------------------------------
எழுதியவர்- கருணாகரன்
------------------------------------------------
ஆட்டம் முடிந்தபிறகு
வெளித்திருக்கிறது மைதானம்
வீரர்கள் போய்விட்டார்கள்
ஆரவாரங்களும் போய்விட்டன
ஆட்டம்பற்றிய
கதைகளோடும்
விமர்சனங்களோடும்
ரசிகர்களும் போய்விட்டார்கள்.
மைதானத்தில்
ஆடிய பந்து
யாருடைய கவனமுமின்றி
ஓய்ந்திருக்கிறது
தனியே
இப்போது
யாருக்காவது நினைவிருக்குமா
அந்தப்பந்தை?
மைதானத்துக்கும் பந்துக்குமிடையில்
ரகசியமாகப்படர்ந்திருந்த
மௌனவெளியில்
ஒப்பற்ற காயங்களோடு
வெற்றி பெற முடியாத
வீரர்கள்
நடந்துசென்ற காட்சி
உலுக்குகிறது
அரங்கத்திலும் அரங்கத்துக்கப்பாலும்.
-------------------------------------------------------
1 comment:
கடைசிப்பந்தியைக் காட்சியாகக் காணமுடிந்தது. வலிதந்தது.
Post a Comment