Wednesday, November 23, 2011

அகவிழி திறந்து - கண்ணன் - முள்ளி வாய்க்கால்

2008ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரம் கவிஞர் தீபச்செல்வனைத் தொடர்புகொண்டேன். அந்த வாரம் தி இந்துவில் என். ராம் இலங்கை வவுனியாவில் இருக்கும் முகாம்களுக்குச் சென்றுவிட்டு அதை uplifting experience (மேன்மையான அனுபவம்) என்று எழுதியிருந்தார். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது இந்தக் கட்டுரை. தி இந்துவின் இலங்கைத் தமிழர் தொடர்பான 20 ஆண்டுக்கால மன்னிக்க முடியாத அநீதிகளின் முத்தாய்ப்பு இந்தப் பதிவு. இலங்கை முகாம்களின் நிலை பற்றிய அசலான பதிவைக் காலச்சுவடில் வெளியிட நினைத்தேன். தீபனிடம் ‘முகாமிலிருக்கும் ஒருவரிடமிருந்து முகாம் நிலை பற்றிய பதிவைப் பெற முடியுமா?’ என்றும் ‘கருணாகரன் இப்போது எங்கே இருக்கிறார்?’ என்றும் கேட்டேன். ‘கருணாகரனிடம் கேட்கலாம், அவர் ஒரு முகாமில்தான் இருக்கிறார்’ என்றார் தீபன். அவரது எண்ணையும் தந்தார். கருணாகரன் புலிகள் நடத்திய வெளிச்சம் இதழின் ஆசிரியர். காலச்சுவடை நாங்கள் மீண்டும் 1994இல் தொடங்கிய பின்னர் கருணாகரனுடன் கடிதப் போக்குவரத்து ஏற்பட்டது. புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் காலச்சுவடைச் சிறிய அளவில் விநியோகித்துவந்தார். ஒரு வாசகர் கூட்டம் நடத்திப் பதிவையும் அனுப்பிவைத்தார். அதைக் காலச்சுவடில் வெளியிட்டதும் பலருக்கு வியப்பு. இந்தத் தேனிலவு 1998 வரை நீடித்தது. 1998இல் கவிஞர் சேரனின் நேர்காணல் - புலிகள் பற்றியும் இலங்கை அரசு பற்றியும் இன்று ஐ. நா. அறிக்கை, சேனல் 4, கருணாகரனின் ‘வன்னியில் நடந்தது என்ன?’ கட்டுரை, இலங்கையில் ஐ.நாவின் கடைசி அதிகாரியாக இருந்த கார்டன் வைஸ் ஆகியோர் முன்வைக்கும் பல விமர்சனங்களுடன் - வெளிவந்ததும் தேனிலவு முறிந்தது. பின்னர் தொடர்பு விட்டுவிட்டும் பலவீனமாகவுமே இருந்தது.

கருணாகரனை நான் தொடர்புகொண்டபோது அவர் புலிகள் சார்பாகப் பேசக்கூடும் என்ற எண்ணமே இருந்தது. அப்போது அவர் கொடிக்காமத்தில் அல்லாரை அகதி முகாமில் இருந்தார். அங்கு செல் தொடர்பு பலவீனமானதாகவும் முகாமின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடியதாகவும் இருந்தது. பலமுறை முயன்றால் ஓரிருமுறை கிடைக்கும். அப்போதும் அவர் அழைப்பை ஏற்பது வசதியையும் சூழலையும் பொறுத்தது. ஓரிருமுறை தான் பேசினேன். மனமுடைந்து போயிருந்தது தெரிந்தது. எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எழுதி அனுப்புவதாகக் கூறினார். முதலில் போர்க்கால அனுபவங்களை எழுதுவதாகவும் பின்னர் முகாம் பற்றி எழுதுவதாகவும் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டேன். அவர் எழுதியவற்றைப் பெற்று வந்து கையெழுத்துப் பிரதியை ஸ்கேன்செய்து மின்னஞ்சல் அனுப்பும் பொறுப்பைத் தீபச்செல்வன் ஏற்றுக்கொண்டார். இந்தப் பணியைச் செய்வதில் அவருக்கு இருந்த சிக்கல்கள் பற்றிய அவர் கடிதத்தையும் கருணாகரனின் ‘வன்னி அகதிக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது?’ கட்டுரையுடன் பெயரில்லாமல் வெளியிட்டோம்.

இலங்கைப் பிரச்சினையில் இதற்கு முன்னரும் சிலமுறை நேரடி அனுபவப் பதிவுகளைக் காலச்சுவடில் வெளியிட்டிருக்கிறோம். ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’ (1988) தமிழ் தேசியப் பார்வையில் எழுதப்பட்டது. ‘சூரியக்கதிரின் நிழலும் நிழலும்’ (1997) பிரபாகரன் பற்றி வழிபாட்டுணர்வுடன் இருந்த ஓர் இளைஞரால் எழுதப்பட்டது. நேரடிப் பதிவுகளை வெளியிடுவதே காலச்சுவடின் நோக்கம். எழுதுபவரின் அரசியலை நாங்கள் நிர்ணயிக்க முற்படுவதில்லை. 1988இல் வெளிவந்த ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’ கட்டுரையை எழுதியவரின் அசல் பெயரை இன்றுவரை வெளியிடவில்லை. இதுவரை யாரும் அதைப் பிரச்சினைப்படுத்தவுமில்லை. ஏனெனில் பெயரில்லாமல் கருத்தைப் பதிவுசெய்வது இலங்கை அரசியல் சூழலில் அன்றும் இன்றும் மிக சகஜமானது. உதாரணமாகச் சமீபத்தில் மேற்கிலுள்ள தமிழ் வானொலி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள் பற்றிய அறிவிப்பு இவ்வாறு இருந்தது:

ஓய்வுபெற்ற ஆசிரியர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

ஊடகவியலாளர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

பல்கலைக்கழக விரிவுரையாளர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

மீனவர் சங்கப் பிரதிநிதி (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

கிளிநொச்சி இளைஞன் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

வன்னிவாழ் பொதுமகன் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை).

‘வன்னியில் என்ன நடந்தது?’, ‘வன்னி அகதிக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது?’ ஆகிய கட்டுரைகளில் எழுதிய செய்திகள் இன்று பெருமளவுக்கு உறுதிப்பட்டுவிட்டன. அதில் வெளிப்படும் கருணாகரனின் அரசியல் பற்றி விமர்சனங்களை வைத்த நண்பர்களும் அதிலுள்ள செய்திகளை மறுக்கவில்லை. இன்று இதே விமர்சனங்களுடன் வெளிவந்துள்ள ஐ. நா. அறிக்கை, சேனல் 4 ஆவணப்படம் ஆகியவற்றை ஏற்பவர்கள் இக்கட்டுரையை வெளியிட்டமைக்காகக் காலச்சுவடுமீது விரோதம் பாராட்டுகின்றனர். கருணாகரனின் வேண்டுகோள்படி அன்று அவர் பெயரை அப்போது வெளியிடவில்லை. (இதே காலகட்டத்தில் காலச்சுவடில் ‘அநாமதேயன்’ என்னும் பெயரில் வெளிவந்த கட்டுரைகள் கருணாகரன் எழுதியவை அல்ல.) ஒரு கட்டுரையைப் பெயரில்லாமல் வெளியிடுவது உசிதமல்ல. ஆனால் கருத்தை வெளியிட்டதற்காக இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இந்தச் சூழல்களால் காலச்சுவடு உசிதமற்ற முடிவை எடுக்க வேண்டி வந்தது. இதனால் இக்கட்டுரையை நாங்களே எழுதிவிட்டோம் என்பது முதல் யாழ்ப்பாணத்தில் அது எழுதப்பட்டது என்பதுவரை பல ஊகங்கள். அதாவது நாங்கள் கூறியபடி முகாமிலிருந்து எழுதப்பட்டது என்பதைத் தவிர அனைத்துச் சாத்தியங்களும் விவாதிக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் சந்தேகிப்பதற்குக் காலச்சுவடு எப்போதுமே இதழியல் அறம் மீறிச் செயல்பட்டதுமில்லை. பிரதியிலிருக்கும் செய்திகளையும் அரசியலையும் மறுதலிப்பதற்கும் பிரதியின் தோற்றம் பற்றிய அவதூறுகளுக்கும் இருக்கும் தொடர்பு எனக்கு எட்டவில்லை. இப்பதிவு வெளிவந்த காலத்திலும் இப்போதும் இதை மறுப்பவர்கள் இதே குற்றச் சாட்டுகளை முன்வைக்கும் ஐ.நா. அறிக்கையையும் சேனல் 4 ஆவணப் படத்தையும் வரவேற்கும் மர்மமும் பிடிபடவில்லை. ஒருவேளை மேற்கத்திய அமைப்புகளுக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரத்தைக் கைக்கொள்ள தமிழ் ஊடகத்திற்குத் தகுதியில்லையோ? கருணாகரனின் இக்கட்டுரையை வெளியிட்டதால் அவரது கடந்தகால, வருங்கால நடவடிக்கைகளுக்குக் காலச்சுவடைப் பொறுப்பாக்கும் பார்வையும் எனக்குப் பிடிபடவில்லை. கனிமொழியின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டதற்காக அவரது 2ஜி ஊழலுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டுமா?

இதோ கட்டுரை வெளிவந்த விவரங்களை முழுமையாக எழுதிவிட்டேன். இனி இந்த அவதூறுகள் மறைந்துவிடும். இதுபோல முன்னரும் காலச்சுவடுக்குப் பலமுறை நடந்துவிட்டது. ஆனால் அடுத்தமுறை இதே ஆவேசத்துடன் புதிய அவதூறுகளுடன் தொடர இவையெல்லாம் தடையாக இருக்கமாட்டா.

இதைப் படிக்கும்போது சந்தேகப் பேர்வழிகளுக்கு உண்மையை அறிந்துவிட்ட ஆசுவாசம் ஏற்படவே செய்யாது. அவதூறுகளை மேலும் தொடர முடியாத கோபமே மேலோங்கும். என்ன செய்ய?

00

காலச்சுவடுவில் இந்தக் கட்டுரைகள் வந்ததை அடுத்து அப்போது தொடக்கம் தொடர்ந்து ஏராளமான அவதூறுகளும் புனைவுகளும் பொய்களும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பத்தியில் கண்ணன் தெரிவித்திருக்கும் விசயங்கள் ஓரளவுக்கு உண்மை நிலையினைச் சொல்கின்றன. இவற்றில் என்சார்பாக மேலும் கூறப்பட வேண்டிய விசயங்கள் எதிர்வரும் ஜனவரி மாதக் காலச்சுவட்டில் வெளியாகும்.

No comments: