Friday, June 29, 2012

கவிதைகள் நான்கு




தொலைந்த பின்னும் இருத்தல்















அவர்கள் எங்கோ சென்றனர்
என்னவாகவோ ஆயினர்

சென்றபின்னும்
செல்லமுடியா நிழல் உறைந்துளது
இம் மண்ணடுக்கில்
அடுக்கடுக்காக
இரத்தச் சூட்டுடன்
ஆழத்தே.

ஒரு பெரும் மயான வெளி

எரிந்தழிந்த உடல்கள்
துப்பாக்கிகளால் எரிக்கப்பட்ட துப்பாக்கிகள்
எல்லாம் அவ்வெளியின் கோரமாகி
சாட்சியாகி
அவ்வெளியின் நினைவாகின

ஓலங்களின் படிகை
காயாத குருதியின் மணம்
அவ்வெளியின் அடியில்
ஆழ் மையம் வரையில்
நீரூற்று வரையில்
சென்றிறங்கி
ஆயிற்றொரு வரலாற்றுப் படுகை.

வரலாறென்பது அகாலமாயிற்று
வாழ்வென்பது ஓலமாயிற்று

செல்ல முடியாப் பயணத்துக்காக
அவர்கள் எல்லாச் சவாரிகளையும் நடத்தினர்
எல்லாச் சவாரிகளுக்காகவும் சவுக்குகளைச் சொடுக்கினர்
சவுக்குகளின் அத்தனை சொடுக்கும்
அழியவில்லைக் காற்றில்

போகாத பயணங்கள் காலடியில்
விசைகுன்றாச் சவுக்குகளின் சொடுக்குதல்கள்

ஒவ்வொரு சொடுக்குக்கும்
ஓராயிரம் ஓலக்குரல்

பலி கொள்ளப்பட்ட இதயத்துக்கு
அளிக்கப்பட்ட பரிசு
அவமானமும் கண்ணீரும்.

00

எதுவரை?














இனி எல்லாம் ஒழுங்காயிற்று
என்றபோது
அவனருகில் விழுந்தது பிணம்
உருண்டது தலை
தெறித்தது குருதி

அச்சத்தில் உறைந்தன மறுபடியும்
நம் இதயமும்
நீ பரிசளித்த நாட்களும்
நீ கொண்டாடிய கொடிகளும்

போடா நாயே
வாழ்வெமக்கு அபாயங்களின் மீதான வெடிகுண்டென்று
எழுப்பட்டது மீண்டும்

நான் இப்போதும் காண்கிறேன்
அசையும்
துப்பாக்கிகளின் நிழலை

சதாமும் இல்லை பிரபாகரனும் இல்லை
என்றபோதும்
இருக்கின்றன துப்பாக்கிகள்
அவரவர் நிழலைத் தொடர்ந்தபடியாக
யார் யாரிடமெல்லாமோ

00

பழிகளைச் சேர்த்தவர்கள்















தப்பிச் செல்ல முடியா வரலாறு
காயங்களுடன் படுத்திருக்கிறது
காலடியில்

எல்லாப் பழிகளும் சேர்ந்து
ஓராயுதமாகியது
எல்லாவற்றையும் தின்னும் பேரவாவுடன்.


பழிகளைச் சேர்த்தவர்களின்
காலம்
பழிக்கப்பட்ட பின்னும்
உள்ளே அழுகிய மரத்தில்
ஆடுகின்றன கூடுகள் என்கிறார் சிலர்
தொலைவில்

இனியுமொரு புயலைத் தாங்கும் வலிமையைத் தா
என்று எந்தத் தேவதையை
யார் யாசிப்பது?

இன்னும் மீதமிருக்கிறதா என்ன
பச்சை உடலின் மீது
இரத்தத் தினவோடு வாளைப் பாய்ச்சும் பேராசை?

ஆயின்
வந்தருள்க
காயங்களுடன் படுத்திருக்கும் வரலாற்றைத் துயிலெழுப்பி
வழிநடத்த

இந்த இரவு நான் சற்றுக் கண்ணாற வேண்டும்
ஒரு குளிர்காலத்தை நினைக்கின்றாள்
தீப்பட்ட காயங்களின் குழந்தை.

00

மீண்டும் மஞ்சள் பூக்கள்














மீண்டும் மஞ்சள் பூக்கள் பூக்கின்றன
இந்தத் தெருவோரங்களில்
ஆவரசு கொன்றை திருநொச்சி என்றாயிரம் பூக்கள்

பூக்களைக் கண்டறிய முடியாக் காலத்தை நீங்கி
மறுபடியும்
தெருவுக்கு வந்தேன்
தெருவில்
பெருக்கெடுத்தோடும் நினைவுப் பேராறு

முன்பு
துயர்ப் பொதியோடு வீடு நீங்கி, ஊர்நீங்கி,
அச்சிறு கடலோரம் செல்கையில்
பிள்ளைத் துயர்
பெருக்கெடுத்தோடிப் பேராறாகியது.

வழிநெடுகப் பொறியோடும்
பொறிகொண்ட நெஞ்சொடும் அடுக்கடுக்காய்
‘நம்நண்பர்’ முகம் மாறி நிற்கையில்
பூக்கள் உலர்ந்து வாடின
பொறியிலும் வலையிலும் சிக்கிய தெருவில்
மிஞ்சிய
ஒரு பிள்ளையும் பிள்ளை முகத்தோடு வரவில்லை

பேரரசன் தன் வாளினை
அத்தெருவில் நிறுத்தி வைத்திருந்தான்

அச்சத்தின் நிழல்
எல்லாவற்றையும் மௌனக் கிடங்கினுள் தள்ளியது
எல்லாத் திசைகளும் அடைபட்டிருந்தன அப்போது

ஒரு வழிதேடி
ஒரு விதி தேடிச் சனங்கள் அலைய
எதிரே
எல்லா விதியிலும் எல்லா வழியிலும்
நிறுத்தப்பட்டிருந்தன பேரரசனின் வாள்கள்

ஆனாலும்
அச்சத்தின் நிழலைக் கடந்து சென்றனர் சிலர்

அந்த மௌனக் கிடங்கே
பின்னர் மாபெரும் சவக்குழியாகவும்
பெருஞ்சிறையாகவும் மாறிப்
பேரரசனின் பரிவாரங்களைக் கொள்ளையிட்டது

மீண்டும் மஞ்சள் பூக்கள் பூக்கின்றன
தெருவோரங்களில்
ஆவரசு... கொன்றை.... திருநொச்சி....

00

Thursday, June 28, 2012

வாசலற்ற வாழ்க்கை





-
(01)

‘எல்லாப் பக்கமும் வாசலுள்ள கூடு’ என்றொரு கவிதையைச் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தேன். சுதந்திரத்தின் எல்லையற்ற தன்மையைப் பிரதிபலிக்கும் எண்ணம் அது. ஆனால், பிறகு இதற்கு எதிர்மாறாக, எந்தப் பக்கமும் வாசலே இல்லாத வாழ்க்கையொன்றை வாழ்ந்து கடக்க வேண்டியிருந்தது. அது யுத்தகால வாழ்க்கை. மூடுண்ட ஒரு உலகத்தில் மூச்சைப்பொத்திக் கொண்டு, சாவின் அருகில், அதன் நெடி உயிரை வாட்டியெடுக்க வாட்டியெடுக்க, சாகமுடியாமலும் வாழ முடியாமலும் இருப்பதே அந்த வாழ்க்கை.

யுத்தத்திற்குப் பிறகு – புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு - இப்பொழுதும் இன்னொரு வகையில், வாசல்கள் அடைக்கப்பட்டதொரு நிலையே தமிழ்ச்சூழலிலும் இலங்கை அரசியலிலும் தொடந்து கொண்டிருக்கிறது. இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல, இன்று ஈழத்தமிழ்ச் சூழலிலும் அதற்கப்பால், முழு இலங்கையிலும் அதற்குமப்பால் புலம்பெயர் சூழலிலும் பலருக்கும் இருப்பதை அவதானிக்கலாம். 

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற நிலை.

ஆகவே, என். நடேசன் எழுதியிருப்பதைப் போல ‘நீரின் ஆழத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து வாழ்வது போன்ற ஒரு நிலை’தான் மாற்றாளர்களுடையது@ ஜனநாயகவாதிகளினுடையது@ பன்மைத்துவச் சிந்தனையாளர்களுடையது. ஒத்தோடிகளுக்கு இதில் அதிகமாகப் பிரச்சினைகளில்லை. மறுத்தோடிகளுக்கே கடினமான பாதைகளை வழங்குகிறது வரலாறு. 

எனவே, மாற்றுக் கருத்தாளர்கள், பன்மைத்துவ அடிப்படையிற் சிந்திப்பவர்கள் நிச்சயமாக நீரின் ஆழத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் வாழவேண்டும். தமிழ்ச் சூழலின் யதார்த்தமும் இதுதான். அதன் அவலமும் இதுதான். 

இல்லையென்றால், ஒற்றைப் படையான சிந்தனையாளர்களிடம் அல்லது ஏகத்துவ மனப்பாங்காளர்களிடமிருந்து எதிர்ப்பையும் நிராகரிப்பையும் வசைபாடுதல்களையும் துரோகி, மாற்றான் என்ற மாதிரியான குறிசுடுதல்களையும் தாராளமாகவே எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேணும். இதற்கப்பால் உயிராபத்துகள் வரையில் ஏராளம் அபாயங்களும் உண்டு. அல்லது மௌனம்.  இதெல்லாம் யதார்த்தம். சுத்தமான நடைமுறை. 

இதைத் தவிர, இன்னொரு வகையிலும் மாற்றுச் சிந்தனைப் போக்கையும் பன்மைத்துவ அடிப்படைகளையும் ஒடுக்கும் பொறிமுறையையும் தமிழ்ச் சமூகம் மிக நுட்பமாகத் தன்னுள்ளே வைத்திருக்கிறது. 

நடேசனே சொல்வதைப்போல, ‘நீங்கள் ஏன் ஊரோடு ஒத்து வாழக்கூடாது? பிள்ளைகள், குடும்பம் என உங்களின் பாட்டுக்கு இருந்தால் பிரச்சினை இல்லையே!’ ‘உங்களின் மரணச் சடங்குக்குக்கூட அதிகமானவர்கள் வரமாட்டார்கள்’ என்றெல்லாம் அறிவுரையாக, எச்சரிக்கையாக, நட்புடன் எடுத்துரைப்பதாகக் கூறுவதன்மூலம் ஒருவகை உத்தியைக் கையாண்டு, மாற்றுக் கருத்தாளர்களையும் ஜனநாயகவாதிகளையும் தளர்வடையச் செய்து விடுகிறார்கள் பலரும். இத்தகைய அணுகுமுறை தமிழ்ச்சமூகத்தின் பலமானதோர் அடிப்படையாக உள்ளது.

‘ஊரோடு சேர்ந்து ஓடு, ஒருவனாக ஓடுகில் கேட்டு ஓடு’ என்று ஊர் வழக்கில் சொல்வதும்கூட ஏறக்குறைய இந்த அர்த்தத்தில்தான். 

மேலும் அபிப்பிராயங்களையே பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை இன்னொரு விதமாக, மிக நுட்பமாக தமிழ்ச் சமூகம் வடிவமைத்து வைத்திருக்கிறது. 

‘அவர் ஒரு சோலிக்கும் போகமாட்டார்’. 

‘அவர் கதைச்சால் வெளியேசத்தமே கேட்காது’. 

‘அந்த ஆள் மிதிச்ச இடத்துப் புல்லே சாகாது (அவ்வளவு மென்மையானவர்)’ என்றவகையில் ஒருவரைப் பற்றி முன்னோட்டமாகத் தானாகவே ஒரு இயல்பைப் புனைந்து அந்த இயல்பினுள் அவரைக் கட்டுப்படுத்தி விடும் உத்தி இது. 

இதற்கு உறவு, அன்பு, பந்தம், பாசம் போன்ற கயிறுகளையெல்லாம் மிக லாவகமாகவே பயன்படுத்துகிறது தமிழ்ச் சமூகம். இந்தக் கயிறுகளைப் பயன்படுத்திச் சம்மந்தப்பட்டவரைக் கட்டிவைத்துவிடுகிறது அது. 

பொதுவெளியில் நியாயமாகச் செயற்படுவோருக்கு உண்மையில் இது ஒரு தீவிரமான நெருக்குவாரமே. பொதுச் செயற்பாட்டுப் பரப்பிலிருந்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முடக்கி விடும் நோக்கம் கொண்ட செயலாக இது இருப்பதால், சமூகத்தின் விரிவை மேலும் விஸ்தரிப்பதற்குப் பதிலாக அதை ஒடுக்கி விடுகிறது. 

இந்த மாதிரியான நுட்பத்தின் அடியில் சுயபாதுகாப்புணர்வொன்றிருப்பது  உண்மைதான். ‘எதற்காக நமக்கு வீண்சோலியெல்லாம்’ என்றமாதிரி பிரச்சினைகளில் இருந்து விடுபட்டிருத்தல் அல்லது அவற்றிலிருந்து தள்ளியிருத்தல் இதனால் ஏற்படுத்தப்படுகிறது. 

ஆனால், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை அவ்வாறிருக்க அனுமதிப்பதில்லை’. பொதுமையத்தைக் கொண்ட எந்தப் பிரச்சினையும் யாரையும் விலகியிருப்பதற்கு அனுமதிப்பதில்லை. அதையும் கடந்து இவ்வாறு சுயபாதுகாப்புணர்வினால் தற்காத்துக்கொள்ள முனையும் இந்த மனிதர்கள், தங்களின் பொது அபிப்பிராயத்தை வேறு விதமாகவே கட்டமைத்து வைத்துள்ளனர். இதுதான் எரிச்சலூட்டுவது. சகித்துக்கொள்ள முடியாதது. 

மத நம்பிக்கைகளை அடியொற்றுவதைப் போல, சில அரசியல் நம்பிக்கைகளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட கோட்பாட்டுச் சட்டகத்தினுள், விதிமுறைச் சதுரத்தினுள் தங்களை அடைத்துக்கொண்டு அல்லது அதற்குள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு, அதற்குள் ஏனையவர்களையும் இழுத்து வைத்துக்கொள்ள முயலும் கட்டமைப்பு இவர்களுடையது. 

குறுந்தேசியவாதச் சிந்தனைகளில் இந்த நிலையைத் தாரளமாகக் காணமுடியும். மேலும் இனவாதமாகிலும் சரி, மதவாதமாகினும் சரி, பிரதேசவாதமாகிலும் சரி இதுதான் யதார்த்தம்@ இதுதான் நிலைமை. 

இத்தகைய நிலைப்பாட்டைக் கொள்வோரிற் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். மத ஒழுக்கங்களை விதிமுறைப்படி பின்பற்றுவோராக இருக்கின்றனர். படித்தவர்களாகவும் கல்விப் பீடங்களில் உயர்பதவி வகிப்பவர்களாகவும் உள்ளனர். கலைஞர்களாகவும் இலக்கியப்படிப்பாளிகளாகவும் படைப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். 

ஆனால், இவர்களுக்குத் தெரிவதில்லை, தங்களின் சிந்தனையும் நம்பிக்கையும் நிலைப்பாடுகளும் மற்றவர்களை நிராகரிக்கின்றன என்பதை. அது பிறரைப் பலவழிகளிலும் நிந்திக்கிறது@ மற்றவர்களின் இடத்தை மறுக்கிறது. ஏகத்துவச் சிந்தனையை வளர்க்குமிடத்தில் ஜனநாயத்தின் இடம் சுருங்கிப் பலவீனமடைகிறது என்பதையெல்லாம். 

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் இத்தகைய ஒரு நிலை ஜேர்மனியில் ஹிட்லரையும் அவருடைய நாஜிகளின் நடவடிக்கைகளையும் ஆதரித்தோரிடம் இருந்துள்ளது. ஹிட்லரின் தலைமையில் நாஜிகள் மனித உலகம் அதிர்ச்சியடையும் விதமாக யூதப் படுகொலைகளை நடத்தினர். இந்தக் கொலைகளை - மனித நாகரீகத்துக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமான காரியங்களை ஆதரிக்கும் மனநிலை எப்படி அங்கிருந்த மக்களிடம் உருவாகியது என்பதை ‘பாவ மௌனம்’ என்ற கட்டுரையொன்றில் ஜெயமோகன் விளக்குகிறார். 

‘சாதாரண மக்கள் எப்படி இந்தக் கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்தப் படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?’

‘நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்லச் சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வு கூடங்களில் பரிசோதனை மிருகங்களாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்’ என அவர் மேலும் கேள்விகளை எழுப்பிச் செல்கிறார். 

இந்தக் கட்டுரை இலங்கையின் அரசியல் மற்றும் இலங்கையில் நிலவுகின்ற இனவாதச் சூழலையும் அந்த இனவாதத்துக்குப் பின்னால் தமிழ் சிங்களச் சமூகங்கள் அணிதிரண்டிருப்பதற்கான உளவியற்காரணங்களையும் அறிந்து கொள்ள உதவுகின்றது. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் தனியே விரிவாகப்  பார்க்கலாம். 

ஆகவே, இத்தகைய ஒடுங்கிய, ஒற்றைப்படையான சிந்தனையை ஆதரிக்கும் பெரும்போக்கின் காரணமாக ஜனநாயத்தின் இடம் சுருங்குகிறது. அப்படி அது சுருங்கும்பொழுது அந்த இடத்தில் அபாயவெளி விரிகிறது. அப்படி விரிந்து கொள்ளும் அபாயவெளியானது, ஒரு கட்டத்தில் எல்லோரையும் பலிகொண்டே விடும். உலகத்தின் பேரழிவுகள் அனைத்தும் இத்தகைய போக்கின் காரணமாகவே நிகழ்கின்றன. (இதைக் குறித்தும் பின்னர் சற்று விரிவாகப் பார்க்கலாம்). 

எனவே முன்னர் குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளும் பொதுவெளிப்பரப்பில், மாற்றாளர்களாக இருப்போரையும் ஜனநாயகவாதிகளையும் அமுக்கிக் குரல்வளையை நசிக்கின்றன. பன்மைத்துவச் சிந்தனையாளர்களை ஒடுக்கிச் சிதைக்க முயற்சிக்கின்றன. அல்லது சமூகத்திலிருந்து இவர்களைத் தனிமைப்படுத்திவிட எத்தனிக்கின்றன. 

இந்த நிலையிலேயே மாற்றாளர்கள் ‘வாசலற்றதொரு வாழ்க்கை’யை வாழவேண்டியுள்ளது. ‘வாசலற்ற வாழ்க்கை’ மிகக் கடினமானது. சினமும் வலிகளும் நிரம்பியது. மூடுண்டது. அந்த வாழ்க்கையில் எதையும் செய்ய முடியாது. எதையும் சொல்ல முடியாது. எதையும் சிந்திக்க முடியாது. எதைப் பற்றியும் கதைக்க – உரையாட – விவாதிக்க – சிந்திக்க முடியாது. கதைத்தால் அல்லது எதையாவது செய்தால் அல்லது எதையாவது செய்வதற்கு முயன்றால், அது தற்கொலைக்குச் சமம். 

இப்படியிருக்கும் ஒரு சமூகத்தில் எதுவுமே உருப்படாது. உருப்படாத சமூகங்களைத் தன்னுடைய உள்ளடக்கத்திற் கொண்ட நாடு எப்படியிருக்கும் என்று இங்கே அதிகம் விளக்கத்தேவையில்லை.

இந்த இடத்தில் நாம் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக்குறித்த நமது கேள்விகளையும் எழுப்பவேண்டும். 

‘வாசலற்ற வாழ்க்கை’யை வாழ நிர்ப்பந்திக்கக் கோரும் ஒரு சமூகத்தின் பண்பாடு எவ்வாறு சிறப்பாக இருக்க முடியும்? மிகத் தொன்மையான பண்பாட்டுச் சிறப்பையும் பெருமைகளையும் தமிழ்ப் பண்பாடு தன்னகத்திலே கொண்டிருக்கிறது என்று சொன்னால், அல்லது அவ்வாறான கருத்தினை நாம் ஏற்றுக்கொள்வதாயின், அது எவ்வாறு ஜனநாயகத்துக்கும் சுயவிமர்சனத்துக்கும் மாற்றுச் சிந்தனைக்கும் பன்மைத்துவத்துக்கும் இடமளிக்கும் மரபைக்கொண்டிருக்கவில்லை? 

இவை அடிப்படையான கேள்விகள். 

சிந்தனை முறைமையிலும் செயற்படு முறைமைகளிலும் வாசலைத்திறப்பது ஒரு வகை. வாசல்களை மூடுவது இன்னொரு வகை. 

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. புதிய விரிவுகளை நோக்கி நகர்வது. சுதந்திரத்தின் எல்லைகளை மேலும் விரிவாக்குவது. வாழ்வின் புதிய சாத்தியங்களை மேலும் கண்டடைவது போன்றவை வாசல்களைத் திறப்பதற்கான அடிப்படைகள். 

பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்குவது@ அவற்றை சிக்கலாக்குவது. மேலும் பிரச்சினைகளை உருவாக்குவது. பிரச்சினைகள் ஆட்களையே விழுங்கும் அல்லது பலியிடும் நிலைக்கு அவற்றை வளர்ப்பது. பிரச்சினைகளாலேயே சிறைப்பிடிக்கப்படுவது. இந்த மாதிரியான விசயங்கள் எல்லாம் இருக்கின்ற  வசால்களையும் அடைத்து விடும் இயல்பைப் பிரதான போக்காகக் கொள்வன. இவை வாசல்களை மூடுவன. 

இலங்கைச் சமூகங்களைப் பொறுத்தவரையில், பெரும்பாலானவர்களின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் வாசல்களை மூடும் முறைமையே நடைமுறையிலுள்ளது. இதுவே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஊடகங்களிலிருந்து நாடாளுமன்றம் வரையில் இந்தக் குணாம்சப் போக்கிலேயே இயங்குகின்றன. இதில் தமிழ், சிங்களச் சமூகங்கள் என்ற வேறுபாடுகள் அதிகமில்லை. அதிலும் தமிழ்ச் சமூகத்தில் இந்த நிலை பல படிகள் உச்சம். 

அது மிக ஒடுங்கிய பரப்பில் தன்னுடைய பயணப்பாதையைத் தனிவழியாகவே வைத்துள்ளது. எனவே அதனால், பல தளங்களிலும் பயணிக்க முடியாதிருக்கிறது. ஆகவே அதற்கு ‘வாசலற்ற வாழ்க்கை’யே விதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த இடத்தில் இந்த வாசலற்ற வாழ்க்கை என்பது இரண்டு கிளைகளில் இரண்டு தன்மையில் இயங்குகிறது. 

ஒன்று, மாற்றாளர்கள், பன்மைத்துவச் சிந்தனையாளர்கள், ஜனநாயகவாதிகளின் மீது நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுவதால் உருவாகின்ற வாசலற்ற வாழ்க்கை.

இவர்களே கொல்லப்படுகிறார்கள். அல்லது கடத்தப்படுகிறார்கள்@ காணாமற்போகிறார்கள்@ அல்லது நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். சொந்த இடத்தில் இவர்களுக்கான இடம் மறுக்கப்படுகிறது. பெர்து வெளியிலும் இவர்கள் இயங்குவதற்கான வெளி அச்சுறுத்தப்படுகிறது. அல்லது அந்த வெளியில் இவர்கள் இயங்க முடியாதவாறு இவர்களின் மீதான வசைகளும் குற்றச் சாட்டுகளும் பரப்பப்படுகின்றன. 

இப்போது இதற்கு மிக உச்சவலுவைச் சேர்ப்பனமாக இருப்பவை இணையத்தளங்கள். இந்த இணையச் செயற்பாட்டினை - இவர்களின் இணைய வெளியை – ‘வசை வெளி’ என அடையாளப்படுத்துகிறார் நிலாந்தன். 

மற்றையது, பொதுப் பரப்பைத் தங்களின் நம்பிக்கைகளாலும் வழமைகளாலும் நிரப்பும் தரப்பினர் இறுதியில் பெறுகின்ற முடக்கத்தின் வழியான வாசலற்ற வாழ்க்கை. 

இரண்டாவது வாழ்க்கைக்கு உதாரணமாக நாம் முள்ளிவாய்க்காலில் தோல்விகண்ட அரசியலைக் கொள்ள முடியும். அல்லது இன்னமும் வெற்றியடைய முடியாதிருக்கும் இனப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தும் தமிழ் மிதவாதத்தைக் குறிப்பிடலாம். 

முதல்வாழ்க்கை நிச்சயமாக வாசல்களைத் திறக்கும் வாழ்க்கை. ஆனால், அந்த வாசற்திறப்புக்குச் சமூகநிலையில் ஏற்படுகின்ற எதிர்ப்புகளும் பதற்றங்களும் இந்தத் தளத்திற் செயற்படுவோரின் வாசல்களை மூடிவிடுகின்றன. அல்லது மூடிவிட முயல்கின்றன. 

ஆகவே, பொதுவாக ‘வாசலற்ற வாழ்க்கை’ என்பதே தமிழ்ச் சூழலிற்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதியை அது தனக்குத் தானே விதித்திருக்கிறது. இந்த விதியின்படி ‘வாசலற்ற வாழ்க்கை’யாக இருக்கும் நிலையானது மூடப்பட்ட உலகத்தில் வாழ்வதற்கு ஒப்பானது. இது தற்கொலைக்கொப்பானது மட்டுமல்ல அது ஒருவகைத் தண்டனையும் கூடவே. 

ஏறக்குறைய இத்தகையதொரு தற்கொலைச் சூழல்தான் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் சோக்கிரட்டீஸ_க்கு ஏற்பட்டது. அன்றிருந்த சூழலில் பிரதான நம்பிக்கையாகக் கொள்ளப்பட்ட ஒன்றிற்கு அல்லது பெரும்பான்மையோரின் நம்பிக்கையாக இருந்தவற்றிற்கு மாறாகச் சிந்தித்ததே சோக்கிரட்டீஸைச் சாவு அரங்கிற்குக் கொண்டு போனது@ அவரை மயானத்தில் நிறுத்தியது. 

கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்ததும் ஏறக்குறைய இத்தகைய ஒரு சூழல்தான். இன்னும் வரலாறு நெடுகவும் இத்தகைய சிலுவைப் பரிசளிப்புகளும் சாவரங்குகளின் திறப்பும் இத்தகைய ஒரு நிலையிற்தான் நிகழ்கின்றன. 

இத்தகைய தற்கொலைக்கான – அல்லது கொலைக்கான நெருக்கடிகள் சிந்தனையையும் புதிய செயற்பாட்டு ஊக்கத்தையும் மட்டுப்படுத்தி ஒடுக்கி விடுகின்றன. இவை ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமே. இன்னொரு கூறே.

புதிய சிந்தனைகளையும் மாற்றுச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பாத கடினப்போக்கே இதற்குக் காரணம். இது அதிகாரத்தை விட்டுக்கொடுக்காத, மற்றவர்களுக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத, ஜனநாயகத்தை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளாத ஏகமனதின் நிலைப்பாடாகும். 

ஆனால், ஒரு சமூகத்திலும் மனித இயல்பிலும் புதிய சிந்தனைகளும் மாற்று அபிப்பிராயங்களும் இருந்தே தீரும்@ அவை ஏற்பட்டே தீரும். ஜனநாயகம் வளர்ச்சியடையுந்தோறும் மாற்றுச் சிந்தனைகளுக்கான இடமும் பெறுமதியும் அதிகரித்தே செல்லும். 

முக்கியமாக மீள்பார்வைகளும் விமர்சனங்களும் சுயவிமர்சனங்களும் அப்போது தாராளமாக – எந்தக் கூச்சமுமின்றி, எத்தகைய அச்சமுமில்லாமல் முன்வைக்கப்படும். அச்சமூட்டும் எத்தகைய கனத்த திரைகளையும் சுவர்களையும் ஜனநாயகம் உடைத்து விடும். இங்கேதான் புதிய சிந்தனைகள் வீச்சுடன் மேற்கிளம்புகின்றன. 

எத்தகைய நிராகரிப்பையும் புறக்கணிப்பையும் கொலைப்படுத்தல்களையும் கடந்தே வரலாற்றுச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. அது எல்லா நிர்ப்பந்தங்களின் மத்தியிலும் உண்மையைக் கண்டடைந்து விடுகிறது. தான் கண்டடைந்த உண்மையைச் சார்ந்தும் அறத்தைச் சார்ந்துமே அது நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவேதான் எல்லா வன்முறைகளும் தோல்வியில் முடிவடைகின்றன. எல்லா அதிகாரங்களும் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன. 

சோக்கிரட்டிஸின் உடலையும் விட, கிறிஸ்துவின் உடலையும் விட அவர்கள் வலியுறுத்திய உண்மைக்கே வலிமை அதிகம். புதைக்கப்பட முடியாதிருப்பதும் அதுவே. 

இதையெல்லாம் விளங்கிக் கொள்வதற்கு ஏராளம் உதாரணங்கள் வரலாறு நெடுகலும் உண்டு. இன்று ஈழத்தமிழர்கள் இருக்கின்ற நிலையும் இதற்கு மிகச் சிறப்பான உதாரணம். இதற்கெல்லாம் இலகுவிற் திறக்கக்கூடிய – திறக்க வேண்டிய – ‘மூன்றாவது கண்’ என்று கிட்டும்?

00


Friday, June 22, 2012

தனித்து விடப்பட்டோம்





00 நேர்காணல் - 


விடுதலைப் புலிகள் அமைப்புப் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பில் இருந்த பல உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். அவ்வாறு சரணடைந்தவர்களில் பதினோராயிரத்துக்கும் அதிகமானவர்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், சரணடைந்த இன்னும் ஒரு தொகுதியினரைப் பற்றிய தகவல்களே இல்லை. 


இவர்களில் சிலர் சித்திரவதையின் பின்னர் கொல்லபட்டனர் என்பதற்கான ஆதரங்களை சனல் 4, லங்கா கார்டியன் போன்ற ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. மிஞ்சியோரைப் பற்றிய தகவல்களே இல்லை. இதில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் எனப் பலர் சேர்த்தி.


ஆனால், எவரைப்பற்றிய தகவல்களுமே இல்லை. பொதுமக்களின் முன்னிலையில் - பட்டப்பகலில் சரணடைந்தவர்கள் இப்போது எங்கே? என்று தெரியாத நிலையில் அவர்களுடைய உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று படைத்தரப்பும் அரசாங்கமும் சொல்கின்றன.


இந்த நிலையில், இவர்களைத் தேடிக் கொண்டேயிருக்கின்றனர் இவர்களுடைய உறவினர்கள். அவர்களில் ஒருவரை வன்னியில் சந்தித்தோம்.


இவருடைய கணவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் செயற்பட்டவர். ஒரு மூத்த போராளி. இவருடைய மனைவியும் ஒரு போராளியே. இரண்டு பிள்ளைகள். ஆனால், இவர்களுடைய இரண்டாவது பிள்ளை சற்றுச் சுகவீனமான நிலையில் இருந்ததால், ஒருவர் பிள்ளையைப் பராமரிப்பதற்காக வீட்டிலிருந்தார். இதற்கான அனுமதியை இயக்கம் வழங்கியிருந்தது.


இறுதிப் போர்வரை இதுதான் நிலைமை. ஆனால், போரின் இறுதிக்கட்டத்தில், எல்லோரையும் போல இவர்களும் படையினரிடம் சரணடைந்திருந்தனர். ஓமந்தை வரை நான்கு பேருமாக இணைந்தே படையினரால் கொண்டு வரப்பட்ட இவர்களில் குறிப்பிடப்பட்ட போராளியை விசாரணைக்கு என்ற அழைத்துச் சென்றபின்னர் எந்தத் தகவலுமே இதுவரையில் இல்லை.


இதுதொடர்பாகவும் தற்போதைய நிலையில் இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் வாழ்வைத்தொடர்வதைப் பற்றியும் எங்களுடன் உரையாடினார்.

00

ன்னுடைய பெயர் தமிழ்விழி. 1989 இல் இந்திய இராணுவம் இருக்கும்போது இயக்கத்தில் இணைந்தேன். நான் இணையும்போது பத்தொன்பது வயது. ஏ. எல் (கல்விப் பொதுத்தராதரம் - உயர்தரம்) படித்துக்கொண்டிருந்தேன். அண்டைக்கு எங்களின் பள்ளிக்கூடத்தில் இருந்து என்னோட சேர்ந்து நான்குபேர் இயக்கத்தில் இணைந்தார்கள்.

நாங்கள் உள்ளுர்ப்பயிற்சி எடுத்தோம். காட்டிலதான் பயிற்சி. பிறகு காட்டிலேயே முகாம். அங்கேயே இயக்கத்தின் வேலைத்திட்டங்கள். இயக்கத்தின் வேலைத்திட்டம் என்றால், 1990 க்குப் பிறகு மாதிரி ஊருக்குள்ள நாங்கள் மக்களுக்கு நேரில நின்று செய்த வேலைத்திட்டங்களைப் போல இல்லை. காட்டில அப்ப நிலைமை வேறு.

அங்கே பயிற்சி. சண்டைக்கு எப்பவும் தயாரான நிலை. ஏனென்றால், இந்திய இராணுவம் இருந்தாற் போல காட்டுக்குப் படையெடுத்து வரும். அதால எப்பவும் உஷார் நிலையிலேயே எல்லோரும் இருக்க வேணும்.

அடுத்தது, மருத்துவம் படிச்சம். இயக்கத்தின் வரலாறு. பயிற்சி நடைமுறைகள் என்று அந்தச் சூழலுக்குத் தேவையானவைகளையும் அங்கே படிக்கக் கூடியவைகளையும் பழகக் கூடியவைகளையும் கற்றுக் கொண்டோம்.

மிகக்குறைவான அளவிலேயே பெண்போராளிகள் இருந்தார்கள். ஆனால், காட்டுவாழ்க்கையும் அங்கே நாங்கள் இருந்த காலமும் மறக்கவே முடியாதவை.

என்னைப் பொறுத்தவரையில், இயக்க வாழ்க்கையில் அதுவொரு மறக்கவே முடியாத காலகட்டம்.

பொதுவாகவே எங்கட சமூகத்தில் பெண்கள் காடுகளில் வாழ்கிறதில்லை. என்னதான் வன்னி போன்ற காடுகளை அண்டிய பிரதேசங்களில் வாழ்ந்தாலும் பெண்ணுக்குக் காடு புதிதே. ஆண்களைப் போலப் பெண்கள் காடுகளில் திரிவதும் இல்லை. காடுகளை அறிவதும் இல்லை.
நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். அதாவது எங்களின் அம்மா, அப்பா எல்லாம் யாழ்ப்பாணத்தவை. ஆனால், நான் பிறந்து வளர்ந்தது வன்னியில். வன்னியிலும் நான் படித்ததும் வாழ்ந்ததும் ஒரு சிறிய நகரத்தில். இதனால், காடு என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது. என்றாலும் காடுகளுக்குப் போய் வருகிற ஆக்களைத் தெரியும். அவர்கள் வேட்டைக்குப் போய்வாறதைப் பற்றைத் தெரியும். தேனெடுத்துக் கொண்டு வாறதைப் பற்றித் தெரியும். காட்டுக்குத் தடி வெட்டப் போறதைப் பற்றி, மரங்கள் வெட்டப்போறதைப் பற்றியெல்லாம் தெரியும். அதாவது, இதுகளைப் பற்றி வந்து கதைப்பார்கள். சிலவேளை எங்களின் வீட்டிலிருந்தும் அண்ணாவோ, அப்பாவோ காட்டுக்குப் போவார்கள். எங்கட மாமா ஒருத்தர் இருந்தார். அவருக்குக் காடும் வீடும் ஒரே மாதிரித்தான். காட்டிலிருந்தே அவர் உழைத்தார்.

சிலர் வயலில் உழைப்பார்கள். சிலர் தோட்டங்களில் இருந்து உழைப்பார்கள். சிலர் கடலுக்குப் போய் உழைப்பார்கள். சிலபேர் உத்தியோகம் பார்த்து உழைப்பார்கள். ஆனால், எங்கட அந்த மாமா தன்னுடைய சிறிய வயதிலிருந்தே காட்டிலிருந்தே உழைக்கத்தொடங்கி விட்டார்.

அவருக்கு வேட்டை நல்லாப் போகும். அதைப்போல காட்டுத்தடி வெட்டுவார். பிறகு மரம் தறித்து விற்றிருக்கிறார். ஆனால், வன இலாகவின் அனுமதியைப் பெற்றுத்தான் தறிப்பார். இப்பிடியே இருந்ததால் அவருக்குக் காடுகள் எல்லாமே நல்ல பாடம். அதனால், எங்களுக்கும் காடுகளைப் பற்றிய தகவல்கள் எப்பவும் கிடைச்சுக் கொண்டேயிருக்கும்.

நான் பதினைந்து வயதில் ராமாயணத்தை வாசிக்கும்போது மாமா சொல்கிற காடுகளைப் பற்றிய கதைகளை வைத்து என்னுடைய மனதில் அந்தக் காட்சிகளை நினைத்துக் கொள்வேன். சீதைக்குக் காடு புதிய அனுபவமாக இருந்திருக்கும் என்பது, பிறகு நாங்கள் உண்மையிலேயே காட்டுக்குப் போனபோதுதான் தெரிந்தது. காட்டில் இருக்கும்போது ராமாயணத்தில் படித்த காட்டுக்காட்சிகள் அப்படியே மனதில் படமாக விரியும்.

காடுகள் எப்போதும் இனியவையே. காட்டில் என்னதான் இல்லை. அமைதி இருக்கிறது. அதேவேளை இனிய இசையும் அங்கேதான் இருக்கும். இருளும் அங்கே உண்டு. ஒளியும் ஒளியின் வினோதங்களும் அங்கேதான். விலங்குகள்... மான்குட்டிகள், முயல்கள், உடும்புகள், மர அணில், யானைக்கூட்டம், பன்றிக்கூட்டங்கள்... இப்படிக் காட்டில் ஏராளம் விசயங்கள்.

பழங்கள்... காட்டில் எந்தக் காலத்திலும் பழங்கள் இருக்கும். ஒரு சீசனுக்குக் கரும்பைப் பழங்கள் என்றால், இன்னொரு சீசனுக்கு நாவற்பழங்கள். அடுத்த சீசனுக்கு நறுவிலிப் பழங்கள் என்றால், இன்னொரு சீசனுக்கு முரலிப் பழங்கள். இப்படியே எப்பவும் பழங்களுக்குக் குறைவில்லை. அத்தனையும் இயற்கையான பழங்கள். நாங்கள் கடைகளில் காசைக் கொடுத்து வாங்குகிற பழங்களில் இயற்கைத் தன்மைகள் வரவரக்குறைந்து கொண்டே போகிறது. லாபத்துக்காப் பயிரிடும்போதே இரசாயனக் கலவைகளைக் கலக்கிறார்கள்.
காட்டுப் பழங்களில் ஆரோக்கியத்துக்குக் குறைவேயில்லை. அதனால்தான் அந்தப் பழங்களைச் சாப்பிடுகின்ற பறவைகளும் ஆராக்கியமாகவே இருக்கின்றன.

மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் வளர்க்கிற விலங்குகளுக்கும் நோய் வருகிறது. ஏனென்றால் தங்களைப் போலவே அவர்கள் தாங்கள் வளர்க்கிற விலங்குகளுக்கும் தீனைத் தெரிவு செய்கிறார்கள்.

காட்டில் இருக்கும்போது நாங்கள் போராளிகளாக இருந்தால், எப்பவும் ஒரு திகிலும் மெல்லிய பயமும் இருக்கும். பிறகு பிறகு காடும் பழகி, சண்டையும் பழகிய பின்னர், அங்கே இருப்பதே சந்தோசமாகத்தான் இருந்தது. எங்களைப் பலதுறைகளிலும் ஆண்போராளிகள் வளர்த்தெடுத்தார்கள். தலைவர் எங்களில் கூடிய அக்கறை எடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்திருந்தார். அதுவும் அந்த நெருக்கடியான நிலையிலும்.

இந்திய இராணுவம் வெளியேறினாற்பிறகு, ஊருக்கு வந்தம். முதலில் முல்லைத்தீவில் இரண்டு வாரம் நிற்க வேண்டி வந்தது. அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்குப் போனோம்.

யாழ்ப்பாண இடப்பெயர்வு வரையில் அங்கேயே இருந்தேன். ஆனால், யாழ்ப்பாணத்துச் சூழல் முற்றிலும் வேறானது. அங்கே ஒரு வித்தியாசமான வாழ்க்கையைப் பார்த்தேன். அந்த மக்கள் அமைதியானவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று லேசில் கண்டுபிடித்து விட முடியாது. ஆனால், எப்பவும் அவர்கள் தங்களுடைய தீர்மானங்களில் உறுதியாக நிற்பார்கள்.
ம்...

இதையெல்லாம் நினைத்தால் இப்ப நித்திரையே கெட்டுப் போயிடும்.

அதற்குப் பிறகு, அதாவது யாழ்ப்பாணத்தில் நீங்கள் என்ன துறையில் - அல்லது என்ன பணியில் இருந்தீர்கள்?

யாழ்ப்பாணத்தில் அரசியல் வேலைகளை ஆரம்பத்தில் செய்தேன். பின்னர் மருத்துவத்துறைக்கு மாற்றப்பட்டேன். அது ஒரு கொஞ்சக் காலம்தான். அதற்குப் பிறகு புலனாய்வுத்துறைக்குப் போய் அங்கேயே நீண்டகாலம் இருந்தேன். அதிலும் நிர்வாகப் பிரிவிலிலேயே அதிக காலம் வேலை செய்தேன். புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டபோதே யாழ்ப்பாண இடப்பெயர்வும் வந்தது. அதோடு நாங்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தோம். பிறகு வன்னியில்தான் இறுதிப்போர் வரையில் இருந்தோம்.

உங்களின் திருமணத்தைப் பற்றி...

எங்களின் திருமணம் இயக்கத்தின் நடைமுறைப்படியே நடந்தது. நாங்கள் விரும்பத்தொடங்கியபோதே இயக்கத்துக்கு அறிக்கை கொடுத்தோம். அறிக்கை என்பது எங்களின் காதலை இயக்குத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தெரியப்படுத்துவதாகும். அதற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் (இரண்டு வருசத்துக்குப் பிறகு) இயக்கம் திருமணத்துக்கான ஏற்பாட்டைச் செய்தது. என்னுடைய வீட்டாருக்கு (அப்பா, அம்மாவைக்கு என்னுடைய திருமணத்தில் - நான் விரும்பியவரில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை. ஆனால், அக்காவும் அத்தானும் முழுமையான ஆதரவு). அப்படித் திருமண ஏற்பாட்டைச் செய்து கொண்டிருக்கும்போதே – நாள் குறித்ததற்குப் பிறகு, ஜெயசிக்குறுச் சண்டை அமர்க்களமாகீட்டுது. அதனால், கொஞ்ச நாளைக்கு எல்லாத் திருமணங்களையும் இயக்கம் ஒத்தி வைச்சது.

பிறகு, சண்டை சற்று ஓய்த ஒரு சந்தர்ப்பத்தில் எங்களின் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் போராளிகள் என்பதால், எங்களுடைய பிள்ளையைப் பராமரிப்பதற்காக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ‘தளிர்’ என்ற பராமரிப்பு நிலையத்தில் விட்டுவிட்டு எங்களின் பணிகளுக்குச் செல்வோம். பின்னர் மாலையில் நான் பிள்ளையைப் போய் வீட்டுக்குக் கொண்டு வருவேன்.

இரண்டாவது பிள்ளை கொஞ்சம் வருத்தக்காரப் பிள்ளை எண்டபடியால், நான் வீட்டிலேயே நிற்கவேண்டியிருந்தது. இதற்கான காரணங்களைச் சரியாக அறிந்து கொண்டதால், நான் வீட்டில் நிற்கக்கூடியதாக இருந்தது. ஆனாலும் நான் என்னால் முடிந்த பணிகளைச் செய்து கொண்டேயிருந்தேன்.

கணவர் சிலவேளை தினமும் வீட்டுக்கு வருவார். சிலவேளை மாதக்கணக்காக வரமாட்டார். அது அவருடைய வேலைகளைப் பொறுத்தது. எனக்கு அவரின் நிலைமை விளங்கும். அவரைப் போல நானும் முன்னர் ஒரு காலம் இரவு பகல், காடு மேடு என்று வேறுபாடில்லாமல் ஓயாமல் இயக்கப்பணியைச் செய்தவள் அல்லவா.

அதைவிட, இயக்கத்தைப் பொறுத்தவரை, அதனுடைய தேவைகள் ஏராளம். எப்பவும் எங்களுக்கு மூன்று முக்கியமான விசயங்கள் இருந்தன. ஒன்று எப்பவும் எதிரிக்கு எதிராக அவதானமாக இருக்கவேணும். அதோட எதிரிக்கு எதிராக, எதிரியை விட வேகமாக இயங்க வேணும். அடுத்தது, மக்களைக் காப்பாற்றும் பணிகள். மக்களுக்கான சேவைகள். மூண்டாவது, இயக்கத்தைப் பாதுகாப்பது, அதை மேலும் மேலும் வளர்த்தெடுப்பது.

இந்த அடிப்படையில்தான் நாங்கள் செயற்பட்டு வந்தோம். இந்த மூன்று பணிகளும் ஒரு முக்கோணத்தின் பாகங்களைப் போல ஒன்றுக்கு ஒன்று நிகரானவை.

ஆகையால், கணவரின் வேலைகளைப்பற்றியும் அதனுடைய தேவைகளைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும்.

சரி, அப்படியென்றால், இறுதிப்போரின்போது உங்களுடைய கணவரின் பணிகள் எப்படி இருந்தன? நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

2002 இல் சமாதானப் பேச்சுகள் வந்த பின்னர் சில போராளிக் குடும்பங்கள் வெளிமாவட்டங்களுக்குப் போய்வந்தனர். என்னுடைய கணவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆனால், நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகவில்லை. பிள்ளைகள் மட்டும் போய்வந்தனர். அப்பா, அம்மாவும் என்னுடைய கணவரின் பண்பைப் பார்த்து, அவருடைய செயற்பாடுகளைப் பார்த்துப் பிறகு நல்ல ஒற்றுமையாக வந்தார்கள்.

அதனால், அவையள் எங்களோடயே கொஞ்சக்காலம் வந்திருக்க விரும்பிச்சினம். இதுதான் கஸ்ரகாலம் என்று சொல்கிறது. அவையள் வந்து நிற்கும்போதே சண்டை மீண்டும் தொடங்கீட்டுது. இந்தத் தடவை இது இறுதிப் போராகவே இருக்கும் என்று இயக்கம் சொன்னது.

அதனால், சண்டை நிச்சயமாக உக்கிரமாகவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருசம் வரையில், மன்னார்ப்பக்கத்திலேயே சண்டை நடந்தது. அப்ப நிலைமை அவ்வளவு நெருக்கடியாக இருக்கேல்லை.

ஆனாலும் எல்லாத்துறைப் போராளிகளும் போர்தொடர்பான நடவடிக்கைகளில் குறைந்த அளவுக்கேனும் ஈடுபட்டுக்கொண்டுதானிருந்தனர்.

பிறகுதான் நிலைமை இறுகத் தொடங்கியது. 2008 ஐப்பசியில் போர் கிளிநொச்சிக்குக் கிட்டவாக வரத்தொடங்கியபோது எல்லாமே மாறத் தொடங்கியது. அம்மாவும் அப்பாவும் எங்களோட இருந்தது அப்ப ஒரு வகையில ஆறுதல். ஆனால், மற்றவகையில், அவையளும் தேவையில்லாமல் எங்களோட இருந்து கஸ்ரப்பட வேண்டியிருக்கே எண்ட கவலை. நான் அவர்களைப் போகச் சொன்னேன். நாளைக்கு மற்றச் சகோதரங்கள் எங்களைத்தான் குறை சொல்லுவினம். அப்பா, அம்மாவை வன்னியில் மறித்தபடியாற்தான் அவர்களுக்கு ஏதோ நடந்தது, அவர்கள் தேவையில்லாமற் கஸ்ரப்படுகினம் எண்டு சொல்வார்கள்.

இதையெல்லாம் யோசித்துவிட்டு நானும் கணவருமாக ஒரு முடிவுக்கு வந்தம். எப்படியும் ஏதாவது சொல்லி அவர்களைத் தயார்ப்படுத்தி, இயக்கத்திடம் அனுமதியை எடுத்து அவர்களை வெளியே அனுப்புவது என்று. வெளியே என்றால், வன்னிக்கு வெளியே. அறுபது வயதுக்கு மேல் வயதுக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, குடும்பத்தில் ஒருவருக்குப் (பாஸ்) அனுமதி கொடுக்கிற முறைமை இயக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகவே, அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு நாங்கள் இரண்டு பேருக்குமே அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தீர்மானித்தோம்.

ஆனால், எங்களுடைய தீர்மானத்தை அம்மாவோ அப்பாவோ ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஒரேயடியாக எங்கள் தீர்மானத்தை மறுத்து விட்டார்கள். என்ன நடந்தாலும் அவர்கள் எங்களை விட்டுப் போவதில்லை என்று சொல்லி விட்டார்கள். பெத்த பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் விட்டுவிட்டுத் தாங்கள் போகப் போவதில்லை என்று அம்மா சொல்லி விட்டா. அப்பாவுக்கு தன்னுடைய மருமகனை விட்டிட்டுப் போகப் பிரியமில்லை.

ஆகவே அவர்களையும் கொண்டு நாங்கள் இடம்பெயரத் தொடங்கினம். இடம்பெயர்வு என்றால், பிறகு சொல்லவா வேணும். யுத்தம் நடக்கிற நாட்டில இடம்பெயர்வு என்பது சாதாரணம். ஆனால், இந்தத் தடவை சனங்கள் இடம்பெயரப் பெயர யுத்தம் அவர்களை நோக்கித் துரத்திக் கொண்டு வந்தது. அதுவும் 2009 ஜனவரிக்குப் பிறகு அதைப் பற்றிச் சொல்ல முடியாத அளவுக்கு அது வேற மாதிரியே இருந்தது.

என்னுடைய போராட்ட அனுபவத்தில் அப்படியான ஒரு நிலையை – அப்படியான ஒரு கட்டத்தை நான் சந்திச்சதேயில்லை. முந்திச் சண்டை நடக்கும்போது ஏதோ ஒரு கட்டத்தில் எதிரியைச் சிதைத்து, அவனை நகர விடாமல் இயக்கம் தடுத்துப் போடும். ஆனால், இந்தத் தடவை அப்பிடியில்லை. இராணுவம் மிக வேகமாகவே வந்து கொண்டிருந்தது. நாங்கள் கிளிநொச்சியில் இருந்து வட்டக்கச்சிக்குப் போயிருந்தம். அங்கே ஒரு மாதம் இருந்திருப்பம். அப்ப கணவரும் அடிக்கடி வீட்டுக்கு வாறதில்லை. அவருடைய பிரிவைச் சேர்ந்தவர்கள் வந்து நிலைமையைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அங்கே இருக்கும்போது கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றினார்கள்.

அப்ப நாங்கள் அங்கேயிருந்து வள்ளிபுனத்துக்குப் போனோம். ஆனால், அப்ப புதுக்குடியிருப்புப் பக்கத்திலேயும் பிரச்சினை. அங்கே போறதும் பாதுகாப்பில்லை என்ற உணர்வு எனக்கு உள்ளுக்குள்ளே இருந்தது. ஆனால். அங்கே எங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தபடியால், அவர்களோட போயிருந்தம். இனி வீட்டைத் தனியாக அமைக்க முடியாது. அதனால் பயனில்லை என்று என்னுடைய மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆனால், இயக்கத்தின் நடவடிக்கைளில் ஒரு மாற்றம் அல்லது திருப்பம் ஏற்படும் என்றே எண்ணினேன்.

இடையில் வீட்டுக்கு வந்திருந்த கணவர் போரின் போக்கைப் பற்றியும் களநிலைமைகளைப் பற்றியும் சொன்னார். அவருடன் நின்ற போராளிகளிற் பலரும் வீரச்சாவடைந்திருந்தனர். பலர் காயப்பட்டிருந்தனர். எங்களுக்குத் தெரிந்த ஏராளம் போராளிகள் அப்படி வீரச்சாவடைந்திருந்தனர்.

ஆனாலும் கணவரோ நானோ மனந்தளரவில்லை. அப்படித் தளர்ந்தால் எங்களால் எங்களையே நிலைப்படுத்திக் கொள்ள முடியாது. நிலைமை வரவர மோசமாகிக் கொண்டிருந்தது. எப்படியாவது அம்மாவையும் அப்பாவையும் வன்னிக்கு வெளியே அனுப்ப முயற்சியும் என்று கணவர் சொல்லி விட்டுப் போய் விட்டார். நானும் அவர்களுக்கு அதைச் சொன்னேன். நிலைமையைச் சொல்லி நீங்கள் போகும்போது முடிந்தால் எங்களின் பிள்ளைகளையும் கொண்டு போகலாம் என்று கூறினேன்.

இறுதியில் ஒரு வழியாக அம்மா மட்டும் வெளியே போவதற்குச் சம்மதித்தா. அவவோட ஒரு பிள்ளையை அனுப்பினோம். அப்பா போக மறுத்து விட்டார். அவருக்கு எங்கட கவலையையும் விட மருமகனைப் பற்றிய யோசினை.

நாங்கள் வள்ளிபுனத்தில் இருக்கும்போது அங்கே கடுமையான ஷெல்லடி தொடங்கியது. அதனால், அங்கேயிருந்து சுதந்திரபுரத்துக்குப் போனோம். ஆனால், வள்ளிபுனத்தையும் விடச் சுதந்திரபுரத்திற்கே பிறகு போட்டுத் தள்ளினார்கள். அகோர அடி. ஆங்கே நூற்றுக்கணக்கான சனங்கள் செத்ததுகள். அதோடு அங்கேயிருந்து வெளிக்கிட்டு, இரணைப்பாலைக்குப் போனம்.

இரணைப்பாலையில் இருக்கும்போது இவர் - கணவர் - வந்து பார்த்தார். நிலைமை வரவர மோசமாகிக் கொண்டே போனது. சனங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், அப்பவும் இயக்கம் வேகமாகத்தான் செயற்பட்டுக் கொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பக்கத்தால் ஒரு தாக்குதல், தேவிபுரம் பக்கத்தால் ஒரு தாக்குதல் என்று இந்தக் காலப்பகுதியில் நடந்தது. ஆனால், இந்தத் தாக்குதல்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை.


இந்தச் சூழலில் நீங்கள் அடுத்ததாக என்ன செய்தீர்கள்? எப்படியான மனநிலைக்கு வந்தீர்கள்? என்ன முடிவெடுத்தீர்கள்?

அந்தக் கட்டத்தில் நான் சனங்கள் என்ன செய்கிறார்களோ, அதன்படியே செய்தேன். அதுதான் சரியாகவும் இருந்தது. அதாவது சனங்கள் எங்கே இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்களோ, நாங்களும் அங்கேயே போகவேண்டியிருந்தது. அவர்கள் மாத்தளனுக்கும் பொக்கணைக்குமாகப் போனார்கள். நாங்களும் பொக்கணைக்குப் போனோம்.

ஆனால், சனங்கள் மெல்ல மெல்ல படையினரிடம் போகத் தொடங்கினார்கள். அப்படி எங்களால் போக முடியவில்லை. இதுதான் போராளி குடும்பங்களாக இருந்த எங்களுடைய பிரச்சினையாக இருந்தது. மற்றவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது போர்ச் சூழலை விட்டுப் போனார்கள். நாங்கள் தொடர்ந்தும் போர்ச்சூழலிலேயே இருந்தோம்.

கணவரையும் காணவில்லை. தொடர்பெடுத்து அவரைக் குழப்பவும் நான் விரும்பவில்லை. அதேவேளை அவரைத் தொடர்பு கொள்ளாமல் எங்களால் இருக்கவும் முடியவில்லை. அவரும் எங்களிடம் வராததற்குக் காரணம், தான் வந்தால், தன்னைப் போல மற்ற ஆக்களும் வெளிக்கிட்டு... நிலைமை பழுதாகிப் போயிடும் என்று யோசித்திருக்கிறார். இப்பிடியே நாங்கள் தவிச்சுக் கொண்டிருந்தம்.

கடையில் ஏப்ரல் மாதம் பதினைந்தாம் திகதி இவர் (கணவர்) வந்து நிலைமையைச் சொன்னார். ஆனந்தபுரம் சண்டையும் தோல்வியில் முடிந்த பிறகு இருந்த நம்பிக்கை எல்லாம் ஏறக்குறைய இறங்கீட்டுது. அந்தத் தோல்வி தந்த துக்கத்தை என்னால் இப்பவும் தாங்கவே முடியவில்லை. நாங்கள் எத்தனையோ தோல்விகளைச் சந்திச்சிருக்கிறம். ஆனால், அதெல்லாம் நிரந்தரத் தோல்வியாகவோ நிரந்தரத் தோல்விக்கு வாய்ப்புக் கொடுத்ததாகவோ இருந்ததில்லை.

ஆனந்தபுரம் தோல்வி எங்களை நிலைகுலைய வைச்சது. அதுக்குப் பிறகு நான் நித்திரையே கொள்ளவில்லை. வரப்போகிற நிலைமை என்னை நல்லாப் பாதித்தது. ஆனால், நான் கணவரிடம் இதைப் பற்றிக் கதைக்கவேயில்லை. அவருக்கும் நிலைமையைப் பற்றி நன்றாக விளங்கிவிட்டது. அவரும் எதைப்பற்றியும் கதைக்கவேயில்லை. ஆனால், அவர் அடிக்கடி நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்துபோவார். அவர்களும் பக்கத்தில்தான் நின்றார்கள். அப்ப நாங்கள் இரட்டை வாய்க்காலில் இருந்தோம்.

அதுக்குப் பிறகு?

அதுக்குப் பிறகுதான் நாங்கள் அப்பாவை இழந்தம். இரட்டை வாய்க்காலில் இருக்கும்போது ஒரு இரவு அப்பா தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்தார். அப்ப கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது. எல்லாப் பக்கத்தாலும் ரவுண்ஸ் வந்து கொண்டிருந்தது. அதில ஒரு ரவுண்ஸ் அப்பாவைக் கொண்டு போட்டுது. காயம் பட்ட இடத்திலேயே அப்பா விழுந்திட்டார். அது இரவு. அப்பா விழுந்தவுடனே பக்கத்தில இருந்த ஆட்கள் அவரைத் தூக்கியிருக்கினம். ஆனால், அவர் யார், யாரோடு இருக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியாது. எல்லாரும் அகதியாக ஓடிக்கொண்டிருக்கிற சூழலில், அதைவிடச் சண்டை பக்கத்தில் அகோரமாக நடந்து கொண்டிருக்கும்போது, யார்தான் நிதானமாக எல்லாத்தைப் பற்றியும் யோசிப்பினம்.

அப்பிடியிருந்தும் ஒரு ஐந்து நிமிசம் வரையில், அப்பா இருந்திருக்கிறார். அதுக்குப் பிறகுதான் அவரின் உயிர் பிரிஞ்சிருக்கு. அப்பாவைக் காணவில்லை என்று நாங்கள் தேடிக்கொண்டு போகும்போதுதான் என்ன நடந்தது எண்டது தெரிஞ்சது. எங்களுக்காக நின்ற அப்பாவை இப்ப நாங்கள் இழந்திட்டம். தன்னாலை முடிஞ்ச அளவுக்கு எங்களுக்குத்தான் துணையாக இருப்பேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.


ஆனால்...

அதுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகீட்டுது. அதோட கணவரும் வந்திட்டார். ஒரு நாள் நின்றார். மே 15. திடீரெனத் தான் வெளிக்கிட்டுப் போகவேணும் என்றார். எனக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. என்ன செய்யிறது என்றே தெரியேல்ல. எங்களைப் போலக் கனபேர் இருந்தது மட்டுந்தான் ஒரே ஆறுதல்.

போனவர் இரவு வந்தார். தான் வரவில்லை என்றும் எங்களைச் சனங்களோட போகும்படியும் சொன்னார்.

அதை நான் மறுத்திட்டன். அதுவரையும் அவருடைய தீர்மானங்களுக்கு எதிராகவோ குறுக்காகவோ நான் நின்றதில்லை. நானும் ஒரு போராளி என்றபடியால், அவருடைய நிலைப்பாடுகளையும் நிலைமைகளையும் நான் விளங்கிக் கொள்வேன்.

ஆனால், இந்தக் கட்டத்தில் நான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். அதுமட்டுமில்லை. இனி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. எங்களுடைய போராட்டத்தின் தோல்வியை நாங்கள் கண்ணின் முன்னேயே பார்த்துக் கொண்டிருந்தோம்.

பல போராளிகளே படையினரிடம் சனங்களோட சனங்களாகக் குடும்பம் குடும்பமாகச் சரணடைந்து கொண்டிருந்தார்கள்.

பிறகு?

கடைசியாக நாங்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து வட்டுவாகலுக்குள்ளால் முல்லைத்தீவுக்குப் போனோம். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. முல்லைத்தீவுச் சமரில் 1996 இல் வெற்றியோட உள்ளுக்குள்ளே போனபோராளிகளும் அப்ப தலையைக் கவிழ்ந்து கொண்டுதான் வந்தார்கள். என்னகொடுமை?

வட்டுவாகலில் ஒருநாள் முழுவதும் வைச்சிருந்தார்கள். பிறகு அங்க இருந்து ஓமந்தைக்குக் கொண்டு போனார்கள். ஓமந்தையில் வைத்தே கணவர் படையினரிடம் சரணடைந்தார். அவரோடு இன்னும் பலர் அன்று, அப்படிச் சரணடைந்தார்கள். நாங்கள் அன்று பட்டபாடிருக்கே, அதை என்றைக்கும் மறக்கவே முடியாது.

விடுதலைக்காகப் போராடிய நாங்கள், தோற்றுப்போய், எதிரிகளிடம் சரணடைவதை நான் என்வாழ்வில் அன்றுதான் பார்த்தேன்.

அதற்குப் பிறகு?

அதுக்குப்பிறகு, எங்களை முகாமுக்குக் கொண்டு போனார்கள். அது கதிர்காமர் முகாம். முகாம் வாழ்க்கை எல்லாம் நீங்கள் அறிந்ததுதானே.
ஆனால், நான் அதுக்குப் பிறகு, இரண்டு வருசமாகக் கணவரைத் தேடாத இடமேயில்லை. ஐ.ஸி.ஆர்.ஸி, பாதுகாப்பு அமைச்சு, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, மனித உரிமைகள் ஆணைக்குழு, நல்லிணக்க ஆணைக்குழு என்று எல்லா இடங்களுக்கும் கடிதங்களும் கொடுத்திருக்கிறேன். என்னைப்போல பலபேர் இப்படி ஒரு முடிவும் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள், தளபதிகள் போன்றோர் ஒரு மதகுருவோடு – பிரான்ஸிஸ் யோசப் பாதரோடு – சரணடைந்தனர் என்றும் அவர்களில் ஒருவரைப் பற்றிய தகவல்களும் இல்லை என்று சொல்லப்படுகிறதே. அதைப்போலத்தான் உங்களுடைய கணவரின் நிலையும் இருக்கிறது போலிருக்கு?

அப்படித்தான் நானும் நினைக்கிறன். முக்கியமான போராளிகளைப் பற்றிய ஒரு தகவல்களும் இன்னும் வெளிவரவேயில்லை. அவர்கள் எல்லாரும் இறுதிப் போருக்குப் பின்னர் வெளிப்படையாகவே தங்களின் குடும்பங்களோடு வந்து பiடையினரிடம் சரணடைந்திருந்தனர்.
ஆனால், இப்போது இதைப் படைத்தரப்பு அடியோடு மறுக்கிறது. அப்படியென்றால், அவர்களுக்கு என்ன நடந்தது? இதைப் பற்றி அரசாங்கம் நிச்சமாகப் பொறுப்புச் சொல்ல வேணும். அரசாங்கத்திடம் சரணடைந்தவர்களுக்கு அரசாங்கம்தானே பொறுப்பு.

ஆனால், இதைப்பற்றி நாங்கள் யாரிடம் முறையிடுவது?


ஏன் வெளியுலகத்துக்கு இதை நீங்கள் கொண்டு செல்ல முடியாதா?

என்னைப் பொறுத்தவரை எல்லாமே நாடகந்தான். எங்களுடைய போராட்டத்தை இந்த வெளியுலகமே அழித்தது. வெளியுலகத்தின் ஆதரவில்லாமல் இலங்கை அரசாங்கத்தினால் வெற்றியடைந்திருக்கவே முடியாது.

போரில் இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளைச் செய்த இந்த வெளியுலகம், தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வைக் கொடுக்க வேணும் என்று சொல்லவே இல்லை. அதுமட்டுமல்ல, போரின் இறுதியில் நிச்சயமாக ஒரு சரணடைவு இருக்கும். அதில் ஏராளம் போராளிகள் சரணடைவார்கள். அதைப் பாதுகாக்க வேண்டும். ஆகவே அதற்கான பொறுப்போ பாதுகாப்போ எப்படி அமையவேண்டும் என்பதைப் பற்றிக்கூட இந்த வெளியுலகம் சிந்தித்ததாக இல்லை. இதையெல்லாம் அது சிந்திக்காமல் விடவில்லை.

வெளியுலகத்தைப் பொறுத்தவரையில் புலிகளின் சிந்தனையோ, அதனுடைய செயற்பாடுகளோ இனிமேல் இருக்கக் கூடாது என்பதே முக்கியமான தீர்மானமாக இருந்திருக்க வேணும். அதனால்தான் அது முக்கிய தலைவர்களின் சரணடைவைக் காணாமலே இருந்தது. புலிகளின் முக்கிய தலைவர்களை இல்லாமற் செய்து விட்டால், பிறகு அந்தப் போராட்டமே, இயக்கத்தின் சிந்தனையே இல்லாமற்போய்விடும் என்று சிந்தித்திருப்பார்கள். இந்த நிலைமையில் நானும்போய் வெளியுலகத்தை எப்படி நம்பிக்கை வைத்துக் கேட்பது?

அப்படியென்றால், இதுக்கு என்னதான் தீர்வு?

ஏன்னைப் பொறுத்தவரையில் எப்போதும் ஒரே மாதிரியாக நிலைமைகள் இருப்பதில்லை. ஒரு நெருக்கடியான சந்தர்ப்பமோ அல்லது அரசியல் மாற்றமோ வரும்போது இந்த மாதிரியான பிரச்சினைகள் ஒரு தீர்வுக்கு வரும். ஆனால், அது வரும் என்று நாங்கள் இருக்க முடியுமா?

முதலில் எப்படியாவது, கணவரைக் கண்டு பிடித்து விடவேணும். குறைந்த பட்சம் அவருடைய தகவலாவது கிடைத்தாற் போதும்.


இப்போது உங்களுடைய நிலைமை எப்படியிருக்கிறது?

எல்லாமே பிரச்சினையாகத்தான் இருக்கு. நாங்கள் இருந்த காணியை நாங்கள் விலைகொடுத்தே வாங்கினோம். ஆனால், இப்போது அந்தக் காணிக்காக மீண்டும் எங்களுக்குக் காணியை விற்றவர்களே வந்து நிற்கிறார்கள்.

இதைவிடக் கணவரைத் தேட வேணும். பிள்ளையின் உடல் நிலையைப் பார்க்க வேணும். அப்பாவின் உதவியும் இல்ல. வருமானமும் இல்லை. ஏறக்குறைய நான் இப்ப தனித்து விட்டேன். முந்தி நாங்கள் பலமாக இருந்தம். நிறைய ஆக்களாக இருந்தம். அணி அணியாக இருந்தம். பத்தொன்பது வயதில் இருந்தே நான் ஒரு பெரிய அணியுடன் இணைந்தே இருந்தேன். அதுதான் எங்களின் மனோபலமாக இருந்தது. முகாமில்கூட ஒரு ஒற்றுமை இருந்தது. ஆனால், முகாமுக்கு வெளியில் வந்ததற்குப் பிறகு, அவரவர் தங்கட தங்கட பாடுகளைப் பார்த்துக் கொண்டு போகினம். வரவர நிலைமை நல்லாகவே மாறிக் கொண்டு போகுது....

00

Thursday, June 21, 2012

எழுதக் கடினமான முன்னுரை - 02


யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் பிறந்த புஷ்பராணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்ட வரலாறில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற இரு பெண் போராளிகளில் ஒருவர்.


புஷ்பராணி எழுதி எதிர்வரும்-30-06-2012 (சனி) - மாலை 5 மணிக்கு-47, Shernhall, Walthamstow, E17 3EY இல் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கும் 
அகாலம் : ஈழப் போராட்ட நினைவுக்குறிப்புகள் 
நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரைக்கு முன்னரான குறிப்பு. 


இவ்வாறு எழுதப்பட்ட முதற்கட்டுரை முன்னர் வெளியிடப்பட்டது.


இது இரண்டாவது கட்டுரை.


உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’’

‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’. இந்த வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. இது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியதாகத்தோடிருக்கும் ஒரு ஈழ விடுதலைப்பேராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும், எவ்வளவோ தியாகச்செல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின்  முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்கமுடியும்?

இந்த நிலை, போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத்தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப்பெருங்காடாகியுள்ளது. ஆனால், இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகிறது.

என்னை விட மூத்தவர்கள், முதல் தலைமுறையினர், என் சமகாலத்தவர்கள், எங்களுக்குப் பிந்தியவர்கள் என ஈழப்போராட்டத்தில் பங்கேற்று, சனங்களுக்காகவே தங்களைக் கரைத்த அத்தனை பேரின் இதயங்களிலும் கடந்து செல்ல முடியாத துக்கங்களும் அவற்றின் நிழலான நினைவுகளும் அலைமோதிக்கொண்டேயிருக்கின்றன. இந்தத் துக்கமென்பது சீர்ப்படுத்தவே முடியாத அளவுக்குச் சிதைந்து கொண்டிருந்த ஈழப்போராட்டத்தைப் பற்றியது. கூடவே, இன்று முழுச் சிதைவுக்குள்ளான போராட்டத்தையும் சனங்களைப் பற்றியதும்.

இங்கே எங்களின் முதல் தலைமுறையினரில் ஒருத்தி, எங்களுக்கு முன்னோடியாக இருந்த ஒருத்தி, போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் காயங்களையும் வலியையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருத்தி, ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற தன்னுடைய அந்தக் கடந்த காலத்தின் துக்கப் பரப்பைக் கடக்க முடியாமற் திணறிக்கொண்டிருக்கிறாள். தன்னுடைய இனம் அனுபவித்து வரும் அதனுடைய துயரங்களையும் பாடுகளையும் கடந்து விடவேண்டும் என்பதற்காக அவள் தாங்கவே முடியாத அத்தனை சிரமங்களையும் பாடுகளையும் ஏற்றுக்கொண்டு தன்னாலியன்றவரை விடுதலைக்காக உழைத்தவள். ஆனால் அவளால் வெற்றியைப் பெற முடியவில்லை. மகிழ்ச்சியை எட்ட முடியவில்லை. ஆறுதலையும் நிம்மதியையும் அடையமுடியவில்லை. பதிலாக எல்லா நிலைமைகளும் மேலும் மோசமாகியே விட்டன. எதிர்நிலைகள் பெருகி எல்லா வாசல்களையும் அடைத்துள்ளன.

இதனால் அவளுடைய துயரநினைவுகள் அவளை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்த வரலாற்றைக்குறித்தும் சனங்களைக்குறித்தும், அவர்களுடைய எதிர்காலத்தைக்குறித்தும் அவள் இன்னமும் துக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறாள். இந்தத் துக்கமானது தனியே கடந்த காலத்தின் துக்கம் மட்டுமல்ல. நிகழ்காலத்தினதும் துக்கந்தான். ஏன் எதிர்காலத்தின் துக்கமும் கூட என்றே சொல்லவேண்டும்.

ஈழத்தமிழர்களின் கடந்த காலம் என்பது தவறுகளினாலும் குற்றங்களினாலும் அவற்றின் விளைவுகளால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும் தோல்விகளினாலும் ஆகியிருப்பதால், அது - கடந்த காலத்தின், நிகழ்காலத்தின், எதிர்காலத்தின்  என முக்காலத்தின் தோல்வியாகவும் அவற்றின் துக்கமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் இந்தப் பெண்ணின் - இந்தச் சகோதரியின், இந்தத் தோழியின், இந்தச் சகபயணியின், இந்த முன்னோடியின், இந்தப் புகழுக்குரிய போராளியின் துக்கம் பொதுத் துக்கமாக ஆகிறது. இவளின் அனுபவங்கள் எல்லோருக்குமான பொது அனுபவங்களாகின்றன.

எனவேதான் புஸ்பராணி (அக்கா) தன்னுடைய இந்த வரலாற்று ஆவணத்தை எழுத ஆரம்பிக்கும்போது,


மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். 
தமிழீழத்தை நோக்கிய போராட்டப் பாதையில் நெடிய நாற்பது வருடங்கள் கழிந்துவிட்டன..... மமம


எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.....


தமிழர்களின் நிலப் பகுதியெங்கும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே சிவில் நிர்வாகம் நடந்துகொண்டிருக்கிறது. நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பசியும் பிணியும் வேலையின்மையும் பெருகிக் குழந்தைகள் அகதி முகாம்களிலே பாலுக்குக் கையேந்தி நிற்பதாக வரும் செய்திகளைப் படிக்கையில் ஒரு தாயாக நான் உடைந்து போய்விடுகிறேன்.....


எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது...


என்று குறிப்பிட வேண்டியேற்பட்டுள்ளது.

இது யதார்த்தத்தின் வெளிப்பாடு. உண்மையின் உரைப்பு. ஈழப்  போராட்டப்பாதையைக்குறித்த விமர்சனம். போராட்ட வரலாற்றின் இறுதி விளைவைப் பற்றிய சித்திரம். மேலும் இது இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் துக்கம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் மதிப்பீடு@ மேலும் தாங்கிக் கொள்ளவே முடியாத உள்ளக் குமுறல். ஆனால், இது பொதுத் துக்கமாகவும் பொது மதிப்பீடாகவும் பொதுநிலைப்பட்ட குமுறலாகவும் உள்ளது.

ஆகவே, ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஸ்பராணி (அக்கா) அவர்களின் ‘அகாலம்’ - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள் என்ற இந்த வரலாற்றுப் பதிவு, பல நிலைகளில் முக்கியம் பெறுகிறது. இது ஒரு வரலாற்றுப்  பதிவாக மட்டுமல்லாமல், கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ அரசியற் போக்குகளின் மீதான விமர்சனமாகவும் இந்தப் போராட்ட காலத்திற் செயற்பட்ட முன்னோடிகளைப் பற்றிய சித்திரங்களாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தின்போது தன்னுடன் இணைந்து சகபயணிகளாகச் செயற்பட்டவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் பதிவாக்கியுள்ளார் புஸ்பராணி. இவ்வாறு பதியப்பெறும்பொழுது, இந்தக் காலகட்டத்தின் அரசியல் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் தலைமைப்பொறுப்புகளிலிருந்தோரைப்பற்றியும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், அணுகுமுறைகள், அவர்களுடைய ஆளுமை, தனிப்பட்ட குணவியல்புகள் போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றியும் கவனப்படுத்துகிறார். அதேவேளை அன்றைய சமூக அதிகார அடுக்குமுறை, இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் நிலவிய அசமத்தும், சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இலங்கை அரசினதும் அதனுடைய பொலிஸ், சிறைச்சாலை போன்ற அதிகார அடுக்குகள் செயற்பட்ட விதங்களைப் பற்றியும் இந்தப்பதிவில் வெளிப்படுத்துகிறார்.

அச்சமற்ற வாழ்வை, விடுதலையை, சுமைகளற்ற நாட்களை, மகிழ்ச்சியை, இவற்றுக்கான வெற்றியைத் தருமென நம்பப்பட்ட ஈழப்போராட்டம் அழிவை நோக்கிச் சிதைந்ததன் விளைவு, ‘வாக்களிக்கப்பட்ட பூமி இப்போது சாம்பல் மேடாகியிருக்கிறது’. இதைக் குறித்து நாம் அதிகம் இங்கே பேசத்தேவையில்லை. ஏனெனில் இந்த விசயம் இன்று மிகப் பகிரங்கமானது. எல்லோருக்குமே தெரிந்தது. இதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கலாம். அல்லது இதற்கான பழிகளை ஒவ்வொருவரும் மற்றவர்களின் மீதும் பிற தரப்புகளின் மீதும் சுமத்தலாம். சிலர் தங்களையும் இதற்கான பொறுப்புக்குள்ளாக்கிப்; பேசலாம். ஆனால், ‘வாக்களிக்கப்பட்ட பூமி சாம்பல் மேடாகியதற்கு....’ மிதவாதப் போக்கில் வெறுப்புற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களாகத் திரண்டபோது இயக்கங்களை ஆதரித்து தமிழ் மக்கள் அவர்களுடன் நின்றார்கள். விடுதலை இயக்கங்கள்  வெகு விரைவிலேயே அதிகார மையங்களாக மாறுவார்கள் என்றும் சொந்த மக்களையே கொன்று குவிப்பார்களென்றும் அப்போது யாரும் கருதியிருக்கவில்லை. இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். என மிக எளிய வார்த்தைகளில் மிகச் சுருக்கமாக உண்மை நிலைமையை, யதார்த்த நிலையை, தன்னுடைய பார்வையை விளக்குகிறார் புஸ்பராணி.

வரலாற்றையும் நிகழ்ச்சிகளையும் கூர்மையாக அவதானித்து மதிப்பிடும் ஒருவருக்குத் தடுமாற்றங்கள் ஏற்படாது. “இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்க மாட்டார்கள்“ என்று சொல்வது மிகச் சரியான உண்மையான கூற்று. இதை நான் என்வாழ்விலேயே நேரிற் கண்டிருக்கிறேன். எந்தப் போராளியும் அடுத்த இயக்கத்தை அழிப்பதற்காகவோ பொதுமக்களின் மீது துப்பாக்கியை நீட்டுவதற்காகவோ போராட்டத்தில் இணையவில்லை. ஆனால் விடுதலை இயக்கங்கள் அதிகார மையங்களாக மாறியமையே பின்வந்த விளைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் துக்கத்துக்கும் காரணமாகின. இதற்கான காரணங்களை இயக்கத்தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு மிகத் தெளிவான பார்வையுடனும் வரலாற்றறிவுடனும் தன்னுடைய மதிப்பீடுகளை முன்வைக்கும் புஸ்பராணியின் இந்த ‘அகாலம் – ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள்’ நூல் இன்று மீளாய்வுகளும் அனுபவப் பதிவுகளும் அதிகமாக நடைபெறும் சூழலில் மிக முக்கியத்துவத்தைப் பெற்று வெளியாகின்றது.

இது மீள்பார்வைகளின் காலம், போராட்ட அனுபவங்களை எழுதும் காலம்... ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் தங்களுடைய அனுபவங்களை, மீளாய்வு நோக்கில் எழுதுகின்றனர். பல்வேறு இயக்கங்களினதும் வெளியீடுகள் என்பதற்கப்பால், கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ என்ற புதினத்தைத் தொடர்ந்து புனைவிலக்கியப் பதிவுகள் ஏராளமாக வந்துள்ளன. ஆனால், இந்தஅகாலம் - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள்’ போன்று மெய்வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவானவையே. ஆனால், இப்போது இந்தப் பதிவுகள் அதிகமாக எழுதப்படத்தொடங்கியுள்ளமை கவனத்திற்குரியது.

தோற்றுப்போன போராட்டம் ஏற்படுத்தும் துக்கநிலையில் நின்று பெரும்பாலான அனுபவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், இவை கழிவிரக்கத்தின் பாற்பட்டவையல்ல. மேலும் இந்தத் துயரநிலை தொடரக்கூடாது என்ற விருப்பத்தினடிப்படையில் இந்த வரலாற்றைப் பலரும் எழுதுகின்றனர். செழியன், ஐயர், நேசன், சி.புஸ்பராஜா, மணியம், குருபரன் என்று பலருடைய அனுபவங்கள் இந்தவகையில் வாசிப்புக்குரியனவாகியுள்ளன. சிலர் தம்மை மையப்படுத்தி ஒளிவட்டங்களை உருவாக்க முயற்சிப்பதும் நாமறியாததல்ல.

00
வரலாற்றைப் பதிவு செய்வதொன்றும் எளிமையான காரியமல்ல. அதிலும் தான் வாழ்ந்த காலத்தை, தான் பங்காற்றிய அரசியல் இயக்கங்களின் வரலாற்றை, தான் பங்களித்த முறைமையின் வரலாற்றைப் பதிவு செய்வது என்பது மிகக் கடினமான காரியம். தன்னை அல்லது தம்மையே முதன்மைப்படுத்தி அல்லது தாம் சார்ந்தியங்கிய போக்கினை மையப்படுத்திச் சிந்திக்கும் ஒரு தடித்த மரபுடைய நமது சூழலில் அதிலிருந்து விலகி நேர்மைத்தன்மையுடன் - தன்னைப் பொது நிலையில் வைத்து, தன்னையும் வரலாற்றுச் சூழலையும் மதிப்பிடுவதும் பதிவு செய்வதும் முக்கியமானது. புஸ்பராணி இங்கே தன்னை, தன்னுடைய செயற்பாடுகளை, தான் சார்ந்தியங்கிய அமைப்புகளின் தன்மைகளை, தன்னுடைய தவறுகளை, தன்னுடைய பலங்களை, பலவீனங்களை, சேர்ந்தியங்கியவர்களின் மாண்பை, அவர்களிற் சிலரின் குழிபறிப்புகளை, விட்டோடல்களை எல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார். ஒளிவு மறைவற்ற வெளிப்படுத்தலில் இவை பேசப்படுகின்றன. முக்கியமாக இயல்பாகவே அவரிடம் கூடியுள்ள ஓர்மத்தை அவர் வெளிக்காட்டிப் பேசுகிறார். இத்தகைய ஓர்மம் அவருடைய குடும்பத்திலிருந்து உருவாகியது என்றே கருதுகிறேன். தான் சார்ந்த சாதிப்பிரிவிலிருந்து, தன்னுடைய குடும்ப நிலைமை, தன்னுடைய திருமண வாழ்க்கை எனச் சகலதைப் பற்றியும் அவர் வெளிவெளியாகவே பேசுகிறார். எதற்கும் அவர் கூச்சப்படவில்லை. எதையிட்டும் அவர் தயக்கங்களைக் காட்ட விரும்பவில்லை. எதையும் மறைக்க வேண்டும் என்று அவர் உணரவில்லை. திறக்கப்பட்ட புத்தகமாகவே தன்னுடைய அனுபவங்களை அவர் விரித்து வைக்கிறார். இவ்வாறு அவர் பகிரங்கமாக அந்தக் காலத்தை விரித்து வைக்கும்போது பல பிம்பங்கள் சிதைகின்றன. (காசி ஆனந்தன், மங்கையற்கரசி, மாவை சேனாதிராஜா போன்றோர்). சில இருட்பரப்புகள் ஒளிபெறுகின்றன. (பத்மநாபா..... போன்றோர்).

ஆனால் இதைக்குறித்து புஸ்பராணி தெளிவாகச் சொல்வதையும் நாம் கவனிக்க வேணும்.

இங்கே நான் பல்வேறு தரப்புகளின் தவறுகளை மனம் வெந்து சுட்டிக்காட்டுவது அவர்களைப் பழிக்கும் நடவடிக்கையோ அல்லது அவர்களை அவதூறுகள் செய்யும் முயற்சியோ அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது வெறுமனே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கும் வேலையுமல்ல. இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தவறுகளை நாங்கள் எங்களிடமிருந்து வேரோடு களைய வேண்டியிருக்கிறது. இனி ஒரு துப்பாக்கிக் குண்டு துப்பாக்கியின் குழலிலிருந்தல்ல நமது எண்ணங்களிலிருந்து கூடப் புறப்படக் கூடாது. ஆயுதப் போராட்டத்திற்கான எண்ணக் கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்ற வகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப் போராட்டத்தில் நல்ல போராட்டம்இ மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே. அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறான்றிற்கும் அது பயன்படாது.


என்று அவர் கூறுவதும்

எனது இயக்க வாழ்க்கையில் ஏமாற்றத்தையும் வதைகளையும் நான் அனுபவித்தது ஒருபுறமிருக்க எனது இயக்க வாழ்வு எனது மனதுக்கு நெருக்கமான பல தோழர்களை எனக்கு ஏற்படுத்தியும் தந்திருக்கிறது. இவர்களில் சிலர் இப்போது உயிரோடு இல்லை. சிலர் அரசியலில் இல்லை. சிலர் இன்னும் அரசியலில் ஈடுபாட்டோடு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலருடன் எனக்கு இப்போது ஆழமான முரண்களும் மனக் கசப்புகளுமுள்ளன. சிலர் எங்கே இருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. எனினும் அந்தத் தோழர்கள் ஒரு காலத்தில் ஈழவிடுதலைக்காக அர்ப்பணிப்போடும் வீரத்தோடும் இயங்கியவர்கள். என்னோடு கரம் கோர்த்துக் கிராமம் கிராமமாகவும் சிறைச்சாலைகளிலும் பயணித்தவர்கள். முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும் அவர்களது நினைவுகளை என்னில் அழியாது பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

என்றும் உரைக்கும் புஸ்பராணியின் வாக்குமூலம் முக்கியமானது.

தம்மைப் பற்றிய பிம்ப உருவாக்கங்களுக்காகப் புனிதங்களை உற்பத்தி செய்கின்ற சமூகத்தில் இது மாறுதலான நிகழ்ச்சி. தவறுகளையும் தோல்விகளையும் திரைகளுக்குப் பின்னே இழுத்து மறைக்கின்றவர்களிடையே புஸ்பராணி விலகித் தனித்துத் தெரிகிறார்.

இதேவேளை வரலாற்றைப் படிப்பதிலும் வேறுபாடுகள் உண்டு. எழுதப்படும் வரலாறானது வாசிப்பவரின் வாழ்வையும் அவர்களுடைய காலத்தையும் மையப்படுத்தியிருக்குமானால் அதன் கவர்ச்சியும் முக்கியத்துவமும் வேறு. இரத்தமும் தசையும் நிரம்பிய உயிருள்ள ஜீவனாக இந்த வரலாறு அமையும். அதை வாசிக்கும் உணர்வும் வேறானது. அதற்கப்பால் வாசிக்கப்படும் வரலாறு வெறும் தகவல்களாகவும் நிகழ்ச்சிகளின் பதிவாகவும் விவரிப்பாகவும் சுருங்கிவிடுகிறது. புஸ்பராணியின் வரலாற்றுக் காலத்திற் பயணித்தவர்களுக்கு இது பொக்கிஸமே.

00

யாரும் தங்களுடைய நிகழ்காலத்தை எளிதாகக் கடந்து விடலாம். அல்லது அதைச் சற்றுக் கடினமான நிலையில் எதிர்கொண்டு கடந்து விடலாம். ஆனால், இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றில் இருந்து அவர்கள் தங்களை, தங்களுடைய கடந்த காலத்தை அவ்வாறு கடந்து விட முடியாது. அது மிகக் கடினமானது. இந்த நிலைமையானது இரண்டு நிலையில் இரண்டு தரப்பினரைச் சுற்றிய ஒரு பாம்பாக உள்ளது. ஒன்று, கடினமான கடந்த கால நினைவுகளைக் கடந்து செல்ல முடியாமற் தத்தளிக்கும் புஸ்பராணியைப் போன்றவர்களின் நிலை. மற்றது, அதிகாரங்களாலும் குற்றங்களாலும் நிரப்பப்பட்ட நிகழ்காலத்தைக் உருவாக்கியவர்களும் அதிகார அமைப்புகளும் இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றிலிருந்து தம்மை மறைத்து விட முடியாது. அதை எளிதிற் கடந்து விடவும் முடியாது. புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவில் நாம் இந்த இரண்டையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

புஸ்பராணியின் இந்தப் பதிவில் கடந்த நாற்பது ஆண்டுகால நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தரப்புகள் வெளிக்காட்டப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மகளிர் பேரவை போன்றவற்றின் செயற்பாடுகளையும் அவற்றோடு புஸ்பராணிக்கிருந்த உறவும் முரணும் இங்கே கூறப்படுகின்றன. தவிர, இந்த ஈழ விடுதலை வரலாற்றுப் போக்கில் யார் எல்லாம் மனித விதிக்கு மாறான குற்றச் செயல்களுக்குக் காரணமானார்கள், எவரெவர் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் பொது ஒழுங்குக்கும் மாறாக எவ்வாறெல்லாம் செயற்பட்டனர் என்பதையும் புஸ்பராணி பதிவு செய்கிறார். இப்படி எல்லாம் பதியும்போது அவர்களால் இந்தக் கடந்த காலத்தைக் கடந்து விட முடியவில்லை. அதேவேளை மனித நேசிப்பைத் தமது ஆதர சக்தியாகவும் வழிமுறையாகவும் கொண்டியங்கிய வரலாற்றின் நாயகர்கள் மேலும் இங்கே ஒளியூட்டப்படுகின்றனர். இதுதான் வரலாற்றை நோக்கும் நோக்குநிலையில் நம் கவனத்தைக் கோருவது. எத்தகைய நோக்குநிலையிலும் இந்த அடிப்படையைத் தவிர்க்க முடியாது.

இந்த வரலாற்றுப் பதிவு நூலில் விவரிக்கப்படும் கால நிகழ்ச்சிகளை இங்கே படிக்கும்பொழுது மீளவும் அந்தக் காலம் மனதில் விரிகிறது. சில நிகழ்ச்சிகளை அந்தக் காலகட்டத்திலேயே அறிந்தவனாகவும், சிலவற்றில் பங்கேற்றவனாக நானும் இருந்திருப்பதால், இந்த அனுவங்களிற் பலவும் என்னுடைய அனுபவங்களையும் ஒத்திருக்கின்றன. எனக்கும் புஸ்பராணி (அக்கா) க்கும் இடையில் ஏறக்குறைய பன்னிரண்டு வயது வித்தியாசங்கள். என்றாலும் 1975க்குப் பிந்திய நிகழ்ச்சிகள் மெல்லமெல்ல ஒளிகூடியவையாக என்மனதில் இன்னும் இருக்கின்றன. உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்... அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றுகூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.

அதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும். வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன்...

முக்கியமாக வே. பாலகுமாரனைப் பற்றிய கூறல்...
பாலகுமாரன் அதீத சுகாதார உணர்வுள்ளவர். அவர் எப்போதும் துடைப்பமும் தண்ணீருமாகக் கழிவறையைச் சுத்தம் செய்தவாறேயிருந்தார். எனினும் அது அவரது சக்திக்கு மீறிய காரியமாகவேயிருந்தது

இறுதி வரை அவர் இப்படித் தான் இருந்தார். எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன். ஆனால்?

00

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் தமிம் பேசும் மக்களின் நிலை மிக மோசமானது. இலங்கை அரசு சிங்கள அரசாக, இனவாத அரசாக வெளிப்படையாகவே செயற்படத்தொடங்கியதை அடுத்துச் சிறுபான்மை இனங்கள் மிக நெருக்கடிக்குள்ளாகின. பின்னாட்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இதில் மேலும் உச்ச நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தனர். இந்த நிலையில், 1950 இல் இலங்கையில் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவொன்றிற் பிறந்த பெண்ஒருவர் எத்தகைய நெருக்கடிகளுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியிருப்பார்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான ஒருவர் சாதாரணமாகவே, இனரீதியாகவும், சாதி ரீதியாகவும் பெண்ணென்ற நிலையிலும் பலமுனைகளில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டும். அதிலும் ஒடுக்குமுறைக்கெதிரான - ஆதிக்க சக்திகளுக்கு எதிரான அரசியல் ஈடுபாட்டைக்கொண்ட பெண் என்றால் இந்த நெருக்கடிகளைச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு அவை எல்லை மீறியவை. இத்தகைய நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தவரே புஸ்பராணி. புஸ்பராணியின் இளமைக்காலச் சூழலைப் பற்றி இந்தப் பதிவில் அவர் சொல்கிறார்.

யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் சிதம்பரி - சின்னம்மா இணையருக்கு நான்காவது குழந்தையாகவும் மூத்த பெண்பிள்ளையாகவும் பிறந்தேன். ..... 


எனது கிராமத்தில் கரையார் சாதியினரே ஆதிக்க சாதியினராகயிருந்தார்கள். யாழ்ப்பாணச் சாதியமைப்பில் வெள்ளாளர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள ஆதிக்க சாதியினர் கரையார்களே. நான் வளர்ந்துவந்த காலத்தில் கரையார்கள் முற்றாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள். கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் இவர்களுக்கு மத்தியில் எங்களது கிராமத்தில் நாங்கள் ஒரேயொரு நளவர் சாதிக் குடும்பமேயிருந்தோம்.


என் இளமைப் பருவத்தில் எல்லாவிதமான தீண்டாமைகளும் எங்கள் கிராமத்தில் நிலவின. தேநீர்க் கடைகள், ஆலயங்கள் போன்றவற்றுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆதிக்க சாதியினரின் தேநீர்க் கடைகளுக்குப் போய் சிரட்டையிலோ போத்தலிலோ தேநீர் குடிக்கவும் கோயிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிடவும் நாங்களும் தயாரில்லை. குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் மிகுந்த ஒற்றுமையாக இருப்போம். அரசியல் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ உரையாட வேண்டியிருந்தாலும் எங்களுக்குள்ளேயே உரையாடுவோம். வழி தெருவில், பாடசாலையில் ஆதிக்க சாதியினரின் கிண்டல்களுக்கோ பழிப்புகளுக்கோ நாங்கள் ஆளாகும்போது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம். 

இதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். புஸ்பராணியின் போர்க்குணம், அவருடைய போராட்டக் குணம் எல்லாம் அவருடைய குடும்பத்திற்குள்ளிருந்தே கிளம்புகிறது. அவருடைய தந்தை திரு. சிதம்பரி ஒரு முக்கியமான ஆளுமையாக இருந்திருக்கிறார். தாய் சின்னம்மா இதற்கு உறுதுணையாக நின்றவர். இந்தப் புத்தகத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களுக்குத் தனியாக அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லையாயினும் புஸ்பராணி மற்றும் அவருடைய சகோதரர் திரு.சி.புஸ்பராஜா ஆகியோரின் ஆளுமை உருவாக்கத்திலும் அரசியல் ஈடுபாட்டிலும் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. அதனால், அந்தக் குடும்பம் அக்காலத்தில் பெரும் இன்னலுக்கும் துயரத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. ஆனாலும் அவர்கள் இறுதிவரையில் பின்னகர்ந்து விடவில்லை. இதோ, இப்போதும் வரலாற்றில் முன்னிலைச் செய்பாட்டுக்குரிய அடித்தளத்துடனேயே இருக்கின்றனர்.

புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவு, மற்றும் திரு.சி.புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற பதிவு இரண்டும் இந்த ஓர்மமான அடித்தளத்திற்கு நல்ல ஆதாரம்.

புஸ்பராணி (அக்கா) அவர்களின் அரசியல் ஈடுபாட்டுக்கும் போராட்ட வாழ்க்கைக்கும் காரணமாக இருந்தவர் முக்கியமாக திரு. சி. புஸ்பராஜாதான். அதிக வசதியும் குடும்பப் பெருமையும் இல்லாத ஒரு அடிநிலைப் பெண்ணாக அரசியற் பொதுவெளியிற் பிரவேசித்த புஸ்பராணி, மற்றும் திரு.சி.புஸ்பராஜா ஆகியோர் அந்தக் காலத்திலேயே பொதுத் தளத்தில் தவிர்க்கப்பட முடியாத பாத்திரங்களைக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம், இவர்கள் பின்பற்றிய அரசியல் மட்டுமல்ல, அந்த அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் ஆற்றிய முன்னிலைச் செயற்பாடும் அதற்கான உழைப்பையும் துணிச்சலையும் ஓர்மத்தையும் கொண்டிருந்தமையே. இந்த ஓர்மந்தான் இவர்களுடைய அடையாளம். இதுதான் இவர்களை இன்னும் நின்றியக்கி வருகிறது.

இந்த ஓர்மத்தில் நின்றே புஸ்பராணி இன்றைய அரசியற் சூழலையும் மதிப்பிடுகிறார். அதிலிருந்தே தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கிறார். ஆயுதங்களால் அல்லாமல் அரசியற் பிரச்சாரத்தால் மக்களைத் தங்களின் பின்னே திரட்டிக்காட்டும் வல்லமை தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு இருந்தது. அந்த வல்லமையை அவர்கள் சரியாகப் பயன்படுத்தாமல் இரட்டை அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து ஆயுத இயக்கங்களின் சிபாரிசுக்காரர்களாக அவர்கள் மாறிப்போனது வரலாற்றின் துரதிர்ஷ்டம். ஆயுதப் போராட்ட அரசியலின் முன்னே தாங்கள் இழந்துகொண்டிருந்த செல்வாக்கைக் குறுக்குவழிகளில் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் முயன்றிருக்கக் கூடாது. 

இது ஓர்மத்தின் பாற்பட்ட கடுமையான விமர்சனமாகும். இன்றைய தமிழ் மிதவாதிகளின் நிலைமையைப் பகிரங்கமாகத் துணிச்சலுடன் புஸ்பராணி முன்வைப்பது இன்றைய தலைமைகளின் ஆளுமைக்குறைவையும் நோக்கச் சிதைவையும் மனதில் நிறுத்தியே. ஆகவே, அவர் கடந்த காலத்தின் மீது மட்டும் ஒளியை வீசி விமர்சனங்களை முன்வைக்கவில்லை. சமகாலத்தின் மீதும் தன்னுடைய பார்வைகளைக் கொண்டிருக்கிறார்.

இதற்கு இன்னொரு ஆதாரம்:
தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசிய தமிழ் இளைஞர் பேரவை இளைஞர்கள் தமிழர் கூட்டணியினரின் மிதவாதப் போக்கைக் கண்டித்தும் பேசினர். இதனால் கோபம் கொண்ட மங்கையற்கரசி  "எங்களது மேடையில் எங்களையே திட்டுகிறீர்களே" என்று சினந்தார். ஆத்திரங்கொண்ட கிளிநொச்சி திருஞானம் "உழைப்பது நாங்கள்இ பிழைப்பது நீங்கள்" என்ற தொனியில் மங்கையற்கரசியோடு வாக்குவாதப்பட்டதும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. இது ஆரம்பச் சுழியே. இப்படியான கருத்து மோதல்கள் பின்னர் பலதளங்களிலும் தொடர்ந்து சென்றன.

கூட்டமைப்பின் மீது தற்போது முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் கவனிப்போருக்கு இது எளிதிற் புரியும்.

எப்போதும் இயங்கும் மனதுடைய ஒருவருக்கு இத்தகைய தொடர்பார்வை இருந்தே தீரும். களத்திலிருந்து இவர்கள் இறுதிவரையில் விலகுவதேயில்லை.

00

பொதுவாகவே, போராட்டத்திலும் யுத்தத்திலும் முதலிற் பாதிக்கப்படுவது பெண்களே. மிக உச்சபாதிப்பைச் சந்திப்பதும் பெண்களே. இந்த உலகம் பெண்களுக்கே துக்கத்தையும் காயங்களையும் வலிகளையும் அதிகமாகக் கொடுத்துள்ளது. உலகம் முழுதுமுள்ள பொது நிலை இது. இந்த நிலைக்கு எந்தச் சமூகமும் எந்தக் காலமும்  விலக்கில்லை. எப்போதும் வன்முறையில்  இலக்கு வைக்கப்படும், வன்முறைக்குப் பலியாகும் முதல் மனித உயிர் பெண்ணே.

அதிலும் அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பொதுவெளியில் எழுச்சியடையும் பெண் - இயங்கும் பெண், ஆதிக்கத்தரப்பினால் மிக மோசமான முறையில் ஒடுக்கப்படுவாள். தெலுங்கானாப் போராட்டத்தில், எரித்திரியாவில், எல்சல்வடோரில், சிலியில், காஸ்மீரில் என எல்லாத்திசைகளிலும் பெண் அவலத்திற்குள் வீழ்த்தப்பட்டுள்ளாள். இரண்டாம் உலகப்போரின்போது மிகமோசமான முறையில் ஜேர்மனியில் சிதைக்கப்பட்டது பெண்களே. ஹிட்லர் இருந்தபோது யூதப்பெண்களும் ஹிட்லர் இறந்தபின்னர் நாஜிப்பெண்களும் சிதைக்கப்பட்டனர். மேலும் மலேசியாவில், கேரளாவில், தென்னாபிரிக்காவில் என்று இந்தப் பட்டியல் நீளும்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் அத்தகைய நிலையைச் சந்திக்கிறார் புஸ்பராணி. (இன்று ஏராளம் பெண்போராளிகள் இத்தகைய நிலைக்குள்ளாகியுள்ளனர்). ஒரு கட்டத்தில் பொலிஸ் தரப்பினரால் கைது செய்யப்படும் புஸ்பராணியும் சகதோழியான கல்யாணியும் படுகின்ற வதைகள், மிகப் பயங்கரமானவை. மிகக் கொடுமையானவை. மாதவிலக்கின்போது பயன்படுத்தப்படுவதற்குச் சாதாரண துணியொன்றைக்கூடப் பெறமுடியாத நிலை. இந்த நிலையைப் புஸ்பராணி இங்கே விவரிக்கும்போது எம்மால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதிருக்கிறது. துக்கத்தின் பெரும்பரப்பொன்றில் நகர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பதிவாக இது இருந்தாலும் இந்த மாதிரியான மனிதனின் முழு நாகரீகத்திற்கும் இழுக்கான மனித நிலையைக் குறித்து சொல்லும்போது அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், இந்தக் கொடுமை இன்னும் நீங்கிவிடவில்லை என்பதை, இந்த ஒடுக்குமுறை நிலை மாறவேயில்லை என்பதை ‘நான்பட்ட சித்திரவதைகளால் பத்து நாட்களிற்குப் பிறகு வரவேண்டிய மாதவிலக்கு முன்கூட்டியே வந்துவிட்டது. வழக்கத்தைவிட உதிரப் பெருக்கு அதிகமாயிருந்தது. டம்பா என........... கடுமையான அழுக்காயிருந்த, ஒரு கந்தலான சாரத் துணியைக் கொண்டுவந்து கொடுத்தான். உதிரப் பெருக்கை நிறுத்துவதற்காக நான் அந்தத் துணியை இடையில் கட்டிக்கொள்வதற்கு கல்யாணி உதவினார். அப்போது கல்யாணி "அக்கா இந்தத் துணியை வீசிவிடாதீர்கள். எனது முறை வரும்போது எனக்குக் கட்டுவதற்கு ஏதுமில்லை, இதை துவைத்து வைத்துக்கொள்வோம்" என்றார்.

நான் கட்டிக் கழுவி வைத்திருந்த துணியையே கல்யாணியும் பின்பு உபயோகிக்க வேண்டியிருந்தது. இப்போது இராணுவத்தின் சிறைகளிலிருக்கும் புலிப் போராளிப் பெண்களின் நிலை இதை விடக் கேவலமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எதிர்காலத்தில் அவர்களில் ஒருவருக்குத் தனது சிறைக் குறிப்புகளை எழுதி வெளியிடும் நாள் வாய்க்கும்போது இந்த நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியத்தான் போகின்றது.

என்று புஸ்பராணி சொல்வதினூடாக அவரும் அவரைப் போன்ற பிற பெண்களும் சந்திக்க வேண்டிய கொடுமைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில் புஸ்பராணி, அவருடைய தோழி கல்யாணி, புஸ்பராணியின் தங்கை போன்றோர் தங்கியிருந்த வெலிக்கடச் சிறைச்சாலையில் தென்னிலங்கையில் நடைபெற்ற ஜே.வி.பி கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட பின்னர்,  அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்று சிங்களப் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒடுக்குமுறை செய்யும் அதிகாரத் தரப்பிற்கு இனமதமொழிபிரதேச வேறுபாடுகள் இல்லை. அது தன்னுடைய அதிகாரத்துக்கு எதிரான யாரையும் கைது செய்யும். தண்டனையை வழங்கும். இங்கே ஜே.வி.பி பெண்களும் புஸ்பராணி, கல்யாணி போன்றோரை ஒத்த நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

ஜே.வி.பியினரின் போராட்ட அணுகுமுறை, அரசியற்பார்வை போன்றவை வேறாகவும் புஸ்பராணி, கல்யாணி போன்றோருடைய அரசியற் பார்வை, போராட்ட அணுகுமுறை போன்றவை வேறாக இருந்தாலும் ஒடுக்குமுறையை எதிர்கொள்வது என்பதிலும் ஒடுக்குமுறைக்குள்ளாவது என்பதிலும் இருக்கின்ற பொதுத் தன்மைகளை புஸ்பராணி இனங்கண்டுள்ளார். மட்டுமல்ல, கேரள நக்ஸலைட் போராளியாக இருந்த அஜிதா என்ற பெண்ணின் அனுபவங்களுக்கூடாக உலகு தழுவிய பெண்ணின் பாத்திரத்தையும் உணர்கிறார்.

எனதும் அஜிதாவினதும் போராட்டக் களமும் போராட்ட இலக்கும் போராட்ட வழிமுறைகளும் முற்றிலும் வேறாயிருந்தபோதிலும் வேறு சில விடயங்களில் எனக்கும் அஜிதாவுக்கும் சில ஒற்றுமைகளிருந்தன. இருவருமே ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தோம். இருவருமே இளம் வயதிலேயே காவற்துறையின் சித்திரவதைகளை எதிர்கொண்டு சிறைகளில் அடைபட்டுக்கிடந்தோம். இருவரது குடும்பங்களுமே போராட்டத்தில் தங்களை முழுவதுமாக இணைத்துக்கொண்டிருந்தார்கள். அஜிதா தனது பெற்றோர்களோடு சிறையிலடைக்கப்பட்டார். நான் எனது தம்பி தங்கைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டேன். சமூகத்தில் இருவருக்குமே கொள்ளைக்காரிகள் என்ற பெயருமிருந்தது.

என அஜிதாவைப் பற்றி விவரிப்பதினுடாக பெண்களுக்கெதிரான இந்தப் பொதுமைத் தன்மையை உணர்த்துகிறார் புஸ்பராணி. இந்த மாதிரியான நிலைமையில், உடல் ரீதியான வதைகள் ஒருபுறமென்றால், உளரீதியான வதைகள் இன்னொரு புறமாக இரட்டை வதையைச் சந்திக்க வேண்டியிருக்கிறாள் பெண்.

சிறையை விட்டு, அந்தத் தண்டனைக் களத்தை விட்டு வெளியே வந்தாலும் சமூகம் இந்தப் பெண்களை வரவேற்கும் விதம்? அது அதைவிடக் கொடுமையானது. ‘வாய்க்கு வந்தபடி கதைப்பது’ என்பார்களே அதை இந்தப் பெண்கள் விசயத்தில் மிக உச்சமாகச் செய்கிறது சமூகம். கொள்ளைக்காரி, கெடுக்கப்பட்டவள், ஒத்தோடியவள் என்றமாதிரியான வசைகளை எந்தக் கூச்சமுமில்லாமல் இந்தப் பெண்களின் மீது பொழிகிறது சமூகம்.

இவ்வளவுக்கும் இந்தப் பெண்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வின் சுகங்களுக்கப்பால், எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், பொதுத்தளத்தில் அனைத்துத்தரப்பினருக்காகவும் போராடியவர்கள். ஆனால், இதையெல்லாம் மறந்தே சமூகம் வசைப் பரப்பை மிகக் கேவலமாக இவர்களை நோக்கி விரிக்கிறது. இங்கே புஸ்பராணியும் இதே வசைப்பரப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதேவேளை, பொலிஸின் சிறையில் விசாரணைக்குட்படுத்தப்படும்போது, பிறரை விட புஸ்பராணியைப்போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலதிகமாக இன்னொரு தண்டனையையும் பெறவேண்டியுள்ளது. அதிலும் தமிழ்ப் பொலிஸ்காரர்களிடம். ஏனெனில் தமிழ்ச் சமூகத்தின் அதிகாரச் சாதியினராக இவர்கள் இருப்பதால், அதே மனநிலையில் கைதிகளையும் விசாரணையையும் அணுகுகிறார்கள். இது சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பானது. இதை மிக நுட்பமாக அதேவேளை தெளிவாகவே வெளிப்படுத்துகிறார் புஸ்பராணி.

"நளத்தியும் பள்ளியும் நாடகம் போடுகிறீர்களா? எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக வதைபடுவீர்கள்"  

அன்று புகழ்பெற்ற பொலிஸ் அதிகாரியாகக் கலக்கத்தை ஏற்படுத்தித் திரிந்த பத்மநாதன் கூறிய வார்த்தைகள் இவை. இவற்றை பொன்னெழுத்துகளால் பொறிப்பதா இன்று? தமிழ்ச் சூழலின் அவலம் பிற தரப்புகளை விட மிகக் கொடுமையானது.

இதனாற்தான்,


இரு பக்கங்களும் கூர்கொண்ட 'கருக்கு'ப் போன்று, தலித் பெண்களுக்கு சாதியாலும் ஆணாதிக்கத்தாலும் இரண்டு பக்கமும் ஆபத்திருக்கின்றது என்பாரே எழுத்தாளர் பாமா, எனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் கருக்காவேயிருந்தது.

என்று குமுறுகிறார் புஸ்பராணி. இந்த வலியும் வேதனையும் சாதாரணமானதல்ல. இதைப்போல குற்றம்சாட்டப்பட்ட – சேர்ந்தியங்கிய பிற போராளிகள் அல்லது கைதிகள் தங்களின் வசதியாலும் உயர்வர்க்க அடையாளத்தினாலும் மிக இலகுவாக தண்டனைப் பரப்பிலிருந்து வெளியேறிச் செல்கின்றனர்.

இதையும் புஸ்பராணி விவரிக்கிறார்.

வர்க்கபேதமும், சாதிபேதமும் எப்படியெல்லாம் எங்கெல்லாம் புகுந்து எளியோரை நசுக்கிவிடுகின்றன என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.
என்று.

மேலும் பெண்களைக் குறித்த புஸ்பராணியின் பார்வை விடுதலை நோக்கியது. மாற்றுப் பார்வையையுடையது. இத்தகைய புரிதல் அந்த நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டுள்ளது என்பது கவனத்திற்குரியது.

வெலிக்கடைச் சிறையில் நான் சந்தித்த ஒவ்வொரு பெண்களும் முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின்பும் கூட என் ஞாபக அடுக்குகளில் அழியாச் சித்திரங்களாக இருக்கிறார்கள். அங்கு மோசமான அனுபவம் என்று எதுவுமே அவர்களால் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இனிய அனுபவங்களையும் அன்பையும் தோழமையையும் ஆறுதலையும் அந்தத் தோழிகள் எனக்கு அள்ளி அள்ளித் தந்திருக்கிறார்கள். பயங்கரவாதி, கொலைகாரி, கொள்ளைக்காரி, பாலியல் தொழிலாளி, திருடி, சாராயம் விற்பவள், ஏமாற்றுக்காரி என்ற பல்வேறு பெயர்களில் அரசாங்கத்தாலும் நீதியாலும் நாங்கள் வகைப்படுத்தப்பட்டாலும் நாங்கள் கைதிகள் என்ற உணர்வு எங்களை இணைத்தே வைத்திருந்தது. அந்த இணைவிலிருந்து அன்பைத் தவிர வேறெதுவுமே சுரக்கவில்லை.

அன்றைய காலத்தில் கொலைவழக்கொன்றிற் குற்றம் சாட்டப்பட்டிருந்த கோகிலாம்பாளைப் பற்றியும் மலையகத்துப் பெண் லூர்துவைப் பற்றியும் புஸ்பராணி பார்க்கின்ற பார்வை....

கோகிலாம்பாளை துரோகத்தின் சின்னம் என்பதா அல்லது காதலின் பரிதாபத்துக்குரிய அடையாளம் எனச் சொல்லவா!
எனவும்இ கணவனின் கொடுமையைத் தாங்கமுடியாமல் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொன்ற லூர்துவைப் பற்றிச் சொல்லும்போது….


அவளது கணக்கற்ற துன்பங்கள் ஆத்திரமாகத் திரண்ட கணத்தில் அது நிகழ்ந்திருக்கிறது. அது துயரம் செய்த கொலையல்லவா

எனவும் பொதுவான சமூகப் பார்வைக்கும் நீதி அணுகுமுறைக்கும் அப்பால் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில், பெண்சார்ந்த அனுபவ நோக்குநிலையில் இவர்களின் செயல்களை நோக்குகிறார்.

இத்தகைய புரிதல் வாழ்வின் ஆழத்தை அதன் பன்முகத்தன்மையை மனித மனத்தின் உணர்ச்சிச் சுழிப்புகளை உணர்ந்துள்ள ஒருவராற்தான் முடியும். சாதாரண குடும்பப் பெண்ணாக அவர் இருந்திருந்தால், நிச்சயமாக அவருக்கு இத்தகைய உலகு தழுவிய, வரலாறு தழுவிய, வாழ்க்கையின் அடியாழத்தத்தைத் தழுவிய புரிதல்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது. அவர் பொதுவெளிக்கு வந்ததால், பாடுகளைச் சுமந்த அளவுக்கு அவருடைய உலகு தழுவிய விரிந்த பார்வையும் அனுபவங்களும் ஆற்றல் மிகுதியும் ஏற்பட்டுள்ளன. அவர் ஒரு நகரும் பெண்ணாக, இலக்கியவாதியாக,போராளியாகத் தன்னை வடிவமைத்துள்ளார். இது அவர் தன்னுடைய செயற்பாடுகளினால் பெற்றுக்கொண்ட பேறு.

இல்லையென்றால், 1969 இலேயே யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட பெண்ணொருவர் லண்டன் முரசில் தன்னுடைய கருத்துகளை முன்வைக்கவும் உலகத்தின் பல திசைகளிலுள்ளவர்களோடும் தொடர்புகளைக் கொள்ளவும் வாய்த்திருக்குமா ? ஆகவே, புஸ்பராணியின் இத்தகைய புரிதல்களையும் உணர்தல்களையும் தமிழ்ச் சமூகம் தன் அகத்திலெடுக்க வேண்டியது அவசியமாகும். விடுதலை நோக்கிய தாகத்தோடிருக்கும் ஒரு சமூகம் தன்னுள்ளே ஒளியைப் பாய்ச்சவில்லை என்றால், தன்னுள்ளிருக்கும் கசப்பான பிராந்தியங்களை நீக்கவில்லை எனில் அதனால் ஒருபோதுமே முன்னோக்கி நகர முடியாது.

இன்று தமிழ் இணைய வெளியை ஆக்கிரமித்து அதை எச்சிற் பரப்பாக நிரப்பிக் கொண்டிருப்போர் - குறிப்பாக சில பெண்கள் புஸ்பராணியின் இந்த வரலாற்றுப் பதிவை வாசிக்க வேண்டும். புஸ்பராணியின் அரசியற் தெரிகை, அவர் தேர்ந்தெடுத்த பாதை, அவருடைய செயற்பாடுகள், அவருடைய நம்பிக்கைகளில் மாற்றுப்பார்வைகள் இருக்கலாம். ஆனால், தான் தேர்ந்தெடுத்த, தான் நம்பிக்கை கொண்ட அரசியற் கொள்கைக்காகத் தன்னை அர்;ப்பணித்த நேர்மை, அதற்காக பட்டுக்கொண்ட வாதைகள், அதற்காகத் தன்னுடைய இளைமைக்காலத்தை இழந்த ஓர்மத்தை அவர்கள் புரிந்து கொள்ளலாம். நியாயவெளியில் உரையாடலை நடத்துவதற்கான அடிப்படைத்தகுதியை ஒருவர் எப்படிப் பெறுவது என்பதையும் அவர்கள் அப்போது உணர்ந்து கொள்ளலாம்.

மட்டுமல்ல இதே காலப்பகுதியில் அரசியற் பணிகளில் ஈடுபட்ட மங்கையற்கரசி புஸ்பராணி போன்றவர்கள் செய்த பணியில் பாதியைக்கூடச் செய்ததில்லை. புஸ்பராணி போன்றவர்கள் பட்ட வதையிற் பத்திலொரு பங்கைக்கூடப் பட்டதில்லை. ஆனால், புகழிலும் பொதுப் பார்வை கொண்ட வரலாற்றிலும் புஸ்பராணியை விட மங்கையற்கரசியே தலைவியாகத் தெரிகிறார். அவரே வசதிகளையும் வாய்ப்புகளையும் அதிகமாகப் பெற்றவர்.  இது எப்படியிருக்கிறது?

00

சி.புஸ்பராஜா, புஸ்பராணி ஆகியோர் மற்றவர்களை விடவும் முதற்காலத்துக்குரியவர்கள் என்றவகையிலும் தொடர்ச்சியையுடையவர்கள் என்ற வகையிலும் பிறருடைய பதிவுகளை விடவும் இவர்கள் வேறுபட்ட பதிவுகளைத் தருகின்றனர். இங்கே புஸ்பராணியின் பதிவுகள் அவருடைய சகோதரரான புஸ்பராஜாவின் பதிவுகளைப் பல இடங்களிலும் ஒத்திருக்கிறது.

இருவரும் ஒரு குடும்பத்திலிருந்து, ஒத்த அரசியற் பார்வையுடன், ஒரே காலத்தில், ஒரே சூழலில் அரசியற்போராட்டத்திலீடுபட்டதன் விளைவாக இப்படியான ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், புஸ்பராணியின் வெளிப்பாடு வேறானது. புஸ்பராணியின் எழுத்தில் மனிதநேயத்தின் ஊற்றுக்கண்கள் பொங்கிப் பிரவாகிக்கின்றன. செழிப்பான வாசிப்பும் வாழ்க்கை நோக்கும் அனுபவத்தைக் கலையாக்கும் திறனும் வரலாற்றுப் பிரக்ஞையும் இந்த எழுத்துகளை ஈர்ப்புக்குரியனவாக்குகின்றன. அதற்காகப் புஸ்பராஜாவின் எழுத்துகள் குறைவானவை என்று அர்த்தமல்ல.

புஸ்பராணி மிகச் சுருக்கி எழுதியிருக்கும் இந்த வரலாற்றுப் பதிவில், தலித் மக்களின் நிலை, 1960 களில் பெண்களின் அரசியல் ஈடுபாடும், பங்கேற்பும் பொது வாழ்வும், அதன்பால் ஏற்பட்ட வெளியுலகத் தொடர்பு... வாசிப்பு, பிற போராளிகளின் அறிமுகங்கள், கூடி விவாதித்தல், செயலாற்றுதல்சிறை, சிறைவாழ்க்கை, போன்ற விசயங்கள் மிக விரிவாகப் பேசப்படுகின்றன. கூடவே, ஜே.வி.பி, தமிழரசுக்கட்சி... கூட்டணி.... வதைகளையும் துயரத்தையும் சந்தித்த குடும்பங்களும் போராளிகளும் எனப் பலவும் கூட.

00

தீவிர இடதுசாரியப் பார்வையைக் கொண்டவர்கள் புஸ்பராணியின் இந்த வரலாற்று ஆவணத்தை நிராகரிக்கலாம். தமிழ்த்தேசிய அரசியற்பார்வையின் குறைபாடுகளே இத்தகைய அவலத்திற்கும் இன்றைய அவலத்திற்கும் பிரதான காரணம் என அவர்கள் வாதிடலாம். ஆகவே, இதிலே புதிதாக என்ன இருக்கப்போகிறது? என்ற தொனியில் அவர்கள் கேள்விகளை எழுப்பலாம். அத்தகைய பார்வைக்கும் கேள்விக்கும் இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதையும் விட முக்கியமானது, நான் முன்னரே குறிப்பிட்டவாறு, புஸ்பராணி தன்னை, தன்னுடைய பாதைகளை இங்கே வெளிப்படையாகவே பேசுகிறார். அதற்காகத் தன்னை, தன்னுடைய வாழ்க்கையை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.

என்னுடைய வாசிப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடுகொண்டிருந்த எனது குடும்பச் சூழல் போன்றவை என்னை மெதுமெதுவாக அரசியலை நோக்கி நகர்த்தின. எனது அரசியல் ஆர்வத்திற்கு எனது தம்பி புஸ்பராஜா உற்ற துணையாக இருந்தார். தமிழரசுக் கட்சியினரது கூட்டங்களிலும் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நான் ஈடுபாட்டோடு கலந்துகொள்ளத் தொடங்கினேன். 

என.

ஆனால், பின்னாளில் இதிலிருந்து அவர் பாடங்களையும் கற்றுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அடையப் போகும் தமிழீழத்தில் சாதி வேற்றுமைகள் இருக்கக் கூடாது என்று விரும்பினோமே தவிரஇ சாதி தமிழீழத்தில் இருக்காது என்று நாங்கள் முழங்கினோமே தவிர சாதியின் தோற்றம்இ அதனது வரலாற்றுப் பாத்திரம்இ இந்து மத்திற்கும் அதற்குமுள்ள தொடர்பு குறித்தெல்லாம் நாங்கள் எந்தத் தெளிவுமற்றே இருந்தோம். அமையப் போகும் தமிழீழத்தில் இறுக்கமான சட்டங்களைப் போட்டுச் சாதியை ஒழித்துவிடலாம் என்றளவில்தான் எங்களது அரசியல் புரிதலிருந்தது.


விடிய விடியத் தூங்காதிருந்து பேசிக்கொண்டிருப்போம். எப்போதும் சுதந்திரம் என்பதே பேச்சு. அமையப் போகும் தமிழ் ஈழம் எவ்வாறு இருக்க வேண்டும். சாதி சமய பேதமற்றதாகஇ சுதந்திரம் பெற்ற இனமாக எம்மினம் நிம்மதியாக வாழ்வதற்கு நாம் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்றெல்லாம் பேசுவோம். எம்மால் எதையும் சாதிக்க முடியும், விரைவில் எமது கனவு நனவாகும் என்று எல்லையில்லாத நம்மிக்கைகளில் நாங்கள் திளைத்தோம். எமது பேச்சுகள் நுணுக்கமான அரசியல் விவாதங்களாக இல்லாமல் உணர்சிவசப்பட்ட இலட்சியவாதப் பேச்சுகளாகவே இருந்ததை என்னால் இப்போது நிதானிக்க முடிகிறது. காலமும் அந்தப் பாடத்தை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

இந்தப் பாடங்கள் அவரை மட்டுமல்ல எம்மையும் வரலாற்றின் புதிய திசைகளை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறு என்பது பெயர்கள், இடங்கள், காலம் மற்றும் சம்பவங்களின் பதிவாக அமைவதில்லை. அது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. வாழ்க்கையைத் தீர்மானிப்பது. சமகால வாழ்க்கையையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்மாணிப்பது அது. எனவேதான் ஒவ்வொரு வரலாற்றுத்துளியிலும் மனிதர்களின் இரத்தத்தையும் கண்ணீரையும் அதில் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் மகிழ்ச்சிக்கான விதைகளும் உள்ளன. துக்கத்துக்கான விதைகளும் உள்ளன. வரலாற்றில் சக்தி மிக்க பாத்திரத்தை வகிப்போர் ஆற்றுகின்ற பங்கும் அவர்கள் கொண்டிருக்கின்ற பொறுப்புணர்வும் அவர்களுடைய சிந்தனையும் ஆளுமையும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

இறுதியாக அவருடைய பதிவுகளிலிருந்தே மேலும் சில பகுதிகளை இங்கே எடுத்தாள்வதன்மூலமாக என்னுடைய இந்த முன்னீட்டை நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன். புஸ்பராணி அக்காவின் இந்த இந்தப் பதிவு சொல்லும் சேதிகளின் முன்னே, உண்மைகளின் முன்னே, இது முன்வைக்கும் உணர்ச்சிகளின் முன்னே நாம் எடுத்துரைக்கும் வார்த்தைகள் போதாமைகளையே கொண்டுள்ளன. எனவேதான் அவருடைய பதிவிலிருந்தே சில முக்கியமான பகுதிகளை இந்த முன்னீட்டில் எடுத்தாள்வது பொருத்தமானது, முக்கியமானது எனக் கருதினேன். அந்த வகையில் இந்தப் பகுதிகளையும் நீங்கள் வாசிப்பது பொருத்தமாகும்.


எங்களில் சிலர் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தலைவர்களானார்கள், சிலர் நாடாளுமன்ற அரசியல்வாதிகளானார்கள், சிலர் அர்ப்பணிப்புள்ள ஆயுதப் போராளிகளானார்கள், சிலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்தார்கள, சிலர் கல்விமான்கள் ஆனார்கள், சிலர் வறுமையில் சீரழிந்தார்கள், சிலர் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள், சிலர் புலிகளால் கொல்லப்பட்டார்கள், சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள், சிலர் உச்சக் கட்ட ஏமாற்றத்தோடு இயக்க அரசியல்களிலிருந்தே முற்றாக ஒதுங்கிக்கொண்டார்கள். இவற்றில் நானும் கல்யாணியும் கடைசி வகையைச் சேர்ந்தவர்கள். - என ஈழப்போராட்டத்தின் சூழலைப் பற்றியும் தன்னைப் பற்றியும் மிக எளிமையாக விளக்கமளிக்கிறார் புஸ்பராணி.

மேலும் -

தமிழின விடுதலை மீதான நேசிப்பு என்னைப் போராட்டத்துக்கு அழைத்து வந்தது. ஆனால் என்னைப் போராட்டத்தை விட்டு ஒதுங்க வைத்தது சிறைக் கொடுமைகளோ அல்லது இலங்கை அரசின் கொடுமைகளோ அல்ல. நமது சொந்தப் போராளிகளிற்குள் உருவாகிய சர்வாதிகாரப் போக்குகளும் அராஜகங்களுமே என்னைப் போராட்டத்திலிருந்து துரத்திவிட்டிருந்தன. 


....நிலத்தில் பின்னாட்களில் நாளொன்றுக்கு நூறு கொலைகள் விழுந்தன, அவை சட்டபூர்வமான கொலைகள் அல்லது புரட்சிகரமான கொலைகள் என்று சொல்லப்பட்டு நியாயப்படுத்தப்பட்டனஇ அந்தக் கொலைகள் செய்தித்தாளின் ஒரு மூலையில் பிரசுரிக்கப்பட்டு அதேநாளில் மறக்கப்பட்டன.  

இப்படிப் பலவுண்டு. இதைவிட இந்த வரலாற்றுப் பதிவை புஸ்பராணி அக்கா வெறுமனே தகவற் திரட்டாக அல்லாமல், வாழ்வின் ருஸிமிக்க நிகழ்ச்சிகளின் உணர்வுக் கலவையாக - கலைத்துவம் மிக்க படைப்பாகத் தருகிறார். இதற்கு உதாரணமாக இன்னும் சில இடங்களை இங்கே சுட்டலாம். காலச்சூழலைச் சுட்டும்பொழுது, அப்போது லிபியாவின் இளம் அதிபர் கேணல் கடாபி ஒரு கதாநாயகனைப் போல இலங்கையின் செய்திப் பத்திரிகைகளில் சித்திரிக்கப்பட்டிருந்தார்என்கிறார்.

வரலாற்றில் எவ்வளவோ தூரம் நகர்ந்து வந்து விட்டோம். இன்று முதுமையான கடாபி அமெரிக்காவினால் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால், அந்தக் காலத்தை விவரிக்கும்போது லிபியாவின் இளம் அதிபர் கேணல் கடாபி ஒரு கதாநாயகனைப் போல இலங்கையின் செய்திப் பத்திரிகைகளில் சித்திரிக்கப்பட்டிருந்தார் என எங்களை அந்தச் சூழலுக்கு அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல், வரலாற்றின் முரண்நகையை உணரவும் செய்கிறார்.

சிறையிலிருக்கும்போது, அறையொன்றில் ஒருவர் தங்கமுடியும் அல்லது மூவர் தங்குவதற்கே அங்கே அனுமதி என்ற விதிமுறையைப் பார்த்தவர், சிறைச்சாலையில் ஒரு நூதனமான விதி இருந்தது. ஒரு சிறைக் கூண்டில் ஒருவரை அடைத்துவைப்பார்கள் அல்லது மூவரை அடைத்து வைப்பார்கள். இருவரை ஒரு சிறைக் கூண்டினிள் அடைத்து வைத்திருப்பதைச் சிறைச்சாலை விதிகள் அனுமதிப்பதில்லை. இருவருக்கு இடையில் எது நடந்தாலும் அதற்கொரு சாட்சியும் இருக்க வேண்டும் என்பது சட்டத்தின் பிடிவாதம்.

என எள்ளல் செய்கிறார். மேலும்,

ஒரு சிறிய அழகிய மலர் போல ரோஸ்மேரி எங்களது சிறையை அலங்கரித்துக்கொண்டிருந்தார்.

எனஅந்தத் துயர நிலையிலும் அவருடைய அழகுணர்ச்சி எப்படித் தொழிற்பட்டுள்ளது என்பதைக் காணமுடிகிறது.  

சிறையில் எதற்கு அழுகை வருகிறது, எதற்கு மகிழ்வு வருகிறது, எதற்கு சிலசமயங்களில் இரண்டும் சேர்ந்தே வருகின்றன என்பதற்கான காரணங்களையெல்லாம் வழமையான தருக்கங்களால் ஆராய்ந்து சொல்லிவிட முடியாது. அது வேறு உலகம், வெவ்வேறு தருக்கங்கள்.


அது சிறையாயிருந்த அதே நேரத்தில் இன்னொரு வகையில் சுதந்திர உலகாகவும் இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

என்று அந்த நிலையை ஆழ் அனுபவத்திற் கொள்கிறார்.

இதைப்போல, சாதியத்தின் பேராலான ஒதுக்கல்களை – புறக்கணிப்புகளை உணர்ந்த சிறுவயதிலேயே புஸ்பராணியின் மனதில் ஒரு சித்திரம் விழுகிறது.

கன்னியர் மடத்திலும் நான் சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன். அங்கிருந்த ஓரிரு கன்னியாஸ்திரிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சாதிய உணர்வுடனேயே நடந்துகொண்டார்கள். ஆனானப்பட்ட இயேசுநாதரே அங்கு படிக்க வந்திருந்தால் கூட தச்சனின் மகனென்று சாதிப் பாகுபாட்டிற்கு உள்ளாகியிருப்பார்.

இப்படி இந்தப் பதிவு நெடுகிலும் ஏராளம் சுவாரஷ்யமான, ஆனால் கடந்து செல்லக் கடினமான அனுபவங்கள் உள்ளன. அனுபவங்கள் என்பவை என்ன? உண்மைகள்தானே. அந்த உண்மைகள் உங்களை நோக்கிப் புன்னகைக்கின்றன. ஆனால், அவற்றை நீங்கள் கூர்ந்து நோக்கினால், அவற்றினுள்ளே ஆறாத காயங்கள் இன்னும் சிவந்தபடியே இருப்பதைக் காணலாம்.

00

இது ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவலங்களைச் சந்தித்த ஒரு பெண்ணின் வரலாறு. ஒரு குடும்பத்தின் வரலாறு. ஒரு சமூகத்தின் வரலாறு. ஒரு இனத்தின் வரலாறு எனப் பலவிதமாக உணரப்படவேண்டியது.

ஆனால், இந்த வரலாற்றில் சிதம்பரியின் குடும்பம் பெற்ற நன்மைகள் என்ன? இந்த அரசியலால் அது பெற்ற அனுகூலங்கள் என்ன? இந்த மாதிரிக் குடும்பங்களின் அர்ப்பணிப்புகளைத் தமது அரசியல் அடித்தளங்களுக்குப் பயன்படுத்திய இயக்கங்களின், பாராளுமன்ற அரசியல்வாதிகளின் லாபங்கள்.... எப்படியிருந்தன? என்பதெல்லாம் இன்று கேட்கப்படவேண்டிய கேள்விகள்.

மயிலிட்டிக் கிராமத்தில் என்னுடைய இளமைப் பிராயமும் 1980 களில் இருந்திருக்கிறது. அந்த அழகிய கடற்கரையும் அந்தச் சூழலும் அங்கே வாழ்ந்த சனங்களும் இன்று சிதைந்த நிலையிலேயே இருப்பதைக் காணலாம். இன்னும் அந்தக் கிராமத்துக்குப் போகமுடியாத துக்கத்தோடு ஆயிரக்கணக்கான சனங்கள் முதுமையடைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வயதினால் ஏற்படும் முதுமையையும் விட அவர்களுடைய துக்கத்தினால் ஏற்படுகின்ற முதுமையே கொடியது.

புஸ்பராஜாவின் நூலுக்கு ஏற்பட்ட வரவேற்பையும் விமர்சனத்தையும்போல இந்தப் புத்தகத்துக்கும் வரவேற்பும் விமர்சனமும் கிடைக்கும். வரலாறு எழுதப்படும்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் சாத்தியம். கோணங்களுக்கு ஏற்ப வரலாறும் வேறுபடும். அவைகளில் இதுவும் ஒன்று" என புஸ்பராஜாவின் நூலைக்குறித்து அ.மாக்ஸ் எழுதியதையே இங்கே நாமும் சுட்டலாம்.

இது கலைக்க முடியாத் துயரம். துரத்திட முடியா அவலம். ஆனால் என்ன செய்வது? - இதற்குள்தானே நாம் வாழவேண்டியுள்ளது. இதற்கெதிராக நாங்கள் இன்னும் போராட வேண்டியிருக்கிறது.

வணங்குகிறேன் உங்களின் முன்னும் உங்களின் குடும்பத்தின் முன்னும். அவர்களைப் போல இந்த மண்ணிலே வாழ்ந்த ஆயிரமாயிரம் மனிதர்களின் முன்னும். இந்த வரலாற்றின் முன்னும்.

00

- கருணாரகரன்
23.03.2012 கிளிநொச்சி

00