
நெருப்பைத் தின்னுவது
அப்படியொன்றும் கடினமானதல்ல
முள்ளின் மேற் தூங்குவதும்
சாகஸத்துக்குரிய ஒன்றல்ல
குழியில் வீழ்த்தப்படுவது
இருளிற் தள்ளப்படுவது
வரிசையிலிருந்து நீக்கிவிடுவது
எல்லாமே மிகச் சாதாரண காரியங்கள்.
பாம்புகள், நரிகள், ஓநாய்கள்,
முதலைகள், விலாங்குகள், பன்றிகள், கழுகுகளோடு
வாழ்வதொன்றும் அதிசயமானது மல்ல.
கண்ணீருடனும் பசியுடனும் இருப்பது
துக்கத்துக்குரியதோ அவமானத்துக்குரியதோ அல்ல
அன்போடிருத்தல்
கருணை மிகக் கொண்ட காதல்
ஒளிரும் உண்மையோடு வசமாகுதல்
அறத்தின் முன்னே தன்னை நிறுத்தல்
புரிந்துணர்வைப் பொழிதல்
என்ற ஆயிரங்காலத்துப் பயிர்களை
ஓரிரவில் அல்லது பட்டப்பகலில் மேய்வதொன்றும் புதிதுமல்ல.
மனிதர்கள் யார்?
அவர்கள் எவ்வாறிருப்பர்?
என்பதையெல்லாம் அறியவே முடியாமல் தவிப்பதை விடவும்.
1 comment:
good poem from ?
Post a Comment