Saturday, March 31, 2012

யோ. கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு“











யோ. கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு“ சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வைப் பற்றிய தொடக்கம்...

00

யோ.கர்ணன் தன்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதியின் அறிமுக நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்தலாம் என்று விரும்பினார். ஆனால், அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. அது ஒரு பெரிய போராட்டம். முள்ளிவாய்க்கால் சிரமங்கள், அகதிமுகாம் வாழ்க்கைச் சிரமங்கள், தடுப்புமுகாம் வாழ்க்கைச் சிரமங்களைப் போல அவர் இந்தப் புத்தகத்தின் அறிமுகத்தைச் செய்வதற்கும் சிரமங்களையே படவேண்டியிருந்தது.

கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, அதை நடத்துவது என்பதில், அவர் தொடர்பு கொண்டவர்கள், அவர் எதிர்பார்த்தவர்கள், அவர் விரும்பியவர்களிற் சிலர், அவரை விட்டு, அவருடைய கதைகளை விட்டு விலகிக்கொண்டதே இந்தச் சிரமங்களில் முக்கியமானது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் கலந்து கொள்வோரைத் தீர்மானிக்க முடியாதவராக இருந்தார். கலந்து கொள்ளச் சம்மதித்தவர்கள் மெல்லக் கழன்று கொண்டிருக்கிறார்கள் என்று சோர்வுடன் ஒரு கட்டத்தில் சொன்னார் கர்ணன். ஆனாலும் அவர் தளர்ந்து விடவில்லை.

இறுதியில் சிறப்பாக நடந்தது அறிமுக நிகழ்வு. பல்வேறு தரப்பினரும் நிகழ்வுக்கு வந்திருந்தனர். குப்பிளான் ஐ. சண்முகன் நிகழ்வுக்குத் தலைமை ஏற்றார். பருத்த்தித்துறை “அறிவோர் கூடல்“ அமைப்பைச் சேர்ந்த திரு. குலசிங்கமும் சட்டத்துறையைச் சேர்ந்த குமாரவடிவேல் குருபரனும் “சேகுவேரா இருந்த வீடு“ நூல் தொடர்பாக அபிப்பிராய உரைகளை நிகழ்த்தினர்.

குலசிங்கத்தின் உரை மிகச் சுவாரஷ்யம். அந்த உரையை முழுமையாக யாராவது எழுதினால் அதைப் பிறரும் அறியலாம். அல்லது குலசிங்கமே எழுதலாம்.

குமாரவடிவேல் குருபரன் மாற்றுப்பார்வைகளைக் குறித்து உரையாற்றினார். இளைய தலைமுறையைச் சேர்ந்த அவருடைய உரை கவனத்திற்குரியது. விமர்சனங்களை முன்வைப்போர் தங்களின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டும். அல்லது தங்களைப் பற்றி வைக்கப்படும் விமர்சனத்துக்கம் முகம் கொடுக்க வேண்டும் என்றார் அவர். மாற்றுப்பார்வையாளர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளைக் குறித்துச் சிந்திப்பதும் அவசியம் என்ற அவருடைய கருத்துக் கவனத்திற்குரிய ஒன்று.

இதற்குப் பிறகு தேவாவின் பேச்சு. தேவா “குழந்தைப் போராளிகள்“ மறறும் “அனோனிமா“ என்ற இரண்டு புத்தகங்களை மொழிபெயர்த்திருந்தவர். மிகச் சுருக்கமாக - ஆனால் அழுத்தமாகப் பேசினார். கதைகளின் மையத்தைச் சுட்டியதாக அவருடைய பேச்சிருந்தது.

அடுத்து, நிலாந்தன் யோ.கர்ணனின் எழுத்துகளின் முக்கியத்துவம், அவற்றின் அடையாளம் குறித்து நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் எழுத்து வடிவம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அவர் எழுதுவதைப்போலவே பேசுவார். எழுத்துக்கும் பேச்சுக்குமி்டையில் அதிக இடைவெளியோ வேறுபாடுகளோ இருப்பது குறைவு.

அடுத்தது (கருணாகரனின்) என்னுடைய உரை. கர்ணனின் கதைகள் காயங்களின் கதைகள் என்ற சாரப்பட அமைந்த உரை. சு.குணேஸ்வரன் (துவாரகன்) எல்லோருக்கும் நன்றி சொன்னார்.

நிகழ்வில் கீரன், மித்திரன், தேவா, ரங்கன், ஜோர்ச், தேடகம் கோணேல் போன்ற புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களும், சோ.பத்மநாதன், ஓவியர் ஆ. இராசையா, ஐ.வரதராஜன், தபின் (அம்பலம் - பிரபா), கலைமுகம் ஆசிரியர் செல்மர் எமில், சி.ரமேஸ், தானா. விஷ்ணு () யாத்திரீகன், யோகி, ந.சத்தியபாலன், தயாளன், கலாவண்ணன், ராதேயன், சர்வேஸ் எனப் பல உள்ளுர்வாசிகளும் கலந்துகொண்டனர்.

ஆனால், இலக்கியக் கூட்டங்களில் அதிகமாகப் பங்கெடுக்கும், அதிகாரச் செல்வாக்கைச் செலுத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் - அதனுடைய இலக்கியப் பேச்சாளர்கள், விமர்சகர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. கர்ணன் புத்தகம் தொடர்பாகப் பேசுவதற்கு அழைத்தவர்களில் மறுத்தவர்கள் அல்லது சம்மதித்தபின் கதைகளைப் படித்தபிறகு சங்கடப்பட்டுக் கழன்றவர்கள் இந்தத்தரப்பினர் என்று கர்ணன் சொன்னார். (இந்த நிலையில் இலக்கிய ஆய்வுகளும் மாணவர்களின் இலக்கிய ஆய்வுகளுக்கு வழிகாட்டுவதும், அவற்றை மதிப்பிடுவதும் எப்படியிருக்கும்? இந்தக் கேள்வியை பலரும் நீண்டகாலமாகவே கேட்டு வருகின்றனர்).

ஏறக்குறைய அந்தப் பகுதியினர் இந்த நிகழ்வைத் தவிர்த்திருந்தனர் போலப்பட்டது என்றார் நிகழ்வுக்கு வந்திருந்த ஒரு நண்பர்.

முதல் வெளியாகிய “தேவதைகளின் தீட்டுத்துணி“ இந்தியாவில், புலம்பெயர் நாடுகளி்ல் அறிமுகமான அளவுக்கு இலங்கையில் அறிமுகமாகியிருக்கவில்லை. தேர்ந்த வாசகர்களுடன் மட்டும் நின்று விட்டது. வாசித்த பலரும் கூட அபிப்பிராயங்களைச் சொல்லவில்லை. எந்தப் பத்திரிகையிலும் அல்லது எந்த இலக்கிய இதழ்களிலும் அதைப்பற்றிய விமர்சனங்கள் வந்ததாகவும் இல்லை. இவ்வளவுக்கும் கடந்த ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதி “தேவதைகளின் தீட்டுத்துணி“ என்று தேர்ந்தெடுத்து அதைப் பற்றி அறிமுகத்தைச் செய்திருந்தது ஆனந்தவிகடன். இவ்வளவு பகிரங்கப்படுத்தப்படுத்தியும் அந்தத் தொகுதியை இரகசியமாக்கி விட்டது தமிழ்ச்சூழல்.

ஆனால், இப்பொழுது இரண்டு தொகுதிகளுடன் குறுகிய காலத்தில் கவனிப்புக்குரிய ஒருவராக வந்துள்ளார் யோகர்ணன். அடுத்ததாக விரைவில் அவருடைய இன்னொரு புதிய புத்தகத்தை - புதிய எழுத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

அவருடைய புத்தகங்களை வெளியிடும் “ வடலி“ க்கு வாழ்த்துகளும் நன்றியும்.

Friday, March 30, 2012

அடையாள அழிப்பின் அரசியலைப்பற்றி...






காயங்கள் ஏற்படாமல் மரத்தை வீழ்த்த வேண்டுமானால், வேர்களை அகற்றுவது அல்லது வேர்களிற் பாதிப்புகளை ஏற்படுத்துவது என்பது ஒரு அரசியல் அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையைப் பெரும்பாலும் ஒடுக்குமுறையாளர்களே கையாள்கின்றனர். இதை ‘அடையாள அழிப்பு அரசியல்’ என்று நவீன சொல்லாடலிற் குறிப்பிடுகின்றனர் அரசியல் அறிஞர்கள்.

இலங்கையின் இன ஒடுக்குமுறை அரசியலில் இந்த மாதிரியாக வேர்களை அகற்றும் காரியங்கள் அல்லது வேர்களிற் பாதிப்புகளை ஏற்படுத்தும் உபாயங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள் தொடக்கம், நூலக எரிப்பு, போர், இடப்பெயர்வுகள், பிரதேசங்களிலிருந்த மக்களை அகற்றும் நடவடிக்கைகள், புதிய அடையாளங்களைப் பலவந்தமாக நிறுவுதல், தொல்லாதாரங்களைச் சிதைத்தல் அல்லது அவற்றைச் சூறையாடுதல் போன்ற செயல்கள் எல்லாமே அடையாள அழிப்பு அரசியலின் வகைப்பாடுகளே!

போர் முடிந்த பிறகும், தமிழ்ப்பகுதிகளில் புதிய அடையாள நிறுவுகைகள் நடக்கின்றன. இவை அமைதிக்கும் நம்பிக்கைக்கும் புரிந்துணர்வுக்கும் எதிரான விசயங்கள். புத்தர் சிலைகள் முளைத்தல், விகாரைகள் எழுதல், கேந்திர நிலையங்களில் படைமுகாம்களை விரிதல், போரினால் கைவிடப்பட்ட மக்களின் சொத்துகள் அதிகாரத்தரப்பின் வழியே செல்லுதல் என்று நீளும் இந்த அடையாள அழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தொன்மைச் சான்றைப் பகிரும் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதைக்குறித்து அங்கங்கே சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்த போதும் இந்தக் காவுகை நின்று விடவில்லை. தொடர்ந்தும் சாத்தியப்படும் இடங்களிலிருந்தும் சாத்தியப்படும் வழிகளினூடாகவும் தொல்பொருட்கள் - அரும்பொருட்கள் சென்றுகொண்டேயிருக்கின்றன. சமூக அடையாளம் பொறுத்து, இன அடையாளம் பொறுத்து, வரலாற்று அடையாளம் பொறுத்து இது ஒரு அபாய நிலையே. இதைக்குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் சில நடந்திருக்கின்றன. ஆனால், அதையும்விட உறங்குநிலையே இந்த விசயத்தில் அதிகமாக உண்டு என்று துக்கப்படுகிறார் ‘குணா’ என்ற குணரத்தினம். குணா, தொடர்ச்சியாகவே சமூக அடையாளங்கள் குறித்த அக்கறையோடு செயற்பட்டு வரும் ஒருவர். பன்மைத்துவக் கண்ணோட்டத்தோடு விசயங்களை அணுகும் இயல்புடைய இவர் போரினால் அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்திருப்பதாகக் கூறுகிறார்.

தொல்லாதாரங்களைச் சேகரிப்பதிலும் அவற்றைப் பற்றி அறிவதிலும் ஆர்வமும் முயற்சியும் உள்ள ‘குணா’வுடன் இந்த அடையாள அழிப்புச் செயலைப் பற்றி உரையாடியபோது....

00










தொல்பொருட்களைச் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர் என்ற வகையில் போரும் இடப்பெயர்வுகளும் போருக்குப் பிந்திய இப்போதைய நிலையும் எப்படியுள்ளன?


இதெல்லாமே தொல்பொருட்களையும் தொல்லாதாரங்களையும் அழிக்கும் விசயங்கள்தான். அதற்குமேல் அடையாள அழிப்போடு சம்மந்தப்பட்டவையும் கூட. இதைத் திட்டமிட்டும் செய்கிறார்கள். சிலவேளை போரும் இடப்பெயர்வுகளும் நடக்கிறபோது தானாகவே – எதேச்சையாக நடப்பதுமுண்டு. ஆனால், போர் என்றால் அது அழிவு என்றே அர்த்தமாகும். உலகிலே போரினால்தான் மனிதரின் பெருமளவான ஆற்றல்களும் ஆக்கங்களும் அடையாளங்களும் அழிந்திருக்கின்றன. இயற்கை அமைப்புகளையே போர் அழித்து விடுகிறது. இந்த நிலையில் எப்படித் தொல்லெச்சங்களும் அரும்பொருட் சேகரிப்புகளும் தப்ப முடியும்? அடையாளங்கள் மிஞ்ச இயலும்? அழிந்தவை போக மிஞ்சியவையே வரலாற்றடையாளங்களாகின்றன.

நான் தொல்பொருட்களைச் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவன் என்ற வகையில் போர் என்னை மிகப் பாதித்திருக்கு.

நான் சேகரித்தவை, அதற்கப்பால் வரலாற்றடையாளங்களாக, சமூக அடையாளங்களாக இருந்தவை எல்லாம் நடந்த போரினால் சிதைந்துள்ளன. இந்த அடையாளச் சிதைவில் பெரும்பங்கு வகிப்பது இடப்பெயர்வு. இடம்பெயர்ந்து போகும்போது எதற்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. வீட்டுக்கும் பாதுகாப்பில்லை. பொருட்களுக்கும் பாதுகாப்பில்லை. வாழ்க்கைக்கும் பாதுகாப்பில்லை. உயிருக்கே பாதுகாப்பு, உத்தரவாதம் என்பதெல்லாம் இல்லை என்ற ஒரு நிலையில் வேறு எதற்குத்தான் பாதுகாப்பிருக்கும்?

இந்த நிலையில் தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வந்தவை, சேகரிக்கப்பட்டவை, பாதுகாக்கப்பட்டவை எல்லாமே பாதுகாப்பற்ற அநாதரவான வெளியில் விடப்படுகின்றன. ஏறக்குறைய இயலாமை என்பது இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அதை அவர்களால் வெல்வது கடினம்.

ஆகவே, போரினாலும் இடப்பெயர்வினாலும் பல சமூகங்கள் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பிற்கான வலுவையும் சாத்தியங்களையும் இழக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகின்றன. ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இது நேர்ந்திருக்கிறது.

சனங்களுடைய சக்திக்கு மீறிய எல்லா நிகழ்ச்சிகளின் போதும் இவ்வாறான ஒரு துயர நிலை ஏற்படுவதுண்டு. போர் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் இரண்டும் மனிதர்களைச் செயலாற்ற முடியாத ஒரு நிலைக்குக் கொண்டு போய்த்தள்ளிவிடுகின்றன.

இப்போது போர் முடிந்த பிறகும் இந்த நிலை இன்னொரு வகையிற் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இதெல்லாம் இதைக் குறித்துச் சிந்திப்போருக்குப் பெருந் துக்கத்தைத் தரும் விசயங்கள்.

இந்த நிலைமைகளைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்?

போர் எதனால் ஏற்பட்டது? அதற்கொரு அடிப்படைக் காரணம் இருக்கும். அல்லது பல காரணங்கள் இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினையே போருக்கான பிரதான காரணமாக இருந்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாறு அடையாளப்பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்டது.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான அதிகார வலுப் பற்றிய பிரச்சினைகள் இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளன. குறிப்பாக இலங்கை மீதான தென்னிந்தியப் படையெடுப்புகள் (சோழ, பாண்டியப் படையெடுப்புகள்) சிங்களவரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளன. இதன்காரணமாக சிங்களச் சமூகம் தன்னுடைய வரலாற்றைக் குறித்தும் அடையாளத்தைக் குறித்தும் அதிக உளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது@ அச்சமடைந்துள்ளது. எனவே, இதனால் அது தன்னைப் பாதுகாக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன் வெளிப்பாடே மகாவம்சம். அதாவது, ‘இலங்கையின் வரலாறு’ என்று உருவாக்கப்பட்டுள்ள ‘மகாவம்சம்’ என்ற வரலாற்றுப் பதிகையாகும். இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் சிங்களச் சமூக உளவியலிலும் மகாவம்சம் வகிக்கின்ற பாத்திரமே முதன்மையானது.

பிற்காலங்களில் - குறிப்பாக 1948 க்குப் பிந்திய – சுதந்திர இலங்கையில் மகாவம்வம் தமிழர்களுக்கு எதிரான ஒரு மறைமுக ஆயுதமாகத் தீவிர நிலையிற் பாவிக்கப்படுகிறது என்ற அவதானிப்புகள் உள்ளன. இதுவும் ஒரு வகையான அச்சத்தின் விளைவே. தமிழர்கள் எப்போதும் இந்திய சார்பானவர்களாக, தமிழகத்துடன் அதிகமான நெருக்கத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக சிங்களச் சமூகத்துக்கு எதிராகவே இருப்பர் என்ற ஒரு அபிப்பிராயம் சிங்களச் சமூகத்திடம் உண்டு. குறிப்பாக சிங்களச் சிந்தனையாளர்கள் இவ்வாறு உணர்கிறார்கள் என்ற அவதானிப்பும் உண்டு.

இந்த நிலையில், தமிழர்களின் வரலாற்று முதிர்ச்சியைக் குறித்து சிங்கள உளவியல் கலவரப்படுகிறது. ஆனால், இது ஒரு அவசியமற்ற நிலை. அதிகாரங்களைப் பகிர்ந்து, உரிமைகளைச் சமனிலைப்படுத்தினால் இத்தகைய அச்சத்துக்குக் காரணமே இல்லை. தவிர, இந்திய மைய அரசு ஒரு போதும் தமிழர்களுக்குச் சாதகமாக இயங்கியதில்லை. அதனுடைய வெளியுறவுக்கொள்கையைச் சரியாக விளங்கிக் கொண்டால் சிங்களத் தரப்பினர் இப்படி அனாவசியமாகக் கலவரப்படத் தேவையில்லை.

ஆகவே, அப்படிச் சிந்திப்பதற்குப் பதிலாக, ஒரு பக்கத்தில் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தப்பாடுபடுகிறது சிங்களத் தரப்பு. மறுபக்கத்தில், அது தமிழர்களின் அடையாளங்களை – வரலாற்று முதிர்ச்சியை, வரலாற்றுத் தொன்மையை அழித்துவிட அல்லது சிதைத்து விட முயற்சிக்கிறது.

போருக்கான காரணத்தில் இதுவும் ஒன்று. அதாவது, வரலாற்றைப் பற்றிய மிகு புனைவு. அல்லது அடையாள மறைப்பு. அல்லது அடையாள ஆதிக்கம். இது சிங்களத் தரப்பிடம்.

தமிழ்த்தரப்பிடம் இந்த உளவியல் வேறு விதமாக இருக்கு. இனப்பிரச்சினை என்பது தமிழர்களிடம் தொன்மையைக் குறித்த அச்சங்களையே உருவாக்கி விட்டிருக்கிறது. இனப்பிரச்சினை - இனவாதம் - அடையாள அழிப்பை ஏற்படுத்துகிறது என்ற அச்சத்தினால் அடையாள மறைப்புகள் செய்யப்படுகின்றன. தமிழர்கள் பல நிலைகளிலும் தங்களுடைய அடையாளங்களை மறைக்க முற்படுகிறார்கள். இன்னொரு விதமாக அந்த அடையாளங்களைப் பேணுவதற்காகப் போராடினாலும் வரலாற்று அடையாளங்களைக் குறித்து அவர்களிடம் அச்சமே உண்டு. தமிழர்களின் அடையாளங்களை இப்போது வெளிப்படுத்தினால், அதை சிங்களத்தரப்பு சிதைத்து விடும் அல்லது திரித்து விடும் என்ற அச்சம் பெரும்பாலான தமிழ் வரலாற்றறிஞர்களிடம் உண்டு.

தன்னையும் தனது அடையாளங்களையும் மறைக்க வேண்டிய ஒரு நிலை ஒரு மனிதனுக்கோ ஒரு சமூகத்துக்கோ ஏற்படுவதென்பது மிகக் கொடுமையான ஒன்று. இத்தகைய நிலை இனத்தின் பேரால் நடந்தாலும் தவறு. மதத்தின் பேரால், சாதியின் பேரால் என எதன்பேரால் நடந்தாலும் அது தப்பே. இங்கே ஜனநாயக அடிப்படைகள் ஒடுங்கி விடுகின்றன. சுதந்திரம் அச்சுறுத்தலாகப்படுகிறது. இது ஒரு தனிமனிதருடைய இருப்புக்கான அச்சுறுத்தல் மட்டுமன்றி, சமூக அச்சுறுத்தலாகவும் அமைகிறது. இந்த நிலை உண்மையில் உலகத்துக்துக்கான அச்சுறுத்தலாகவும் உலக ரீதியான அடையாள இழப்பாகவுமே அமைகிறது.

சர்வதேசம் என்பது பல கூறுகளைக் கொண்டது. பலவிதமான அடையாளங்களையும் பல்வகை இயல்புகளையும் தன்மைகளையும் உடையது. ஆகவே, பல்நிறக் கண்ணிகள் கோர்க்கப்பட்ட மாலையே சர்வதேசம் என்பது.

இதேவேளை, அடையாளச் சிதைப்புகள் பலவகையில் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலமாக, வரலாற்று இடங்களை விட்டுச் சனங்களை வெளியேறும் நிலையை ஏற்படுத்துவதன்மூலம், பொது அடையாளங்களை அழிப்பதன் மூலம், தொல் அடையாளங்களில் மாறுபட்ட கருத்தேற்றங்களை நிகழ்த்துவதன் வழியாக, சான்றுகளை வெளிப்படுத்த முடியாத உளநிலையை ஏற்படுத்துவதன் மூலமாக.... இப்படிப்பலவழிகளில்.

ஆகையால், இந்தச் சிக்கல்கள் எல்லாம் போரை நோக்கி நிலைமையைக் கொண்டு போனது.

விளைவு, பெரும் போரென்றாகியது. இந்தப் போர் வடக்குக் கிழக்கை மையப்படுத்தி நடந்ததால் அதன் பாதிப்பு அங்கேயே அதிகமாகியது. அதேவேளை அரசும் நேரடியாக இந்தச் சிதைப்பை ஒரு வேலைத்திட்டமாக எடுத்துக் கொண்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. உதாரணமாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்கள் அழிக்கப்பட்டன. கந்தரோடை போன்ற தொல்லியல் மையங்கள் சிங்கள பௌத்த அடையாளங்களாக உணர்த்தப்படுவதற்கான முயற்சிகள் வலுப்பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த மையம் தமிழ்ப் பௌத்தத்தினுடையது என வரலாற்றறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். என்றபோதும் இப்போது வடக்கே வருகின்ற தென்பகுதி மக்கள் இதை அப்படிப் பார்ப்பதாகத் தெரியவில்லை. அதை விளக்கும் நிலையும் காணப்படுவதாக இல்லை. இதன்காரணமாக தமிழ்ப் பகுதிகளிற் காணப்படுகின்ற பல தொல்லியற் கூறுகளை வெளிப்படுத்தத் தமிழர்கள் தயங்குகின்றனர். அதையும் சிங்கள மயமாக்குவது அல்லது அவற்றை ஏதோ வகையிற் சிதைப்பது என்ற நிலை ஏற்படும் என்ற அச்சம் பொதுவாகவே தமிழர் மத்தியில் உருவாகியுள்ளது.

தவிர, யாழ்ப்பாண நூலக எரிப்புத் தொடக்கம் ஆலயங்களின் தேர்கள், சிற்பமுறையிலமைந்த வாகனங்கள் மற்றும் தமிழ் மக்கள் பிரத்தியேகமாகப் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் வரையில் எல்லாவற்றையும் அழிக்கும் - அழிய விடும் நிலைமைகள் உருவாகியுள்ளன. போரினால் கைவிடப்பட்ட சுவடிகள் ஏராளம். அழிந்த சுவடிகள் அதைவிட அதிகம். இதில் கிராமியக் கலைகள், சோதிடம் மற்றும் வாகடம் என்ற மருத்துவக் குறிப்புகள் எனப் பல்வகை விசயங்கள் இருந்தன.

இதைவிட சமாதான காலத்திலும் பிறகு, போருக்குப் பிந்திய இன்றைய சூழ்நிலையிலும் தொல்பொருட்களும் பழைய புழங்கு பொருட்களும் கடத்தப்படுகின்றன. மற்றது மக்களின் அறியாமைகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் ஏராளமான தொன்மைப் பொருட்கள், எங்களின் அடையாளங்களைச் சொல்லும் சான்றுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் அடையாள இழப்பு என்பது அல்லது அடையாள அழிப்பு என்பது மிகப் பலமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அபாயநிலையைக் குறித்து எந்த அளவிலான விழிப்புணர்வு தமிழ்பேசம் சமூகங்களிடம் உள்ளது? இந்த அபாய நிலையைத் தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதாக? அப்படியாயின் அது எந்த அளவில், எந்தத் தரப்புகளால் எடுக்கப்பட்டுள்ளது?

உண்மையில் இது ஒரு வெட்டகப்பட வேண்டிய – கவலைப்பட வேண்டிய விசயமே. இந்த நிலையைக் குறித்து அவ்வப்போது பேசப்படும். அரசியல்வாதிகள் கதைப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் இதைக் குறித்து எழுதியிருக்கின்றன. அங்குமிங்குமாகத் தனி நபர்கள் தங்களால் ஆன அளவுக்கு தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிலர் தங்களால் முடிந்த அளவுக்குச் சேகரிப்புகளைச் செய்து வருகின்றனர். இது அடையாளச் சேகரிப்புக்கான ஒரு பாராட்டத்தக்க முயற்சி எனலாம்.

இதற்கப்பால் 2003 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளர்களான பா.அகிலன், தா.சனாதனன் போன்றோர் தங்களின் மாணவர் திரட்சியைப் பயன்படுத்தி, இத தொடர்பாக ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டார்கள். சில பிரசுரங்கள் கூட அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. யாழ் நகர் மற்றும் கிராமப் புறங்களிற்கூட விழிப்புணர்வுப் பயணங்கள் செய்யப்பட்டன. அதையொட்டி பத்திரிகைகளிலும் எழுதப்பட்டது.

ஆனால், பிறகு முனைப்படைந்த போர் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டது.

இப்போது சமாதானச் சூழலில் தெற்கே இருந்து வருவோர் மிகக் குறைந்த நிலையில் யாழ்ப்பாண அடையாளத்தை – தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பொருட்களை எல்லாம் வாங்கிச் செல்கிறார்கள்.

முக்கியமாக, போரின் நேரடியான அழிவுகள் குறைந்திருந்த நெடுந்தீவு போன்ற பகுதிகளிலிருந்து பல கலைப் பொருட்களும் புழங்கு பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. நெடுந்தீவில் குண்டு வீச்சுகளோ ஷெல்லடிகளோ நிகழவில்லை. இதுமாதிரிப் பல தீவுகளில் தொன்மையான பொருட்கள் நிறைய உள்ளன. இதையெல்லாம் மோப்பம் பிடித்து, அங்கே போய் மிகக் குறைந்த விலையில் அரும்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதைப் பார்க்கும்போது மிகக் கவலையாக இருக்கு.

வன்னியில் சேகரிப்புப் பொருட்கள் எதுவுமே இல்லை. அதையெல்லாம் மாத்தளன், முள்ளிவாய்க்கால், பொக்கணை, தேவிபுரம், புதுக்குடியிருப்பு போன்ற இடங்களிலிருந்து எடுத்துச் சென்று விட்டனர். இதில் படையினரும் வியாபாரிகளும் கைகோர்த்துச் செயற்பட்டிருக்கின்றனர்.

இதைத் தடுப்பதற்கு வேறு அமைப்புகள் ஏதும் முயற்சிக்கவில்லையா? குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் வரலாற்றுத்துறை மற்றும் பொது மக்கள் அமைப்புகள்?

வரையறுக்கப்பட்ட அளவில் தங்களுடைய கவலைகளை இந்த அமைப்புகளில் இருந்தவர்கள் வெளியிட்டுள்ளனர். அதற்கப்பால் இந்த அமைப்புகள் முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லை. அப்படிச் சென்றிருந்தால் அது சட்டரீதியான ஒரு நடவடிக்கைக்கும் நீதி மன்றம் வரையான விவகாரமாகவும் அரசியல் விவகாரமாகவும் மாறியிருக்கும்.

முன்னர் சமாதானக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் குறிப்பாகக் கலை பண்பாட்டுக்கழகத்திடம் இதைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அவர்களும் ஒரு எல்லைவரையான – மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டும் சில நடவடிக்கைளை எடுத்திருந்தனர். ஆனால், இந்த நிலையைக் குறித்து வெளிச்சம் போன்ற இதழ்களில் எழுதப்பட்டது.

மற்றும்படி ஏனைய தமிழ் அரசியற் கட்சிகளிடம் இதைப் பற்றிய புரிந்துணர்வோ அக்கறையே இருப்பதாகத் தெரியவில்லை. தேசியம் பற்றிய உரையாடல்களில் அல்லது அடையாளங்களில் இந்த விசயம் முக்கியமானது. அடையாள இழப்பு என்பது தேசியத்தைப் பலவீனப்படுத்தும் அம்சங்களில் ஒன்றாகும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை இந்த அரசியல்வாதிகள்.

நீங்கள் தமிழ் மக்களின் அடையாள இழப்புக்குறித்த கவலைகளையே அதிகமாகப் பேசுகிறீர்கள். இதே காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் நிலையைப் பற்றி, அவர்களுடைய அடையாள இழப்பைப் பற்றி அல்லது அவர்களின் அடையாள அழிப்பைப் பற்றி என்ன சொல்லுறீங்கள்?

அதுவும் கண்டிக்கத்தக்கதே@ அவசியமாகக் கவனிக்கத்தக்கதே. என்னுடைய அக்கறைகள் முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களையும் உள்ளடக்கியதே. மலையகத்திலிருந்து வடக்கே வந்த மக்களிடம் தனியான அடையாளக் கூறுகள் நிறைய உண்டு. இதை அவர்களின் அடையாளச் செழுமை என்றே சொல்வேன். ஆகையால் அதுவும் முக்கியமானது.

எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு சமூகமும் எதன்பேராலும் தன்னுடைய அடையாளத்தை இழப்பதென்பது ஆபத்தானது. அதிலும் கட்டாய நிலையிலான அடையாள இழப்பு அல்லது அடையாள அழிப்பு அல்லது அடையாள இழப்புக்கு நிர்ப்பந்திப்பது எல்லாமே குற்றத்துக்குரிய ஒரு செயல்தான். எனவே இதை நாம் விழிப்பு நிலைக்குக் கொண்டு வந்தால் நிச்சயமாக இந்த அபாயத்தைத் தவிர்க்கலாம்.

ஒரு சமூகத்தின் கல்வி என்பது அது எவ்வாறு தன்னுடைய இயங்குநிலையைக் கொண்டுள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.

என்னுடைய கேள்விக்குரிய உங்களின் பதில் இன்னும் அழுத்தம் பெறவில்லை. ஆகவே அதைக் குறித்து மேலும் தெளிவுபடுத்துங்கள்?

யாழ்ப்பாணத்திலிருந்து – வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அவர்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை. அதற்கான சூழலும் இருக்கவில்லை. இது கொடுந்துயரமே. அந்த மக்களுடைய அடையாளங்களைப் பிரதிபலிக்கும் எந்தச் சின்னங்களுக்கும் பிறகு முறையான பாதுகாப்பும் இல்லாமற் போய்விட்டது. இதற்குப் பல காரணங்கள் 1990 க்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டன. 1990 இல் இருந்து தொடர்ந்த யுத்தம். 1995 இல் இடப்பெயர்வு, பிறகு அரச தரப்பின் ஆட்சி. இப்படிப் பல.

இதேவேளை வெளியேற்றப்பட்ட அந்த மக்களுடைய அடையாளப் பொருட்களை – அரும்பொருட்களை பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே. அதைப்போல அந்த மக்கள் திரும்பி வரும்போது மீண்டும் அவற்றைப் பெறக்கூடிய ஒரு நிலை இன்று இல்லாமற் போயிருப்பதையும் நாம் ஏற்கத்தான் வேணும்.

ஆகவே அது மிகப் பெரிய தவறும் இழப்புமே. அந்த மக்களுடைய கவலைகளையும் இழப்புகளையும் சேர்த்தே நான் பொதுவாகப் பேசினேன். அந்தப் பொதுச் சிந்திப்பில் அவர்களைத் தனியாக – தனித்துவமாக கருதுகிறேன்.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர்களுடைய பொருட்களையெல்லாம் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் எடுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய பொருட்களை விற்பதற்குக் கடைகளே உருவாக்கப்பட்டிருந்தன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

இது உண்மைதான். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அவர்களுடைய பொருட்களுக்கும் வீடுகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் அந்தப் பகுதியில் இருந்த பாடசாலை போன்ற பொது நிலையங்களுக்கும் விடுதலைப்புலிகள் முதலில் பாதுகாப்பளித்தனர். அந்தப் பகுதியில் யாரும் நடமாடக்கூடாது. பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. சொத்துகளை அபகரிக்கக் கூடாது என்ற அறிவிப்புகள் கூட அந்த நாட்களில் பகிரங்கமாக இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால், பிறகு நிலைமை மாறிவிட்டது. அந்தப் பகுதியில் புலிகளின் ஒரு முகாம்கள் வந்தன. அந்தப் பகுதியைப் பிறகு அவர்கள் ‘சவூதி’ என்ற குறியீட்டுச் சொல்லின் மூலம் அழைத்தனர். குறிப்பாக புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஒரு பிரிவு அங்கே இருந்தது.

சற்றுக் காலத்துக்குப் பின்னர், முஸ்லிம்களின் உடைகள், அவர்களுடைய புழங்கு பொருட்கள், அவர்களுடைய தளபாடங்கள், அவர்களுடைய அடையாளத்துக்குரிய சேகரங்கள் எல்லாம் மெல்ல மெல்ல வெளியேறத் தொடங்கின. யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் முஸ்லிம்களின் பொருட்களையும் தளபாடங்களையும் விற்கும் கடைகளே இயங்கின.

பிறகு அவரவர் கிடைக்கின்ற அளவிற் சுருட்டிக் கொண்டார்கள். இது வருந்தவும் தலைகுனிவைத் தரவும் கூடிய ஒரு நிகழ்வே. எந்த அடையாள இழப்பும் கவலைக்குரியதே@ கண்டனத்துக்குரியதே.

நல்லது. இப்பொழுது இந்தமாதிரியான அபாய நிலையைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று கருதுகிறீர்கள்?

முதலில் அடையாளம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? அடையாள இழப்பின் ஆபத்து என்ன என்பதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

வரலாறு பற்றிய, தொன்மையின் பெறுமதியைப் பற்றிய கல்வி எங்களிடம் கிடையாது. முறையான வரலாற்றறிமுகங்கள் கற்கை முறையில் வளப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்கள் பெரும்பாலும் சந்தையை மையப்படுத்தியிருப்பதால், அடையாள அழிப்பை மேற்கொள்ளும் அரசுகளுக்கும் அதிகாரத் தரப்பினருக்கும் அது பெரும் வாய்ப்பாகிறது. முன்னர் பயன்படுத்திய செம்மையான கைவினைப் பொருட்களின் பெறுமதி புறந்தள்ளப்படுகிறது. அந்த இடத்தில் பிளாஸ்ரிக் பொருட்களும் தகரத்தாலான அல்லது போமிகா வகையான தளபாடங்களும் வீடுகளையும் அலுவலகங்களையும் நிரப்புகின்றன.

மிகப் பெறுமதியான மரத்தளபாடங்களும் செம்பு மற்றும் பித்தளைப் பாத்திரங்களும் கோவில்களில் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த வாகனங்களும் தேர்ச்சில்லுகளும் கூறுவிலைக்கு விற்கப்படுகின்றன.

இவையெல்லாம் பிரயோசனமற்றவை. தேவையில்லாமல் இடத்தைப் பிடித்து வைத்திருப்பவை. ஏதோ கிடைக்கக்கூடிய விலைக்குக் கொடுத்தாற்போதும் என்ற உணர்வுடன் – என்ற புரிதலுடன் இவற்றையெல்லாம் பலரும் விற்கிறார்கள்.

ஆனால், இந்தப் பொருட்களின் பெறுமதியை அறிந்து வரும் கொள்வனவாளர்கள் மக்களின் அறியாமையைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகவே, முதலில் இதைப் பற்றிய - இந்த நிலையைப் பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

ஒரு பழைய பொருளானது தனியே அது ஒரு பெறுமதியற்ற பண்டமல்ல. அது எங்களுடைய முன்னோருடைய உழைப்பு. அவர்களுடைய அறிவியல் நுட்பத்தின் பெறுபேறு. அவர்களுடைய காலகட்டத்தின் கலை வெளிப்பாடு. அவர்களுடைய ஆக்கத்திறன். அவர்களின் வாழ்க்கையோடு அந்தப் பொருள் நீக்கமற நிறைந்திருந்தது. அந்தப் பொருளை அவர்கள் தங்களின் வாழ்வில் சேகரிப்பதற்காக எடுத்துக் கொண்ட சிரமங்கள் பல.

எனக்குத் தெரியும். எங்களின் வீட்டில் இருந்த தூங்கா மணி விளக்கை எங்கள் தாத்தா மலேசியாவில் இருந்து கொண்டு வந்த ஒருவரிடம் வாங்கினாராம். குத்து விளக்கையும் வெற்றிலைத் தாம்பாளத்தையும் பாட்டி தன்னுடைய பதின்மூன்று வயதில் - அவ பருவத்துக்கு வந்த வயதில் அவவின் தகப்பன் யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வாங்கி வந்ததாகச் சொல்லுவா. இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதைகள் உண்டு. எங்களின் வீட்டில் இருந்த பெட்டகம் என்பது நான்கு தலைமுறைகளுக்கு முந்தியது.

இப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் நினைவுச் சின்னங்கள் ஏராளம் உண்டு. மரத்தாலானவை, ஓலைச் சுவடிகள், செம்பு, பித்தளை, அலுமினியம் போன்ற உலோகங்களாலானவை... என. ஏன் அழகான மண் கலசங்கள் கூட உண்டு. சாடிகள் போன்றவை.

இதையெல்லாம் ஒரே நாளில் தூக்கி வீசப்படுவதென்பது எவ்வளவு தூரம் அவற்றை நாம் பொருட்டென மதிக்காது புறக்கணிக்கப்படுவதாகிறது? உண்மையில் இது எங்களின் முன்னோரைத் தூக்கி வீசும் செயல். அவர்களை அவமதிக்கும் காரியங்கள் என்பேன்.

ஆகவே, இதைப் பற்றி நாங்கள் வெளியே சொல்ல வேணும். இளைய தலைமுறைக்குச் சொல்ல வேணும். அதேவேளை பல்கலைக்கழகம் போன்ற பலமான அமைப்புகள் இதை ஒரு வலுவான விவகாரமாக உணர்ந்து அதிகாரமுள்ள – நடவடிக்கை எடுக்க வல்ல தரப்பினரிடம் எடுத்துச் செல்வது அவசியம். அரசாங்க மட்டத்தில், பிரதேச மட்டத்திலான சட்டங்கள் இதற்காக உருவாக்கப்பட வேண்டும்.

தெற்கே தொன்மைச் சான்றுகளைப் பேணும் ஒரு மரபு வலுவாக உண்டு. தென்பகுதியில் அனுராதபரம், பொலனறுவை, சிகிரியா, கண்டி எனப் பல இடங்களிலும் உள்ளது. வரலாற்றுணர்வையும் வரலாற்றடையாளங்களையும் சிறுவயதிலேயே சிங்கள மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வழங்கி வருகிறார்கள். அவர்களுடைய வழிபாட்டிடங்களே வரலாற்று அடையாளங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பது கூட இதன் ஒரு பகுதியாகத்தான்.

ஆனால், தமிழர்கள் தங்களின் அடையாளங்களை மறைப்பதில் பெரும்பாலான இடங்களில் முயற்சிப்பதைப் பார்க்கலாம். முக்கியமாக தமிழ் மேட்டுக்குடியினரும் மேல் நிலையிலுள்ள மத்திய தர வர்க்கத்தினரும் தங்களின் ஆங்கில அறிவைப் புலப்படுத்துவதில் காட்டுகின்ற கரிசனைகள் அதிகம். தமிழை அந்த இடங்களில் பிரயத்தனப்பட்டு மறைக்க முயல்வர். இதேபோல இவர்களே பெரும்பாலும் மேற்கு மயப்படுதலை அல்லது இந்திய மயப்படுதலை அதிகமதிகம் ஊக்குவிப்பவர்கள்.

கலாச்சாரத்தின் மேல் மூடியாகவே இவர்கள் இருக்கிறார்கள். பிற ஆதிக்கத்தின் கதவுகளைத் திறப்பவர்கள் இவர்களே!









நீங்கள் இப்படிச் சொன்னாலும் நடைமுறையில் இது தவிர்க்க முடியாத ஒரு விசயமல்லவா? அதாவது, இன்று இலகுவாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடியதாக உள்ள பொருட்களை மக்கள் வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்றல்லவா?

அப்படி வாங்குவதில் ஓரளவுக்கு நியாயம் உள்ளது. ஆனால், இருககின்ற பொருட்கள் நாகரீகமற்றவை என்று கருதப்பட்டு அவற்றைத் தூக்கி எறிவதே தவறானது. மற்றது மேட்டுக்குடிகள் பெரும் செலவிலேயே பிற நாடுகளின் பொருட்களை வாங்கிஅ டுக்குகிறார்கள். அவர்கள் செய்வதைப்போலச் செய்ய முடியாத அடுத்த நிலை மக்கள் அவற்றைப் போன்ற மாதிரிகளைக் குறைந்த விலையில் வாங்குகிறார்கள். குறைந்த விலையில் கிடைப்பவை எப்படியானவையாக இருக்கும்? நிச்சயமாகத் தரங்குறைந்தவையே. அப்படித் தரங்குறைந்தவை எமது சூழலுக்கும் உடலுக்கும் ஏற்றவையாகவும் இருக்காது.

இதேவேளை இன்னொரு கேள்வி. தமிழ் அடையாளச்சிதைப்பைப் போல சிங்களத்தரப்பின் அடையாளச் சிதைப்பாக தலதா மாளிகையின் மீது நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதலைச் சொல்ல முடியுமே! இது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடென்ன?

இதற்கு நான் முன்னே சொன்ன ஒரு பதிலையே சொல்ல முடியும்.
‘அதுவும் கண்டிக்கத்தக்கதே@ அவசியமாகக் கவனிக்கத்தக்கதே. எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு சமூகமும் எதன்பேராலும் தன்னுடைய அடையாளத்தை இழப்பதென்பது ஆபத்தானது. அதிலும் கட்டாய நிலையிலான அடையாள இழப்பு அல்லது அடையாள அழிப்பு அல்லது அடையாள இழப்புக்கு நிர்ப்பந்திப்பது எல்லாமே குற்றத்துக்குரிய ஒரு செயல்தான்.’

இதற்காக நானும் வருந்துகிறேன்.

அடையாளச் சிதைப்பு எத்தகைய விளைவுகளை எல்லாம் உருவாக்குகிறது?

அரசியல் ரீதியாக சமூகங்களை எதிர்நிலைக்குக் கொண்டு போகிறது. உளவியல் ரீதியாகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கலாச்சார ரீதியாக வெறுமையை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியை அறுக்கிறது. வரலாற்று ரீதியாக அடையாளத்தை அளிக்கிறது. சிதைந்த நிலையை உருவாக்குகிறது. ஆகவே எல்லா நிலையிலும் பாதிப்பான அம்சங்களையே கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் நாற்சார் வீடுகள் இருந்தன. அந்த வீடுகள் யாழ்ப்பாணத்தின் தனித்துவமாகவும் இருந்தன. அதேவேளை ஓலை வீடுகளும் இருந்தன. ஆனால், இன்று அதெல்லாமே இல்லை என்ற நிலையில் எல்லாம் மாற்றப்பட்டு வருகிறதே!

உண்மை. ஓலை வீடுகள் மாறுவதைத் தடுக்க முடியாது. அது யதார்த்தத்துக்குப் பொருத்தமானதுமல்ல. பாதுகாப்பு மற்றும் செலவு பிற வசதிகள் போன்ற காரணங்களுக்காக அவை கைவிடப்படுவது இயல்பு. ஆனால், நல்ல நிலையிலுள்ள நாற்சார் வீடுகளை – பெரும் பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அழித்துப் புதிய வீடுகளை உருவாக்க முயற்சிப்பது வருத்தத்திற்குரியதே.

போர் முடிந்த பிறகு – தற்போது – சனங்களால் யாழ்ப்பாணத்தில் அழிக்கப்படும் பழைய வீடுகளின் கதவுகள், நிலைகள், பெட்;டகங்கள் போன்ற பொருட்கள் எல்லாம் சில்லறை விலைக்கு, பல இடங்களிலும் விற்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். மிக நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட பொருட்களையும் கதவுகளையும் இப்படித் தெருவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்களே!

உண்மையில் இது கவலையான விசயமே. தங்களுடைய அடையாளங்களைப் பொத்திப் பொத்திப் பேணிய சமூகமாக இருந்த யாழ்ப்பாணத்துச் சமூகம் இன்று அந்த அடையாளத்துக்கான அடிப்படைகளை இப்படித் தெருவுக்குக் கொண்டு வந்திருப்பது கவலைக்குரியது. அதே வேளை அவதானத்துக்குரியதும்கூட.

போரும் இடப்பெயர்வுகளும் யாழ்ப்பாணத்தவர்களைத் தெருவுக்குக்கொண்டு வந்தன. மற்றது மாறிவருகின்ற நாகரீகம். இந்த இரண்டும் சனங்களை நன்றாகவே மாற்றி விட்டன. இளைய தலைமுறையினர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, வேறு பிரதேசங்களில் வாழவேண்டியிருந்ததால், அவர்களுக்குத் தங்களுடைய வீடுகளின் அருமையைப் பற்றியும் அங்கிருந்த பொருட்களின் பெறுமானங்களைப் பற்றியும் அவற்றின் தொன்மைகளைக் குறித்தும், அரும்பொருட்களைக் குறித்தும் பெரிய அளவுக்குக் கரிசனையும் இல்லை. கவனமும் இல்லை. அவற்றை அறிவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கிருக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

இந்த இடத்திற்தான் இதைக்குறித்த விழிப்புணர்வு அவசியம் என்கிறேன்.

கல்வியறிவுடைய ஒரு சமூகத்தில், கல்வியைப் பிரதானமாகக் கொள்ளும் ஒரு சமூகத்தில் இப்படியான ஒரு நிலையிருப்பது கொடுமையானதே.

எங்களின் வாழ்க்கை ஒரு காலத்தில் தெருவிலிருந்ததைத்போல இன்று எங்களுடைய அடையாளங்களும் தெருவிற்கு வந்துள்ளன. தெருவுக்கு வரும் இந்த மாதிரியான விசயங்கள் சிதைந்தே போகும் என்பது எலலோருக்குமே தெரிந்த உண்மை.

ஆகவே மொத்தத்தில் இவை தொடர்பாக உங்களுடைய அக்கறைகள் என்ன? திட்டங்கள் என்ன? நடவடிக்கைகள் என்ன?

முக்கியமாக இந்த அடையாள இழத்தல் மற்றும் அடையாளம் பேணுதல் என்ற விசயத்தில் சீரியஸான கருதுகோளை ஏற்படுத்த வேணும். இதைப் பரவலான அளவிற் செய்ய வேணும்.

யுனெஸ்கோ போன்ற ஐ.நா அமைப்பே இதற்காக - இந்த மாதிரி விசயங்களுக்காக இயங்கி வருகின்றன. உள்நாட்டிலும் இதற்கான அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். பல நாடுகளில் இந்தமாதிரியான உள்ளுர் அமைப்புகள் உள்ளன. போருக்குப் பிந்திய சமூகங்கள் தங்களுடைய அடையாளங்களைப் பேணுவதற்காகப் பிரயத்தனங்களை எடுத்துள்ளதை நாம் அறிய முடியும்.

ஆகவே நாம் சரியான முறையில் உரிய தரப்புகளோடு தொடர்பு கொண்டு, நாமும் உரிய அமைப்புகளை உருவாக்கி இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை, பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு நாம் பின்னிற்கும் தோறும் நிலைமை பாதகமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.

இதை எந்த நிலையிலும் நாம் அனுமதிக்கவே முடியாது.

வேர்களை இழப்பதற்கு எந்த மரமும் விரும்பாது. அதை அனுமதிக்கவும் முடியாது. அப்படி அனுமதித்தால் மரத்துக்கே ஆபத்து.

00

Tuesday, March 20, 2012

புகழுடைச் செயல்கள்





இரண்டு கவிதை நூல்கள் - நல்லதோர் முயற்சி

- முயற்சியாளர்கள் அல்லது தொகுப்பாளர்கள் ; சித்தாந்தன், சி.ரமேஸ், மருதம் கேதீஸ்

1. சிதறுண்ட காலக்கடிகாரம்

எதிர்பார்க்காத வகையிற் சில காரியங்கள் மகிழ்ச்சியாக அமைவதுண்டு. இந்த மாதிரியான மகிழ்ச்சிக்குரிய சிறப்பான காரியங்களை எதிர்பார்க்காத தரப்பிலிருந்து யாராவது செய்வார்கள். அல்லது அப்படியான காரியத்துக்கு யாராவது ஒத்தாசை புரிவார்கள். அப்படியான ஒரு காரியம், ஒரு காரியத் தொடர்ச்சி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

இறந்தோரின் நினைவைக் கொள்ளும் வகையில் அவர்களுடைய அடையாளங்களைச் சுவடுகளாக்குவதற்குப் பதிலாக பொதுநிலைப்பட்ட உணர்வுகளைக் கொண்ட சமகாலக் கவிஞர்களின் கவிதைகளை நூலாக வெளியிட்டுள்ளார் பெரியார் சரவணை.இவர் தென்புலோலியைச் சேர்ந்தவர். வடமராட்சிப் பகுதி இலக்கியத்திற்கு அளித்துவருகின்ற பங்களிப்பில் இந்த முயற்சியும் ஒன்று. முன்னர் கட்டைவேலி - நெல்லியடி ப.நோ.கூ.சங்கத்தின் தலைவராக இருந்த திரு. சிதம்பரப்பிள்ளை சங்கத்தின் மூலம் இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்குவிப்புகளைச் செய்தார்.

இப்போது திரு.சரவணை என்பவர், தன்னுடைய மனைவி திருமதி தங்கம்மா சரவணையின் நினைவாக கல்வெட்டை அச்சிடுவதற்குப் பதிலாக 2000 ஆண்டுக்குப் பிந்திய காலப்பகுதியில் எழுதப்பட்ட ஈழக்கவிதைகள் சிலவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டு தன்னுடைய மனைவியின் நினைவைக் கௌரவப்படுத்தியிருக்கிறார் திரு. சரவணை. இதற்கு ஒத்தாசையாக இருந்தவர் திரு. தி.ஜீவரட்ணம்.

”தமிழ்பேசும் சமூகங்கள் தம் வாழ்வின் முக்கியமான காலங்களைக் கடந்து கையறு நிலையில் நி்றகின்ற இந்தக் காலகட்டத்தில், கடந்த காலங்களின் மீதான மீள் உரையாடல்களும் வாசிப்பும் தேவைப்படுகின்றன. இந்த நிலையில் இந்தத் தொகுதிக் கவிதைகள் அண்மைய சமகால உணர்வுகளையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்ட கவிதைகள் அமைகின்றன. இதில் பங்களித்துள்ள கவிஞர்களிற் பலரும் தொண்ணூறுகளிலிருந்து அல்லது அதற்குப் பின்னான காலத்திலிருந்து எழுதி வருகிறவர்கள். இத்தொகுதியின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தின் வலியை, அது ஏற்படுத்திய வடுக்களையே பேசுகின்றன. இன்னும் மனித மனதுகளுள் படர்ந்திருக்கும் மென் உணர்ச்சிகளின் தடங்களையும், கனவுகள், ஏக்கங்களையும் பேசுகின்றன.

“யுத்தம், மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கிறது. மக்களை அலைவுறச் செய்திருக்கிறது. கடந்த காலம் பற்றிய மீள் வாசிப்பிற்கான எத்தனை முயற்சியாகவே இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மீள் வாசிப்பானது, அனைத்து நிலைகளிலும் தொடரவேண்டும் என்பதே எமது விருப்பாகும்“ என இந்த நூலின் தொகுப்பாளர்கள் தங்களுடைய பதிப்புரையில் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தொகுதியில் முப்பது கவிஞர்களின் முப்பது கவிதைகள் உள்ளன.

ந.சத்தியபாலன், பெண்ணியா,எஸ்போஸ், றஷ்மி, அபார், தானா.விஷ்ணு, சித்தாந்தன், ஃபஹீமா ஜஹான், ஓட்டமாவடி அரபாத், வினோதினி, நவாஸ் சௌபி, மைதிலி, த.அஜந்தகுமார், மருதம் கேதீஸ், கருணாகரன், அலறி, துவாரகன், மலரா, ரகுமான் ஏ. ஜமீல், பா.அகிலன், தீபச்செல்வன், அனார், கனக ரமேஸ், யாத்திரிகன், கோகுல ராகவன், தபின், மலர்ச்செல்வன், முல்லை முஸ்ரிபா, ஆழியாள், எம். ரிஷான் ஷெரிப் ஆகிய கவிஞர்களுடைய கவிதைகள்.

யுத்தத்திற்குப் பின்னர் இந்தத் தொகுதி வெளியிடப்பட்டிருப்பதால் அனைத்துத் தரப்பைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 1980 களுக்குப் பின்னரான இலக்கிய முயற்சிகளில் சமூகநிலைப் பிளவுகளும் கருத்துநிலைப் பிளவுகளும் அதிகரித்திருந்தன. இதனால் முஸ்லிம் எழுத்தாளர்களை வடபுலத்தோர் உள்வாங்குவதிலும் மாற்றுக் கருத்தாளர்களுடன் ஏனையவர்கள் இணைந்து செயற்படுவதற்கும் அல்லது மாற்றுக் கருத்துடையோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொள்வதற்குமான சாத்தியங்கள் குறைவாகவே இருந்தன.

இந்தத் தொகுதி அந்த நெருக்கடிகளைக் கடந்துள்ளது. என்பதால் இது பல தரப்பையும் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே எல்லோருடைய காயங்களும் இங்கே பேசப்படுகின்றன. இந்த வகையில் இந்தத் தொகுதிக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்படுகிறது.

ஆகவே, யுத்தம் ஓந்த பின்னரும் பிணவாடையும் குருதியும் அவலக்குரலும் ஒலிக்கின்றன இந்தக் கவிதைகளில். இன்னொரு வகையிற் பார்த்தால் கண்ணீரில் மிதக்கும் தெப்பமாகத் தெரிகிறது இந்தக் கவிதைத் தொகுதி.

00






02. புதுமெய்க்கவிதைகள் - தா.இராமலிங்கம்

ஈழத்தின் நவீன கவிதைச் செல்நெறியை உருவாக்கியவர்களில் தா.இராமலிங்கம் முக்கியமானவர். முதலாவது நவீன கவிதைத் தொகுதியும் தா.இராமலிங்கத்தினுடையதே. புதுமெய்க்கவிதைகள் என்ற இந்தத் தொகுதியை அவர் 1964 இல் வெளியிட்டிருந்தார்.ஏடு வெளியீடாக இந்தத் தொகுதி வந்ததாக நினைவு. (இதைச் சரிபார்க்க முடியவில்லை. கையிலிருந்த அந்தப் புத்தகம் யுத்தத்திற் தொலைந்து விட்டது). நீண்டகாலமாகவே நவீன கவிதையாக்க முறையை ஏற்றுக்கொள்வதில் தயக்கங்களைக் கொண்டிருந்த கவிஞர் இ.முருகையன் இந்தத் தொகுதிக்கான முன்னுரையை எழுதியிருக்கிறார்.

“அவரது படைப்புகள் (தா.இராமலிங்கத்தின் ) இன்று நம் மொழியில் வெளியாகும் சராசரிக் கவிதைகளினின்றும் வேறுபட்டு நிற்கின்றன.

”அவரது ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ஜன்னலாக இருக்கிறது. ஒவ்வொரு ஜன்னலூடும் ஒவ்வொரு உலகு தெரிகிறது. ஒரே உலகின் பல்வேறு கூறுகளே வெவ்வேறு கோணங்களில் தெரிகின்றன. திரு. இராமலிங்கம் காடடும் காட்சிகள், நோக்கப்படும் கோணங்கள் அசாதாரணமானவை. அவ்வாறிருப்பதுதான் இவ்வெழுத்துகளிற் பொதுளி நிற்கும் வீரியம் எனலாம்” என்கிறார் முருகையன்.

தா.இராமலிங்கம் முன்னோடி மட்டுமல்ல, முக்கியமான ஈழக்கவிஞரும்கூட. அவருடைய கவிதைகள் பின்னர் வந்த கவிஞர்களைப் பெருமளவில் பாதித்தன. புதிய பரப்புகளை நோக்கி, புதிய சாத்தியங்களை நோக்கி ஈழக்கவிதைகளை நகர்த்தியதில் இராமலிங்கத்துக்கு ஒரு முக்கிய பாத்திரமுண்டு. தமிழ்ப்பண்பாடு பற்றிய பிம்பங்களையும் சமூக விழுமியங்கள் பற்றிய ஆசாரப் பாரவைகளையும் கடுமையான கேள்விக்குள்ளாக்கியவர் தா. இராமலிங்கம்.அதேவேளை பின்னர் இன ஒடுக்குமுறையையும் அவர் எதிர்த்தெழுதினார். சாதியத்தின் வலிகளைப் பதிவாக்கியதைப்போல இனஒடுக்குமுறையின் காயங்களையும் அவர் பதிந்தார்.

காணிக்கை என்ற இரண்டாவது தொகுதிக்குப் பின்னர் எழுதிய கவிதைகளை தா.இராமலிங்கம் நூலாக்க முயற்சித்த போதும் அந்த முயற்சி சாத்தியப்படவில்லை. இராமலிங்கத்தின் இறப்பிற்குப் பின்னர் அவருடைய பிள்ளைகள் எடுத்த முயற்சியும்கூட வெற்றியளிக்கவில்லை. யுத்தம் எல்லாவற்றையும் பினனுக்குத் தள்ளி விட்டது.

இப்பொழுது அமரர் சரவணை வெளியீடாக புதுமெய்க்கவிதைகள் மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. தங்கம்மா சரவணை நினைவாக முதற்தொகுதி வெளியிடப்பட்டு ஓராண்டுக்குள் இன்னொரு வெளியீடு. இப்போது திரு. சரவணை அவர்களின் நினைவாகவே இந்தத் புத்தகத்தை வெளியிட வேண்டியேற்பட்டுள்ளது. ஒரு வகையில் இதுவொரு துக்கந்தரும் நிகழ்ச்சியே. ஆனால், அந்தத் துக்கத்திற்குள்ளும் ஒரு ஆறுதலளிக்கும் விதமாக இந்த நூலின் மீள்வருகை.

பொதுவாக நினைவு மலர்கள் என்பவை இழப்புகளின் நிமித்தமாக உருவாக்கப்படுபவை. இழப்புகளையிட்ட துக்கத்தைச் சமனிலைப்படுத்த முனைபவை. இங்கே இந்தவாறான நல்ல முயற்சியின் மூலமக இந்தச் சமனிலைப்படுத்தல் மேலும் அதிகரிக்கிறது.ஒரு பெறுமதியான - முக்கியமான செயலைச் செய்வதன்மூலம் கிடைக்கின்ற மகிழ்ச்சியும் ஆறுதலும் இந்தச் சமனிலையை சீராக்குகிறது.

இதேவேளை யுத்தத்தினால் இழந்து போன தா.இராமலிங்கத்தின் புதுமெய்க்கவிதைகளை மீள, இந்த வடிவில் புதிதாகப் பெற்றுக்கொள்வதையிட்டு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சிகூட இழப்பை ஈடு செய்யும் வகையிலான ஒருவிதச் சமனிலையே.

அமரர் சரவணை தங்கம்மா குடும்பத்தினருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரியன. இறந்தும் மறவா புகழுடைய பேறான செயல்கள் செய்தமையையிட்டு இந்த மதிப்பு.

00 பிரதிகள் இலவசம். தேவைப்படுவோர், மறுபாதி, மருத்துவமனை வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.


00

Saturday, March 10, 2012

யுத்தத்தில் காணாமற் போன மற்றொன்று










யாரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத காலமொன்று எங்களின் வாழ்வில் வந்திருந்தது. அப்பொழுது நண்பர்கள் சந்தேகிக்கப்பட்டனர். அல்லது நம்புவதற்கு கடினமான ஒரு நிலையில் தெரிந்தனர். நண்பர்களிடம் நான் சந்தேகத்துக்குரியவனாக இருந்தேன். நானும் நண்பர்களைச் சந்தேகித்தேன். அயலவர்கள் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். அண்ணன் தம்பியைச் சந்தேகித்தான். தம்பி அண்ணனைச் சந்தேகித்தான். அக்காவைச் சந்தேகித்தாள் தங்கை. பெற்றோரைப் பிள்ளைகளும் பிள்ளைகளைப் பெற்றோரும் சந்தேகித்தார்கள். இந்த நிலை வளர்ந்து சனங்கள் இயக்கத்தைச் சந்தேகித்தனர். இயக்கம் சனங்களைச் சந்தேகித்தது. இறுதியில் இயக்கமே இயக்கத்தைச் சந்தேகித்தது. (போராளிகளே போராளிகளைச் சந்தேகித்தனர்). இப்படி எல்லோரையும் சந்தேகிக்கும் விதி ஒரு மாபெரும் வலையாக அப்பொழுது எல்லோரின் மீதும் விழுந்திருந்தது.

இது வெட்கந்தான். ஆனால், அன்றைய சூழலில் இதுதான் நிலைமை.

இல்லையென்றால் பின்னேரம் வலைஞர் மடம் கடலோரத்தில் எங்களோடு சேர்ந்து ஒரு குடிசையைப் போடுவதற்கான இடத்தைத் தேடிக்கொண்டிருந்த தானா. விஷ்ணு, இரவு எங்களுக்கே தெரியாமல் எப்படித் தப்பிச் செல்ல முயன்றிருப்பான்? (அப்படித் தப்பிச் சென்றபோது கடலில் வைத்துப் புலிகளால் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையிருந்த கதை தனியானது). அப்பொழுது நாங்களும் அங்கிருந்து வெளியேறக்கூடிய – வெளியேற வேண்டிய நிலையிலேயே இருந்தோம். இது விஷ்ணுவுக்கும் தெரியும். விஷ்ணுவும் குடும்பத்தோடு வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டேயிருக்கிறான் என்று எங்களுக்கும் தெரியும். ஆனால், அன்றிரவு எங்களுக்குச் சொல்லாமல் அவன் இரகசியமாகவே வெளியேறினான். அப்படிச் சொல்லிக்கொண்டு போவதற்கான யதார்த்தம் அங்கில்லை. மனச்சூழலும் அப்போதில்லை. அதனால், இரகசியமாகவே வெளியேறிப்போய்க் கடலில் வைத்து இயக்கத்திடம் சிக்கிக் கொண்டான்.

சொந்த நிலத்தில் இனி இருக்கவே முடியாதென்று வெளியேறிச் செல்லும்போது படையினராலும் போராளிகளாலும் ஒரே நேரத்தில் இருவழித் தாக்குதல்களுக்கும் இருவழி அபாயங்களுக்குள் உள்ளான சந்தர்ப்பம் நான்காம் கட்ட ஈழப்போரில் உருவாகியிருந்தது. மூன்றாம் கட்ட ஈழப்போரில் ஏறக்குறைய இது அரும்பு நிலையிலிருந்தது. ஆனால், இந்த மாதிரியில்லை. இப்பொழுது நான்காம் கட்டப்போரின்போதோ இது உச்சநிலையை எட்டியிருந்தது.

இலங்கைக்கு வெளியே யாரும் தப்பிப் போய்விடக்கூடாது என்று இலங்கைப் படைகள் கவனமாக இருந்தன. ‘தமிழீழத்தை’ விட்டு வெளியேறிச் செல்வதை அனுமதிக்க முடியாது என்று புலிகள் மிக ஜாக்கிரதையாக இருந்தனர். ஒரு சாரார் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதை விட்டு ஏனையவர்கள் தப்பிச் செல்வதைப் புலிகள் விரும்பவில்லை.

ஆனாலும் புலிகளின் பகுதிகளில் இருந்து படையினரின் பகுதிக்குச் சனங்கள் போய்க்கொண்டிருந்தனர். இன்னும் பலர் படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போவதற்கு முயன்று கொண்டிருந்தனர். அவ்வளவு காலமும் எதிரிகள் என்றும் நம்பவே முடியாதவர்கள் என்றும் கருதப்பட்டிருந்த படைகளிடம் துணிந்து செல்வதற்கு சனங்கள் முன்வந்திருந்தனர். சூழல் அப்படி. அந்தளவுக்கு உச்சமான போர் நடந்து கொண்டிருந்தது. ஆகவே படையினரிடம் சரணடைவதைத் தவிர தப்புவதற்கு வேறு வழிகளே இல்லை. எனவே ஏறக்குறைய இது ஒரு ஏகமனநிலையாக எல்லோரிடமும் உருவாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் சவாலான காரியம், புலிகளின் பிடியிலிருந்து மீள்வதே.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் அங்கே யாரும் யாருக்கும் சொல்லிக் கொண்டு வெளியேறுவது குறைவு. சூழ்நிலைச் சாத்தியங்களின் குறைவும் இதற்கொரு காரணம். மற்றது, தகவல் கசிந்து விட்டால் எல்லாமே அம்போதான். செல்லும் வழியில் இயக்கத்திடம் சிக்கிக் கொள்ள வேண்டிவந்து விடும். சிக்கினால் அவ்வளவுதான். முன்னரணுக்குப் போகவேணும். அல்லது, வட்டுவாகல், போன்ற ஏதாவதொரு சிறைக்கூடத்திலோ சீர்திருத்தப்பள்ளியிலோ சமைத்துக்கொண்டிருக்க வேண்டும். சிலருக்கு விசாரணைகளின் முடிவைப் பொறுத்து தண்டைனைகளின் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆகவே, என்னதானிருந்தாலும் ரகசியத்தைக் கசியவிடாமற் பார்த்துக் கொள்வார்கள். உயிர்ப்பிரச்சினையல்லவா!

இன்னொரு சந்தர்ப்பதில் விஷ்ணு எங்களிடம் சொல்லாமல் வெளியேறியதைப்போல நாங்கள் திருவருக்கு – (மு. திருநாவுக்கரசுவுக்கு) – ச் சொல்லாமல் வெளியேறினோம். இரவு ஒன்பதே முக்கால் மணிவரையில் ஒன்றாகவே வலைஞர் மடம் கடலோரத்தில், மலநாற்றமும் வேட்டோசையுமான பின்னணில் பி.பி.ஸியைக் கேட்டுக் கொண்டிருந்த நாங்கள், பிறகு வந்த ஒரு மணி நேரத்தில் எங்களுடன் கூடவே இருந்த திருவருக்குச் சொல்லாமல் அந்த இரவு கடல்வழியே வெளியேறிச் சென்றோம்.

ஆனால், அந்தக் கணங்களின் வதையைச் சொல்லவே முடியாது. கூட இருந்து நட்பாகப் பழகியவர்கள், ஒன்றாகவே இருந்து, ஒன்றாகவே பழகி, அன்பில்தோய்ந்திருந்த உறவுகள், நட்பின் நெருக்கத்தோடிருந்தவர்களை எல்லாம் இப்படி அந்நியப்படுத்தியமாதிரி இடையில் விட்டு வெளியேறிச் செல்வதென்பது எவ்வளவு கொடுமையானது? எவ்வளவு வெட்கத்துக்குரியது? என்பதை அந்தக் கணத்தைக் கடக்க முடியாமற் திணறும்போதே புரிந்து கொள்ள முடியும். நாங்களிருந்த நிலைமை இப்படி எங்களையும் – எல்லோரையும் மாற்றியிருந்தது.

வெட்கமும் துக்கமும் கூடிய நிலை அது. அந்நியத்தன்மையும் குற்றவுணர்ச்சியும் துக்கமும் பேரிருளாக நம் மனதை அடைக்கும் கணங்கள் அவை. இனி எப்படி நாங்கள் ஒவ்வொருவரும் எதிரெதிரே முகங்களை நோக்க முடியும்? அதற்கு மனம் எழுச்சிகொள்ளுமா? ஏனிந்த அந்நியத்தனம்? எந்த விதி இப்படி எங்களைப் போட்டு வதைக்கிறது? இப்படியானதொரு நிலையைச் சந்தப்பதற்காகவா நாங்கள் போராடினோம்? அபாய வலயத்தில் இருக்கும் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் அவரவர் தப்பிச் செல்வதென்பது மிகக் கேவலமான செயலே. அதிலும் காயப்பட்டவர்கள், உறவுகளை இழந்தவர்கள் என்று உதவிகள் தேவைப்படுவோரையே கைவிட்டு வரும் கொடுமை.

யாரையும் நம்பாமல், யார் மீதும் சந்தேகத்தையே வைத்து வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு இறுதியில் இப்படியான முடிவுகள்தான் வரும் என்று எங்கோ படித்த நினைவு வந்தது.

எல்லோருடைய விடுதலைக்காக, பொது நன்மைகளுக்காகப் போராடப் புறப்பட்ட நாங்கள், அதற்காக உயிரையே கொடுப்பதற்குத் துணிந்த நாங்கள் ஒவ்வொருவரும் இப்போது மிகச் சுருங்கி அவரவர் தப்பினாற் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தோம். வெட்கத்திலும் வெட்கமான துக்கந்தரும் வாழ்க்கை இது.

கடலிற் பயணிக்கையில் அலைக்களிக்கும் எண்ணங்களைக் கடக்க முடியாமற் திணறினேன். முன்னே விரிந்திருந்த அபாயவெளியைக் கடப்பதை விடவும் அலைக்கழிக்கும் எண்ணங்களைக் கடப்பது கடினமானதாயிருந்தது.

வழி நெடுகத் திருவரைப் பற்றியும் பாலகுமாரனைப் பற்றியும் இன்னும் நெருக்கமான அத்தனை பேரைப்பற்றியும் நினைத்துக்கொண்டு கடலில் இருந்தேன். தப்பிச் செல்ல விதியற்ற அத்தனைபேரின் நிலையும் துக்கத்தைத் தந்தது. அலைகளை விடவும் மோசமாக இருந்தது மனம்.

இரவு ஒரு கள்வனைப் போல வெளியேறி மறுநாள் மதியம் கைகளை உயர்த்தியவாறு அடிமையைப் போல கரை சேர்ந்த பயணம் அது. இத்தனைக்கும் இதெல்லாம் சொந்த நிலத்திலேயே நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள். நாம் விடுதலைக்காகப் போராடிய, குருதிய சிந்திய நிலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்.

ஈழப்போராட்டம் இப்படி எத்தனை களவான பயணங்களையும் அடிமை நிலைகளையும் தந்திருக்கிறது?

இனப்பிரச்சினையினாலும் ஈழப் போராட்டத்தின் விளைவாகவும் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் களவு வழிகளில் போலி முகங்களோடும் அடிமை நிலையோடும் பயணம் செய்யும் நிலை இன்னும் முடியவேயில்லை. இப்போது போர் முடிந்த பிறகும் இந்தக் களவான வழிகளில் – ஆபத்தான நிலையில் (கப்பல்களிலும் பார வண்டிகளிலும்) ஏராளம் பயணங்கள் நடக்கின்றன. (இத்தாலி தொடக்கம் கிறிஸ்மஸ் தீவுகள் வரையில் ஈழத்தமிழர்களின் இரகசியப் பயணங்கள் தொடர்கின்றன).

இதெல்லாம் சமுத்திரத்தைப் போல நீண்ட கதைகள். சொல்லித் தீராதவை. ஆகவே, இதை விட்டு விட்டு, நாம் வன்னியில் யாரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத காலமொன்றைக் கடக்க முடியாதிருந்த கதையைப் பார்ப்போம்.

நான்காம் கட்ட ஈழப்போரில் யுத்த அரங்கு விரிந்து கொண்ட போனது. அதனுடைய வாய் பெருக்கப் பெருக்க போரிடுவதற்கான ஆட்தொகையும் அதிகமாகத் தேவைப்பட்டது. இந்த நிலையில் ‘கட்டாய ஆட்சேர்ப்பு’ என்ற புலிகளின் நிலைப்பாடு எல்லா இடங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கியிருந்தது. வெளியிடங்களில் இருந்து போராட்டத்தின் அவசியத்தைப் பற்றிக் கதைத்தார்களே தவிர, யாரும் போராட வரும் நிலை இல்லை. அதனால் வன்னியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் யாராவது ஒருவர் கட்டாயம் போராட வரவேண்டும் என்ற உத்தரவை இயக்கம் அறிவித்ததால், எல்லா வீடுகளும் கலங்கின.

அக்காவை இயக்கத்துக்கு அனுப்பப்போகிறார்களா இல்லைத் தன்னைத் தான் அனுப்பப்போகிறார்களா என்று தங்கை சந்தேகித்தாள். அம்மா தனக்குச் ‘சப்போர்ட்’ பண்ணப்போகிறாவா இல்லைத் தங்கைச்சியைப் பாதுகாக்கப் போகிறாவா என்று கலங்கினாள் அக்கா.

அண்ணா உழைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, தன்னைத்தான் போகச் சொல்லப்போகிறார்களோ என்ற ஏக்கம் தம்பிக்கு. இல்லை, தம்பி படிக்கக் கூடியவன். இடையில் படிப்பைக் குழப்பியதால், தன்னைத்தான் இயக்கத்துக்கு அனுப்பப்போகிறார்களோ என்ற ஐயம் அண்ணனுக்கு.

அத்தான் (அக்காவின் கணவர்) இயக்கத்திலிருக்கிறார். குடும்பத்தையும் விட இயக்கத்துக்கே அவர் விசுவாசமாக இருப்பாதால் நிச்சயமாக அவர் தன்னை இயக்கத்துக்குக் காட்டிக் குடுத்துவிடுவார் என்ற சந்தேகத்தில் கலங்கினான் மைத்துனன்.

அவர்களின் பிள்ளையை இயக்கம் கூட்டிக் கொண்டு போயிட்டுது. ஆகவே, நிச்சயமாகத் தங்களின் பிள்ளையைக் காட்டிக் குடுக்கப்போகிறார்கள்’ என்று அயல் வீட்டாரையே சந்தேகப்பட்டனர் அதுவரையில் இயக்கத்துக்குப் பிள்ளையை அனுப்பாத வீட்டார்.

போராட வரவில்லை என்ற காரணத்துக்காக அக்காவின் கணவரை – அத்தானை இயக்கம் கூட்டிக் கொண்டு போனபோது தம்பிக்குச்சந்தேகம் வந்தது. அவர், தான் தப்பிக் கொள்வதற்காகத் தன்னைக் காட்டிக் குடுத்து விடுவாரோ அல்லது அவரைக் காப்பாற்றுவதற்காக அக்கா காட்டிக் குடுத்துவிடுவாளோ என்று. ‘யாராவது ஒருத்தர் இயக்கத்துக்குப்போகாமல் இருக்கிறதால்தான் அக்காவின் குடும்பத்துக்குள் பிரச்சினை வந்திருக்கு’ என்று சொல்லுகின்ற அம்மா, தன்னைக் காட்டிக் குடுத்து விடுவாவோ என்று சந்தேகப்பட்டான் இளைய மகன்.

தன்னுடன் படித்தவன் இயக்கத்தில இருக்கிறான். அவனைப் பிடித்துச் சேர்த்து விட்டார்கள். ஆகவே, இப்போது அவன் எங்கேயாவது தன்னைக் கண்டால் காட்டிக்கொடுத்து விடுவானோ! என்ற ஐயம் இன்னொருவனுக்கு வந்தது.

சந்தேகிக்கும் இடங்கள் இப்படிப் பல வந்தன. இப்படியே யாரும் யாரையும் நம்பவே முடியாத நிலை.

பாசம், உறவு, நட்பு போன்ற பிணைப்புகளில் எல்லாம் சந்தேகத்தின் வெடிப்புகள் தாராளமாகவே ஏற்பட்டன.

சில குடும்பங்களில் பெற்றோரின் மீது சந்தேகம் வந்தது பிள்ளைகளுக்கு. தங்களில் யாரைப் போகச் சொல்லப்போகிறார்கள் என்று பிள்ளைகள் குழம்பினார்கள். எந்தப் பிள்ளையை அனுப்பலாம் என்று முடிவெடுக்கவே முடியாத குழப்பமும் கலக்கமும் பெற்றோருக்கு. யாரையும் அனுப்பவில்லை என்றால் அந்தக் குடும்பத்தைக் கலக்கித் தும்பெடுத்துவிடும் அளவுக்குப் பிரச்சினைகளிருக்கும். ஆகவே யாரையாவது அனுப்பத்தான் வேணும்.

ஆனால், போகமறுக்கும் பிள்ளைகளை யாராற்தான் கட்டாயப்படுத்தி அனுப்ப முடியும்? அதுவும் பெற்றவயிறுகளால் அது முடியுமா? அதையும் கடந்து போர்க்களத்துக்கு அனுப்பி, அங்கே ஏதாவது நடக்கக் கூடாதவை (சாவு) நடந்து விட்டால் அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? பின்னர், அது பெருங்குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களுடைய நிம்மதியைக் கெடுத்துவிடும். அப்படி அனுப்பிப் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர் இன்னும் துக்கத்தைக் கடக்க முடியாமல் தங்களுக்குள் உக்கிக் கொண்டேயிருந்தார்கள்.

இதேவேளை கிடைக்கின்ற வழிகளால் எப்படியோ சிலர் தப்பிச் சென்று கொண்டும் இருந்தனர். அல்லது அவர்கள் எப்படியோ ஒரு வழியைக் கண்டு பிடித்து அதன்வழியே சென்றனர். சுழியன்கள், விச்சுழியன்கள் எல்லோருக்கும் விதியும் வழியும் வேறுதான் போலும். ஆனால், இதெல்லாம் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான். இந்த நிலையில் தப்பிச் செல்ல முயற்சிப்பவர்கள் யாருக்காவது சொல்லிக்கொண்டு போவார்களா?

இதனால், எல்லாமே இரகசியமாகவே நடந்தன. இரகசியங்களைக் காப்பாற்றுவதிலேயே பேர் பெற்ற இயக்கத்துக்குப் பாடம் சொல்லிக்குடுக்கக் கூடியவர்களும் இருந்தார்கள். மட்டுமல்ல, இந்த மாதிரிக் கேஸ்கள் சில இயக்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையில் தண்ணியைக் காட்டிக் கொண்டுமிருந்தார்கள்.

புத்திசாலித்தனமாக இரண்டு தரப்பையும் வேவுபார்த்தார்கள். ரகசிய வழிகளால் ஆட்களைக் கூட்டிச் சென்று அனுப்பும் தொழிலைக் கூடச் செய்தார்கள்.

ஆனால், இதில் யாரையும் நம்பவே முடியாது. சிலர் உண்மையாகவே தப்பிச் செல்ல உதவினார்கள். சிலர் தப்பிச் செல்வதைப் போலத் தோற்றம் காட்டி இயக்கத்திடம் தப்பிச் செல்வோரை மாட்டி வைத்தனர்.

காட்டு வழிப் பயணத்துக்கு ஒரு தொகை. காட்டு வழியாற் தப்பிச் செல்வதற்காகக் கூட்டிச் செல்ல ஒரு தொகை. இதற்கு வழிகாட்டுவதற்கு ஒரு தொகை. வழி காட்டியை ஏற்பாடு செய்ய ஒரு தொகை.

காட்டுவழி அடைபட்ட பின்னர், இரகசியக் கடற் பயணங்களுக்கு என்று ஒரு தொகை. ஓட்டிக்கு ஒரு தொகை. படகுக்கு இன்னொரு தொகை. சிலர் படகை வாங்கியே தங்களின் பிள்ளைகளை அனுப்பியதுமுண்டு.

தலையா தொகையா பெரிது என்ற ஒரு நிலை வந்தது? தலையைப் பாதுகாக்க வேண்டும் என்றால் தொகையைப் பற்றிக் கவலைப்பட முடியுமா என்ன? இதற்காகவே புலம்பெயர் நாடுகளில் இருந்து காசை அனுப்பிக் கொண்டே இருந்தனர் உடன்பிறப்புகளும் உறவினரும். (பிறகு, இவர்களே இயக்கம் தோற்கக் கூடாது என்று போராட்டங்களையும் நடத்தினார்கள் என்பதெல்லாம் வேறு கதைகள்).

ஆகவே இந்த மாதிரி அது அதற்கென்று ஏற்பாட்டார்கள். ஒழுங்கு படுத்துகிறவர்கள். வேவு பார்க்கிறவர்கள். துறைக்குக் கொண்டு சென்று விடுகிறவர்கள்ஸ இப்பிடித் தொடர் வட்டம் ஒன்று இயங்கிக் கொண்டேயிருந்தது. இதில் படையினரிடம் சிக்குகிறவர்கள் பூஸாவுக்கோ களுத்துறைக்கோ வெலிக்கடைக்கோ நாலாம் மாடிக்கோ அனுப்பப்பட்டனர். புலிகளிடம் சிக்குகிறவர்கள் வட்டுவாகல், ‘காந்தி’யின் வள்ளிபுனம், விசுவமடுச் சிறைக் கூடங்களுக்கு என அனுப்பப்பட்டனர்.

இதேவேளை இயக்கமே தன்னை மறைத்துக் கொண்டு, பொதுமக்களைப் போல இரகசிய வழிகளால் ஆட்களைக் கொண்டு போய் விடலாம் என்று சொல்லி ஆட்களையும் பிடித்துக் காசையும் கறந்ததும் உண்டு.

‘கடல் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுபோய் விடலாம்’ என்று சொல்வார்கள்.

‘கடற்புலிகளுக்குக் காசைக் கட்டித்தான் போகிறது, ஆகவே பயப்பட வேண்டாம்’ என்று உறுதியளிப்பார்கள்.

‘கடற்புலிகளில் தெரிந்த ஒருபோராளி இருக்கிறான், அவனுடன் கதைச்சிருக்கிறம். அவன் நாங்கள் போகிற நேரத்துக்குத் தங்களுடைய கண்காணிப்பை வேறு பக்கத்துக்குக் கொண்டு போயிடுவான்’ என்ற கதையையும் விட்டுக் படகில் ஏற்றிக் கடலில் வைத்துப் பிடிக்கிறமாதிரி ஒரு ‘சீனை’ விடுகிறதும் உண்டு.

இப்படிச் செய்யும்போது எந்தெந்த ‘றூட்’களால் என்னென்ன காரியங்கள் எல்லாம் நடக்கின்றன என்று இயக்கத்துக்குத் தெரிந்து கொள்ளும். அதேவேளை தொகைகளும் கிடைத்து விடும்.

ஆகவே, ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்ற நிலையிலேயே எல்லோரும் இருந்தனர்.

இப்படித்தான் ஒரு தடவை என்னிடம் வந்த யோ.கர்ணன் கேட்டார், ‘வெளியில போறதுக்கு ஒரு வழி சரிவரும்போல இருக்கு. உங்கட மகனைப் பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறீங்கள்?’ என்று.

அது கடல்வழியாகத் தமிழகத்துக்குப் போவதைப் பற்றியது. அந்த வழியே பயணிப்பதற்கு ஒரு ஏற்பாடு சரிவரும்போல அவருக்குத் தெரிந்தது. எனவே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டு வந்திருந்தார். ஏனென்றால் எங்களின் வீட்டிலிருந்த நிலவரத்தை நன்றாகக் கர்ணன் அறிந்திருந்தார். அதைப்போல அவரும் அந்தப் பயணத்தில் வெளியேறுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார்.

அப்போது எங்களின் வீடே போர்க்களமாக இருந்தது. வயதுக்கு வந்த பிள்ளைகளிருந்த எல்லா வீடுகளும் ஒன்றில், போர்க்களமாக இருந்தன. அல்லது கண்ணீர்க்கடலில் மூழ்கின. எங்கள் மகனோ, தான் ‘இயக்கத்துக்குப் போவதில்லை – போருக்குப் போவதில்லை’ என்ற தீர்மானத்தில் உறுதியாகவே இருந்தான். ஆனால், அவன் ‘இயக்கத்தில் சேரத்தான் வேணும்’ என்ற அழுத்தம் உச்சமாக இருந்தது. நெருக்குவாரங்கள் அதிகரித்தன. எப்படி அவனை இணைக்கலாம் என்று பலவாறாக இயக்கத்திலிருந்த பலரும் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அது முடியாத போது எப்பிடிப் பிடிக்கலாம் என்று யோசித்தார்கள்.

இந்த நிலையில் முன்னர் தமிழகத்துக்குச் செல்வதற்குக் கிடைத்திருந்த ஒரு சந்தர்ப்பத்தை இழந்ததைச் சொல்லி அவன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். இப்படியிருக்கும்போதே கர்ணன் வந்திருந்தார். கர்ணனின் யோசனை அந்தச் சூழலில் மிக வாய்ப்பானதே. ஆனால், அதேயளவுக்கு ஆபத்தானதும் கூட. மிகப் பயங்கரமான முதலைகள் நிரம்பிய இரண்டு வாய்களுக்குள்ளால் தப்பிச் செல்லவேண்டிய நிலையிலான பயணம்.

நான் கர்ணனிடம் துருவித்துருவி பயணத்தின் விவரங்களைக் கேட்டேன். அவர் எல்லாவற்றையும் என்னிடம் சொல்ல முடியுமா? ஆனாலும் முடிந்தவரையில் அதைப் பற்றிச் சொன்னார். இவ்வளவுக்கும் நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள். இறுதியில் நான் அவருக்கு எந்த முடிவும் சொல்லவில்லை. எந்தத் தெளிவான பதிலும் சொல்லவில்லை. அதை அவரும் புரிந்திருக்கக் கூடும்.

உண்மையைச் சொன்னால் அப்பொழுது என்னால் கர்ணனிலும் முழுதாக நம்பிக்கை கொள்ள முடியவில்லை. கர்ணனைச் சந்தேகித்தேன். அவ்வளவு நட்பாக இருந்த ஒருவனைச் சந்தேகித்தேன். ‘அயலானில் நம்பிக்கை வை. அயலானை நேசி’ என்று சொல்லிய கிறிஸ்துவை யாருமே கணக்கிலெடுக்க முடியாத காலம் அது. கடவுளேஸ! எப்படியான நிலை அது? என்ன கொடுமை அது?

பிறகு கர்ணனும் வெளியேறவில்லை. அவரால் அது முடியாமற் போய்விட்டது. எங்களுடன் தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை, மாத்தளன், வலைஞர்மடம் என்று இடம்பெயர்ந்து வந்து கொண்டேயிருந்தார்.

வலைஞர் மடத்திலும் வெளியேறுவதற்கான வழிகள் தேடப்பட்டுக்கொண்டேயிருந்தன.

முன்னர்கூட இப்படியெல்லாம் இருந்த ஒரு சூழலிற்தான் த. அகிலன் வன்னியை விட்டு வெளியேறிச் சென்றார். ஒரு மதியம் எங்கள் வீட்டுக்கு வந்த அகிலன் தான் அன்றிரவு இந்தியாவுக்குப் போகப் போகிறேன் என்றார். விரும்பினால் உங்கட மகனை அனுப்புங்கோ என்றார். ஆனால், அவர் போகும் வழியைப் பற்றி நாம் முழுவதுமாகக் கேட்கவில்லை. அப்படிக் கேட்பது பொருத்தமானதும் இல்லை. அப்படிக் கேட்டு விசாரித்த பின்னர், அந்த வழியில் ஏதாவது நடந்தால் அவர்கள் பிறகு நம்மைப்பற்றியும் பலவிதமாகச் சிந்திக்கக் கூடும். என்னதான் நண்பர்களாக இருந்தாலும் எல்லாவற்றையும் சொல்ல முடியாமலும் எதையும் நம்பமுடியாமலம் இருக்கும் சூழல் அல்லவா அது.

ஆனால், பிள்ளையை அனுப்புவதானால் வழியைக் கேட்காமல், அதனுடைய உத்தரவாதங்களைப் பற்றி யோசிக்காமல் எந்தத் தீர்மானங்களையும் எடுக்க முடியாது. அன்றும் நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவேயில்லை. அகிலனும் ஒரு எல்லைக்கு மேல் தன்னுடைய பயணத்தைப் பற்றி அதிகம் சொல்லவில்லை.

பிறகறிந்தேன். அந்தப் பயணத்தில் போராளியொருவரும் வேறு சிலரும் கூட வெளியேறியிருந்ததை.

அந்தப் பயணங்கள் எல்லாம் வன்னியின் நிலைமைகளில் நம்பிக்கையின்மைகளின் அடையாளங்களைக் காட்டிய குறிகள். பிறகு எத்தனையோ போராளிகள் சனங்களோடு இப்படி வெளியேறினார்கள். நாங்கள் தப்பிச் சென்ற பயணத்திலும் அப்படி நிறையப் போராளிகள் இருந்தனர். அவர்கள் எங்களோடும் வந்தனர். கடலில் வைத்தே எங்களை வரவேற்றனர். அதாவது, எங்களுக்கு முன்னரே தங்கள் குடும்பங்களோடு வெளியேறிக் கடலில், கடற்படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம் இறுதியில் – இறுதியிலும் இறுதியில் போராட்டத்தைப் பற்றி வந்த சந்தேகமே.

Sunday, March 4, 2012

கருணாகரனின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் - அ. யேசுராசா


கருணாகரனின் இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் இதுவரை வெளியாகியுள்ளன. “நெருக்கடி மிக்க நம் காலத்தில் - அலைக்கழிந்துகொண்டிருக்கும் என்வாழ்வில் எழுதப்பட்ட கவிதைகளின் ஒரு தொகுதி” என அவர் குறிப்பிட்ட ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் 1999இல் வெளிவந்தது.

“இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை போர் உக்கிரம் பெற்றிருந்த சூழலில், வெளியுலகத்திலிருந்து பலவகையிலும் துண்டிக்கப்பட்டிருந்த ஒரு பிரதேசத்திலிருந்து எழுதப்பட்டவை” என அவர்கூறும் கவிதைகளைக் கொண்ட இரண்டாவது தொகுப்பான ஒரு

பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் 2003இலும் வெளிவந்துள்ளது. இவர், நவீன இலக்கியப் படைப்புக்களினதும் சிறுசஞ்சிகைகளினதும் தீவிர வாசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது ; எண்பதுகளின் நடுக்கூற்றிலிருந்து கவிதைகள் எழுதிவருகிறார்.

அரசியலுக்கு முதன்மை கொடுத்து - கலை இலக்கியப் படைப்புக்களை உருவாக்கும் போக்கு வலுவுடையதாக, இலங்கையில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. கருணாகரனின் கவிதைகளிலும் போர்ச்சூழல், இராணுவ நடவடிக்கையினால் கைவிடப்பட்ட முக்கிய வீதி, அழிக்கப்பட்ட கிராமங்கள், படையினர் மட்டுமுள்ள ஊர், விமானக் குண்டுவீச்சின் கோரம், விமானங்களைச் சுட்டு வீழ்த்துதல், அகதி வாழ்க்கை, மீள்குடியேறிகளின் கதை, சமாதானம், அரசியல் பேச்சுவார்த்தை என்ற பெயரிலான கடந்தகால - நிகழ்காலச் செயற்பாடுகளின்போது காணப்பட்ட ஃ காணப்படும் கபடம், மாறாத அவலச் சூழல், தொடர் ஷெல் வீச்சின்போது ஓயும் பொழுதிற்குக் காத்திருக்கும் தவிப்புநிலை என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால், கருணாகரனின் படைப்பு நோக்கு ‘குறுகியதாக’ இல்லாததால், இவரது படைப்புலகினுள் காதல், பிரிவுத்துயர், நிலக்காட்சி, கடலும் மழையும், பூக்களும் வண்ணத்துப்பூச்சியும், நட்பின் துரோகம், முதுமை போன்றவையும் உணர்திறனுடன் உள்வாங்கப்பட்டுள்ளன.

படிமம், உவமை, உருவகம் என்பன கவிதையில் கட்டாயம் கையாளப்படவேண்டுமென்றோ, ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டு முறைதான் இருக்கவேண்டுமென்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்த பரிமாணங்களைக் கொண்டிருக்கவேண்டுமென்றோ வலியுறுத்துவது தேவையில்லை என நினைக்கிறேன்.

கவிஞனின் அனுபவ உணர்வு தன்னியல்பாக வெளிப்பட்டு, ‘முழுமை’யானதாக வாசக மனதில் தொற்றவைக்கப்படுவதே முக்கியம். அதிக எண்ணிக்கையில் கருணாகரன் எழுதியுள்ள கவிதைகளில் இந்த அம்சங்கள் பரவிக்கிடக்கின்றன. வேறுபட்ட பொருட்புலப்பாட்டிற்கு ஏற்ப ‘முழுமைகூடிய கவிதைகளின்’ வரிகள் அமைந்துள்ளதைக் காணலாம்.


‘சாவு’ இவ்வாறு கூறப்படுகிறது :

“எனது ஊரில் எனது தெருக்களில்
கருநிழல் படர்ந்த முகத்துடன்
எங்கும் மோதி மோதி அலைகிறது.

பச்சைநிற வாகனங்களின் உறுமலில்
அது சிரிக்கிறது.
அந்த வாகனங்களில் அது வருகிறது
வெறிப் பாடலுடன்
அந்நிய மொழியின் கூச்சலுடன்.”


அழிமதி புரிந்து மக்களை அவலங்களிற்குள்ளாக்கிய ‘போர் விமானங்கள்’ சுடப்பட்டதைச் சொல்லும் வரிகள் :

“கெந்திக் கெந்தி நானோடும் போதெனது
உயிர் தேடித் தேடிவந்த பாவத்தின் கூடுகள்
இன்று அழியுண்டு போவதைப் பார்த்தேன்
அஸ்திரங்கள் ஏவிய தேவகுமாரரின்
வெற்றியின் கரம்பற்றி
உரத்துப் பாடினேன்
நன்றியின் உதிரம் கலந்து
என்குரல் திசைகளில் பரவியது.”


காதலரின் தவறான புரிதலையும், பிரிவின் அவலத்தையும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்

“என் மனம் நஞ்சூறிப் போயிற்றென்றும் தேம்பி அழுதாய் ;
நான் மறுத்தேன்.
உன் மனப்பழத்தைப் பேய் தின்று
போயிற்றென்று தவித்தேன்.

... இனி வண்ணத்துப் பூச்சிகளை
ஞாபகங் கொள்வதெங்ஙனம்?
ஒரு பூக்குஞ்சாக இருந்த உன்முகமும்
தலையின் பின்புறம்
ஒளிவட்டம் சுழலுதென்று நீசொன்ன என்முகமும்
நம் கால்களில் மிதிபட்டுச் செத்தன.”


‘காட்சி’ என்ற அற்புதமான கவிதையின் வரிகள் கருணாகரனின் சித்திரிப்புத்திறனிற்கு வலுவான சாட்சியாக அமைந்துள்ளன :

“கடலைப் பிளந்து ஊடுருவித் தெறிக்கும்
ஒளியில்
தடுமாறி வீழ்கிறது ஒரு பறவை.
சிறகுகளின் நிழல்
நடுங்கும் அலைகளில் பிரதிபலித்துத் துடித்தழிகிறது.

... கடல் பேரின்பத்தில் திளைக்கிறது
அது காற்றின் மடியில் அசைந்தாடுகிறது
கடலில் வீழ்ந்த பறவை
ஒளியைக் கவ்வி
ஒளியிலேறிப் பறக்கிறது மீண்டும்.”


கருணாகரனின் கவிதைகளிலுள்ள பலவீனங்களை இனிப்பார்ப்போம்.

1. தெளிவில்லாத கவிதைகள் : ‘சூழலின் மறுதலிப்பு’

‘உள்முகத் தீ’
‘காற்று அறியும் உண்மை’
‘காலப்பெயர்வு’ போன்றவை.

2. ‘பூக்குங் காலம்’ என்ற கவிதை, சு.வு. டெம்ஸ்ரர் எழுதி, சோ. ப. மொழிபெயர்த்துள்ள
‘நீயும் நானும்’ என்ற கவிதையின் பிரதியாக உள்ளது. பல கவிதைகள் ஏனோ சுந்தர
ராமசாமியின் கவிதைகளை ஞாபகப்படுத்துகின்றன. ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’
என்ற தொகுப்புப்பெயர், சு. ரா. வின், ‘ஒரு நிலவுக்குக் காத்திருத்தல்’ கவிதைத்
தலைப்பை ஞாபகப்படுத்துகின்றமாதிரி!

3. முழுமைகூடாத கவிதைகள் பலவற்றில்,

பறிக்கப்பட்ட
எனது வீடு எனக்கு வேண்டும்
அந்த வீட்டையும் தோட்டத்தையும்
நான் பெறவேண்டும்
உணவு
உடை
உறையுள் என்பவற்றுடன்
பாதுகாப்பும் மிக மிக அவசியமாகிவிட்டது.”


என்பது போன்ற கவித்துவமற்ற வெறும் கூற்றுக்களும்,

“பௌர்ணமிநாளை
அரசு
புனிதநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது
அதனால் பள்ளி அலுவலகம் அனைத்துக்கும் விடுதலை”


என்பதான வெறும் வசன வரிகளும், வெற்று விபரணங்களும் காணப்படுகின்றன.

4. ‘அழகு’ என்ற கவிதையிலுள்ள,

“மரணத்தின் முத்தம் என் கனவு
அதன் ஸ்பரிசம் என் காதல்”


என்ற இறுதி வரிகள் ‘போலி உணர்வு’ கொண்டதாக உள்ளன.

இவ்வாறே, ‘மரணத்தின் ருசி’ என்ற கவிதையிலும் உள்ளது. ஆரம்பத்தில் ஆட்டுக்குட்டி மீதான கவிஞனின் ‘அனுதாபம்’ வெளிப்படுகிறது. ஆனால் இறுதியில் வரும்,

“... மடிகிறது அது
ருசிக்கிறது நமக்கு”


என்ற வரிகள் கவிஞனின் முந்திய அனுதாபத்தைப் போலியானதாக்கி விடுகின்றன!

5. ‘பகுதிகளாக’வுள்ள குறைபாடுகளினால் பல கவிதைகள் ‘முழுமைகூடாதவையாக’ உள்ளன ; செப்பனிடுதல் நிகழாமையும் காரணமாகலாம். உதாரணமாக, ‘விழியோடிருத்தல்’ என்ற நீண்ட கவிதை சமகால விடயங்களைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது ; ஆனால், அதிலுள்ள சில பகுதிகள் அதன் ‘முழுமை’யைச் சிதைக்கின்றன. அவை செப்பனிடப்பட்டால், இக்கவிதை மிகுந்த முக்கியத்துவங்கொண்டதாக மாறும் என நம்பலாம்!

தொகையளவில் அதிகமான தனிக்கவிதைகளைக் கருணாகரன் எழுதியுள்ளார்.

நெகிழ்ச்சியானமுறையில் அவர் கையாண்டுள்ள பல்வகையான கருப்பொருள்களும், அவற்றை வெளிப்படுத்தும் முறைகளும், மொழிப் பிரயோகமும் அவருக்குத் தனித்துவத்தை அளிக்கின்றன. இரண்டாவது தொகுதியில் மேலும் ‘புதிதான தன்மை’யினை உணரமுடிகிறது; ஆயினும், பல கவிதைகள் ‘முழுமைப்படுத்தலுக்கான’ செப்பனிடுதலைக் கோரி நிற்கின்றன.


இவை எல்லாவற்றுடனும் கருணாகரன் முக்கிய கவனிப்புக்குரிய கவிஞர் என்பதில் ஐயமில்லை!

00

தூண்டி - இதழ் யாழ்ப்பாணத்தில் 2004 இல் நடத்திய கவிதைகளைப் பற்றிய ஆயிவரங்கில் வாசிப்பட்ட கட்டுரையிலிருந்து - நன்றி் - நூலகம்.