Saturday, December 1, 2012

பவுண்











பவுணுக்கு வேட்டையையும் வெள்ளாமையையும் தவிர, வேறு எதுவுமே தெரியாது. இந்த நாற்பத்தியாறு வயசில் அவன் வேறு எதையும் பழகவேயில்லை. அதுக்கு அவசியமும் இருக்கேல்லை.

வெள்ளாமை செய்யிறதுக்கு அப்புவின் காணிகள் இருந்தன. தண்ணீருற்றில் மூன்று போகமும் விளையும் வயல். கற்பூரப்புல் வெளியில் ஒரு இரண்டு ஏக்கர் நிலம். குழமுனையில் அம்மாவழி உரித்தான வெட்டைக்காட்டு வயல். அதில் ஆண்டுக்கு ஒரு போகம்தான் விளைவிக்கலாம். என்றாலும் ஏக்கருக்கு இருபது மூடை அடிக்கும். அங்கே அவனுக்கான நிலமும் ஒரு ஏக்கருக்குக் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருந்தது.

போதாதென்று பிறகு அவனும் ஒட்டுசுட்டானுக்கு அருகே கருவேலங்கண்டல் பக்கமாக அவன் கூட்டாளிகளுடன் ஒரு நாலு ஏக்கர் அளவில் காடு வெட்டிப் புலவாக்கியிருந்தான்.

பவுண் பெரிய கமக்காரன் இல்லைத்தான். ஆனால், ஒரு ஏழு எட்டு ஏக்கர் விதைப்பான். சில காலம் நிலைமையை, வசதியைப் பொறுத்து, ஆற்றையும் காணிகள் வசதியாக அமைஞ்சால் இன்னுமொரு இரண்டோ மூன்று கூடுதலாக விதைப்பான். அதுக்கு மேல அவன் ஆசைப்படுவது கிடையாது.
வயல் விதைப்பைத் தவிர பவுணுக்குப் பிடித்தமான தொழில் அல்லது பொழுது போக்கு வேட்டை. ஆறு ஏழு வயதிலேயே பழகிய தொழில் அது. அதில் அவன் பக்காக் கெட்டிக்காரனாகவும் இருந்தான்.

பவுணின் வீட்டில் காட்டிறைச்சி இருக்காத நாட்களே இல்லை. வெள்ளி, செவ்வாய் எல்லாம் அவனுக்குக் கிடையாது. ஆனால், பொங்கல், திருவிழாக்காலங்களில் அவன் துவக்கே தூக்கமாட்டான். அவனிடம் பெல்ஜியம் 304 – 10 ஆம் நம்பர் சொட்கண் இருந்தது. அது அவனுடைய விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றியது. ஊருக்குள் அவனுக்கென்றொரு பேரையும் பெற்றுக் கொடுத்திருந்தது.

இவ்வளவும் போதும் அவனுக்கு.  உலகத்தின் பெருங்கோடீஸ்வரர்களில் ஒருவராக தான் வரவேணுமென்று ஒரு போதும் எண்ணியதுமில்லை. விரும்பியதுமில்லை.

வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கலுக்கு, காட்டா விநாயகர் கோவில், ஒட்டுசுட்டான் சிவன் கோவில், தண்ணீரூற்றுப் பிள்ளையார் கோவில், முள்ளியவளைக் கல்யாண வேலவர் கோவில் திருவிழாக்களுக்கு செலவழிக்கக் காசிருக்க வேணும். குமுழமுனையிலோ முள்ளியவளையிலோ வற்றாப்பளையிலோ ஆண்டு தோறும் ஆடுகின்ற கூத்துகளுக்கு என்று கொடுக்கவும் செலவழிக்கவும்  கூடிய மாதிரியும் இருக்கோணும். ஊருக்குள்ளும் சொந்த பந்தங்களுக்குள்ளும் வருகிற நன்மை தீமைகளுக்குப் போகக்  கூடியமாதிரியும் கொடுத்து மாறக்கூடிய மாதிரியும் கையில ஏதாவது இருக்க வேணும்.

இதைத்தவிர, பிள்ளைகளுக்கும் மனுசிக்கும் உடுபிடவைகள். கழுத்திலையோ கையிலையோ போடக்கூடிய அளவுக்கு நகை. அவர்களின் விருப்பம் எப்படியோ ஆண்டுக்கு ஆண்டு வேறுபட்டுக் கொண்டே இருக்கும். அதுவும் பொங்கல், திருவிழாக்காலங்களில்தான் இந்த விருப்பமும் தெரிவுகளும் இன்னும் கூடும்.

சாப்பாட்டுக்குக் குறைவில்லை. வீட்டில் நெல் தாராளமாக இருக்கும். பாலுக்கும் தயிருக்குமாக மாடுகள் நின்றன. வயல் வேலைக்கு முதலில் மாடுகளையும் வண்டிலையும் வைத்திருந்தான். பிறகு அவனுக்கு அவை தோதாக இல்லை என்று கொஞ்சக் காலம் அதையெல்லாம் விற்றுப் போட்டு, பெத்தப்பாவின் மெசினை (உழவு இயந்திரத்தைப்) பிடிச்சு வயல் வேலைகளைச் செய்தான்.

ஆனால், வன்னியில் போர் பெருத்து, எண்ணை, தண்ணி எல்லாத்தையும் அரசாங்கம் தடுக்கத் தொடங்கியபோது மீண்டும் பட்டிமாடுகளையே பழக்கினான். அவனுக்கு எப்போது நிலாக்காலம் என்று தெரியும். எப்ப அமாவாசை, அட்டமி, நவமி எல்லாம் வரும் என்றும் அவனுக்குத் தெரியும். பனிக்காலம் தெரியும். மழையையும் வெயிலையும் அவனுடைய உடம்பு நல்லாகவே அறியும்.

காட்டுப் பூக்களின் வாசம் அவனுக்கு அத்துபடி. இன்ன போகத்துக்கு இன்ன வாசனை.  இந்தப் போகத்தில் இந்த மரங்கள் பழுக்கும். இந்தக் காலத்தில் இன்ன பறவைகள்தான் சிறகடிக்கும். காட்டிலும் வயலிலும் இருக்கும் மண்ணின் இதமும் தகிப்பும் தண்மையும் எல்லாம் அவனறிந்தவை.
போர் வந்தபோதும் அவன் சுதந்திரமாகவே இருந்தான். இந்தியன் ஆமிக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாகக் கஸ்ரப்பட்டதைத்தவிர பிறகெல்லாம் அந்தளவுக்கு கஸ்ரங்களிருக்கவில்லை. ஆனால், போர்க்காலத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. எல்லாமே விலை. பொருட்கள் உள்ளுக்குள் வருவது தடைப்பட்டால் விலைஏறுமல்லவா. அதனால், அதற்காக கடுமையாக உழைக்கவேணும். அப்படி உழைத்தால்தான் சமாளிக்கலாம்.

பவுண் இரவு பகல் என்று பாராமல் உழைத்தான். ஊரோடு ஒத்து, இயக்கத்துக்கும் உதவினான். பிறகு அவனுடைய மூத்த பிள்ளையும் இயக்கத்துக்கே போனான். அது பவுணுக்கு முதலில் கொஞ்சம் கவலையாகவே இருந்தது. மூத்தபிள்ளை. அவனுக்கு உதவியாக இருக்கும் என்று அதிகம் நம்பியிருந்தவன். இப்பிடித் திடீரென்று போராடப் போய்விட்டால் அவன் எப்படி அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.

ஏற்கனவே பவுணின் தம்பி ஒருத்தன் இயக்கத்துக்குப் போய், இந்தியன் ஆமிக்காலத்தில காலில காயப்பட்டு செத்தவன். அதை விட மனிசியின்ர தங்கைச்சி ஒருத்தி இயக்கத்திலையே இருக்கும் போது தன்னுடைய மகனும் போயிருக்கிறான் என்று அவனுக்குக் கவலையாகவே இருந்தது.

சில குடும்பத்தில ஆருமே இயக்கத்தில இல்லாமல் எப்பிடியோ சுழிச்சுக் கொண்டு தங்கட காரியத்தைப் பாத்துக் கொண்டு போறாங்கள்.

இயக்கத்தோடiயும் அவங்கள் பரவாயில்லாமல்தான் இருக்கிறாங்கள்;. வேளியில வவுனியாவுக்கோ கொழும்புக்கோ கூட அவங்களாலைதான் சுகமாகப் போய் வரக்கூடியதாக இருக்கு. ஆனால், பவுண் வவுனியாவுக்குப் போகவே பல சந்தர்ப்பங்களில தயங்கினான்.

ஏன் சும்மா தேவையில்லாத வம்பென்று அவன் ஆரையும் தனக்குத் தோதான ஆக்களைப் பாத்து வவுனியாவுக்கு அனுப்பினான். இல்லை என்றால், அங்க போய் வாற ஆக்களிட்ட சாமானுக்குச் சொல்லி விட்டான்.

வயல்க்காணி சில காலங்களில் கொஞ்சம் சறுக்கினாலும் அவனை ஒரேயடியாய்க் கைவிட்டதில்லை. எப்படியோ சமாளித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு ஒண்டில்லை எண்டால் இன்னொண்டு எண்டமாதிரி மாடுகள், வேட்டை, வயல் என்று இருந்தன.

ஆனால், பவுண் தன்ரை இந்த வயதுக் காலத்தில் ஆடிப்போனது 2007, 2008 க் காலப்பகுதியில்தான். சண்டை முற்றி அது தொண்டையை இறுக்கியது. அவனால் எதுவுமே செய்ய  முடியவில்லை. அவன் மட்டுமா அப்படித் தவித்தான்? அங்கேயிருந்த எல்லாருந்தான் தவித்தார்கள்.

பவுணுக்கு எல்லாமாக ஆறு பிள்ளைகள். இயக்கத்துக்குப் போனவனைத் தவிர இன்னும் ஐந்து பிள்ளைகள் அவனோடிருந்தன. அதை விட மனிசி, அவனுடைய அம்மா, மனைவியின் தாயார் என்று மொத்தமாக ஒன்பது பேர். போர்க்காலத்தில் அளவுக்கதிகமான எல்லாமே சுமைதான். இந்தச் சுமையைக் குறைப்பதாகவோ அல்லது இன்னும் அவனுக்குச் சுமையைக் கூட்டுவதாகவோ இரண்டாவது பிள்ளையையும் (பெண்) போருக்கு என்று சேர்த்துக் கொண்டார்கள்.

போர் முற்றி, விரிந்து கொண்டிருந்தது. சனங்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள். அவனுடைய குமுழமுனை வயல் பறிபோனது. பிறகு கருவேலங்கண்டல் புலவு. அவர்கள் முள்ளியவளையில் இருந்து வெளியேறினார்கள். அதுவொரு வெள்ளிக் கிழமை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இனி முடியாது என்ற நிலையில் அன்று காலை வீட்டை விட்டுக் கிளம்பினார்கள்.

வெள்ளிக் கிழமையில் வீட்டைவிட்டு, ஊரை விட்டுப் போகக் கூடாது என்று பவுணின் அம்மா சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டே வெளியேறினா. அவனுக்கு அப்படிக் கிளம்புவது என்ன விருப்பமா? அல்லது அந்த ஊர்ச்சனங்களுக்குத்தான் அது விருப்பமா?  அங்கே இருக்க முடியாதென்றால் வேறு என்னதான் செய்ய முடியும்?

வற்றாப்பளை அம்மனைக் கும்பிட்டுக் கொண்டு, காட்டா விநாயகரை, தண்ணீரூற்றுப் பிள்ளையாரை எல்லாம் நினைத்துக் கொண்டு அவர்கள் வெளியேறினார்கள். கேப்பாப்பிலவுப் பக்கமாகப் போய் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தார்கள்.

வீட்டில் ஏராளம் பொருட்கள் விடப்பட்டிருந்தன. சாப்பாட்டுக்குத் தேவை என்று நெல், இன்னும் முக்கியமான பொருட்கள், உடுபிடவைகள் என்று அத்தியாவசியமானவற்றை மட்டும்தான் பவுண் எடுத்துக் கொண்டான். எல்லாப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு போய் ஆற்றையும் வீட்டை வைக்கேலாது. அதையெல்லாம் அங்கையும் வைக்கேலாமல், வீட்டிலையும் வைக்காமல் போற வாற இடமெல்லாம் தொலைக்க முடியாதென்று விட்டான்.

ஆனால், வேறு கனபேர், வாகனங்களில் லோர்ட் லோர்ட்டாகச் சாமான்களை ஏற்றிப் பறித்தார்கள். அப்படிப் பொருட்களைக் கொண்டு போனவர்கள் அதையெல்லாம் கொண்டு போன இடங்களில் வைக்க முடியாமல் தவித்ததைப் பவுண் கண்டான். சிலர் இந்தச் சாமான்களை ஏற்றவும் பாதுகாக்கவும் என்று போயே ஷெல் விழுந்து செத்திருக்கிறார்கள்.
பவுண் புதுக்குடியிருப்பிலிருந்தபோது ஏதோ அவனையே தேடிக் கொண்டு வருவைதப்போல ஒட்டுசுட்டான், கேப்பாப்பிலவுப் பக்கங்களால் படையினர் வந்தார்கள். அவன் அங்கிருந்து சனங்களோடு சனமாக குடும்பத்தோடு உடையார் கட்டுக்குப் போனார்.

அங்கே போய் ஒரு கிழமை இருந்திருப்பார்கள். அங்கே முதலில் ஷெல் வந்தது. ஒண்டல்ல, இரண்டல்ல. ஓராயிரம் இரண்டாயிரமல்ல. மழைத்துளியை எண்ண முடியுமா? இரத்த வெள்ளமும் ஓலக்குரலும் பவுண் குடும்பத்தை மட்டுமா அலைக்கழித்தது. தேடித்தேடி மரணப்பொறிக்குள்ளேயா வந்திருக்கிறோம் என்று அவன் யோசித்தான். அப்படி அப்போது அங்கே நின்று ஆறுதலாக யோசிக்கத்தான் முடியுமா என்பதைப்போல சனங்கள் தாறுமாறக ஓடினார்கள்.

ஒருவருக்கும் எங்கே போவதென்று வழிகள் தெரியவில்லை. எல்லா வழிழகளிலும் மரணமே சிரித்துக் கொண்டிருப்பதாகப் பவுணுக்குப் பட்டது. ஆனால், அதற்காக இப்படி, இந்த மழைக்குள் நிற்க முடியுமா?
அவன் குடும்பத்தோடு ஓடத்தொடங்கினான். அது மரண ஓட்டம். நிற்கவே முடியாத ஓட்டம். தன்னோடிருக்கும் பிள்ளைகளைப் பற்றிய கவலை.

போர்க்களத்தில் நிற்கும் பிள்ளைகளைப் பற்றிய கவலை. வுயதான காலத்தில் போகிற இடங்களில் சமாளிக்க முடியாமல் திணறுகிற தாயைப் பற்றிய கவலை. கையிலிருக்கும் காசு கரைந்து, இன்னும் இப்படி எத்தனை நாளைக்குச் சாமாளிக்க முடியும் என்ற கவலை. இனி எங்கே போவதென்று தெரியாத கவலை.

முதலில் தெரிந்தவர்களின் வீடுகளுக்குப் போனார்கள். பிறகு, பிறகு யாரும் யாரையும் தேடிப்போக முடியாது. அப்படிப் போயும் எந்தப் பிரயோசனமும் இல்லை. எங்கும் சனம் நிறைந்து விட்டது. எங்கே இருந்தாலும் எல்லாமும் ஒன்றுதான். ஒரு பிளாஸ்ரிக் தறப்பாளுக்னுகு மாறிய வாழ்க்கையில், வள்ளிபுனம், தேவிபுரம், இரணைப்பாலை (திரும்பவும் புதுக்குடியிருப்புக்கு அண்மையில் என்ற விசித்திர நிலை), மாத்தளன், பொக்கணை, வலைப்பாடு, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் என்று எல்லாத்தையும் கண்டு, களைத்து விட்டான் பவுண்.

இடையில் அவனுடைய இரண்டாவது பிள்ளை போர்க்களத்தில் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். கடைசியாக அவர்களின் முன்னிலையில் முள்ளியவளையில், அவர்கள் வீட்டில் அந்தப் பிள்ளை அழுது குழறியபடி போனகாட்சி பவுணை அலைக்கழித்தது. அவனுடைய மனிசி பைத்தியக்காரி போலாகி விட்டாள்.

மூத்தமகனை அவர்கள் காணவேயில்லை. அங்கே நிற்கிறான், இங்கே நிற்கிறான் என்ற மாதிரிச்சொன்னார்கள். கடைசியாக அவனைப் பவுண், தேவிபுரத்தில் கண்டிருந்தான். அதற்குப் பிறகு தகவலே இல்லை. ஆனால், அவன் பவுணுக்குத் தெரிந்த ஆரோ ஒருவரிடம் தன்னைப் பார்க்காமல் எங்காவது தப்பிப் போகச் சொல்லி அனுப்பியிருந்தான்.

அவன் சொன்னதைப் போல அங்கிருந்து எங்காவது தப்பிப் போகத்தான் வேணும். ஆனால், பெத்த பிள்ளையை விட்டுவிட்டு அப்படித் தப்பிப் போகமுடியுமா? அங்கிருந்து தப்பவில்லை என்றால் மிச்சம் மிகுதியாக இருக்கிற ஆக்களையும் இழக்கவேண்டி வரலாம். இதற்குள் பவுணுடைய மாமியார் வயிற்றுப் போக்கால் துவண்டு விட்டா. கடைசியில் அந்த மனுசி, வலைப்பாட்டுக் கடற்கரையில் புதைக்கப்பட்டது.

இரண்டு வேளைச் சாப்பாடு ஒரு வேளை ஆகியது. உடுப்புகள் மண்மூடைகளுக்காக மாற்றப்பட்டன. பவுண் பைத்தியக்காரர்களில் ஒருவனாகினான். போக்கிடமும் வழியுமில்லாத லட்சக்கணக்கான சனங்களில் அவன் எம்மாத்திரம்?

அவனுடைய மைத்துனி இறந்து போனதாகச் சொன்னார்கள். சாவுச் செய்திகள் எந்தப் பாதிப்பையும் எவருக்கும் பெரிதாக ஏற்படுத்த முடியாத நிலை. ஆனாலும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? இழப்பின் வலியை மனதால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாதல்லவா.

பவுண் முள்ளிவாய்க்காலினால் வெளியேறியபோது.... அவனுடைய இன்னொரு பிள்ளைக்கு இரண்டு கைகளையும் ஷெல் தின்றது. காயப்பட்ட பிள்ளையோடு வவுனியா, அனுராதபுரம், பொலநறுவை என்று அலைந்தான்.
முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறியபோது அவனுக்கு ஒரு சுமை குறைந்திருந்தது. ஆனால், இன்னும் பல சுமைகள் கூடின.

இப்போது அவன் அகதிமுகாம்களில் இருந்து வவுனியாவிலிருந்த சொந்தக்காரர் வீடுகளுக்கு மாறி, பிறகு அங்கேயிருந்து கனகராயன் குளத்துக்கு வந்திருக்கிறான்;. கனகராயன்குளத்தில் அவனுடைய அண்ணாவின் காணி இருக்கு. அங்கே பதிந்து வந்திருக்கிறான்.

வவுனியாவிலிருந்து கொண்டு அவனால் எதுவும் செய்ய முடியாது. வேறு தொழில்களும் அவனுக்குத் தெரியாது. வேறு தொழில்களைச் செய்யக் கூடிய நிலையில் வசதிகளும் இல்லை.

கனகராயன் குளத்தில் வயல் விதைக்கலாம். வேட்டைக்குப் போக முடியாது. துவக்கில்லை. மட்டுமல்ல படையினர் அனுமதிக்கவும் மாட்டார்கள். அது விண்வம்பாகியும் விடும். பன்றி வந்து முன்னால் நின்று விளையாடுது. அவனைப் பொறுத்தவரை இப்போது இரண்டு ஏக்கர் வயல் விதைத்தாலே போதும்.

அதனால், கனகராயன்குளத்துக்கு வந்திருக்கிறான். அவனுடைய சொந்த வீட்டுக்குப் போவதற்கு இப்போதைக்குப் படையினர் அனுமதிப்பார்கள் போல் தெரியவில்லை. கனகராயன்குளத்தில் 12 கூரைத்தகடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தோதாக வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

போதாதென்றால் இரண்டு தறப்பாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றை நிலத்துக்கு விரித்துக் கொள்ளலாம். இன்னொன்றை கூரையாக்கிக் கொள்ளலாம். முள்ளிவாய்;க்காலில் விட்டு விர மனமேயில்லாமல் இருந்த மகன் இப்போது ஓமந்தைத் தடுப்பு முகாமில் இருக்கிறான். பவுணின் குடும்பம் மாதத்துக்கு இரண்டு தடவை அவனைப் போய்ப்பார்க்கிறது.

கேதியா விட்டிடுவாங்கள் போலக் கிடக்கு என்று ஒவ்வொரு முறையும் அவன் பவுணுக்கும் தாய்க்கும் சொல்லுவான். ஆனால், ஓமந்தையிலிருந்த சிலரை இப்பொழுது பூஸாவுக்கும் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தச் செய்தி பவுணுக்கு நெஞ்சிலடித்தது. தன்னுடைய மகனையும் பூஸாவுக்குத்தான் கொண்டு போவார்களோ! என்று.

இதற்கிடையில் போனகிழமை அவனுக்குத் தெரிந்த ஒருவர், வவுனியாவில் அவனையும் அவனுடைய இரண்டு கைகளும் இல்லாத பிள்ளையையும் கண்டபோது சொன்னார், ‘இந்த மாதிரிப் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தன்னுடைய நண்பர் ஒருவர் உதவிசெய்கிறார். ஆனால், நீங்கள் இந்தப் பிள்ளையின்ர பெயரில ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க வேணும்’ என.

அதுக்காக அந்தப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு பவுண் வங்கிக்குப் போயிருக்கிறான். 18 வயதான பிள்ளையின் பெயரில் கணக்கைத் திறக்கும் போது அந்தப் பிள்ளையின் கையொப்பம் வேண்டும். அப்போதுதான் வந்தது பிரச்சினை. கையெழுதிடுவதற்கு அந்தப் பிள்ளையிடம் கைகளில்லை. விரல் அடையாளத்தை வைப்பதற்கு விரல்களுமில்லை. வங்கி மனேஜருக்கு எதுவுமே விளங்கவில்லை. அதைக் கண்டு ஊழியர்கள் திகைத்துப் போய் ஒரு கணம் நின்றனர்.

அந்தப் பிள்ளை என்ன நினைத்தாளோ தெரியாது எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

பவுண் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

00

குருஷேத்திரம்















‘வாயடைத்துப் போச்சு நண்பா, வராதாம் ஒரு சொல்லும்...’ என்று கவிஞர் முருகையன் எழுதினார். அதேநிலைமைதான் நமக்கும் இப்போது. எதைச் சொல்லவும் அச்சமாக இருக்கிறது. எதைப்பற்றிச் சொன்னாலும் எவருக்கோ பிடிக்காமற் போகிறது. பிடிக்காதவர்கள் கோவிக்கிறார்கள். அல்லது வசை பாடுகிறார்கள். அல்லது சொல்வதைத் தடுக்கப்பார்க்கிறார்கள்.
வன்முறைகள் முடியவில்லை. அவை ஏதோ ரூபங்களில் எங்கிருந்தெல்லாமோ வருகின்றன.

போர்க்காலத்தில்தான் அச்சம் இருந்ததென்றில்லை. போர் முடிந்த பிறகும் அச்சம் நீடிக்கிறது. அது ஒரு தீராத நோயைப்போல இலங்கையைப் பீடித்திருக்கிறது. இலங்கையிலும் தமிழர்களிடம்தான் அது ஒட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் எங்கே இருந்தாலும் அங்கேயெல்லாம் எதையும் சொல்ல முடியா அச்சம் தொடருகிறது.

‘இந்தத் தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலென்ன, இலங்கையில் இருந்தாலென்ன, புலம்பெயர்ந்து தூரதேசங்களில் இருந்தாலென்ன? எல்லோரின் மனதிலும் வன்முறைகள் கூடுகட்டியிருக்கின்றன’ என்று வன்னியில் போருக்குத் தப்பி, இந்தியாவுக்குப் போய், அங்கே சமாளிக்க முடியாதென்று மீண்டும் இலங்கைக்கு வந்து வெளியே போகத்துடித்துக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார்.

வாயடைத்துப் போகும்படியாகவே இலங்கைத்தீவின் நிலைமைகள் கடந்த முப்பதாண்டுகளாக இருக்கின்றன. குண்டாந்தடிகள், துப்பாக்கிகள், பேனாக்கள், வதந்திகள் என்று இந்த வன்முறை ஆயுதங்கள் மிகக் கூர்மையாகவே இருக்கின்றன.

‘எதிரியிடமும் வாய் திறக்க முடியாது நண்பரிடமும் வாய் திறக்க முடியாது. பாருங்கள் எங்களின் நிலைமையை’ என்று ஒரு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மாத்தளன் பாடசாலையில் அமைந்திருந்த போர்க்கால ஆஸ்பத்திரியில் கண்களில் நீர் தழும்ப, குரல் தழதழக்கச் சொன்னார்.

அவரைப் பொறுத்தவரை வளர்த்த கடாவும் மார்பிலே பாய்ந்தது. வந்த கடாவும் மார்பிலே பாய்ந்தது.

வயிற்றிலே பட்டகாயத்தோடு அவருடைய மனைவி இருந்தார். கையிலே பட்ட காயத்தோடு மகன் இருந்தான். காலிலும் கையிலும் பட்ட காயத்தோடு போராளியாக்கப்பட்ட மகன் இருந்தான். இரண்டு மகன்மாருக்கும் இரண்டு பிள்ளைகள்.

ஒரு தரப்பாள் கூடாரத்துக்குள், புடவைகளை சாக்குப் பைகளைப்போல ஆக்கி மண் மூடைகள் அமைக்கப்பட்ட அந்தச் சிறிய பதுங்கு குழிக்குள் இனியும் இருந்து இந்த நிலையில் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவர் மாத்தளன் ஆஸ்பத்திரியில் வந்து நின்றார்.

அங்கேயிருந்துதான் கப்பலில்  திருகோணமலைக்குப் போகலாம். ஐ.ஸி.ஆர்.ஸி யின் கப்பல் அது. உணவையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு வந்து இறக்கி விட்டு காயப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு போகும் கப்பல் அது.

காயப்படுகிறவர்களுக்காகவே கப்பல் ஓடியது ராமா அப்போது. அப்படியும் ஒரு கொடுமை நடந்தது இந்தப் பூமியிலே. அப்படியும் ஒரு காலம் இருந்தது எங்கள் வாழ்வினிலே.

அவர் வன்னியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வேலைபார்த்தவர். கல்வித்தொண்டு. ஏதோ உத்தியோகம் என்ற அளவில் அவர் எங்கும் யாருக்கும் படிப்பித்ததில்லை. அதற்கப்பால், தன்னுடைய வீடு, குடும்பம், மேலதிக வருவாய் என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் படிப்பித்தார்.
எஸ்.பொ சொல்வாரே ‘ஊழியம்’ என்று, அப்படி ஊழியஞ்செய்தார். சைக்கிளோடிப் படிப்பித்தார். காட்டுப்பாதைகளால் நீண்டதூரம் பயணஞ்செய்து பாடங்கள் நடத்தினார்.

பிறகு அவர் கல்வி அதிகாரியானபோதும் எங்கும் திரிந்தார். வன்னியின் அத்தனை மாவட்டங்களிலும் அவர் கால்கள் பட்டன. நல்லூழியன் ஒருவன் இருந்தற்கால், அவன் பாதம் இப்பூமி எங்கும் படாதோ! தனக்குக் கீழே பணியாற்றிய அத்தனை ஆசிரியர்களையும் அவர் ஆற்றுப்படுத்தி வளமாக்கினார். ஆசிரியர்களை வளமாக்கினால்தான் பிள்ளைகளும் பள்ளியும் வளமாகும் என்று நம்பியவர் அவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் அவரிடம் படித்தார்கள். அவரிடம் படித்தவர்களில் பலர் இந்த உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பல்வேறு நிலைகளில். பல தொழில்களில். பல பதவிகளில். அவர்களில் சிலர் வன்னியிலும் இருந்தார்கள். சிலர் போரில் ஈடுபட்டுக் கொண்டுமிருந்தார்கள். சிலருடைய பிள்ளைகள் போராளிகளாக இருந்தனர்.

போக, அவரைத் தெரிந்தவர்கள், அவரிடம் படித்தவர்களின் பிள்ளைகள் என்று எங்கேயும் ஏராளமானவர்கள் இருந்தனர்.

ஆனாலுமென்ன? அவர் இப்போது கண்கலங்க, தன்னுடைய முதிய வயதில், நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டு, காயப்பட்ட பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றுவதற்கு வழிதெரியாமல், அந்தப் போர்க்கால மருத்துவமனையில் வந்து நிற்கிறார்.

அவரைப்போல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே கூட்டமாக நிற்கிறார்கள். காயப்பட்ட மனிதர்கள் மரங்களுக்குக் கீழும் பாடசாலைக் கட்டிடத்திலும் வளர்த்தப்பட்டிருக்கிறார்கள். இரத்தவெடில் மூக்கிலடித்து உடலைப்பதைக்கச் செய்கிறது. மரணக் கூச்சல். வேதனையின் முனகல் காதுகளைப் பிய்த்து இதயத்தை நடுக்கமுறச் செய்கிறது. இது ஒரு வழமைதான் என்றபோதும் அதை அறியாமலே இதயம் பதைக்கிறது.

அவர் அதிகாரியாக இருந்தபோது எத்தனை தடவைகள் அந்தப் பள்ளிக்கு வந்திருப்பார். முதலில் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்த காட்சியும் கடைசியாக அவர் ஓய்வு பெறுவதற்கு முன் வந்த காட்சியும் நினைவுக்கு வந்தன. ஆனால், இப்படியொரு நிலையில் அவர் அங்கே வருவார் என்றோ, இந்தப் பாடசாலை இப்படி சாவேந்திய நிலைக்குப் போகும் என்றோ அவர் எதிர்பார்த்திருக்கவேயில்லை. எல்லாவற்றையும் ஒரு கணம் நினைத்தார். கண்கள் உடைந்தொழுகின.

வடக்குப் பக்கமாக நிற்கும் மரத்தின் கீழே 30 க்கு மேற்பட்ட சடலங்கள் போடப்பட்டிருக்கின்றன. இரத்தமும் சிதிலமுமான அந்தச் சடலங்களில் மொய்த்திருக்கும் இலையான்களைக் கலைப்பதற்கு அங்கே யாருமே இல்லை. சில சடலங்களின் உறவினர்கள் புலம்பி அழுதுகொண்டிருக்கின்றனர். மற்றதெல்லாம் அநாதைச் சடலங்களாகிவிட்டன.

எல்லாவற்றுக்கும் மாத்தளன் மணல் வெளியில் ஒரே புதைகுழி. சடங்கு சம்பிரதாயமெல்லாம் கிடையாது.

இந்த நரகத்திலிருந்து, இந்த மரணக் குழியிலிருந்து  மீளவேண்டும் என்ற தவிப்போடு கப்பலேறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருக்கிறது பெருங்கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒருவராக, கப்பலேறுவதற்கு அனுமதி கோரிக்கொண்டு நிற்போரில் ஒருவராக, அவருடைய கோரிக்கை பொருட்படுத்தப்படாத போது கெஞ்சிக் கொண்டு நிற்போரில் ஒருவராக அவர் நின்றார்.

இப்படி அவர் நான்னகு நாட்களாக வந்து காலையில் இருந்து மாலைவரை – கப்பல் வந்து திரும்பும்வரை காவல் நின்று திரும்புகிறார். அவரைத் தெரிந்த மருத்துவர்கள் பார்க்கலாம் நில்லுங்கோ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால், யாரும் மீண்டும் வந்து அவரைப் பார்த்ததில்லை. அதையிட்டு அவர் கவலைப்பட்டதும் கிடையாது. நிலைமை அப்படி. அவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவர். அதனால் அவர்களை, அவர்களின் நிலையைப் புரிந்து கொண்டார்.

மெலிந்து தளர்ந்த உடலால் தொடர்ந்தும் அங்கே நிற்க முடியவில்லை. அவருக்கத் தலை சுற்றிக் கொண்டு வந்தது. கப்பலுக்காகச் சனங்கள், காயக்காரர்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கண்கள் மங்கி, காட்சிகள் சரியாகப் புலனாகாத போதும் அவருக்கு எதுவோ புலப்பட்டது. என்ன? யார் அது? யார்... யார்..? அவர் தலையை ஒரு முறை சிலுப்பிக் கொண்டு உற்றுப்பார்த்தார்.

அவருக்குத் தெரிந்தவர்கள், காயமே படாதவர்கள், கப்பலில் போகக் கூடிய சூழ்நிலை இல்லாதவர்கள் கப்பலுக்காகப் போகிறார்கள். எப்படி இது சாத்தியம்? இந்த அனுமதி இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? அதை விட இப்படி இவர்கள் போவதென்றால், அடுத்ததாக இங்கே – வன்னியில் என்னதான் நடக்கப்போகிறது? அப்படியென்றால் யார் மிஞ்சி நிற்பது?

அப்படியென்றால் காயப்பட்டிருக்கும் எங்களுக்கு ஏன் அனுமதி கிடைக்கவில்லை? தான் ஒரு நீரிவு வியாதிக்காரன் என்றபோதும், உடல் நிலை மோசமாகியுள்ளது என்று தெரிந்தபோதும் ஏன் அனுமதிக்கு இழுத்தடிக்கிறார்கள்? அதைவிட இப்படி அவருக்குத் தெரிந்தவர்கள் - வன்னிக்கு வெளியே போகமுடியாதவர்கள் போகிறார்கள். இது எப்படி, இது எதற்காக? அதுவும் பிள்ளைகளுடன்?

அவருக்குத் திக்கென்றது. அவருடைய கடைசி மகன் போராளி. ஆனால், காயப்பட்டபிறகு வீட்டில் நிற்கிறான். வீடா? ஏங்கே இருக்கிறது அது? தரப்பாள் கொட்டகை. அதுவும் ஒரு தூர்ந்து போன துரவுக்குப் பக்கத்தில், மரத்துக்குக் கீழே. அந்தத் தரப்பாள் கூடாரத்தைப் போடுவதற்காக இடம் கிடைக்காமல் அவர்கள் பட்டபாடு.

அதுவும் இரண்டு நாள் தவணையில். பிள்ளையையும் மனைவியையும் ஒரு இடத்தில் பாதுகாப்பாக விட்டுப் போக வந்தவன். அது முடிய அவன் போகவேணும்.

அவன் அங்கே இனிப் போகத்தான் வேணுமா? அவர் அங்கே தொடர்ந்து நிற்கவில்லை. கப்பலுக்காகக் காத்திருப்பதில் எந்தப் பயனும் இருக்கப்போவதுமில்லை. அந்த மரணவெளியில் இருந்து தப்புவற்கு அவருக்கு வழியும் தெரியவில்லை.

கண்கள் கலங்க, எதுவுமே செய்யத் தோன்றாமல் சிலகணம் அப்படியே நின்றார். அம்புலன்ஸ் வண்டிகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தன. உழவு இயந்திரங்களிலும் காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். அந்த வாகனங்களில் ஒன்றில் யாரையும் கேட்காமல் ஓடிப்போய்ப் பாய்ந்து ஏறுவோமா என்று ஒரு கணம் யோசித்தார்.
தான் என்ன தனி ஒரு ஆளா அப்படிப் போவதற்கு?

அவர் அப்படியே நிலத்தில் குந்தியிருந்து விம்மி விம்மி அழுதார். அவர் அப்படி அழுவதைப் பார்த்த யாரோ அவருடைய மாணவர்களோ அல்லது அவருடன் வேலை செய்தவர்களோ ஓடிவந்து அவரை ஆறுதற் படுத்த முயன்றார்கள்.
நாங்களே வளர்த்தம். நாங்களே இப்ப எல்லாத்துக்குமாத் துக்கப்படுகிறம். இப்ப வெளியில சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கிறம் என்று சொல்லி விம்மினார்.

நல்லது நடக்கட்டும் என்றே எல்லாவற்றுக்கும் ஆதரவளித்தோம். ஆனால்...
அவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. பேசாமல் கூடாரத்துக்குப் போய் விட்டார். நடப்பது நடக்கட்டும் என்பது அவருடைய முடிவு. இவ்வளவு சனங்களுக்கும் நடப்பது தன்னுடைய குடும்பத்துக்கும் நடக்கட்டும் என்பதே அவருடைய எண்ணம்.

அழுகி மணக்கும் காயங்களோடு அந்தக் குடும்பம் அந்தத் தரப்பாளின் உள்ளே சிலநாட்கள் இருந்தன. எறிகணைகள் வந்து வீழ்ந்தாலும் அவர் ஒரு போதுமே பதுங்குகுழிக்குள் போனது கிடையாது. எதையோ யோசித்துக் கொண்டு பேசாமல் இருப்பார். பதுங்கு குழிக்குள் வரும்படி அவரைக் கூப்பிடுவார்கள். ஆனால், அவர் அசையவே மாட்டார்.

பிறகு, மாத்தளன் பகுதியால் அவர் படையினரிடம் போன சனங்களோடு போனார். அன்று மாத்தளனுக்கு வந்த கப்பல் அங்கே பொருட்களை இறக்க முடியாமல், காயக்காரர்களை ஏற்ற முடியாமல், நிலைமை மாறிவிட்டது என்று நீண்ட நேரம் கடலிலேயே நின்றது. புதிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கப்பலுக்காகக் காத்து நின்ற சனங்கள், கெஞ்சிய சனங்கள் எல்லாம் களப்புக்குள்ளால் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.  அங்கே அவரை விசாரித்த ஒரு படை அதிகாரி கேட்டான்,

‘ ஏன் நீங்கள் ஏற்கனவே வரவில்லை?’

அவர் சொன்னார்,

‘என்னிடம் படித்தவர்கள், எனக்கு அடிப்பதை நான் விரும்பவில்லை. நான் படிப்பித்தவர்களிடம் போய்க் கெஞ்சி வழிகேட்க நான் விரும்பவில்லை. இப்ப வந்திருக்க வழியும் வந்திருக்கிற இடமும் நான் விரும்பியதும் இல்லை’.

அவர் திரும்பிப்பார்த்தார், அந்த மாத்தளன் பாடசாலையில் படையினர் குவிந்து கொண்டிருந்தார்கள். அது படைத்தளமாக மாறிக்கொண்டிருந்தது.

00