Friday, June 29, 2007

கருணாகரன் கவிதைகள்

-----------------------------
எழுதியவர்: கருணாகரன்
-----------------------------
01.

பறவைக்காதல்


பறவையின் சிறகில் காத்திருக்கிறது
பயணமும்
பயணவெளியும்
பறவையின் உயிரும் அழகும்
பறவையின் அடையாளமும்

அதன் சிறகில் நிகழ்கிறது
பயணமும் பயணவெளியும்
காற்றின் துணையும்

வெளியிலும் காற்றிலும்
தன்னை நிகழ்த்தும்
பறவை
அடைகிறது
தன் புள்ளியை
எனினும்
அது
தன் பயணத்தின் சுவடுகளை
விட்டுச்செல்லவுமில்லை
எடுத்துச்செல்லவுமில்லை

காற்றையும் சிறகையும்
இணைக்கும் நுட்பத்தைகற்ற பறவை
சொல்லித்தருமா
எனக்கும்
தன் வாழ்தலின் நுட்பங்களை
காற்றில்
தன்னை நிகழ்த்தும் நுட்பத்தினூடாக
அது
கட்டுகிறது தன்
பயணக்கூட்டைசிறகிலேயே

அதன்
பயணமும் இளைப்பாறலும்
நிகழ்கின்றன
அதனதன்
தருணங்களில்

கூடவே
பயணிக்கும்போது
இளைப்பாறலும்
இளைப்பாறலின் போது
பயணமும்.
____________________________

No comments: