
அம்மா, அவனுடைய தலையைத் தடவிக் கொண்டிருந்தாள். அந்த விரல்களிலிருந்து குளிர்மையும் மென் கதகதப்பும் சரந்து கொண்டிருந்தது. அவள் மிக மெதுவாக அவனின் மனதுக்குள் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடைய வார்த்தைகளைக் கேட்கக் கேட்க அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது. கண்கள் இருளில் திணறின. மூச்சு முட்டியது. இதயம் உள்ளே கரைந்து ஒழுகியது. எலும்புகள் தளர்ந்து உருகின.
அவன் தன்னை நிலைப்படுத்த எத்தனித்தான். அம்மாவின் கைகளை மெதுவாக விலக்கி, எழுந்திருக்க முயன்றான். ஆனால், அதற்கு மனம் மறுத்தது. அந்தக் கைகளின் குளிர்மையும் கதகதப்பும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தவதாக உணர்ந்தான். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அம்மாவின் வார்த்தைகள் அவனை உருக்கிக் கொண்டிருந்தன.
அவன் திண்ணைக்குந்தில் அமர்ந்து, கால்களைத் தொங்கவிட்டபடி சவரில் சாய்ந்திருந்தான். அம்மா அவனருகே ஒருக்களித்திருந்தாள். அவளிடமிருந்து இதமான வாசனை வெளிப்படுவதாக அவனுக்குத தோன்றியது. அவள் மகனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ கண்களை வெளியே அலைய விட்டபடி தவித்தான்.
“ஏன் மகனே பேசாதிருக்கிறாய்?”
அவன் பதில் சொல்வதற்கு வாரத்தைகளைத் தேடினான்.
அவளுக்குப் பதில் சொல்வதற்கு தன்னிடம் ஒரு சொல்கூட இல்லாத நிலையை உணர்ந்தபோது அவன் அதிர்ந்தான். பதிலாக ஒரு சொல்லைக்கூட அவனே புதிதாக சிருஸ்டிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தில் தானிருப்பதாகப் பட்டது. பேசுவதற்கு ஒரு வார்த்தையற்ற விதி பெருகிச் சூழ்ந்ததைக் கண்டு மனம் ஓலமிட்டது.
அவனுடைய சருமம் வியர்த்தது. மனம் நடுங்கியது. அம்மா எதையும் உணர்நது விடக்கூடாதே என்று பயந்து, எழுந்திருக்க முயன்றான். ஆனால், அவள் தன் நிலையைக் கண்டு விடுவாளோ என்ற எண்ணம் மறுபடி அவனை மின்னலாகத் தாக்கியது. நூறாயிரம் புலிகளால் சூழப்பட்டவன் போலத் திகைத்ததிர்ந்தான்.
“என்னுடைய குரல் உனக்குப் பிடிக்கவில்லையா? அல்லது என்னை நீ வெறுக்கிறாயா? ஏன் மௌனத்துள் ஒளித்துக் கொள்கிறாய்? சொல் மகனே. உன்னுடைய தயக்கங்கள் எதற்காக?”
அம்மாவின் குரல் காற்றில் வழிந்து அவன் மனதில் படிய மீண்டும் மீண்டும் எத்தனித்தது. அவன் அவற்றை உதறிவிடத் துடித்தான்.
அவள் அவனுடைய தலையைத் திருப்பி, தன் முகத்துக்கு நேரே நிறுத்தினாள். அவனுடைய கண்கள், அவளுடைய விழிகளைப் பார்க்கத் தயங்கித் தவித்தன.
தன்னுடைய மானம் நாறி மணப்பதாக அவன் உணர்நதான். ‘ஐயோ, அம்மாவுக்கு இந்த நாற்றம் மணக்கப் போகிறதே! அம்மா இந்த நாற்றத்தால் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவாளோ? அதைவிடத் தன்னைN நொந்து நொந்த உக்கிப் போவாளோ! பிறகு அவள் என்னைத் தீண்ட மாட்டாள். துக்கம் பெருகி அவள் ஒடுங்கிப் போவாள்.
அவனுடைய கால்கள் தளர்ந்தன. தாகத்தால் நாக்கு வரண்டது. அவடைய குரலை அவனுடைய மனமே உறுஞ்சிக் கொண்டது.
“ஏன் மகனே எல்லாவற்றையும் வெறுக்கிறாய்? அன்பும் க ருணையும் உன்னிலிருந்து எப்படி வற்றிப்போயின? உன்னுடைய விழிகளில் அமைதியில்லையே! வஸீகரங்களை இழந்த புதல்வனாக எப்படி நீ மாறினாய்? நீ என் குழந்தையல்லவா? என்னைத் தவிக்க விடாதே. நீ என்னுடைய மகன் என்ற அடையாளத்தை மறுக்கின்றாயா? சொல். உன் வாயில் ஆயிரம் பூட்டுகள் ஏன் தொங்குகின்றன?
அவளின் வார்த்தைகள், அவன் மனதைச் சாடின. அம்மா எப்படிச் சவுக்கைக் கையில் எடுத்தாள்? அவள், சவுக்கை ஒரு போதும் எடுப்பதில்லையே! நான்தான் அப்படி நினைக்கிறேனா என்று தன்னையே சந்தேகித்தான். ஏன் இப்படி என் மனம் வலிக்கிறது? கடவுளே இதென்ன கொடுமை? ஆயிரமாயிரம் சுழிகளில் அகப்பட்ட சருகானான் அவன்.
அம்மாவின் கண்கள் லட்சம் சூரியன்களின் பிரகாசமாக தகித்து ஒளிர்ந்தன. அவளின் சொற்கள், வெள்ளை வெள்ளையாக காற்றில் மிதந்தன. அவன் அவற்றைக் கண்டு அஞ்சினான். அவளுடைய சொல்லால் பசி தீர்ந்த தன் காலத்தை எண்ணியபோது துக்கம் உடலை நிரப்பியது. ஆறுதலாக, மகிழ்ச்சியாக, பரவசமாக, நம்பிக்கையாக, வழிகாட்டும் ஒளியாக அவளுடைய சொற்களை அவன் அறிந்திருக்கிறான். மனசு நிரம்ப அவற்றைக் களஞ்சியப்படுத்திக் கொண்ட அந்த நாட்கள். இன்றோ, எல்லாம் எதிர்நிலையில் திரும்பியுள்ளன. கட்டுப்படுத்த முடியாமலே அவனுடய உடல் குலுங்கத் துடித்தது. சிரமப்பட்டு அதை மறைக்க முயன்றான். அதை, அந்த நிலையை அம்மா அறிந்தால் வருத்தம் அவளைச் சிதைத்து விடும்.
அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்வற்கு ஒரு சொல் இல்லாத விதி தன்னைச் சூழ்வது எப்படி நேர்ந்தது என்று தெரியாது தடுமாறினான். ஒரு சொல்லைத் தேடியெடுத்தாலும் அது பொய்யால் கனத்தது. இயல்பும் அழகுமின்றி அவனே வெறுக்கும் படியாய் இருந்தது. தான் இருள் பெருகிய குகையுள் நாறி மணக்கும ஒரு வஸ்துவாகிவிட்டேன் என்று நம்பினான்.
அம்மாவின் கேள்விகளோ பெருகிக் கொண்டேயிருந்தன. அவனுடைய கனத்த மௌனத்தின் திரையை உடைக்க அவள் முயன்று கொண்டேயிருந்தாள்.
“என்னுடைய அன்பு மகனே” அவளுடைய குரல் உடைந்து துயரம் பரப்பியது. அவள் தொடர்ந்தாள்
“உன்னுடைய கண்கள் ஏன் கறுத்துப் போயிருக்கின்றன? உன்ட முகம் எதற்காகப் பிணத்தின் முகத்தைப் போலச் செத்துக் கிடக்கிறது?”
அவனுள் கூரிய வாள் இறங்கியது போலிருந்தது. அந்த வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவன் அவளிலிருந்து விலகியோவதாகத் தீர்மானித்தான். ஆனால், மனம் மறுத்தது. அது அவளின் வருடலுக்காகவும் அவளின் கண்பார்வைக்காகவும் தவித்தது.
அவன் பார்வையை வெளியே அலைய விட்டான். தூர வானத்தில் புள்ளிகளாய்த் தெரிந்த பட்சிகள் விரைந்து நெருங்கி வந்தன. அவற்றின் நிழல் பூமியில் கோடு விழுத்தி நெருங்கியது. மிக ஆழமான வடுக்களாக அந்தக் கோடுகள். அவையோ பெரும் பள்ளமாக நீண்டு கொண்டிருந்தன. புல், ப+ண்டு, மரம் செடி, பயிர், பச்சை, வீடு வளவு என்று எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்துச் செல்லம் நிழலாக அது நீண்டு சென்றது.
அவன் பயந்து அலறினான். குரலை யாரோ களவு கொண்டு போனதாக அது ஒலிக்கவேயில்லை.
பட்சிகள் வேகமாகப் பறந்து சென்றன. அவை, முகில்களின் கீழாக விஹாரையின் பக்கமாகப் பறந்தன. சட்டென்று அந்தப் பட்சிகள் தொலைவிற் கரைந்தன.
பட்சிகளின் சிறகசைப்பில் எழும் காற்றில் அரசமிலைகள் உதிர்ந்து பறந்தன. பேரிரைச்சல். நட்சததிரங்கள் உதிர்ந்து மிதப்பதைப்போல இருந்தது. கிளைகள் சுழன்று அலைந்தன. விஹாரையின் சமீபமாக ப்சிகளின் நிழல் ஆழமாகக் கோடிழுத்துச் சென்றது. அவற்றின் சிறகிரைச்சலில் அவன் அதிர்ந்தான். உயிரை உறுஞ்சும் ஒலியாக அது இரைந்தது.
2
அதிகாலை, சாம்பல் படர்ந்த பனியில் விறைத்திருந்தன ஊர்கள். கள்வரைப்போல அவர்கள் பதுங்கிப் பதுங்கி நடந்தார்கள். கால்கள் பீதியில் நடுங்கின. பகை மனமோ பாரமாகிக் கனத்தது.
கட்டளைக் குரல் கலையும் இருளை ஊடறுத்து வந்து உயிரில் படிந்தது. அது படியப் படிய சேனை முன்னேறியது. கூரொளிரும் வாள்களாக மின்னின விழிகள் ஒவ்வொன்றும். அதனுள் மிக ஆழமான இருட் பள்ளம்.
காலையின் விரிவு. ப+க்களின் வாசனைன, பட்சிகளின் அமன் சப்தங்கள். பனியேந்திய மரங்கள், குளிரில் சில்லிட்டிருந்த தோட்டங்கள் எல்லாவற்றையும் சூழ்ந்தன சப்பாத்தடிகள். ஒரு பெரும் வியூகத்துள் சிக்கின கிராமங்கள்.
3
அந்த ஊரின் மீது படர்ந்திருந்த அமைதியின் மீது வேட்டு வைத்தான் அவன். எதிரே நின்ற மரத்தின் கிளையிலிருந்து இலைகள் உதிர்ந்தன. இரண்டு புறாக்கள் இறகுதிரக் குருதி சிந்திக் கீழே வீழ்ந்து துடித்தன.
அவன் முன்னேறினான். தூர, காற்றில் மிதந்து எழுந்தன ஓலக்குரல்கள். ஓலக்குரலை மேவி எழுந்தது வேட்டொலி. தொடர்ந்து சேனை முழங்கியது.
4
“நில் மகனே! இந்த முற்றத்தில் உன் காலடிகள் என்றைக்கும் அழியாதிருக்கும். உன்னை நான் இந்தப் பாதச் சுவடுகளில் பார்க்கிறேன். இரவுகளில் என் கனவுகளில் இந்தப் பாதத் சித்திரங்கள் உன் முகமாக மலரும். அதுதான் மகனே எனக்கு ஆறுதலைத் தரும் பரிசு.
அம்மாவின் குரலில் அவன் நெக்குருகி நின்றான். அவள் தேமா மரத்தின் கீழ் வீழ்ந்திருந்த மலர்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். காலை வெயில் மணலின் மீது ஒளிக் கோலம் இழைத்துக் கொண்டிருந்தது. அவன் அவளின் மடிச் சூட்டை உணர்ந்தான்.
“புறப்படப் போகின்றாயா மகனே? நீ, காலங்களைப் பவுத்திரப் படுத்து. நீ பவுத்திரப் படுத்தும் காலமே. உன்னை மகிமைப் படுத்தும். எல்லாவற்றையும் நேசி. நானே எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதாய் நினைத்துக் கொள். நான் உன் தாயல்லவா”
அவன் புன்னகைத்தான். அவள், அவனை அணைத்து தலையை வருடினாள்.
அவன் வெளிக்கிடும்போது அவள் வழியைச் சுத்தப்படுததினாள். துர்க்குறிகள் ஏதும் மகனின் பயணத்தில் தோன்றிவிடக் கூடாது என எச்சரிக்கையோடு துடித்தாள்.
5
முற்றங்களில் சப்பாத்தடிகள் நிறைந்திருந்தன. அவன், தன்னுடைய காலடியைக் கண்டு தானே திடுகிட்டான். முள்ளாகப் பரவியிருந்தன அவை. மனம் ஓலமிட்டது. இரத்தம் உறைந்தது.
உறைந்த இரத்தத்தின் மீது விழுந்தது, சவுக்கின் சொடுக்கலாய்க கட்டளைக் குரல். அவன் தடுமாறினான். கால்கள் முன்னேறின. மனமோ தயங்கியது.
பூக்கள் உதிர்ந்திருந்தன. பூமரங்கள் சிதறி, ஒரு பெரும் அகாலமாய் விரிந்திருந்தது முற்றம்.
பூட்டிய கதவுகள் அடைபடும் ஒலி. அவன் மனதை யாரோ உடைத்தார்கள்.
பொருட்களைச் சூறையாடினார்கள். அந்தப் பொருட்களில் இருந்து ஒர வித மணம் கிளம்பியது. என்ன மணம்? வியர்வை நாற்றம் பொலிருக்கிறதே. இன்னும் ஏதோ வாசைன..? என்னவாயிருக்கும். கண்ணீர் மணம். கண்ணீ; மணக்குமா? இதென்ன கேள்வி. இதோ மணக்கிறதே.
அவனின் இதயத்தை இரத்தம் ஒழுக ஒழுக யாரோ பிடுங்கி எறிந்தார்கள்.
“காலமே, என்னை நிந்திக்காதே” அவன் கூவினான். மனம் பதை பதைத்தது. கட்டளைக் குரல், சவுக்காய் வலியை எழுப்பியது. சேனை முன்னேறியது.
திடீரென முற்றத்தில் உதிர்ந்திருந்த பச்சை இலைச் சிதறல்களுக்குள்ளிருந்து சிரிப்பொலி கேட்டது. அவன் திடுக்குற்று, வியப்புடன் திரும்பிப்பார்த்தான்.
சிதைந்து தூளாகிக் கிடந்த இலைகளின் சிதைவுகளிடை ஒரு முகம் தெரிந்தது. அது ஒரு பொம்மையின் முகம். ஒரு குழந்தையின் கனவுகளைப் பிரதிபலிக்கும் முகம். அவன் மெல்ல நடந்து அதை நெருங்கினான். கண்கள் அந்த முகத்தை ஊடுருவின. மனம் எச்சரிக்கையடைந்தது.
“வா,படையினனே! ஆ…கவனம், கவனம்…ஆ… அந்தக் காலடிகளை மிதித்து விடாதே. அது என்தோழனுடையவை. இந்தப் பாதச்சுவடுகளில் நான் என் மனித்களின் முகங்களைப் பார்க்கிறேன். என் கனவுகளில் இந்தப் பாதச்சித்திரங்கள் அவர்களின் வாழ்வை விரிக்கும். அவையே எனக்குப் பொக்கிசங்கள். எனவே, அப்படியே நில். நான் சொல்வதைக் கேள்” என்றது அந்த முகம் குழந்தைக் குரலில்.
“யார் நீ? கட்டளைகளால் என்னைத் தடுக்கவும் அசைக்கவும் உனக்கென்ன உரிமையிருக்கு?என்னைத் தடுக்க எங்கிருந்து உனக்கு உரிமை பிறந்தது?”
குரல் நடுங்கியபோதும் ஆக்ரோசமாக ஒலித்தது. அது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய குரல்தானா அது? அவனுக்கு மூச்சிரைத்தது. சக்கையாக உதிர்ந்திருந்த இலைகள், அவன் மூச்சுக் காற்றில் சுழன்று பறந்தன. கரும்பச்சைச் சிறு புள் கூட்டம் பொல அப்படியே அவை வட்டமிட்டு நிலத்தில் தணிந்தன.
பொம்மை சிரித்தது.
“நல்லாய்த் தானிருக்கிறது. வேடிக்கை, உன்னை நான் இலகுவாக அடையாளம் கண்டு கொண்டேன். பார்த்தாயா? உன்னுடைய வருகையே உன் முகத்தைக் காட்டிற்று. எனது மனிதரின் பதைப்பே உன் ரூபத்தை உண்த்தியது. அந்த மனிதர்களின் கனவுகளும் நிஜமும் கணத்தில் சிதையும் போதே நான் உன் முகத்தைக் கண்டேன். நான் இந்த முற்றத்தின் குழந்தை. என் மனிதர்கள் விட்டுச் சென்ற உறவின் துளிர். அந்த மனிதர்களின் வாழ்வின் அடையாளம் நான். இக்கணமோ அவர்கள், துயரின் முகமாயிருக்கிறேன். நீ கேட்கிறாய், யாரென்றென்னை?”
“பேசாதே, நிறுத்து. யார் நீ? நேரடியாகச் சொல்” அதட்டினான் அவன்.
“மிரளாதே! உன்னுடைய பதைப்பே உன்னை இப்படிக் கொதிக்க வைக்கிறது. நீ யார் என்று உனக்குத் தெரியுமா? உன் முகம் என்ன? உனது வருகையின் பொருளென்ன? நீயோ வெளியான் போல நடந்து கொள்கிறாய். சிதைந்திருக்கும் இந்த முற்றத்தைப் பார். அச் சிதைவில் உன் முகம் தெரியும். தவிக்கும் என் ஆன்மாவின் குரலைக் கேள். அதில் நான் யாரென்பதைப் புரிந்து கொள்வாய்”
“எனக்கு அது பற்றியெல்லாம் அக்கறையில்லை. நான் என் கடமையைச் செய்கிறேன். அவ்வளவுதான். நீ குறுக்கிடாதே. உன்னைக் கொன்று விடும் அதிகாரம் எனக்குண்டு”
பொம்மை சிரித்தது. அதன் குழந்தை முகம் பிரகாசித்தது. சோகம் ததும்பிய புன்கையின் ஒலி அதனை உலுக்கியது. அவனோ, தன்னை இறுக்கிக் கொள்ள முயன்றான். இன்னும் அங்கே தாமதிக்க விரும்பவில்லை. நடக்க முயன்றான்.
“நில்” என்று பொம்மை தடுத்தது. :கடமையா? எது உன் கடமையெனக் கருதுகிறாய்? ஒரு செயலின் விளைவு பயக்கும் நன்மை தீமை பற்றி நீ எண்ணிப் பார்க்கவில்லையா?”
“அது பற்றி யோசிக்க இப்போது தருணமல்ல. எனக்hன கட்டளைக் குரல் சொல்கிறது, இது என் கடமை என்று. விஹாரையில் என் குருவும் சொன்னார் இது என் கடமையே என்று”
இனியும் தாமதிக்கக் கூடாதென்று அங்கிருந்து அகல்வதற்கு அவன் முயன்றான். எங்கும் சப்பாத்து அடிகள் முள்ளாய்ச் சிலிர்த்தன.
“ஓடாதே, ஒரு கோழையாக உன்னை நிரூபித்துச் செல்கிறாய்” பொம்மையின் குழந்தைக் குரல் சிரிப்புடன் கீச்சிட்டு ஒலித்தது.
அவன் கொந்தளித்தான். கண்கள் தகித்தன. இந்தச் சிறு பொம்மைக்கு அஞ்சுவதா? என் மனதுக்கு என்னவாயிற்று? வானத்தின் மையத்தில் சூரியன் எரிந்தது. முறிந்த மரங்கள் வாடின. சேனை புழுதியைக் கிளப்பியபடி முன்னேறிக் கொண்டிருந்தது. குருதி மணத்தது. அவலக் குரல்கள் காற்றில் பரவின. எல்லாவற்றையும் மீறி கட்டளைக் குரல் ஒலித்தது.
அவனுக்கு எங்காவது சற்று ஓய்வாக குந்தியிருக்க வேண்டும் போலிருந்தது. உடல் தளர்ந்தது. அவன் தள்ளாடியவாறு நின்றான். ஒரு பாறையைப் போ இறுகினான்.
“என்ன மௌனமாக இருக்கிறாய்?” பொம்மை அவனைக் குடைந்தது.
“ஒரு வாழ்வைக் கொன்று உன் வாழ்வைப் பெருக்கலாம் என்று நினைக்கின்றாயா? உண்மையில் நீ உன் வாழ்வையே இழக்கிறாய்? கூடவே, இன்னொரு வாழ்வையும் அழிக்கிறாய்”
“அப்படியென்றால்”
“அழிவின் புதல்வனாகவே நீ உன்னை ஆக்கி வைத்திருக்கிறாய். உனக்குத் தெரியுமா? இந்த முற்றத்தில் எத்தனை பூக்கள் மலர்ந்தன என்று. இந்தப் பூக்களில் எத்தனை கனவுகள் விளைந்தன என்று. என்னைப் பார். நான் ஒரு பொம்மை அல்ல. உயிர்ப்புடனிருந்த ஒரு ஆன்மாவின் வடிவம்தான் நான். இந்த முற்றத்தில் உலவித் திரிந்த மனிதர்களுடன் நானும் உலவித்திரிந்தேன். அந்தக் குழந்தைகளின் மகிழ்வில் நானும் மகிழ்ந்தேன். அவர்களின் கனவுகளுக்கு நான் வர்ணங்கள் சேர்த்தேன். அந்தக் குரல்களில் என்னைக் கரைத்தேன். இன்று அவை எல்லாவற்றையும் சிதைத்து விட்டாய். ஒரு கணத்தில் உன் வருகை சம்பவித்த அந்தப் போதில் இந்த முற்றம், அகாலமாயிற்று. தங்கள் வர்வின் கோலம் சிதைந்ததென்று விம்மினார்கள், என் மனிதர்கள். தம் கனவுகளை எல்லாம் இழந்து தெருவழியே ஓலமிட்டவாறு, அநாதைகளைப் போல அவர்கள் ஓடினார்கள். நான் தனித்தேன். வெறும் பொம்மையாகித் தனித்தேன்”
அதன் குரல் விம்மியது. அவன் மனதில் அது சன்னமாய் இறங்கியது.
“நீ என்னை ஏமாற்ற முனைகிறாய். இனியும் வாய் திறவாதே! நான் என் கடமையைச் செய்தேன். என் மீது ஒப்படைக்கப்பட்டிருக்கும் கடமைகளுக்கு நானே பொறுப்பாளி. பலனைத் தீர்மானிப்பது நானல்ல. என் கடமைக்கு நான் நம்பிக்கையும் பொறுப்பாளியுமாவேன்” அவன் கர்ஜித்தான்.
குதித்தெழுந்து தோள்களைக் குலுக்கிக் கொண்டான். ஒரு வீரனுக்குரிய மிடுக்கை ஏற்றி விட எத்தனித்தான்.
பொம்மை மறுபடியும் சிரித்தது. அந்தச் சிரிப்பில் கேலியும் இரக்கமும் தொனித்தன.
“படையினனே, கொஞ்சம் நிதானி. உன் நம்பிக்கையோ குருடானது. அது இருளடர்ந்த கண். உன் மீது எனக்கு அளவற்ற இரக்கம் மேலிடுகிறது. ஆனால், நீயோ மன்னிக்க முடியாதவனாக இருக்கிறாய்”
“வாயைப் பொத்து. இனி உன் குரல் கேட்குமென்றால் சல்லடையாக்கி விடுவேன் உன்னை. நீ என் எதிரி” அவன் கத்தினான். ஆனால், உள் மனமோ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொந்தளித்தது. பேதையானவன் நீ என்று அது அவனைப் பார்த்து ஓலமிட்டது.
“பதறாதே, படையினா. உன்னால், என்னை வெல்லவே முடியாது”
“நான் வலியவன். உன்னை என்னவும் செய்வேன்”
“உன் மனம் நாறுகிறது!”
அவன் திடுக்கிட்டான். அம்மாவின் முன்னால், அவளுக்கு தன் நாறிய மனதின் நாற்றத்தை மறைக்கத் தவித்தது நினைவில் முட்டியது. எரிச்சலும் பீதியும் அவனை அரித்தன.
“என்னை நீ பயமுறுத்துகிறாய்”
“இல்லை. நான் கோழைகளை இம்சிப்பதில்லை”
“நானா கோழை என்கிறாய்” அவன் தடுமாறினான்.
“உன்னுடைய அம்மாவிடம் நீ பேசுவதற்கு வார்த்தைகளற்றுத் தவித்தாயே. அவள் விழிகளைப் பார்ப்பதற்கு அஞ்சினாயே” மிக அமைதியாகப் பதில் சொன்னது பொம்மை.
அவன் திகைத்துடைந்தான். பொம்மை தொடர்ந்தது. “உன் அம்மாவிடம் நீ இழந்த துணிவை நான் பெற்றேன் உன்னிடமிருந்து. ஆகவே, உன்னிடமிருந்தே நான் வலிமையும் திராணியும் அடைந்தேன்.”
பொம்மையின் குரல் காற்றில் சுழன்று சுழன்று எதிரொலித்தது. அவன் கால்கள் நடுங்கின. கைகள் தளர்ந்தன. விழிகள் திரைந்தன. மனமோ அந்தரித்தது. சேனைகள் அப்போது சிதைந்து பின்வாங்கின.
6
“ஐயோ! கட்டளைகள் என்னைச் சிறைப்படுத்தினவே. கட்டளைகளே என்னை அநாதையாக்கின. நான் என் மனதைச் சாகடித்தேன். அது நாறி மணக்க மணக்க கட்டளைகளுக்கு என் காதுகளைத் தாரை வார்த்தேன்!”
அவன் புலம்பினான். சொற்கள் காற்றில் அமிழந்தமிழ்ந்து வெளிவந்தன.
7
அம்மா அவனைப் பார்த்துக் கூவினாள்.
“மகனே! நீ பாவங்களால் ஆசீர்வதிக்கப் பட்டவனா? உன் முகம் இன்னும் பிணத்தின் முகமாக விறைத்துக் கிடக்கிறதே! கடவுளே, உன் மனம் நாறுகிறதே! இது என்ன கொடுமை கடவுளே…!”
அவன் அழுதான். தேம்பித் தேம்பி அழுதான். அவளின் முகததைப் பார்க்கத் திராணியற்று விம்மினான். மனம் ஓலமிட்டது.
“நீ என்னுடைய புதல்வனாக - ஈரமில்லாத உன் குரல், இரக்கமில்லாத உன் பார்வை, அன்பு மலராத உன் புன்னகை, பேசச் சொல்லற்ற உன் விதி, வன்மம் கொண்ட உன்னிதயம், நாற்றமெடுக்கும் மனம்…. ஐயோ! இப்டியெல்லாம் நேர்ந்து விட நீ ஏன் மகனே பலியானாய்?
8
அந்தப் பாதையில் ஒரு பூனையை விரட்டிக் கொண்டு இரண்டு நாய்கள் குறுக்கே பாய்ந்தன. வீதியில் ஒரு பிச்சைக்காரன் கால்களை இழுத்திழுத்துச் சென்று கொண்டிருந்தான். முற்றத்தில் தேமா மலர்கள் உதிர்ந்திருந்தன. சூரியன் சரிந்து இருள் படர்ந்து கொண்டிருந்தது. அம்மா எல்லாவற்றையும் பார்த்தபடி செயலற்றுக் கிடந்தாள்.
9
அவனுடைய கண்களிலிருந்து முள் முளைத்துச் சடைத்தது. பிறகு அது காற்றில் உதிர்ந்து பரவி, முள் வனமாகியது.
குழந்தைகள் முள் வனத்தின் முன் அழுதபடி நின்றார்கள்.
1995
00





