
தீவிர அரசியல் வேட்கையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் வன்முறை மயமாகி, அளவுக்கதிகமாகக் கண்ணீரும் குருதியும் சிந்திய ஈழத்தின் பெரும் வெளிப்பாட்டுக் குரலாக இருப்பவர் வ.ஐ.ச.ஜெபாலன். 1970களின் பின்னரான ஈழ அரசியல், கலை, இலக்கிய சமூக வெளியில் ஜெயபாலனின் பங்கேற்புகள் அதிகம்; அவருடைய பாத்திரம் முக்கியமானது. அதேவேளை இது இடையறாத தொடர்ச்சியுமுடையது. ஈழுத்துக்கு அப்பால், தமிழகம் மற்றும் நோர்வே என வௌ;வேறு களச்சூழல்களில் அவருடைய வாழ்க்கை நகர்ந்திருந்தாலும் ஈழம் என்ற மையத்தை நோக்கியே ஜெயபாலனின் எண்ணங்களும் செயற்பாடுகளும் இருந்தன. மட்டுமல்ல, இப்போதும் அவை அவ்வாறே இருக்கின்றன. ஜெயபாலனின் இந்த நூலிலுள்ள நேர்காணல்களும் கட்டுரைகளும் இதற்கு சிறந்த ஆதாரம். தவிர, அவருடைய கவிதைகளும் கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ நிலவரத்தின் முழு மொத்த அடையாளமாக இருக்கின்றன.
ஜெயபாலனின் இந்த நாற்பது ஆண்டுகாலமும் முடிவற்ற விமர்சனத்துக்குரியவை.
குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் புகழுரைகளும் துதிகாடல்களும் எதிர்ப்பும் மறுப்பும் தண்டனைகளும் விலக்கல்களும் என்றமைந்தவை. ஈழ அரசியல் அப்படி, தீவிரம், அதி தீவிரம் என்ற கொந்தளிப்புகளுடனிருந்தது. இதன் காரணமாக சனங்களின் வாழ்க்கை மரணவெளியில், பலிபீடத்தில் குற்றுயிராக வைக்கப்பட்டது. இலங்கையின் இனப்பாகுபாடு உருவாக்கிய அரசியல் முரண்கள் சமூக முரண்களாகி வன்முறைகள் பெருக்கெடுத்தன. ஆனால், இவையெல்லாம் நடந்தபோதும் பலரையும்போல ஜெயபாலன் இவற்றை ஒற்றைப் பரிமாணத்துடன் அணுகவில்லை. பதிலாக, ஜனநாயகம், பன்மைத்துவம் என்ற அடிப்படையிலேயே தன் பார்வைகளையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்தார். இதற்காக அவர், அதிக விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளானார். இதேவேளை ஜெயபாலனின் நிலைப்பாடுகள், கருத்துகள், செயற்பாடுகளை எல்லாம் ஆதரித்தவர்களும் உண்டு. பாராட்டியவர்களும் உண்டு.
குறிப்பாக சிங்கள இனவாதத்தை எதிர்த்த ஜெயபாலன், சிங்கள மக்களை ஆழமாக நேசித்தார். அவர்களின் மீது பெரும்பாலான தமிழர்கள் குற்றஞ்சாட்டுவதைப் போல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்கவில்லை. அவர்களை எதிரிகளாக அவர் கருதியதுமில்லை. அவர்கள் மீது பகைமை பாராட்டியதுமில்லை. அதைப்போலவே முஸ்லிம்களின் மீதும் ஜெயபாலன் மிக அதிகமான அன்பையும் அதிகமான மதிப்பையும் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது அதைக் கண்டித்திருந்தார் ஜெயபாலன். அத்துடன் முஸ்லிம் மக்களிடம் அவர் தமிழ் மக்கள் சார்பாக மன்னிப்பையும் கேட்டிருந்தார். (இதற்கெல்லாம் அவருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் ஏராளமான ஆதாரங்களுண்டு)
ஆனால், முஸ்லிம்களின் மீதான ஜெயபாலனின் ஈடுபாட்டை சில முஸ்லிம் படைப்பாளிகள் விமர்சித்ததுண்டு. சந்தேகத்துடன் அணுகியதுண்டு. பிற்காலத்தில் ஜெயபாலன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாகவும் செயற்படத் தொடங்கியதால் இந்த விமர்சனங்கள் எழுந்திருக்கலாம்.
என்றபோதும் அவற்றையெல்லாம் கடந்து அவர் தன்னுடைய நம்பிக்கை சார்ந்து தனது மனதை முஸ்லிம்களுக்கான நீதிக்காக ஒப்புவித்திருந்தார். ஜெயபாலனின் முஸ்லிம் மக்கள் மீதான கவனமும் மலைகத் தமிழர்கள் மீதான கரிசனையும் அவருடைய இளமைக்காலத்திலிருந்தே தொடர்ந்து வருவன. இவை தொடர்பாக அவர் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியுமிருக்கிறார். குறிப்பாக ‘முஸ்லிம் மக்களும் தேசிய இனப்பிரச்சினையும்’ என்ற அவருடைய நூல் 1985 இல் வெளியிடப்பட்டது. இவ்வாறெல்லாம் ஜெயபாலன் கொண்டிருந்த நிலைப்பாடுகளுக்காகவும் அவர் வெளிப்படுத்திய கருத்துகளுக்காகவும் தமிழ்த் தேசியவாதிகள் ஒரு சாராரிடம் அதிக கண்டனங்களையும் புறக்கணிப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
ஜெயபாலன் வலியுறுத்திய தமிழ்த்தேசியம் வேறானது. அது சாதி, மத, பிரதேச, இன வேறுபாடுகளைத் தவிர்த்தது. பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. விடுதலைப்புலிகளை அவர் விமர்சனத்தோடே ஆதரித்தார். இதனால், அவர்களும் ஜெயபாலனை அதிகம் நெருக்கமாகக் கொள்ளவில்லை. ஜெயபாலனின் இந்த நடைமுறைகள் பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவப்பாக இருப்பதில்லை. இப்போதும் இதுவே பிரச்சினை.
ஈழ அரசியலில் கருத்துரைத்தல் என்பது 1980 களின் பின்னர் மிகவும் அபாயகரமானதாக இருந்தது. ஏன் ஏறக்குறைய இப்போதும் இதுதான் நிலைமை. வெளிப்பாட்டுச் சுதந்திரமற்ற மூடுண்ட ஒரு சூழலே பொதுவாக ஈழ அரசியலில் நிலவியது. இதை மீறிக்கருத்துரைப்பவர்கள் ஒன்றில் கொலைக்குத் தலையைக் கொடுக்க வேண்டும். அல்லது நாட்டைவிட்டுத் தப்பியோடவேண்டும். அப்படித் தப்பியோடும்போது துரோகிப்பட்டத்தையும் சுமக்கவேண்டும். இத்தகைய நெருக்கடி ஜெயபாலனுக்கும் ஏற்பட்டது. ஆனால், இதில் மற்றவர்களை விட ஜெயபாலன் ஒரு வித்தியாசமான தன்மையுடன் இருந்தார். மற்றவர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது நாட்டை விட்டு தப்பிச் சென்றார்கள். அப்படி இலங்கைக்கு வந்தாலும் அவர்கள் கொழும்புடன் நின்று விட வேண்டும். அதுவும் ரகசிய நடமாட்டத்துடனேயே.
ஆனால், ஜெயபாலன் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் எல்லா நெருக்கடிக்காலத்திலும் அவ்வப்போது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கும் வந்து போவார். அப்படி வந்து போகும் நாட்களில் அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். சில மிகவும் அபாயகரமானவை. ஆனால் ஜெயபாலன் இந்த அபாயங்களைக் கடந்து நின்றார். குறிப்பாக இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த போது அவர் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் சந்தேகத்தின் பேரில் ஒரு தடவை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதற்காக பின்னர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஜெயபாலனிடம் மன்னிப்புக் கேட்டதுண்டு. பின்னாட்களில், அவரை மதித்து அவர்களிற் பலர், நடந்ததுமுண்டு. என்றபோதும் புலிகளின் மீதான விமர்சனங்களையும் கண்டனங்களையும் சில வேளை அவர்களுடைய செயற்பாடுகளிலுள்ள நல்ல அம்சங்களுக்கான பாராட்டுகளையும் அவர் முன்வைக்கத்தவறியதில்லை.
புலிகளின் அரசியல், இராணுவச் செயற்பாடுகளின் முரண்பாடுகளும் குறைபாடுகளும் தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தையே பலவீனப்படுத்திவிடும் என்று ஜெயபாலன் முன்னரேயே தெளிவாகக் குறிப்பிட்டு அவற்றைச் சீர்செய்யும்படி வலியுறுத்தியிருந்தார். சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கான உபாயங்கள், புலம்பெயர் மக்களை அரசியல் மயப்படுத்துவது, பிராந்திய அரசியலின் தன்மைக்கேற்ற நெகிழ்ச்சியையும் வியூகங்களையும் கொள்வது என்பவை அவர் வலியுறுத்தியவற்றில் அடங்கும். சரி பிழைகளுக்கப்பால் ஏனைய இயக்கங்கள், அரசியற் கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ் மக்களின் அரசியற் சக்தியாக புலிகள் முன்னகர்ந்ததால் புலிகளின் பின்னடைவோ, வீழ்ச்சியோ தமிழ் மக்களை உடனடியாக மிக மோசமாகப் பாதிக்கும் என்று முன்கூட்டியே கூறிவந்தார் ஜெயபாலன். ஈழ அரசியலில் பிராந்திய சர்வ தேசிய அரசியலின் செல்வாக்கு எப்படியானது எனத் தனது கட்டுரைகளிலும் கடிதங்களிலும் விமர்சனங்களிலும் அவர் அவ்வப்போது வழங்கிய நேர்காணல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நேர்காணல்கள் அதற்கான சாட்சியம். மேலும், நான்காம் கட்ட ஈழப்போரின்போது அவர் எழுதிய கடிதங்களும் அறிக்கைகளும் ஒரு காலத்தில் வெளியிடப்படும்போது இது தெரியவரும்.
ஒரு குறிப்பிட்ட காலம் ஜெயபாலனின் கவனம் கவிதைகளில் இருந்ததை விடவும் அரசியலிலேயே மையங்கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் அரசியலாளரல்ல. ஆனால், அரசியற் பிரச்சினைகளிலிருந்தும் அரசியற்பிரக்ஞைகளிலிருந்தும் அவரால் ஒதுங்க முடியவில்லை. ஈழப்படைப்பாளிகள் பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை அல்லது பொதுக்குணமாக இது இருந்தாலும் ஜெயபாலனிடம் இது சற்றுத் தூக்கலாகவே இருந்தது. இதனால் அவரை நேர்காணும்போது தனியே படைப்பாளி என்று மட்டும் அணுகாமல் ஈழ நிலவரத்தைப் பற்றிய கேள்விகளையும் கேட்பார்கள்.
எனவே இந்த வகையில் நான்காவது ஈழப்போரின்போது ஜெயபாலன் வன்னியிலிருந்த தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் ஏராளம். அவை மிக முக்கியமானவை. அந்தக் கடிதங்கள் உரிய தரப்பினரால் கவனங் கொள்ளப்பட்டிருந்தால் இலங்கைத்தீவின் அரசியல் இன்றுள்ளதைப் போல இருந்திருக்காது.
அரசிலைச் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் நடைமுறை சார்ந்து அணுக வேண்டும். அறிவு பூர்வமாக அணுகப்படாத வெறும் உணர்ச்சி வசப்பட்ட அரசியலின் விளைவுகள் மிகப்பார தூரமான விளைவுகளையே தரும் என்ற வரலாற்றுப்பாடத்தை அவர் ஜெயபாலன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபோதும் எந்தப் பயனும் அற்றுப் போனது மிகக் கவலையளி;ப்பதாக அமைந்து விட்டது.
தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கான ஆயுதப் போராட்டத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அனுபவமும் பங்களித்த பாத்திரமும் ஜெயபாலனுக்குண்டு. அவர் இயங்கிய அமைப்புக்குள்ளேயே ஏராளம் மோதல்கள். (இதுதான் ஈழப் போராட்டத்தின் அவலமே!) அதையெல்லாம் கடந்து வந்தபின்னும் அதற்கு வெளியிலிலும் அவர் சார்ந்த இயக்கத்தின் பேராலான பார்வைகளும் அணுகுமுறைகளும் ஜெயபாலனைச் சுற்றி நீண்டகாலமிருந்தன. இவ்வளவிற்கும் ஜெயபாலனோ அவமைப்புக்குள்ளேயும் சரி வெளியேயும் சரி ஒரு முரணியாகவும் ஒரு தனியனாகவும் ஒரு வெளியாளானாகவும் ஒரு சுயேச்சையாளனாகவுமே இயங்கினார். இதுதான் ஜெயபாலன். இதுதான் அவருடைய பலமும் பலவீனமும். இதுதான் அவரை இன்று வரையிலும் பாதுகாத்திருக்கிறது. இதுவே பல அபாயங்கள், நெருக்கடிகளிலிருந்தெல்லாம் அவரைக் காப்பாற்றியிருக்கிறது.
ஜெயபாலன் எல்லாத்தரப்பினருடனும் பழக்கமுடையவர். அவருக்குப் புதுவை இரத்தினதுரையும் நண்பர். ஷோபாசக்தியும் நண்பர். திருமாவளவனும் நட்பு. பௌசரும் நண்பர். ஆனால் அதற்காக அவர் அங்கெல்லாம் தன்னுடைய கருத்துகளை விட்டுக்கொடுத்ததில்லை. எதையும் விவாதிக்காமல் விட்டதுமில்லை. மூத்த இளைய வயதுடைய எல்லோருடனும் ஒரேமாதிரி பழகும் சுபாவமும் இயல்பும் அவரை இன்னும் பலருடன் நெருக்கமாக்கியது. உரிமையோடு பழகும் இயல்பு இதில் முக்கியமாது. இதனால், அவருக்கு இளைய நண்பர்கள் ஏராளமுண்டு. அதேவேளை ஜெயபாலனின் இந்த அதீத உரிமை எடுப்பு அவரையிட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியதுமுண்டு.
ஜெயபாலனை இவர் யார், எப்படியானவர், என்ன நோக்கங்களுடன் இயங்குகிறார் என்று சந்தேகித்தவர்கள் இருக்கிறார்கள். ஜெயபாலனைக் குற்றஞ்சாட்டியவர்கள், அவதூறு செய்தவர்கள், குறைசொன்னவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், அதே அளவுக்கு அவரை ஆதரித்தவர்களும் விரும்புகின்றவர்களும் உள்ளனர். அவரை நேசித்தவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் காரணம் அவர் எந்த வளையங்களுக்கும் எந்த நிறங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதவர் என்பதே. அவர் பல வண்ணமுடைய வானவில். அவரிடமுள்ள சிறப்பு இந்தக் குறிப்பில் சுட்டப்பட்டுள்ளதைப் போன்ற வெளிப்படையே.
1970 க்குப்பின்னரான ஈழ வரலாற்றில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல், ஊடகம் என்ற இயங்கு தளங்களில் சேரனுக்கும் ஜெயபாலனுக்கும் சமனிலையான வகிப்புண்டு. இது வெறும் வாய்ப்பாட்டு ரீதியாக பலரும் சொல்வதையும்போல மேலோட்டமாக இங்கே சொல்லப்படவில்லை. அதிகாரத்துக்கெதிரான குரல்களாகவும் ஜனநாயகத்தையும் பன்மைத்துவத்தையும் நிலைப்படுத்துவதற்கான போராளிகளாகவும் இவர்கள் இருவரும் கடந்த முப்பதாண்டுகளாகச் செயற்பட்டிருக்கிறார்கள். ( இதற்கு அடுத்த தலைமுறையிற் பலர் இருக்கின்றனர்). இதேவேளை தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை இவர்கள் ஆதரித்தவர்கள். ஆனால், போராட்டத்தின் பேராலான எத்தகைய வன்முறைகளையும் நீதி மறுப்புகளையும் மறுத்தும் வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அந்த நிலைப்பாட்டில்தான் இருந்து வருகிறார்கள். சேரனின் இயங்கு முறையும் இயங்கு தளமும் சற்று வேறு பட்டது. அது பெரும்பாலும் அறிவுபூர்வமானது. ஜெயபாலனுடையதோ அறிவுபூர்வமானதுடன் சனங்களுடன் நேரடித் தொடர்புடையது. எங்கும் அலைந்து திரியும் ஜெயபாலனின் தனி இயல்பு இதற்குக் காரணமாக இருக்கலாம். எப்படியோ இந்த இருவரும் அனைத்துவகை அராஜகங்களுக் கெதிராகவும் இயங்கியவர்கள். இதில் சேரனின் நேர்காணல்களும் கட்டுரைகளும் ஏற்கனவே நூலுருப் பெற்றுவிட்டன. ஜெயபாலனுடைய நேர்காணல்களும் கட்டுரைகளும் இப்போதுதான் தொகுக்கப்பட்டு நூலாகின்றன. இது மிக மகிழ்;ச்சியான தருணம். அதுவும் ஈழ அரசியற் சூழல் முற்றாகவே மாறும் தவிப்புடனிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தத் தொகுப்பு பல விசயங்கள் குறித்தும் திரும்பிப்பார்ப்பதற்கும் சிந்திப்பதற்கும் வாய்ப்பாகும்.
இந்தக் கட்டுரைகளும் நேர்காணல்களும் வெளிவந்த காலத்தில் இவை கூடுதலான கவனத்தைப் பெற்றவை. கூடுதலான கண்டனங்களையும் பாராட்டுதல்களையும் பெற்றவையும்கூட. இவை இப்போது நூலாக்கப்படுகையில் ஏறக்குறைய அத்தகைய ஒரு மீள்நிலை ஏற்படும். ஆனால் இதுவும் ஜெயபாலனுக்கு வெற்றியாகவே அமையும். அதேவேளை அவர் மீண்டும் தன்னையும் தனது பாதையையும் பயணங்களையும் திரும்பிப் பார்த்துக்கொள்வதற்கும் உதவும்.
குறிப்பாக நான்காம் கட்ட ஈழப்போர்க்காலத்தில் வெளிவந்திருந்த நேர்காணல்கள் இங்கே முதன்மையடையும் என நம்புகிறேன். இந்த நூல் ஜெயபாலனை இன்னும் துலக்கமாகப் புரிந்து கொள்ள உதவும். ஆனால், அதற்குரிய ஞானக்கண் நமக்கு வாய்க்க வேண்டும்.
பல்லாயிரம் எதிரெதிர் முகங்கொண்டு சுழலும் வாள்களிடையே அன்பின் கிண்ணங்களையும் மலர்ச் செண்டுகளையும் அமைதிப்புறாக்களையும் கொண்டொரு மெய்யாளன் செல்வதென்பது சாதாரணமானதல்ல.
ஆனால், அத்தகைய சவால்கள் நிறைந்த பயணத்தைத்தான் ஜெயபாலன் எப்போதுமே செய்கிறார். இது அவர் ஏற்றுக் கொண்ட அல்லது அவர் விரும்பிய வாழ்க்கைமுறையின் பயணமாக இருக்கலாம்.
இந்தப் பூமியின் எல்லாச் சவால்களும் எப்படியோ பிறரை வளமாக்கவே அதிகமதிகம் பயன்பட்டிருக்கிறது. அந்தவகையில் ஜெயபாலன் எதிர்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் சவால்களும் பிறருக்கானவையே.
- அண்மையில் வெளிவரவுள்ள வ.ஐ.ச.ஜெயபாலனின் நேர்காணல்கள் தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை.
0
1 comment:
காளமேகம் said...
கருணாகரன் சூப்பர் சூப்பரோ சூப்பர். விடுதலைப்புலிகளினுடன் பொதுநோக்கத்திற்காக பயணித்தவர்கள் சுயநலத்திற்காக பொதுநோக்கு இருப்பதாக காட்டிபயணித்தவர்கள் என இருவகையினர் இருப்பதை தங்களின் கற்பனையிலிருந்து தெரிகின்றது. உங்களின் புகழ்ச்சிக்காக ஏறுவதற்கு ஒரு ஏணி தேவைப்பட்டது எனவே புலி ஏணியைப்பிடித்து இருபது வருடங்கள் பயணித்தீர்கள், தற்போது நீங்கள் புகழ்ந்த புலியை இகழ்ந்தால் தான் வாழலாம் என்றவுடன் இகழ்கிறீர்கள். வாழ்த்துக்கள் உங்களைப்போல சுயநலவாதிகளிற்கும் தன்னம்பிக்கையில்லாதவர்களிற்காகவும் சேர்த்துத்தான் பிரபாகரன் போராடியிருக்கின்றார். பாவம் அவர். ஆனால் நீங்கள் வாழத்தெரிந்த பற்சோந்திகள். உங்கள் வாயால் புகழ்வதும் இகழ்வதும் உங்களிற்கு பிரச்சனையில்லை யார் பணந்தருகின்றார்களோ! யாருடன் சேர்ந்தால் புகழ் அல்லது பந்தா கிடைக்குமே அந்த குதிரையில் ஏறி பயணம் செய்யும் பாசாங்குக்காரர்கள் நீங்கள். உங்களைத்தான் புத்திசாலிகள் என்றும் சிலர் செல்லித்திரிகின்றார்கள். வாழ்த்துக்கள் உங்களைப்போல வாழந்தெரிந்த மனிதரிற்குள் நீங்கள் கொள்கை வகுப்பாளர்கள்தான், உண்மைக்கு முன் நன்றாய் வேசம்போட்டு விடுதலையைப்பற்றி வீரவசனம் சொற்பொழிவு எல்லாம் ஆற்றிவிட்டு அதையே நிந்திக்கும் உங்களின் கெட்டிக்காரத்தனம் எங்களிடம் இல்லை.
December
Post a Comment