின் சுயசரிதை. அதுவே பெரும்பாலான புலம்பெயரிகளின் கதையும். எங்கெங்கு திரிந்தாலும் ஊர் மீள முடியாத்துயர் தொடருகிறது. அதுவே கொதிக்கிறது அனலாய். அதைப்போல கஞ்சாவிற்குப்பின், மூன்றாவது துளை ஆகிய கவிதைகளும் அதிக கவனத்திற்குரியவை. அதைப்போல அரசியல் விமர்சனத்தைத நேரடியாகவும் முதன்மையாகவும் கொண்ட கவிதைகளும் இந்தத் தொகையிலுண்டு. குறிப்பாக ஜனநாயகத்துக்கான குரலைக் கொண்டிருக்கிறார் வாசுதேவன், அரிசிப்போராட்டம், பிரிந்துபோன ஆடுகள் ஆகிய கவிதைகள் இதற்கானஎடுத்துக்காட்டு. தவிர ஒத்தகருத்து, உலகம் உனக்காக , எல்லலலாமே தயாராகி விட்டது ஆகிய கவிதைகளும் இந்த வகையில் கவனத்திற்குரியன.



இனி தொகையில் உள்ள சில கவிதைகளை ஒரு கவனத்திற்காக இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.



யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கவிதையில் வரும் கணியன் பூங்குன்றனின் இந்த வரிகள் இதுவரை நமது மனதில் உருவாக்கியிருந்த சித்திரத்தை வாசுதேவன் கலைத்து புதிய கேள்வியை எழுப்புகிறார். ஊரில்லாதவன் யாதும் ஊரெ யாவரும் கேளிர் என்று சொல்வது நகைப்புக்குரியதாகவும் உணரப்படுகிறது. அவ்வாறே பிறரால் நோக்கவும் படுகிறது. ஊரற்றவர்கள், நாடற்றவர்கள் இப்படிச் சொல்கையில் மற்றவர்கள் சந்தேகத்துடன் அச்சமடைகிறார்கள். இப்படிச் சொல்லி தங்கள் ஊரையும் தேசத்தையும் இவர்களன் உரிமைகோர முற்படுகிறார்கள் என்ற அச்சம் இது.



இந்த நெருக்கடிநிலை, அவலநிலை அவ்வாறான வாழ்வைச் சந்திக்கும்போதுதான் புரியும். வாசுதேவனுக்கு இது புரிகிறது. எல்லாப்புலம் பெயரிகளின் அனுபவமும் இதுதான். இதுவே யதார்த்தம்.



ஆக இதுவரையிலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் வரிகள் தந்த அர்த்தம் இங்கே சிதைக்கப்படுகிறது. வாழ்நிலையில் அது சிதைந்துபோகிறது. பதிலாக புதியதோர் அர்த்தம் பிறக்கிறது.



இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்மனம் கொண்டாடிய, பெருமையுற்ற இந்தச் சிந்தனை அதே தமிழ் மனதினால் நகைப்புக்குள்ளாகிறது. சொல்லிப் பெருமையுற முடியாதபடி தவிக்கிறது. காரணம் இதுதான் இன்றைய யதார்த்தம். சங்ககாலப் பெருமைகளில் திளைக்கும் தமிழ்மனங்கள் இந்த யதார்த்த நிலைபற்றிச் சிந்திப்பதற்கான புள்ளி இந்தக்கவிதையில் நுட்பமாக வைக்கப்பட்டுள்ளது.



ஈழக்கவிதைகளுக்குள்ள பெரும் பலம் இந்த யதார்த்தம்தான். தமிழ் மனதில் படிந்துள்ள பெரும் படிமங்கள், சிறு படிமங்கள் பலவற்றையும் இன்றைய வாழ்வின் யதார்த்தத்தில் நிகழும் எதிர்கொள்ளல்கள் கலைக்கின்றன.



இன்னொரு கவிதையான மூன்றாவது துளை



வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாத பயணத்தைப்பற்றியது. இன்றைய வாழ்வில் எந்தச் சமூகத்திலும் தமது கிராமத்துக்கும் வீட்டுக்கும் செ;ல முடியாத முடிவுறாத பயணத்துள் சிக்கி அழியும் வாழ்க்கையோடுதான் பெரும்பாலானோர் வாழவேண்டியிருக்கிறது.



பயணத்துக்கான ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான பாதைகளுண்டு. தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கும் பயணங்களுமுண்டு. பேருந்துகள், புகைவண்டிகள், விமானங்கள், எல்லாமுண்டு. ஆனால் வீட்டுக்கு அழைத்துப்போகாத பயணங்கள்தான் எல்லாம். வீடோ திரும்பிச் செல்லமுடியாத தாய்நிலத்தில். திரும்பிச் செல்லமுடியா நிலையில் தொடரும் தத்தளிப்பு.



பானையில் மூன்றாவது துளையிடுவது

மாத்திரம் இன்னும் பாக்கியிருக்கிறது என்று கவிதை முடியும்போது மனம் அதிர்வுடன் மிகவேகமாக பலநிலைகளில் விரிந்து செல்கிறது.



உயிர் நிழல் என்ற கவிதை இன்னொரு விதத்தில் கவனத்தைக் கொள்கிறது. புலம்பெயர் சூழலில் தன்னடையாளத்தோடு இயங்கி இறந்துபோன படைப்பாளி கலைச்செல்வனைப்பற்றிய கவிதை இது. ஒரு வகையில் இதுவும் இழப்பைப்பற்றிய கவிதைதான். அமைதி நிரம்பியதாக தோற்றமளிக்கும் இந்தக்கவிதையினுள்ளே நிகழ்கிறது பெரும் கொந்தளிப்பு. கலைச்செல்வனின் ஆளுமை, அவருடனான நட்பு, அவரோடான ஊடாட்டம் என்று விரிந்து அவரை இழந்த துயரத்தின் மீது ஆழ்ந்துபோகிறது.



மொழியும் உணர்வும் திரண்டு அழகாக ஒருங்கிணைந்த கவிதை இது. துயரத்திலும் இந்த அழகை நம் மனம் கண்டுகொள்கிறது. இது அப்பத்தமா. இல்லை இயல்பா. பழக்கமா.



இதைப்போல கோடோ வரும் வரையும் நம்பிக்கையைச் சுட்டும் இயல்பான கவிதை.





இசைமூலம் என்ற கவிதையின் இறுதிப்பகுதியில்



கேள்

ஒரு கோடைகாலப்பின்னிரவின்

முழு நிலாவொளியில்

பனை மரத்தின் காய்ந்துபோன

பழுப்போலை காற்றில் மோதி

பனையைத் தழுவி உராய்ந்தெழுப்பும்

உன்னதமான ஒரு இசையைக்கேள்



என்றமைந்திருப்பதற்குப்பதிலாக



கேள்

ஒரு கோடைகாலப்பின்னிரவின்

முழ நிலாவொளியில்

பனை மரத்தில் காவோலை

காற்றில் மோதியெழுப்பும்

உன்னதமான ஒரு இசையைக் கேள்



என்றும் அமைந்திருக்கலாம். ஆனால் இதில் இசை, ஓசைத்தன்மைக்கு வாசுதேவன் இங்கே முதன்மையளித்துள்ளதாகவே படுகிறது.





காய்ந்து போன பழுப்போலை என்பதுதானே காவோலை. தவிர, காவோலை என்ற சொல் வழக்குச் சொல்லும் கூட. அதுவும் பனை மரத்தின் காய்ந்த ஓலைக்கு மட்டுமே உள்ள சொல்லும் கூட. அதைப்போல காற்றில் மோதி, பனையைத்தழுவி, உராய்ந்து என்று கவிதை சொற்களால் நீண்டு செல்கிறது.



ஆனால் கவிதை உருவாக்கும் சித்திரம் மிகநுட்பமானது. காவோலை உரசியெழுப்பும் ஒலி சாதாரணமமானது. இதிலென்ன அதிசயமுண்டு என நீங்கள் கேட்கலாம்.



ஆனால், இந்தச் சத்தம் உன்னதமான ஒரு இசையாக, தாகமெடுக்கும் இனிய இசையாக தோன்றும் ஒரு தருணம் உருவாகிறது. ஊரை விட்டு, இந்தத்திணையை விட்டு, பனிவிழும் திணைக்கு பெயர்ந்திருக்கும்போது இது இசையாகப் பரிணமிக்கிறது. இடமாற்றம் உணர்கையில் நிகழ்த்தும் குணமாற்றம் இது. இந்த மாதிரி அம்சங்களினூடாகவே நாம் இந்த நுட்பமான உணர்கையையும் புரிதலையும் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் புலம் பெயர் இலக்கியத்தை நாம் புரிந்து கொள்வதற்கான திறப்பு எனக் கருதுகிறேன்.



பிரிந்து போன ஆடுகள் வாசுதேவனின் அரசியற் பார்வையை ஜனநாயக்குரலை, தனி மனித சுதந்திரத்தையும் சமூகச் சுதந்திரத்தையும் தனி மனித முக்கியத்துவத்தையும் சமூக முக்கியத்துவத்தையும் சமனிலையில் வைத்து வெளிப்படுத்துகிறது. இரண்டுக்கும் தனித்தன்மையும் சமநிலையும் உண்டு என்பதை வலியுறுத்துகிறார் வாசு.



அபத்தங்கள் கவிதை இன்னொரு விதத்தில் தனிக்கவனத்திற்குரியது. ஒரு பத்திரிகைச் செயத்போல தொடங்கும் கவிதை. வெறுமனே தகவல்கள் போல அடுக்கüச் செல்லப்படும் சொற்களும் வரிகளும். தகவல்க@டாக ஒரு கவிதையைக் கட்டியெழுப்புகிறார் இதில். கோபி கிருஷ்ணனின் சிறுகதைகளில் இந்த அப்பத்ம் அங்கதத்துடன் வெளிவருவதைக்காணலாம். வாசிப்பில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தும் கவிதைகளில் இதுவுமொன்று.



அறிவுப் புற்றுநோய் என்ற கவிதை அறிவு இன்று மனிதரை அடிமையாக்கி விட்டதை விவரிக்கிறது. அறிவு மனிதரை முடிவற்ற ஆபத்து வளையத்துள் தள்ளி விட்டதையும் மனிதர்கள் அதற்குள் சிக்கிவிட்டதையும் உணர்த்துகிறது. பொதுவாக எல்லா நிலைகளின் மீதும் விமர்சனங்களை எழுப்பவதுதான் வாசுதேவனின் கவிதைகள். சில கவிதைகளில் இந்த விமர்சனம் மேல்ழுந்து முன்னிலைப்படுகிறது. சில கவிதைகளில் உள்ளடங்கி அமைதியாக ஒலிக்கிறது.



மன ஒழுங்கை நிரப்பி எளிமையான விவரிப்பில் தன்னுடைய கவிதைகளுக்கான இடத்தை உருவாக்குகிறார் வாசுதேவன். இது இன்றைய நவீன கவிதையில் உருவாகிவரும் இயல்புக்கும் போக்குக்கும் ஒரு அடையாளம்.



எளிமை, நேரடியான வார்த்தைகள் என்ற பெயரில் வெற்று வரிகளை இறைப்பதல்ல கவிதை என்பதற்கு இந்தக்கவிதைகள் சாட்சி. எளிமையில் எப்படி நல்ல கவிதைகள் உருவாகின்றன என்பதற்கு இவை நல்ல ஆதாரம்.
----------------------------------------------------------------

Wednesday, April 2, 2008

பெண்நிழல்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------


தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை

விதையாக்கிய பெண்

அதை மீண்டும் பயிராக்கினாள்

தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்



ஆதியிலிருந்து தொடர்ந்து வரும் வேரை

அதன் வாசனையோடு

தன்னுள் கொண்டிருக்கும் அவளிடம்

தலைமுறைகளிடம் தன்னைப் பரிமாற்றிக் கொள்ளும்

வித்தை நிறைய இருந்தது.



அவளே வேராகவும் விதையாவும்

தன்னுடலில் இருந்து விளைந்து கொண்டிருந்தாள்

ஓயாது



அவளில் கிளர்ந்த தானிய வாசனை

தாயின் முகத்தை வரைந்தது

மலர்களின் நிறத்தை அள்ளி

அந்த முகத்தில் பயிரிட்டது

கடலின் மீது அதை ஒரு படகாக்கி

மிதக்கவிட்டது



எல்லா ஒளிக்கதிர்களிலும்

தன்னைப் பரப்பும் வல்லமையுடைய

வாசனை நிரம்பிய அந்தவேர்

இளமை குன்றா நதியில் கரைந்து

இடையறாது பாய்ந்து கொண்டிருக்கிறது

மணம் பரப்பி



தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை

விதையாக்கும் பெண்

அதை மீண்டும் பயிராக்குகிறாள்

தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்

காதல் மிகக் கொண்டு

தாயாகி



இடையறாது விளைகின்றன

வேர்களும் விதைகளும்

அவள் உடலில
-------------------------------

மலை

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------



இந்த மலையில் எங்கோ ஒளிந்திருக்கிறது

ஒரு சிற்பம்

ஒரு ஊற்று

ஒரு தெய்வக்கல்

உள்ளுறைந்த மௌனமும் இசையும்



என்றபோதும்

மலையை யாரும் வணங்குவதில்லை

அது காலடியில் நசிகிறது

பணிந்து



சிறு கல்

மலையாகிறது வணக்கத்தில்



அச்சிறுகல்லில்

ஊற்றில்லாதபோதும்

இசையும் மௌனமும் இல்லாதிருக்கையிலும்

அதுவே மலையின் கருவறையாகிறது
-------------------------------------------------

பறக்கும் மலைகள்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------



மலைகள் பறக்கத் தொடங்கும்போது

அவற்றின் நிழல் எப்படியிருக்கும்

பறவைகளின் பாதையில்தானா

மலைகளின் பறத்தலும்

மலைகளும் பறவைகளும்

இணைந்து பறத்தல் கூடுமோ

மலைகள் பறந்து எங்கே இறங்கும்

எவ்விதமாய்.



ஒருபோது மலைகள் பறந்து

பூமியை நீங்கினால்

பூமியின் சாயல் எவ்விதமாகும்



சிகரமும் பள்ளத்தாக்கும் உடைய மலை எப்போதும்

பூமியின் முகம் என்றார்

ஓரிரவு வழிதவறி வந்து தங்கிச் சென்ற

விருந்தாளி



முகமற்ற பூமியில்

மூலிகைச் செடியேந்திய

மலைத்தேவதை கண்ணீர் மல்க நின்றாள்

மலை விட்டுச் சென்ற நதியோடு
------------------------------------------

செருப்பு

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------


வழியில் தனித்துக்கிடக்கும் ஒற்றைச் செருப்பு

நினைவூட்டுகிறது

ஒரு முகத்தை

யாரோ ஒருவரின் நிழலை

அவர் விட்டுச் சென்ற

பொருட்படுத்தப்படாத பிரிவை



ஆனாலும் அது வைத்திருக்கிறது இன்னும்

மனித முகத்தை நினைவூட்டும்

ஒரு ரகசியத்தை
------------------------------------------------